Showing posts with label முருகன். Show all posts
Showing posts with label முருகன். Show all posts

Wednesday, October 29, 2014

வெற்றி வேல் முருகனின் சூரசம்ஹாரம்




விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மடிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும் அடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே!

நல்ல மணவாழ்க்கை அமைய  இந்த திருமணத்திருப்புகழ் பாடல் உகந்தது.

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்

முருகன், குமரன், கந்தன், சரவணன், ஆறுமுகன், கார்த்திகேயன், சுப்ரமணியன், வடிவேலன், சுவாமிநாதன், செந்தில்நாதன் என்று திருநாமங்கள் கொண்டு போற்றப்படும்  தமிழ் கடவுள் முருகப்பெருமான். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். கொடுமைகள் பல புரிந்து வந்த சூரபத்மனை அவர் சம்ஹாரம் செய்த நாள் கந்த சஷ்டியின் சூரசம்ஹாரம்..!..

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் 
கந்தா முருகா  வருவாய் அருள்வாய்

குன்றுதோராடி குறைகள் களையும் குமரன் அருள்பொழியும்
அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா  சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகளுடன், சூரசம்ஹாரம்  கடற்கரையில் நடைபெறும் நாளில் அதிகாலை 1 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, அபிஷேகம், சாயரட்சை தீபாராதனையுடன் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி சூரனை வதம் செய்கிறார்..

 சந்தோஷ மண்டபத்தில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு புஷ்ப சப்பரத்தில்எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார்.

அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வதை சாயாபிஷேகம் என்பர்.
"சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள்

போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும்.

 இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார்.



 முருகன் சினம் தணிந்த இடம் என்பதால் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பதில்லை. அதற்கு பதிலாக காவிரி மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட் காட்சியளித்து சாமந்தி, ரோஜா, துளசி, கதம்பம், மல்லி, வில்வம் உள்பட 99 வகையான வண்ண மலர்களால் முருகனுக்கு புஷ்ப லட்சார்ச்சனை நடக்கும். 

திருத்தணி மூலவர் முருகனுக்கு  
புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 

பள்ளி குழந்தைகள், நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்கும் 
கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்..!. 

திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் உள்ள வள்ளிகுகையின் 
மேற்கூரையில் அமர்ந்திருக்கும் மயில்கள்.

Tuesday, October 28, 2014

வெண்ணந்தூர்"ஸ்ரீமுத்துக் குமார சுவாமி' ஆலயம்




பாலோ தேனோ பாகோ வானோர் பாராவாரத்து அமுதேயோ
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான்முத்தென

நீளத் தாலோ தாலேலோ பாடாதே  தாய்மார் நேசத்து 
உனு சாரந் தாராதே பேர் ஈயாதே பேசாதே ஏசத் தகுமோதான்

ஆலோல் கேளா மேலோர் நாண்மாலானா தேனற் புனமேபோய்
 .ஆயாள் தாள்மேல் வீழா வாழா ஆளா வேளைப் ...... புகுவோனே

சேலோ டேசே ராரால் சாலார்சீரா ரூரிற்  பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே  தேவே தேவப் ...... பெருமாளே.



நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், திருமணி முத்தாநதி சூழ்ந்த வெண்ணந்தூரில் அமைந்துள்ள திருக்கோயிலில் முருகன்,
 "ஸ்ரீமுத்துக் குமார சுவாமி' என்னும் நாமம் கொண்டு நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
வெண்ணந்தூர் முத்துக்குமாரசாமி திருக்கோயில் 1920 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோயில்.  பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்காந்தத்தில் இடம் பெறுகிறது கந்தனின் வரலாறு. அதில் சூரபதுமன் வதை படலம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெண்ணந்தூரில் 
"சூர சம்ஹார விழா' விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அசுர குலத்தைச் சேர்ந்த சூரபதுமன், ஈசனிடம் மிகுந்த பக்திகொண்டவன். அவன் தவம் செய்து ஈசனிடமே, ""உங்கள் சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியாலும் எனக்கு மரணம் நேரிடக் கூடாது'' என்ற வரத்தைப் பெற்றான். அதன் பின் தேவர்களுக்கும், இறையடியார்களுக்கும் பல தீங்குகள் செய்தான்.
பின்னர் தேவர்களின் வேண்டுகோளின்படி சிவ கிருபையால்,
"ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன்' உலகம் உய்ய!  சூரனை எதிர்த்துப் போரிடப் புறப்பட்ட முருகப் பெருமானிடம் உலக அன்னையாகிய பராசக்தி, ""என்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி உருவாக்கிய வேல் உன்னுடன் என்றும் இருக்கட்டும்'' என்று ஆசி கூறி வேலாயுதம் தந்து அனுப்பினாள். 

முருகப் பெருமானும் சூரனை வென்று, உலகமனைத்தையும் காத்தார்.
வெண்ணந்தூர் முருகன் கோயிலில் சூர சம்ஹார விழா, கந்த சஷ்டியன்று மாலை 3.00 மணிக்குத் தொடங்கும். அப்போது முருகன் தனது தாய் பார்வதி தேவியிடம் சென்று சக்திவேலை பெற்றுக் கொண்டு புறப்படும் நிகழ்ச்சி முதலில் நடைபெறும். பின்னர் "சூர சம்ஹாரம்' முடிந்ததும், அதைக் கொண்டாடும் வகையில் வண்ண வண்ண வாணவேடிக்கைகளுடன் மிக கோலாகலமாக விழா நிறைவுறும்.

 இவ்விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள்  சுற்று வட்டாரத்திலிருந்து வெண்ணந்தூர் வருவார்கள்.
ஆடி மாத கடைசி வியாழக்கிழமையன்று சுப்பிரமணியருக்கு பெரிய விழா எடுத்து கோலாகலமாக நடத்தப்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும் கந்தசஷ்டியன்று சூரசம்ஹாரம் விழா மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. சூரசம்ஹாரம் விழா திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறுவதுபோல் இங்கும் நடைபெறுகிறது.


வெண்ணந்தூரில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு முத்துக்குமாரசாமியின் பேரருளைப் பெறலாம்.

  சஷ்டியன்று நடைபெறும் விசேஷ வழிபாடு சிறப்பு பெற்றது..


திருமணத் தடையுள்ளவர்கள் சஷ்டியின்போது வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும் என்பது  ஐதீகம்..