Saturday, July 4, 2015

ஞான வழிகாட்டி அனுமன்




விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்
உறைவார் முடிவே உணரா முதலோன்
கரைவார் நிறைவே கருதாதவன் போல்
உறைவான் மறையாய் ஒரு நீதியனே !

சரமே தொளையா சகமே மறவா
சரீரா அனுமா ஜமதக் கினிநீ
உரமே உறவே உறவோய் பெரியோய் உயர்வே
அருள்வாய் திருமாருதியே ! -


நம் அறிவால் ஓரளவுக்குத்தான் அனுமன் குணத்தை வியக்க இயலும். அனுமன் அளவுகள் கடந்து பெற்ற வரம் காரணமாக, இன்றும் அனுமன் தன்னை வேண்டுவோர்க்கு வழிகாட்டி பெரும் துணையாகவும் இருக்கிறான்.

பரந்த இந்த உலகில் அனுமனுக்கு மிகப் பிடித்தமான இடம் இமயமலைச் சாரல்!
அங்கே அனுமனது ராமநாம வேள்வி இன்றும் தொடர்ந்தபடியே உள்ளது. அதேசமயம் அனுமனது ஸ்தூலம் கடந்த ஒளியுடல் ஒன்றுக்குப் பலவாகி, பக்தர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அவர்களுக்கு கை கொடுத்து உதவியபடி இருக்கிறது.

பாரத தேசம் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க அனுமனுக்கான ஆலயங்கள் எழுப்பப்பட் டுள்ளன.

இதில் மிக அதிகமான ஆலயங்கள் இருப்பது நம் பாரத தேசத்தில் கர்நாடகம், பின் மகாராஷ்டிரம், அதன்பின் ஆந்திரம், பிறகு தான் தமிழகம்!

அனுமனது ரூபமே அனுமனது குணத்தைச் சொல்லிவிடும்.

தலைக்குமேல் வால் வளைந்து நிற்க, அதில் மணி இருந்தால், அனுமன் கேட்ட வரத்தை நம்மை பரிகாரம் செய்யவைத்து வழங்குபவன்.

கையில் சஞ்ஜீவி பர்வதத்துடன் அனுமன் இருந்தால், கடமை உணர்வோடு இருப்பவன். அனுமனது இந்த தோற்ற தரிசனம் நோயை நீக்கும்.
   
 
கைகூப்பி வணங்கியபடி அனுமன் இருந்தால், அனுமன் காதில் நாம் சொல்வது எல்லாமும் ஈடேறும். அனுமன் அதை மேலே சொல்லி நிறைவேற்றித் தருபவன். நிஷ்டையில் இருந்தால் மனஅமைதி தருபவன்.

தாவக் காத்திருந்தால் நண்பனாக- குருவாக- துணைவரத் தயாராக இருப்பதாகப் பொருள்.

இப்படி அனுமன் ரூபத்துக்குப் பின்னாலேயே பல பொருளுண்டு.

இப்படி எல்லாவித ரூபங்களோடு விஸ்வரூபியாகவும் அனுமன் பல இடங்களில காட்சி தருகிறான்.

அந்த தரிசனம் நம் மனதின் பயத்தைப் போக்கி, உலகில் உண்மையில் எது பெரிதோ அதை நமக்கு உணர்த்தும். விஸ்வரூப தரிசனம் செய்யச் செய்ய மலிவானவை மனதைவிட்டுத் தானாக வெளியேறிவிடும்.

அனுமனுக்கு பழங்கள் என்றால் மிகப் பிரியம். அதேபோல் வடை, வெண்ணெயும் மிகப் பிடிக்கும். உண்ண எவ்வளவோ பதார்த்தங்கள் இருக்க, இம்மூன்றை இவனுக்கு பெரிதாக நிவேதனம் செய்வதன் பின்னணியில் ஆழ்ந்த பொருள் உள்ளது.

