Tuesday, November 24, 2015

மங்கள கார்த்திகை விளக்கீடு






தீப லட்சுமி துதி

1. தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே

ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. 
அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.

2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே

எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே… எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன்.

3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ

 தினமும் தீபம் ஏற்றப்படும் இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல செல்வங்களும் சேரும். (விபூதி என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு). வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள்.

4. கீடா: பதங்கா: மசகாச் ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே ஏ நிவஸந்து ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜோ
பவந்தி நித்யம் ஸ்வசாஹி விப்ரா:

நுண்ணுயிர்கள், புழுக்கள், கொசுக்கள், வண்டுகள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள் இவற்றோடு ஆகாயத்தில், பூமியில் நீரில் என எல்லா இடங்களிலும் உள்ள உயிர்கள் எவையானாலும் அவற்றின் எல்லா பாவங்களும் தீபஜோதியாகிய திருவிளக்கினை தரிசிப்பதால் நீங்கும். பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கக்கூடிய ஜோதியை வணங்குகிறேன். பிரகாசமான வாழ்வினை  அளிக்கட்டும்.

 கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. 

விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க

வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
!அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:


நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில்  திருக்கார்த்திகை நாளில் பஞ்சமூர்த்திகள் தங்க விமானத்தில் எழுந்தருளி மலை நோக்கி நிற்க, மலைமீது தீபம் ஏற்றும் விழா நடை பெறும். 

 சுவாமியையும், தீபத்தையும், கொடி மரம் அருகே நடனமிடும் 
அர்த்த நாரீஸ்வரரையும் ஒரே சமயத்தில் காட்சி மண்டபத்தில் தரிசிக்கலாம்.
 பஞ்சபூத ஸ்தல லிங்கங்களான  காளத்திநாதர், ஏகாம்ப ரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், சிதம்பரேஸ்வரர், அண்ணாமலையார் என  ஒரே தலத்தில் பஞ்சபூத லிங்கங்களும் உள்ளன.

அருணாச்சலேஸ்வரர், அண்ணாமலை உடையார், திருவண்ணாமலை ஆண்டார், மகா தேவர், ஆள்வார், அண்ணா நாட்டுடையார், கண்ணாரமுதன், கலியுகத்தின் மெய்யன், தியாகன், தேவராயன், பரிமள வசந்தராசன், அபிநய புசங்கராசன், வசநீதராயன், புழுகணி இறைவன், புழுகணிப் பிரதாபன், மலைமேல் மருந்தன், மன்மதநாதன், வசந்த வினோதன், வயந்த விழா அழகன் ,திருவண்ணாமலை ஆண்டார், திரு வண்ணாமலை மகாதேவர், திருவண்ணாமலை ஆள்வார், அண்ணா நாட்டு உடையார் எஎன்று பல திருப் பெயர்களுடன் அருள்புரியும் திருவண்ணாமலையாரைத் தரிசிக்கலாம்..,

அருள்மிகு உண்ணாமுலையம்மன் சின்னஞ் சிறு திருவுருவுடன் அருட்காட்சி தரும் அம்மனுக்கு அபிதகுசாம்பாள், உண்ணா முலை நாச்சியார், திருக்காமக் கோட்டமுடைய நம்பிராட்டியார், உலகுடைபெருமாள் 
நம்பிராட்டியார் என பல திருப்பெயர்கள் உண்டு. 

அம்மன் கருவறைமுன் அஷ்ட லட்சுமி மண்டபத்தின். எட்டு தூண்களிலும் அஷ்ட லட்சுமிகள் அருள்புரிகின்றனர். ஒரு தூணின் ஒருபுறம் விநாயகியின் (பெண் யானை) அபூர்வத் திருவுருவத்தையும் காணலாம்.

பௌர்ணமி தினத்தில் அண்ணாமலை யாரைத் தரிசித்து கிரிவலம் வர ஊழ்வினை நீங்கும் என்பது ஐதீகம். அதிலும் தீபத் திருநாளன்று மலை வலம் வருவது வாழ்வில் வளம் கூட்டும்.
கார்த்திகை திங்களில் ஈசனின் கட்டளைப்படி பூவுலகிற்கு வந்து அன்னை தவம் செய்து ஈசனின் அருள் பெற்று,. சாப நிவர்த்தி மட்டுமல்ல; ஈசனின் உடலில் சரி சமமாக இடப்பாகம் பெற்றாள். அன்னை 

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற அந்த நன்னாள் தான் கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது, 

“எனக்கு நீங்கள் ஒளியுருவாகக் காட்சி தந்து ஆட்கொண்டது போல், வருடா வருடம் இது போல் ஒளியுருவாகத் தோன்றி உலகினரை உய்விக்க வேண்டும்” என உமை வேண்டிக் கொள்ள, ஈசனும் சம்மதித்தார். அதுவே தீபத் திருநாளாக அன்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. -



5 comments:

  1. கார்த்திகை தீபத் திருநாளின் சிறப்புகள் அனைத்தும் அருமை அம்மா...

    ReplyDelete
  2. தீபத் துதிக்குத் தமிழில் பொருள் கொடுத்தது பாராட்டத்தக்கது. விளக்கே திருவிளக்கே என்று என் மனைவி வேண்டுவது கேட்டிருக்கிறேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள். தொடர்கின்றேன்.

    ReplyDelete
  4. திருக்கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  5. கார்த்திகைத் தீபத்திருநாள் சிறப்பு பதிவு அருமை. விளக்கு பாட்டு நான் தினம் பாடும் பாடல்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete