Monday, June 6, 2011

கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்






இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், வரலாற்று சிறப்பும் உடையது.

கொல்லிமலைப் பயணம் மறக்க முடியாத நினைவுகள்...

அப்போது தான் ஷோரூமிலிருந்து கார் எடுத்த புதிது. அதன் டிக்கி நிறைந்த அளவு பெரிய வெள்ளிப் பூண் போட்ட வலம்புரிச்சங்கு பொக்கிஷமாய் பெரியவர் ஒருவர் எடுத்து வந்திருந்தார். கோவிலுக்கு அருகில் ஓடும் ஆற்றில் குளித்துவிட்டு அந்த சங்கில் எல்லோரும் தண்ணீர் முகந்து தலையில் ஊற்றிக்கொண்டோம். அந்த சங்கில் நீர் நிரப்பி அறப்பளீஸ்வரருக்கு அபிஷேகமும் செய்து நிறைவாக அருமையாக அர்ச்சனையும் செய்தோம். என்றும் மறக்காத இனிய புனித உணர்வு நிரம்பிய தருணங்கள் அவை.


காலாங்கி முனிவர் முதலாக பதினெண் சித்தர்கள் இம்மலையில் பல குகைகளில் தங்கித் தவம் செய்துள்ளனர்.
கொல்லிமலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கோரக்கர் பல்லாயிரம் உயிர்மருந்துகளையும், சித்தர் குளிகைகளையும் தயாரித்து அவற்றினுடன் தான் ஞானத்தாலுணர்ந்த தேவரகசியங்களை ஓலைச்சுவடிகளில் எழுதி ஏழு பெட்டிகளை உருவாக்கி ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு வகைப்பொருளாக அடைத்து அவற்றையெல்லாம் "கோரக்கர் குண்டம்" என்னும் ரகசிய இடத்தில் புதைத்து வைத்தார்.
ஆதி குருவாக பகுளாதேவியுடன் காகபுஜண்டர்


இன்று மக்கள் வழக்கில் "கொல்லிமலை" என்று வழங்குகிறது. 
இயற்கை வளம் மிக்க மலை.


இந்த கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமையும், பழமையும் கொண்டதாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கியவன் வல்வில் ஓரி. கடையேழு வள்ளல்களில் ஒருவன். அது என்ன 'வல்வில்'? ஒரு வில்லாளி தான் எய்யும் ஒரே அம்பால் பலவற்றையும் துளைத்தும்போகும்படிச் செலுத்தும் வலிமை பெற்றிருந்தால் அவனை 'வல்வில்' என்று அழைப்பார்கள்.  ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை வீழ்த்திய வலிமை பெற்ற இவன், ஆட்சிபுரிந்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறப்பள்ளி என்று பெயர்.

இந்த அறப்பள்ளியில் ஈஸ்வரர் எழுந்தருளியதால் அங்கு அறப்பளீஸ்வரர் கோயில் தோன்றியது.


அப்படிப் பார்த்தால் ஏழு மராமரங்களை ஒரே பாணத்தால் துளைத்து, தான் வாலியைக் கொல்லும் வல்லமை உடையவன்தான் என்று அனுமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நிரூபித்த இராமனும் வல்வில்தான். 'வல்வில் இராமன்' என்று அழைத்திருக்கிறார்கள்

அறை = சிறிய மலை
மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி
இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர்
இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று.

இறைவர் திருப்பெயர் : அறப்பளீசுவரர்
இறைவியார் திருப்பெயர் : தாயம்மை
வழிபட்டோர் : காலாங்கி முனிவர், பதினெண் சித்தர்கள்
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - அறப்பள்ளி அகத்தியான் 

கொல்லி குளிர் அறைப்பள்ளி’ என்றும், “கள்ளால் கமழ் கொல்லி அறைப்பள்ளி’ என்றும் திருநாவுக்கரசர் இந்த கோயிலை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். திருஞான சம்பந்தர் தனது திருத்தல கோவையில் அறைப்பள்ளியை போற்றியுள்ளார்.

இக்கோயிலுக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது; இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன்பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது. 
குழந்தைச் செல்வம் இல்லாதவர்களும் திருமணத் தடை உள்ளவர்களும் மற்றும் பல துன்பங்கள் நீங்கவும் இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள், தங்கள் குறை தீர்ந்ததும் இந்த ஆற்றில் உள்ள மீன்களுக்கு மூக்குக் குத்தி சிறிய அணிகலன் அணிவித்து ஆற்றில் விடும் நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது.

 ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. எனவே, இந்த கோயில் ஈஸ்வரனுக்கு, “அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர்” என்ற பெயர் வழங்கலானது.


இக்கோயிலுக்கு மேற்கில் "கொல்லிப்பாவை" என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம். கொல்லிமலையின் புகழுக்குக் காரணமான இப்பாவைப் பற்றிய ஒரு செய்தி...

இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.


'கொல்லிப்பாவை' பற்றி பல கதைகள் நிலவுகின்றன. அசுரர்கள் தேவர்களை எதிர்த்து போரிட வந்தபோது, அசுரர்களை தடுத்து நிறுத்த தெய்வ தச்சன் ஆகிய மயன் என்பவன், கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காமத்தை ஏற்படுத்தி மயக்கி கொல்லவல்ல அழகிய பாவையின் படிமத்தினை செய்து வைத்தான். தனது அழகினால் மயக்கி அசுரர்களை கொன்று வந்த அப்பாவை ‘கொல்லிப்பாவை‘ என பெயரிட்டு அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களில் கொல்லிப்பாவை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளது. 


இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர். கொல்லிமலைமீது அருள்புரியும் ஸ்ரீஅறப்பள்ளீஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில், பூந்தோட்டம் என்னும் இடத்திலிருந்து வடக்கே சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் கொல்லிப் பாவை கோவில் உள்ளது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் பூந்தோட்டம் நிறுத்தத்தில் இறங்கி, கரடுமுரடான பாதையில் நடக்க வேண்டும். தனியாரின் சிறிய வாகனத்தில் பயணம் செய்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனத்தில் பயணம் செய்து, அதற்குப்பின் இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.

பாதையைச் சுற்றி அடர்ந்த காட்டுப் பகுதி உள்ளதால் பகலில் செல்வது நல்லது. பூந்தோட்டம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் அரியூர் நாடு என்னும் இடம் வருகிறது. அங்கே சிறிய சிவன் கோவில் உள்ளது. இங்கு அருள்புரியும் இறைவனை அருள்மிகு சேலமுடையார் ஈஸ்வரன் என்கிறார்கள். இந்த ஈஸ்வரன் கோவிலுக்குச் செல்வதற்குமுன், கோவிலின் பின்புறமுள்ள ஆலமரத்தடியில் ஒரு மேடையில் இரட்டை விநாயகர் திறந்தவெளியில் எழுந்தருளியுள்ளனர். அவர்களை முதலில் வணங்க வேண்டும். அதன்பின் ஈஸ்வரன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே சுமார் இரண்டடி உயரத்தில் லிங்க உருவில் இறைவன் காட்சி தருகிறார். அவருக்கு அருகில் சுமார் இரண்டு அங்குல உயரமே உள்ள மிகச்சிறிய வடிவில் அம்பாள் காட்சி தருகிறாள். இந்த அம்பாளைத் தீபாராதனைத் தட்டில் எழுந்தருளச் செய்து நமக்கு காட்சி தரச் செய்கின்றனர். இந்தச் 'எட்டுக்கை அம்மன்' என்று அழைக்கப்படும் கொல்லிப்பாவை அம்மன் காவல் தெய்வமாக கொல்லிமலையைக் காத்து வருவதாகச் சொல் கிறார்கள்! மனிதர்களைக் கொல்லும் பாவையின் திருவுருவங்கள் அங்கு பல இடங்களில் இருந்ததாலும்; மனிதர்களையும் பிற உயிரினங்களையும் இழுத்துக் கொள்ளும் மரங்கள் அந்தப் பகுதியில் இருந்ததாலும் அந்த மலைக்கு 'கொல்லிமலை' என்று பெயர் வந்ததாம்!

மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.  இந்தச் சிறிய அம்பாள், கோவில் கட்டும்போது பூமியிலிருந்து வெளிப் பட்டதாகக் கூறுகின்றனர். இக்கோவிலின் வடக்குப் பக்கத்தில் திறந்தவெளியில் நவ கிரகங்கள் உள்ளன.

இங்கிருந்து சற்று தூரம் நடந்தால் ஓர் ஆலமரத்தடியில் சமணர் திருவுருவம் ஒன்றைக் காணலாம். அதற்குப்பின், ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால் நாம் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் எட்டுக்கை அம்மன் என்கிற கொல்லிப் பாவைக் கோவிலை அடையலாம்.

இந்தக் கொல்லிப்பாவை அருள்பாலிக்கும் புனிதமான இடம் தென்னை ஓலையால் வேயப்பட்ட ஒரு குடிசை! இதன் வலப்பக்க மேடையில் விநாயகர் அருள்புரிகிறார்.

குடிசையிலிருக்கும் கொல்லிப்பாவை அம்மன் சுமார் மூன்றடி உயரம் உள்ளாள். எப்பொழுதும் சந்தனக் காப்பில்தான் காட்சி தருகிறாள். காலையில் சுமார் எட்டுமணி அளவில் அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது திரையிட்டு மூடிவிடுகிறார்கள். இந்தக் குடிசைக் கோவிலுக்குக் கதவு இல்லை. கோவில் பூசாரி கொல்லிப்பாவைக்கு அபிஷேகம் செய்து, சந்தனத்தில் காப்பிட்டடு
அலங்காரம் செய்கிறார். அதற்குப்பின் தரிசனம் கிட்டுகிறது.

இந்தக் கொல்லிப்பாவையைப் பற்றி புராணம் கூறும் தகவல்:

இந்தக் கொல்லிமலையில் அரிய மூலிகைகள் மட்டுமல்ல; பதினெண் சித்தர்களால் தயார்செய்யப்பட்ட பல அரிய மருந்துகள், தைலம், ரசமணி, முப்பு சுண்ணம் போன்றவை குகைகளிலும் சமாதிகளிலும் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறதாம். இதற்குக் காவலாகக் கொல்லிப் பாவை, பெரியண்ணசாமி தெய்வங்களை சித்தர்கள் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

பெரியண்ணசாமி கோவில், கொல்லிப்பாவைக் கோவிலிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் உயரமான இடத்தில் உள்ளது. அங்கு வாழும் மலைவாசி மக்கள் உதவியுடன்தான் அங்கு செல்ல முடியும். ஏனெனில் அந்த வழியில் சில ஆட்கொல்லி மரங்கள் இருக்கின்றனவாம். அவற்றுக்கு அருகில் செல்லும் மனிதர்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்களை காந்தம்போல் இழுத்துக் கொள்ளுமாம். இதைப் பார்த்த யாராவது கோவில் பூசாரியிடம் போய்ச் சொன்னால், அவர் வந்து மந்திரம் ஜபித்து, புனித நீர் தெளித்தால்தான் அதிலிருந்து விடுபட முடியுமாம். இப்படியொரு தகவலை கொல்லிப்பாவை கோவிலுக்கு வந்த ஒரு பெரியவர் சொல்லக் கேட்டுத் திகைத்தோம்!

முனிவர்களும் சித்தர்களும் தவம் செய்வதற்கும் தனித்து வாழ்வதற்கும் தகுதியான இடமாகக் கொல்லிமலை கருதப் படுகிறது.

பலா, கொய்யா, ஆரஞ்சு, அன்னாசி, செவ்வாழை உள்ளிட்ட பலவகையான பழங்களோடு தேனும் கிடைப்பதால் சித்தர்களும் முனிவர்களும் அங்கு பர்ண சாலை அமைத்தும், குகைக்குள்ளும் தங்கி இருந்திருக்கிறார்கள். அந்த வேளையில் அசுரர்கள் கூட்டம் அங்கு வந்து தவத்திற்கு இடையூறு செய்யவே, முனிவர்கள் அந்த அசுரர் கள் வரும்வழியில் அழகிய பெண் (பாவை) உருவத்தினைச் செய்து வைத்தார்கள். விஸ்வகர்மாவை அழைத்து அந்தப் பாவைக்குப் பல சக்திகளை ஊட்டும்படி கூற, அந்தப் பாவைச் சிலைக்கு அசுரர்களின் வாடை பட்டவுடன் நகைக்கும் திறனையும், காண்போரின் உள்ளத்தைக் கவர்ந்து தன்னருகே ஈர்க்கும் சக்தியும் அளித்தார் விஸ்வகர்மா. அந்தப் பாவையின் அழகில் மயங்கிச் சென்ற அசுரர்களைக் கொன்று இருக்குமிடம் தெரியாமல் பஸ்பமாக்கிவிடுமாம். இந்த அதிசயப் பாவைச் சிலைகள் அன்று பல இடங்களில் அந்த மலைப் பகுதியில் இருந்த தாகவும்; அசுரர்கள் தொல்லைகள் நீங்கியபின் அந்தப் பாவைகள் அகற்றப்பட்டதாகவும் கூறுகின்றனர்.


இப்பொழுது இங்கு அருள்பாலிக்கும் கொல்லிப்பாவை காவல் தெய்வமாக அங்கு வாழும் மக்களுக்கு நன்மை செய்வதற்காக சித்தர்களால் உருவாக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.


அபிஷேகம் முடிந்து, சந்தனக்காப்பு இட்ட பின், இங்குள்ள பூசாரியிடம் குறி கேட்பதற்காகச் சிலர் அங்கு காத்திருக்கிறார்கள். பூசாரி, கொல்லிப்பாவையைச் சுற்றிச்சுற்றி வந்து ஆவேசமாகக் குதிக்கிறார். பிறகு சூடத்தினைக் கொளுத்திக் காட்டுகிறார். பின்னர், மூன்றங்குல உயரமுள்ள கூர்மை யான ஆணிகள் கொண்ட இரும்பு பாதக்குறடுகள்மீது ஏறி நின்று, குறி கேட்பவர்களுக்குப் பதில் சொல்கிறார். பிறகு ஆவேசம் தணிந்து அரைமணி நேரம் கழித்து அனைவருக்கும் திருநீறு வழங்குகிறார்.

கொல்லிமலையில் பல அரிய மூலிகைகள் உள்ளதால், சித்த மருத்துவர்கள் இந்த மலைக்கு குறிப்பிட்ட நாளில் வருவார்களாம். அவர்கள் முதலில் இந்தப் பாவையிடம் அனுமதிபெற்று மூலிகைகளைப் பறித்து, அதைப் பாவை சந்நிதியில் வைத்துப் பூஜைசெய்து எடுத்துச் செல்கின்றனர். அப்போதுதான் மூலிகைகளின் முழுசக்தியும் கிடைக்கும் என்கிறார்கள். இந்தக் கொல்லிமலையில் காப்பிக்கொட்டை, கடுக்காய், ஜாதிக்காய், கடுகு, சீரகம், வெந்தயம், பூண்டு, தினை, கேழ்வரகு சாமை, சோளம், நெல், கிழங்கு போன்றவற்றையும் பயிரிடுகிறார்கள். நாற்பது சதுர மைல் பரப்பைக் கொண்ட இம்மலையின் மேல் நான்கு மலைகள் இருப்ப தால் இதற்கு "சதுரகிரி' என்ற பெயரும் உண்டு. இந்த மலை சங்க காலத் தொடர்புடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்புக்கள்:

இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.



பலா, அன்னாசி, கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை மரங்கள் அடர்ந்து, பசுமையாகக் காட்சியளிக்கும் இம்மலைமீது 'அறப்பளீசுவரர்' ஆலயம் உள்ளது.


மிளகு மலிவாகக் கிடைக்கிறது.

நெல்லிக்கனி அமுதம்...

திப்பிலி

ஊர் - பெரிய கோயிலூர் என்றும்; கோயிற் பகுதி - அறப்பளீசுரர் கோயில் என்றும் வழங்குகிறது.

Arapaleeswar Temple, Kolli Hills

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது.



ஆற்றங்கரை அருகிலுள்ள இத்திருக்கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர். கிழக்கு பார்த்த (ராஜகோபுரம் இல்லாத) நுழைவாயில். கோவிலுக்குள் சென்றதும் கொடி மரம், பலி பீடம். அதனைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் சிவ பெருமானைப் பார்த்த வண்ணம் உள்ளார். இந்த நந்திக்கு மூன்று கால்கள் மட்டுமே உண்டு. பின்புற வலக்கால் இல்லை. இது பற்றியும் புராணக் கதை உண்டு.

இந்த நந்தி இக்கோவிலுக்கு அருகில் உள்ள புளியஞ் சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலைச்செடியின் பூக்களின் மணம் கவரவே, கடலைக் காய்களைத் தின்பதற்கு இரவில் அங்கு சென்றது. இதனை அறிந்த காவலர்கள் நந்தியை பயங்கர ஆயுதத்தால் தாக்க,நந்தியின் ஒரு கால் வெட்டுப்பட்டது. அந்த நிலையில் அப்படியே கோவிலுக்குவந்து அமர்ந்தது. அந்தத் தோற்றத்துடன் இன்றும் காட்சி தருகிறது நந்தி.
விவரம் அறிந்த விவசாயிகள் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன், தினமும் நந்திக்குப் பிடித்த கடலைக்காய்களை அதற்குச் சமர்ப்பித்தார்கள்.

நந்தியெம்பெருமானைத் தரிசித்து விட்டு உள்ளே மகா மண்டபத்திற்குள் நுழையும்போது வாசல் பகுதியின் இரு பக்கங்களிலும் துவார பாலகர்கள்போல் சித்தர்கள் இருவர் காட்சி தருகிறார்கள்.

ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். 


அஷ்டலட்சுமி ஸ்ரீசக்ரம்:

அறம்வளர்த்தநாயகி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். செல்வவளம் தரும் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. சித்தர்கள் மேற்கொண்ட யோக முறைகளை அம்பாள் சன்னதி சுற்றுச்சுவரில் சிற்பங்களாக வடித்துள்ளனர்.


அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். மேற்சுவரில் மகா மேருவும் சுற்றிலும் அஷ்டலட்சுமி உருவங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேலே பார்த்துத் தரிசிக்க வேண்டும். இத்தனை சிறப்பு மிக்க அறப்பளீஸ்வரர் கோயில் கொல்லிமலையின் வளப்பூர் நாடு என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அறப்பளீஸ்வரர், தாயம்மை எனும் அறம் வளர்த்த நாயகியுடன் எழுந்தருளியுள்ளார்.


இவர்களுடன் வினை தீர்க்கும் விநாயகரும், முருகனும் சன்னதி கொண்டுள்ளனர்.



ஸ்ரீசக்கரத்தைத் தரிசித்தபின் மகா மண்டபத்தின் தெற்கு வாசல் வழியாக வெளியே வந்தால் வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகனார் மயில்மீது அமர்ந்து தனிச் சந்நிதியில் வடக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரது பார்வை அம்பாளை நோக்கி உள்ளது தனிச் சிறப் பாகும். கன்னி மூலையில் ஸ்ரீஔஷத கணபதி எனப்படும் வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார்.  
தஞ்சை பெரிய கோயிலை தந்த, ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமாகிய மாதேவி, இந்த கோயிலுக்கு வந்து தரிசித்தும், விலையுயர்ந்த அணிகலன்களை அணிவித்தும் சென்றுள்ளது போன்ற ஏராளமான கல்வெட்டுக்கள் கோயிலில் உள்ளன.


குடும்பப்பிரச்னையால் பெற்றோரைப் பிரிந்தவர்கள், தாய், மகன் இடையே மனக்கசப்பு உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் சேர்வர் என்பது நம்பிக்கை. நீதி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சித்தர்கள் பிரதிஷ்டை செய்ததால் இங்குள்ள லிங்கம், 'ஆருஷ லிங்கம்' என்றழைக்கப்படுகிறது. சுவாமி சன்னதி விமானத்தில் சித்தர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.


சுவாமிக்கு திருவரப்பள்ளியுடையார் என்றும் பெயருண்டு. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு. திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலம் இது. கவிச்சக்கரவர்த்தி கம்பரும் பாடியுள்ளார். சுவாமி அறத்தின் வடிவமாக உள்ளதால், பிறரால் அநீதி இழைக்கப்பட்டவர்கள், நீதி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.


காசி தரிசனம்:

கோயில் பிரகாரத்தில் காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சிக்கும் சன்னதி உள்ளது. இந்த சன்னதியை காசியில் உள்ள அமைப்பிலேயே அமைத்துள்ளனர். இங்குள்ள ஆகாயகங்கை, பஞ்சநதி தீர்த்தங்கள் புண்ணியம் தருபவை என்பதால், அதில் நீராடி விஸ்வநாதரையும், தனிச்சன்னதியிலுள்ள பைரவரையும் வழிபட பிறவாநிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் ஜேஷ்டாதேவி சிலை உள்ளது.

மகாலட்சுமி சன்னதியில் ஆஞ்சநேயர்:

பெருமாள் கோயில்களில் சுவாமி சன்னதியில் அவரது பக்தரான ஆஞ்சநேயர் இருப்பார். ஆனால், இங்குள்ள மகாலட்சுமி சன்னதியில் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். சரஸ்வதிக்கும் சன்னதி உண்டு. இவள் அட்சரமாலை, ஏடு, வீணையுடன் நின்றிருக்கிறாள்.

உயிர்களின் வாழ்க்கை மகத்துவம் பெற, இறை வழிபாடு மேற்கொண்ட சித்தர்கள், தவம் செய்ய தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். தர்மத்தை (அறம்) பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு, 'அறப்பளீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மறைந்துவிட்டது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததைக் கண்ட விவசாயி ஊர் மக்களிடம் தெரிவித்தார். மக்கள் மலையில் கிடைத்த இலை, தழைகளால் பச்சைப்பந்தல் அமைத்து சிவனை பூஜித்தனர். பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.


சித்தர் பூமி: பசுமையான மலையின் உச்சியில், அற்புதமாக அமைந்த கோயில் 

இத்தலத்தில் தற்போதும் பல சித்தர்கள் சிவனை பூஜிப்பதாகச் சொல்கிறார்கள். சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த கோயிலுக்கு சென்று வணங்கி, அருவியில் குளித்து உடலும் உள்ளமும் சிலிர்க்க இறைவனின் அருளையும், இயற்கையின் வனப்பையும் ஒருங்கே அனுபவிக்கலாம்.


கோயிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. கொல்லிமலையின் ஆயிரமாயிரம் அபூர்வ மருத்துவ குணங்களை எல்லாம் அள்ளி வந்து கொட்டும் நீர் அருவியாகி பின் ஆறாக ஓடுகிறது. இந்த ஆற்றில் ஏராளமான மீன்கள் உள்ளன.

அறப்பளீஸ்வரர் மீன் வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கோயிலுக்கு செல்வதற்கு முன்னரே பக்தர்கள் ஆற்றில் உள்ள மீன்களுக்கு சாதம், பலவகை தின்பண்டங்களை அளித்து வழிபாடு செய்கின்றனர். அதன்பின்பே அவர்கள் கோயிலுக்கு சென்று வணங்குகின்றனர்.

மழையில்லாத காலங்களிலும் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். ஆடிமாதம் 18ம் பெருக்கு இந்த கோயிலின் விசேஷமாகும். ஆண்டு தோறும் ஆடி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த விழா சிறப்பாக நடந்து வருகிறது.

பக்தர்களோடு பழங்குடியின மக்களும், தங்களின் பாரம்பரிய சிறப்புடன் விழாவை கொண்டாடுகின்றனர். அவர்கள் ஆற்றில் உள்ள பெரிய மீன்களை பிடித்து அதற்கு மூக்குத்தி அணிவித்து வழிபட்டு பின்னர் அந்த மீனை மீண்டும் ஆற்றில் விடுகின்றனர். இந்த புனித தன்மை பெற்ற ஆறு, கொல்லிமலையில் இருந்து இறங்கி, துறையூர், முசிறி வழியாக சென்று காவிரியில் ஐக்கியமாகிறது. கொல்லி மலையில் உள்ள ஏரியில் தேரொன்று மூழ்கியிருப்பதாகச் செவிவழிச் செய்தியும் உண்டு. 

கோயிலுக்கு எதிரில் செல்லும் வழியாக - சுமார் ஆயிரம் படிகள் இறங்கிச் சென்றால், ஆகாய கங்கை என்னும் நீர் வீழ்ச்சியில் நீராடலாம். 600 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. 


மழைக்காலத்தில் அருவியில் நீர்ப் பெருக்கு அதிகமிருக்கும். ஆதலால் நீராட முடியாது, கோடை காலத்தில் மட்டுமே நீராடலாம்.

பூமத்திய ரேகைக் காடுகள் அழியாது இருக்கும் மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். 


கொல்லிமலையின் சிறப்பான ‘முடவாட்டு கால்‘ சூப் குடித்ததும் வலி குறைந்தது போல உணர்வு ஏற்பட்டதாம். இரண்டு நாட்களுக்காவது கால் வலி நீடித்து மகன் அவதிப்பட்டார். 


‘முடவாட்டு கால்‘ என்பது கொல்லிமலை பாறைகளுக்கு இடையில் விளையும் ஒரு கிழங்கு வகை ஆகும். பார்ப்பதற்கு ஆட்டின் கால்களை போலவே இருக்கும் இந்த கிழங்கை நீரிலிட்டு வேக வைத்து, மிளகு கலந்து குடித்தால் ஆட்டு கால் சூப் குடிப்பது போல அதே மணத்துடன் இருக்குமாம். மூட்டு சம்பந்தமான உபாதைகளுக்கு இது மிகவும் சிறந்த மூலிகை மருந்தாக கூறப்படுகிறது. எனது மகன் தன் நண்பர்களுடன் சென்று வரும்போது இந்த கிழங்கை வாங்கி வந்து கொடுத்தார். அருவிக்குச் சென்றதும் அந்த சூப் குடித்ததும் அவர் அனுபவமே. அதன் படிகளைப் பற்றி கூறியதுமே நாங்கள் பின்வாங்கிவிட்டோம்.

செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீது 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது.



Eye-catching display: Tourists at the flower show organised at the 
newly-established botanical garden in Kolli Hills  
The show was organised as part of the Valvil Ori festival. —

தமிழ்நாடு தோட்டக் கலைத் துறையினரின் பண்ணையும், வனத்துறையினரின் மூலிகைப் பண்ணையும் இம்மலைப் பகுதியில் உள்ளன. கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Sunset
sunset in view point
 அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை, மகிழ்விக்கும் வகையில், செம்மேடு அருகே வாசலூர்பட்டி படகு இல்லம், வியூ பாயின்ட் போன்றவைகளை, மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. மேலும், மலை முழுவதும் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்ச்சி பெறும் வகையில், மூலிகை கிழங்கு, 'சூப்' விற்பனையும் சூடுபிடித்து காணப்படுகிறது.

Sekkuparai View Point

Sekkuparai View Point, Kolli Hills
கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் "அறப்பளீசுர சதகம்" என்னும் அருமையான நூலைப் பாடியுள்ளார். 

அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே' என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு.

 மலைக்கோயிலில் (அறை = மலை; பள்ளி = கோயில்) 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றுள் 12 சோழர் காலத்தியவை. கொல்லிப்பாவை கோவில், சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகை வனம், இப்போதும் ஆங்காங்கே கண்ணில் படும் சித்தர்கள், 180 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்டமாய் விழும் அருவி என புதிரான ஒரு பிரதேசமாகவே தெரிகிறது கொல்லிமலை. 

கொல்லிமலை 17 மைல் பரப்பளவிற்கு விரிந்து படர்ந்த அடர் மூலிகை காடுகளுடன் தனித்து ஒரு அமானுஷ்யமாக விளங்குகிறது.



 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்து புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புடைய கொல்லிமலை கல்பகாலம் தொட்டு ஏராளமான சித்தர்களும், முனிவர்களும் தொடர்ந்து வாசம் புரிந்து வந்த கொல்லிமலையின் மூலிகை வளம் குறிப்பிடப்பட வேண்டியது. 
கருநெல்லி, கருநொச்சி, ஜோதிப்புல் உள்ளிட்ட அரிய மூலிகைகள் இங்கு கிடைக்கிறது.

ஜோதி விருட்சம் இரவில் ஜகஜ்ஜோதியாக ஒளிரும் என்று கூறினார்கள்.


ஜோதிப்புல்லின் இலையை விளக்கில் இட்டு எரித்தால் நெடுநேரம் எரியுமாம். 

திகைப்பூண்டு என்ற செடியை மிதித்து விட்டால் அந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருப்பார்களாம். அவர்கள் நினைவு மறந்துவிடுமாம். 

பூனைக்காஞ்சிரம் செடி தோல் மீது பட்டால் உடல் முழுவதும் அரிப்பெடுக்குமாம்.

நில ஆவாரை, நாட்டு நிலாவரை, ஆலகாலம், கமதாயம், தாளினி, ஆவரை, ஆவாகை, குயத்தினலகை என பல பெயர்களில் அழைக்கின்றனர். இந்த நிலவாகையானது இந்தியாவின் மூலிகை ஏற்றுமதியில் கணிசமான பங்கு வகிக்கிறது. இதனுடைய இலை அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
இன்னும் பல மூலிகைகளைப் பற்றி ஆர்வமாக கேட்டுத்தெரிந்து கொண்டோம். கொல்லிமலை அடிவாரத்திலேயே மூங்கில் தோப்பு உள்ளது.
மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்குமாம். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. 

அங்குள்ள மக்கள் அதை சமைத்து சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள். 

40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும்.
மரங்கள் இலைகள் எல்லாம் உதிர்ந்து கணுக்களில் பூக்களையும் இளம் பிச்சு காய்களையும் சுமந்து நிற்கின்றன. 

மூங்கில் பூக்களுடன் அந்த பகுதியே வெளிர்மஞ்சள் நிறமாக, மாலை நேரத்தில் மிகவும் அழகாக இருந்தது. 
 பெருவாரை, சிறுவாரை என இரண்டு வகையான மூங்கில்கள் உள்ளன.


நாமக்கல்லிலிருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. 




செங்குத்தான மலைப்பாதை - 72 கொண்டை ஊசி வளைவுகளைக் (hair pin bend) கொண்டது.  
இம்மலைப் பாதை, மழைக்காலத்திற்கு ஏற்றதன்று.
வாகனம் மலையில் ஏற ஆரம்பிக்க ஐந்து நிமிடங்களுக்கொரு கொண்டை ஊசி வளைவு. நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மொத்தமும் பரநது விரிந்து அருமையாக இயற்கை சூழலில் காட்சியளிக்கிறது. 

மலையில் வாகனம் பயணிக்கும்போதே நம்மை குளிர் போர்த்தத் தொடங்கி விடுகிறது. 

கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1219 மீட்டர் உயரத்தில் உள்ளது. வழியில் எங்கும் ஊர்கள் கிடையாது. 

மலை அடிவாரத்தில் தொடங்கினால் கொல்லிமலைக்கு 3 கி.மீ. தொலைவில் வரும் சோளக்காடு என்ற ஊர் வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடக்கிறது.
சோளக்காட்டினை அடுத்து வரும் வளப்பூர்  அரசு தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. 
சீக்குப்பாறை, தற்கொலை முனை, அரசு மூலிகைப் பண்ணை, அறப்பளிஸ்வரர் ஆலயம், பஞ்சநதி எனும் அய்யாறு அருவி, கொல்லிப்பாவை கோயில், சித்தர் குகைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் உள்ளது. வாகன வசதி எதுவும் கிடையாது. 

கொல்லிப்பாவை கோயில் இருக்கும் இடம் உண்மையிலேயே அச்சம் தருவதாக இருக்கிறது. 

அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் இந்த சிறிய கோவிலுக்கு பார்வையாளர் அதிகம்தான். 

யாருடனும் பேசாமல் சடாமுடியுடன் சுற்றி வரும் சிலரை இங்கு பார்க்க முடிகிறது.




சீக்குப்பாறை மற்றும் தற்கொலை முனை இரண்டும் அருமையான ‘நோக்கு முனை‘ மலையின் பெரும்பான்மை பகுதியின் இயற்கை அழகு நம்மை சில்லென்ற காற்றுடன் ஆனந்தப்படுத்துகிறது. 

நாகரிகம் முழுமையும் சேராத மலைவாழ் மக்களிடம், இன்றைய நவநாகரீக மக்களிடம் பல்கிப்பெருகிப் பல பெண்களின் வாழ்வைச் சிரழிக்கும் வரதட்சணைக் கொடுமை முற்றிலும் இல்லாதிருப்பது அம்மக்களின் மண் மணம் மாறாத மலைவாழ் நாகரிகத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
Tamil Politics News Article
இந்தமலருக்கு த்ண்டர் பிளவர் - அதாவது இடி மலர் என்று பெயராம்.
இடி இடிக்கும் போது சடாரென்று மலர்ந்து விரியும் அற்புத அபூர்வ மலர்.
ஒரு வீட்டின் முன்பகுதியில் பூத்திருந்த மலரின் அழகில் லயித்து கேட்டபோது
அவர்கள் விவரம் சொல்லி பறித்துக்கொள்ளச் சொல்லியது மட்டற்ற மகிழ்ச்சி..


Botanical garden and children's park

coffee fruits
coffee fruits, Kolli Hills



Boat House
கொல்லிமலை அடிவாரத்திலுள்ள குன்றில் குடியிருக்கும் பழனியப்பர் கோயில் முருகப்பெருமான் தன்னை வணங்கும் பக்தர்களின் பிறப்பை வேட்டையாடி முக்தி தருபவராக உள்ளார்.

படைப்புக்குரிய மூலமான "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார். 
மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், "பிரம்ம சாஸ்தா' என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். 

கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். "கூவை' என்றால் "பருந்து'. கொல்லிமலையின் மேலிருந்து கூவை மலையைப் பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம்இருக்கும். எனவே இப்பெயர் ஏற்பட்டது. 

அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. 

மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால்ஆண் வடிவமாகவும், 
இடது புறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி அளிக்கிறார். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த மூலவரை பார்த்தே, போகர், பழநியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார் என்கிறார்கள். 

நோய் தீர்க்கும் தீர்த்தம்: மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே யானை வடிவிலான வற்றாத சுனை காணப்படுகிறது. இதை "யானைப்பாழி தீர்த்தம்' என்கின்றனர். இந்த சுனையில் ஆண்டு முழுவதும் இரும்புச் சத்துடன் கூடிய தண்ணீர் ஊறுகிறது. 


மூன்றாம்கோணம் வலைப்பத்திரிகை நடத்திய பயணக்கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை இது...

37 comments:

  1. ரொம்ப பெரிய போஸ்ட். கொல்லிமலை ஏற்கனவே போன இடம். மறுபடியும் படிச்சிட்டு வரேன் கமென்ட் போட

    ReplyDelete
  2. எல் கே said...
    ரொம்ப பெரிய போஸ்ட். கொல்லிமலை ஏற்கனவே போன இடம். மறுபடியும் படிச்சிட்டு வரேன் கமென்ட் போட//

    Thank you. Welcome.

    ReplyDelete
  3. கொல்லிமலை நான் இன்னும் போகவில்லை..ஏன் இன்னும் போகவில்லை என கேட்கும்படி தூண்டும்படி கொல்லிமலை பற்றி அர்புதமாக எழுதி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  4. @ஆர்.கே.சதீஷ்குமார் said...//
    .ஏன் இன்னும் போகவில்லை என கேட்கும்படி தூண்டும்படி கொல்லிமலை பற்றி அர்புதமாக எழுதி இருக்கிறீர்கள்//

    நன்றி. சென்று தரிசித்து வாருங்கள்.

    ReplyDelete
  5. //திகைப்பூண்டு என்ற செடியை மிதித்து விட்டால் அந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருப்பார்களாம். அவர்கள் நினைவு மறந்துவிடுமாம்.//

    உங்கள் பதிவைப்படிப்பதும்,
    திகைப்பூண்டு செடியை மிதிப்பதும்
    ஒன்றே தான்.

    தங்கள் பதிவில் நான் அப்படியே லயித்துப்போய் மெய்மறந்து நீண்ட நேரம் செலவிடுவதால், மற்றவை மறந்து என் மனைவி அழைப்பதும்/டெலிபோன் மணி அழைப்பதும் காதில் விழாமல், பலசமயம் பாட்டுவாங்கியதுண்டு. பெரியதொரு மர்ம நாவல் படிப்பதுபோல நீண்டுகொண்டே போகிறது. அதிலிருந்து மீண்டுவர முடியவில்லை. காஃபி ஆறுவதும் தெரியவில்லை. சித்தர்களின் சித்து வேலைகள் போல என்னை இப்படி ஒரேயடியாக கட்டிப்போட்டு விடுகிறீகளே! தப்பிக்க வழி தெரியவில்லையே! நான் என் செய்வேன் அறப்பள்ளீஸ்வரா !!

    ReplyDelete
  6. அந்த பச்சைமிளகுச்செடியைக்காட்டி என் நாக்கினில் நீர் வரவழைத்து விட்டீர்கள்.

    அந்தப்பச்சை மிளகை அப்படியே ஆர்க் ஆர்க்காக, உப்பில் ஊறவைத்து, கடுகு தாளித்து, மாங்கா இஞ்சியை தோல்சீவி பொடிப்படியாக நறுக்கிப்போட்டு வைத்து, பிறகு தனியாகவோ, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளவோ பயன் படுத்திப்பார்த்தால் பிறகு எந்த ஒரு ஊறுகாயும் சாப்பிட விரும்ப மாட்டோம்.

    அவ்வளவு ஒரு ருசியானது. இப்போதே என் நாக்கு நமநம என்கிறது. இந்தப்பச்சை மிளகு வாங்கிவரவே ஒரு காரை எடுத்துக்கொண்டு கொல்லிமலைக்குப் பயணம் செய்யலாமா என்ற வேகம் ஏற்படுகிறது.

    எப்போதாவது அபூர்வமாக இங்குள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு அந்தப்பச்சை மிளகு விற்பனைக்கு வருவதுண்டு. கண்ணில் பட்டால் வாங்கிவருவதுண்டு.

    அது என் பிரியமான அயிட்டம் தங்கள் பதிவுகள் போலவே.

    ReplyDelete
  7. //கன்னி மூலையில் ஸ்ரீஔஷத கணபதி எனப்படும் வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார்.//

    ஆஹா, ஒளஷத கணபதி, என்னவொரு மருத்துவகுணம் கொண்ட அருமையான பெயர், அந்தத்தொந்தி கணபதிக்கு.

    உரித்துக்காட்டியுள்ள கொடாரஞ்சும் (கமலாரஞ்சு) எனக்கு மிகவும் விருப்பமான அயிட்டம் தானுங்க.

    உரிப்பது சுலபம், புளிக்காமல், நல்ல தித்திப்பாக இருந்தால், இடைவெளியில்லாமல், யானை போல டபக்குடபக்குன்னு உள்ளே தள்ளிக்கொண்டே இருப்பேன். இதைப்பார்த்ததும், 1975 கடைசியில், பம்பாயிலிருந்து கோவாவுக்கு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்ட நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. என் அருகில் இருந்த ஒரு சில வெள்ளைக்காரர்கள் ஒரு பெரிய சாக்கு மூட்டை நிறைய இந்தக் கமலாராஞ்சுப்பழத்தை வைத்துக்கொண்டு, மாற்றி மாற்றி உரித்து சாப்பிட்டு, தோலிகளை கடலில் விட்டெறிந்து கொண்டு வந்தனர். என் பொறுப்பில் அந்த மூட்டை முழுவதும் இல்லாதது எனக்கு மிகவும் கடுப்பேற்றியது.

    ReplyDelete
  8. சித்தர்கள் பூமி சிறப்பானதுதான்.பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  9. அடுத்ததாக இந்தக்குட்டிக்குட்டி சைஸ் கொய்யாப்பழம் - அதன் ருசியே தனிதானுங்க.

    ஒன்றே ஒன்று எடுத்து விரல்களால் ஒரே அமுக்காக அமுக்கினால், சிவந்த தன் பற்களைக்காட்டி (விதைகள்) சிரிக்கிறதா என்று பார்ப்பேன். ருசி எப்படியுள்ளது என்று பார்ப்பேன்.

    சுவையுடன் தித்திப்பாக இருந்தால் எல்லாக்கூறுகளையும் அப்படியே மொத்தமாக வாங்கி வந்து விடுவேன்.

    எனக்கு மிகவும் பிடித்தமான அயிட்டத்தில் இதுவும் ஒன்று. ஒரு அலம்பு அலம்பிவிட்டு, அப்படியே டபக்குடபக்குன்னு முழுசாக வாயில் போட்டு கடித்து சாப்பிட்டு விடுவேன்.

    ஆஹா, ஆனந்தமாக, பிரும்மானந்தமாக இருக்குமே.

    சரியான தீனிப்பண்டாராம் என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது.

    நான் என்ன செய்ய?

    தங்கள் பதிவுகள் போலவே ஒரு சில தீனிகள் மட்டுமே எனக்குப்பிடித்தவை.
    பெரும்பாலானவை பிடிக்காதவை.

    பிடித்தவைகளை கிடைக்கும்போது அளவேதும் இல்லாமல் அலுக்கும்வரை ஒரு பிடிபிடித்து விடுவதுண்டு.

    இந்த ஒரு பதிவையே 4 நாட்களுக்கு நீங்கள் பிரித்துப்போட்டிருக்கலாம். அவ்வளவு நீளம்/அகலம்/ஆழம்.

    அனைத்துப்படங்களும் அருமை.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பிரியமுடன்,
    கொடாரஞ்சு, குட்டிக்கொய்யா & பச்சைமிளகுப்பிரியன் vgk

    ReplyDelete
  10. @ வை.கோபாலகிருஷ்ணன் s//
    திருச்சி திருவரங்கம் செல்லும் போதெல்லாம் கருத்தைக் கவர்வது வண்டுகள் மொய்க்கும் ரோஜா மலர்கள் -பச்சை மிளகு கொத்துகள், கடுகு அளவில் இருக்கும் மாங்காய்கள் ஆகியவை ஆகும்.
    -பிடித்த உணவுகளை பிரித்துடன் சாப்பிடுபவர்களைக் காண்பதும், பறிமாறுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    தங்களின் லயிப்புடன் கூடிய கருத்துக்களுக்கு மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  11. @வை.கோபாலகிருஷ்ணன் s//
    (கமலாரஞ்சு) எனக்கு மிகவும் விருப்பமான அயிட்டம் தானுங்க.//

    ஆஸ்திரேலியாவில் சின்னமூட்டை அளவு ஆரஞ்சுப் பழ்ங்கள் 99 செண்ட் - ஒரு டாலருக்கும் குறைவு. மார்க்கெட்டில் வாங்கி வந்தேன். ரசாலு மாம்பழம் போல் இனிப்பு. விதைகளோ, சக்கைகளோ இல்லாமல் அற்புத சுவை.
    மலரும் பழ நினைவுகள்..

    ReplyDelete
  12. @ FOOD said...
    சித்தர்கள் பூமி சிறப்பானதுதான்.பகிர்விற்கு நன்றி.//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. கொள்ளிமலைப் பற்றி பல தகவல்களை தெரிந்துக் கொண்டேன்..
    மேலும் இது எங்கு உள்ளது.. இதன் அருகில் பார்க்க வேண்டிய இடங்கள். போன்றவற்றை இன்னும் விலக்கமாக சொன்னால் இன்னும் அருமையாக இருக்கும். நன்றி..

    ReplyDelete
  14. அருமையான பதிவு.
    அற்புதமான விஷயங்கள் - புகைப்படங்கள்.
    மிகப்பெரிய பதிவு. நான்கு ஐந்து பதிவுகளாக பிரித்து எழுதியிருக்கலாம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. ஒவ்வொரு தடவை வரும்போதும் எத்தனை விஷயங்கள்.தேடல்கள் உங்கள் பக்கம்தான்.தொகுத்துத் தரும் சிரமம் எத்தனை.வாழ்த்துகள் தோழி !

    ReplyDelete
  16. Aha!
    What a fine postings dear. The photos are speaking.
    Wounderful informations.
    Nicepictures. Felt as if i went there.
    Thanks a lot Rajeswari.
    viji

    ReplyDelete
  17. கொல்லிமலை பற்றி இத்தனை தகவல்களா..
    இது எதுவுமே தெரியாமல் ஒரு இரவு அங்கே வெட்ட வெளியில் படுத்திருந்து மறுநாள் அறப்பள்ளீசுவரரை தரிசித்து விட்டு வந்தேன்..
    சுவையான பதிவு.

    ReplyDelete
  18. @* வேடந்தாங்கல் - கருன் *! sa//
    இதற்கு மேல் விளக்கமா?
    நாமக்கல் சென்றல் நிறைய பஸ்வசதி உண்டு.
    கார் தான் சௌகரியப்படும்.
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  19. @Rathnavel said...//
    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  20. @ ஹேமா said...
    ஒவ்வொரு தடவை வரும்போதும் எத்தனை விஷயங்கள்.தேடல்கள் உங்கள் பக்கம்தான்.தொகுத்துத் தரும் சிரமம் எத்தனை.வாழ்த்துகள் தோழி !//

    நன்றி தோழி.

    ReplyDelete
  21. @ viji said...
    Aha!
    What a fine postings dear. The photos are speaking.
    Wounderful informations.
    Nicepictures. Felt as if i went there.
    Thanks a lot Rajeswari.
    viji//
    வாங்க விஜி. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  22. கொல்லிமலையைப் பற்றி நீங்கள் பதிவிட்டுள்ள தகவல்கள் மிகவும் அற்புதமானது, ஆழமானது. சமிபகாலங்களில்
    இது போன்றதொரு விரிவான பயணக் கட்டுரையை நான் படித்ததில்லை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. கொல்லிமலையைப் பற்றி நீங்கள் பதிவிட்டுள்ள தகவல்கள் மிகவும் அற்புதமானது, ஆழமானது. சமிபகாலங்களில்
    இது போன்றதொரு விரிவான பயணக் கட்டுரையை நான் படித்ததில்லை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. எவ்வளவு தகவல்கள். மிக நீண்ட ஆனால் வெகு சுவையான பதிவு. அச்சமூட்டும் ஆனால் ஆர்வத்தைத் தூண்டும் மலையாகக் கொல்லி மலையைப் பார்க்கிறேன்.


    தகவல்களுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  25. அற்புதமான வரலாற்றுப் பகிர்வு. கொல்லிமலை பற்றிய அத்தனை தகவல்களையும் அதிசயங்களையும் படமாயும் விளக்கமாயும் தந்த உங்கள் தேடலுக்கும் உழைப்புக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. அற்புதமான வரலாற்றுப் பகிர்வு. கொல்லிமலை பற்றிய அத்தனை தகவல்களையும் அதிசயங்களையும் படமாயும் விளக்கமாயும் தந்த உங்கள் தேடலுக்கும் உழைப்புக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. பல ஆண்டுகளாக சேலத்தில் வசித்தாலும், தினமும் "கொல்லிமலை" யெய் பார்த்தபடி வசிப்பிடம் இருப்பினும் நான் அறியாத பல நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள்.
    ஒரு பதிவினை படித்து முடிப்பதற்குள் அடுத்த பதிவினை அழகாக தர எப்படி முடிகிறது?
    வாழ்த்துக்கள்!!!!---பத்மா சூரி.

    ReplyDelete
  28. @ சத்யா said...
    கொல்லிமலையைப் பற்றி நீங்கள் பதிவிட்டுள்ள தகவல்கள் மிகவும் அற்புதமானது, ஆழமானது. சமிபகாலங்களில்
    இது போன்றதொரு விரிவான பயணக் கட்டுரையை நான் படித்ததில்லை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  29. @ வல்லிசிம்ஹன் said...
    எவ்வளவு தகவல்கள். மிக நீண்ட ஆனால் வெகு சுவையான பதிவு. அச்சமூட்டும் ஆனால் ஆர்வத்தைத் தூண்டும் மலையாகக் கொல்லி மலையைப் பார்க்கிறேன்.


    தகவல்களுக்கு மிகவும் நன்றி./
    வாங்க அம்மா.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  30. @சந்திரகௌரி said...//

    வாங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  31. @சந்திர வம்சம் said...//
    வாங்க. அழகான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  32. கொல்லிமலை,மூலிகைகள்,மூங்கில் பூக்கள் என காட்சிகள் விரிந்து கிடக்கின்றன.

    ReplyDelete
  33. kollimalaiyai pattri thelivaga therindhukonden thanks

    ReplyDelete
  34. 558+5+1=564

    ;))))) என் பின்னூட்டங்களும் தங்களின் பதில்களும் மீண்டும் இன்று படிக்கப்படிக்க சுவையோ சுவை - ஆஸ்திரேலிய கொடாரஞ்சுகள் போலவே. நன்றியோ நன்றிகள். ;)))))

    ReplyDelete