தென்னிந்தியாவில்தான் வடைமாலை பிரசித்தி... வடஇந்தியாவில் இனிப்பாலான ஜாங்கிரியைதான் பெரிதும் பிரசாதமாகப் படைப்பார்கள். எல்லாவற்றிலுமே நுட்பமான பல உள்விஷயங்கள் ஒளிந்துள்ளன.

 பழம்.உணவுப் பொருட்களிலேயே உன்னதமானது

பழம் என்பதற்கு ஒரே காரணம்தான். பூ பிஞ்சாகி, பிஞ்சு காயாகி, காய்தான் கனியாகிறது.

நால்வகை நிலைப்பாடு... இந்தக் கனியாதல் என்பதன் பின்னே பழுத்தல் என்பது உள்ளது. அதாவது காலத்தால் பழுத்தல். பழுத்தபின் பழம் மரத்தில் தங்காது. உதிர்ந்து விழுந்துவிடும். அப்படி உதிரும்போது பால்வடியாது.

அதாவது மரத்தைப் பிரியும் துக்கத்தை மரமோ அல்லது பழமோ காட்டாது.

அது ஒரு சந்தோஷப் பிரிவு!

இந்தக் கனிந்த நிலையை சமைந்த நிலை எனலாம். அதாவது அடுப்பு, பாத்திரம், நெருப்பு என்று முயன்று நாம் சமைக்கத் தேவையின்றி இயற்கையே சமைக்கும்போது அதைப் பழுத்தல் என்கிறோம். 

அப்படி பழுக்கின்ற பழங்களும் உடம்புக்கு மிக உகந்தவையாக- எல்லா சக்தியும் உடையதாக- சத்வ குணத்தை அளிப்பதாக இருப்பதால், முனிவர்களின் முக்கிய உணவாக பழமே விளங்கியது. 

எனவேதான் இறை பிரசாதமாகவும் இது முதலிடம் பெறுகிறது. 
அனுமனோ விலங்கினத்துக்கும் பிரதிநிதி. 

அதிலும் பழங்களையே பிரதான உணவாகக் கொண்ட குரங்கு இனத்தவன். எனவே பழம் பெரும் பிரசாதம் இவனுக்கு.

வடையின் பிரதான தானியம் உளுந்து.

உளுந்து கோள்களில் ராகுவை உடையது. ராகு- கேது எனும் இரு உபகிரகங்களும் அசுர வழி வந்து, அமுதம் திருடப்போய் தலையை இழந்து பாம்பின் தலையைப் பெற்றதெல்லாம் புராண வரலாறாகும்.
[DSC02469a.JPG]
இந்த இரு கோள்களும் மானிட வாழ்வை தங்கள் தசைகளில்- புக்திகளில்- அந்தரங்களில் ஆட்டி வைப்பவர்கள். இவர்களை நாம் இணக்கமாக அடைய, இவர்களின் அம்சம் சார்ந்ததை அனுமனுக்குப் படையலிடும்போது, அனுமன் தன் மேலான சக்தியால் இவர்களின் பாதிப்புகளைத் தான் ஏற்று நம்மை ரட்சிக்கிறான்.

இந்த உளுந்தைப் பயன்படுத்தியே ஜாங்கிரி செய்யப்படுகிறது. எனவே உளுந்துதான் இதில் பிரதானம்.




வெண்ணெய் கண்ணனுக்கும் பிரியமான உணவு.

விஞ்ஞானம் இதை கொழுப்பாகப் பார்க்கிறது.

மெய்ஞ்ஞானமோ இதை பெரும் தத்துவப் புதையலாகப் பார்க்கிறது.

பசுவின் பால் காய்ச்சப்பட்டு, பின் தயிராக்கப் பட்டு, அந்த தயிரும் கடையப்பட்டு அதனுள் இருந்தே மோரை விலக்கி வெண்ணெய் பிரிந்து வருகிறது. மோரோடும் தயிரோடும் இருந்தவரை ஒட்டி இருந்தது- பிரியவும் நீர்மேல் மிதக்கிறது. உருக்கினால் மணம் மிக்க நெய்யாகி வேள்விக்குப் பயன்பட்டு புனிதத் தீயாகி வானேகி மறைகிறது.

மனித வாழ்வும் இன்ப துன்பங்களால் கடையப்படுகிறது. அதன் காரணமாக  விளைந்த ஞானம் உலக பந்தத்தை நிலையற்றதாகக் கருதி, உலகோடு இருந்தாலும் அதோடு ஒட்டி விடாதபடி தனித்து நிற்க வழிசெய்கிறது. பின் பக்தியின் உருக்கத்தில் நெய் போலாகி, பின் தீயாகி விண்ணேகுகிறோம்.

வெண்ணெய்க்குப் பின்னால் இப்படி ஒரு நுட்பச் செறிவு இருப்பதால்தான் பிரசாதத் தில் வெண்ணெய்க்கு பிரதான இடம்.

பற்றற்ற வெண்ணெய் அனுமன் நெஞ்சை அடையும்போது, அவனது இதயத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் ராமநாம அதிர்வுகளுடன் கலந்து பெரும் பிரசாதமாகிவிடுகிறது. எனவேதான் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பும் இடப்படுகிறது.

 வெற்றிலை மாலையும் அனுமனுக்கு மிக விசேஷமானது.

  செந்தூரமும் மிகப் பிரியம்.
பல இடங்களில் செந்தூர ஆஞ்சநேயனைக் காணலாம்.

செந்தூரம் அனுமனுக்கு  பிடிக்கும் என்பதன் பின்னே ரசமான . சம்பவத்துக்கும் சீதாபிராட்டிக்கும்கூட தொடர்புண்டு. அந்த சம்பவத் தொடர்புக்குரிய விஷயங்களை மட்டுமல்ல; இந்த யுகத்தில் அனுமன் பல ஞானியர்க்கு தரிசனமளித்து, அவர்களுக்கு ராம தரிசனம் கிடைக்கவும் வழிகாட்டியுள்ளான்.

இந்து சாம்ராஜ்ஜியம் கண்ட வீரசிவாஜி, அவரது குருவான ராமதாசரால் அனுமனின் திவ்ய தரிசனத்தைக் கண்டவராவர்.

அதேபோல கபீர்தாசர் தொடங்கி, சமர்த்த ராமதாசர், பத்ராசல ராமதாசர் என்று அனுமனை  நேரில் தரிசித்தவர்கள் பலப்பலர்.

 பெரும் மகானான ராகவேந்திரரும் அனுமனின் பேரருளால் இன்புற்றுத் திளைத்தவர்.

அனுமன் உபாசனா மூர்த்தி. அனுமன் எப்படி "ராம ராம' என்று ஜெபித்தபடி பெரும் உபாசகனாக இருக்கிறானோ அதேபோல அனுமனை
 உபாசிப் பவர் களுக்கு அனுமன் இஷ்ட தெய்வமாகி, அவர்களுக்கும் ராம தரிசனம் கிடைக்கச் செய்து பிறவித்தளையை விடுவிக்கிறான்.



7 comments:

  1. சிறப்பான பகிர்வு அம்மா...

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு...சனிக்கிழமையன்று ஹனுமான் தரிசனம்.....நன்றி.

    ReplyDelete
  3. அனுமானின் பெருமைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பல புதிய செய்திகளை அறிந்தேன்.

    ReplyDelete
  4. நலம் தானே தோழி! மீண்டும் தங்களை வலையில் காண மகிழ்ச்சியாக உள்ளது. அனுமார் பற்றிய பல தகவல்களை அறிந்து ஆச்சரியப் பட்டேன் மிக்க நன்றி ! தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  5. சிறப்பான பதிவு. செய்திகள் பலவற்றை அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  6. புதிய தகவல்கள் பல. மிக்க நன்றி

    ReplyDelete
  7. ரொம்ப சிறப்பாக எழுதியுள்ளீர்கள் அனுமனின் சிறப்பு பற்றி...

    ReplyDelete