Wednesday, June 4, 2014

"அம்பர் மாகாளம்'- அச்சம் தீர்த்த கணபதி


அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான மாற நாயனார், வேதநாயகனாம் சிவனாரை வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் வழிபட்டதனால்,  சோமாசிமாற நாயனார் எனப் போற்றப்படுகிறார்...

பொன்னி நதி பாய்ந்து வரும் சோழ தேசத்தில் புகழ் பல கொண்டு மகோன்னத மகிமைகளோடு திகழ்கின்ற சிறப்புத் தலமாய் அமைந்துள்ளது, "அம்பர் மாகாளம்' என்றழைக்கப்பட்டு, தற்போது "கோவில் திருமாளம்' எனத் திரிந்துள்ள ஊராகும்.

அரிசலாற்றங்கரையில் உள்ள இந்த அம்பர் மாகாளத்தின் மீது திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்கள் பாடிப் போற்றியுள்ளார்!

இமைப் பொழுதும் ஈசனை மறவாமல் வாழ்ந்த சிவனடியார், "சோமாசி மாற' நாயனார்' தனது மனைவி சுசீலையுடன் சோமயாகம் செய்ய விரும்பினார்! 

அந்தப் பெருமைமிகு யாகத்தில் "அவிர்பாகம்' பெற, 
திருவாரூர் தியாகேசப் பெருமானையே அழைக்க விரும்பினார்..

அந்தப் பரமனையே "அவிர்பாகம்' பெற அழைப்பதற்கு "யாரை அணுகினால்  சாத்தியமாகும்?' என எண்ணி தம்பிரான் தோழராக திகழ்ந்த சிவபெருமானின் அன்புக்குப் பாத்திரமான  குரு நாதராகிய சுந்தரமூர்த்தி நாயனாரின்  நட்பு கிடைத்தால், தனது விருப்பம் நிறைவேறும் என்று எண்ணினார் 
ஆனால் சுந்தரரை இவருக்கு தெரியாது ,எனவே சுந்தரர் வீட்டில் தினமும் 
தூதுவளை கீரை கொடுத்து நண்பரானார். எனவே தூது போய் நண்பரை வளைத்ததால் தூது வளை என பெயர் வந்ததாம் .
. 'சுந்தரர் மூலமாக தியாகேசரைப் பணிந்த சோமாசியாருக்கு அசரீரி வாக்காக இறைவன், ""நான் அந்த யாகத்தில் கலந்து கொள்கிறேன். ஆனால் எப்போது, எப்படி, எந்த உருவத்தில் வருவேன் என்பதைத் தெரிவிக்க மாட்டேன். தன்னைக் கண்டு அச்சப்படவோ, அருவருப்படையவோ வேண்டாம்'' என்று கூறியருளினார்.

சோமாசியாருக்கு பெரு மகிழ்ச்சி! எந்த உருவில் வந்தால் என்ன? இறைவன் வருவதே பெரும் பாக்கியம்தானே!! 

வைகாசி மாதம், ஆயில்ய நட்சத்திரம் கூடிய நன்னாளில், 
"அச்சம் தீர்த்த கணபதி' ஆலயம் எதிரே யாகசாலை அமைக்கப்பட்டு, 
யாக பூஜை இனிதே தொடங்கியது! 

வேத விற்பன்னர்களின் வேத கோஷங்களோடு தொடங்கிய 
யாகத்தில் அப்பொழுது அவிர்பாகம் தர வேண்டிய நேரம்! 

இறைவன் வரவில்லை! ஆனால் அதற்கு மாறாய் 
சற்று தூரத்தில் ஒரு வினோதக் கூட்டம்!
தலைப்பாகை கட்டிய ஆஜானுபாகுவான ,புலையன் ஒருவன் நான்கு நாய்களைக் கையில் பிடித்தபடி  வேள்விச் சாலைக்குள் நுழைந்தான். 

அவனது துணைவிகள் குடம் சுமந்தபடி பின்னே வர, இரண்டு 
சிறு பாலகர்கள் உடன் வர, அவர்கள் தோற்றத்தைப் 
பார்த்தவர்கள் பதைத்தனர்! 

யாகத்துக்குப் பொருந்தாத அந்தக் கூட்டத்தினரைக் கண்ட வேதியர்கள், நாலாபுறமும் பறந்தோடினர்! சோமாசியாரோ யாகத்திற்கு பங்கம் விளைந்துவிடுமோ என அஞ்சினார்!
மாறரோ ஒரு கணம் கண்மூடி கணபதியை தியானித்தார்!

அச்சம் தீர்த்த கணபதியின் திருவருளால் உண்மை உணர்ந்தார்! வந்திருப்பது அந்த தியாகேச மூர்த்தியே என்பதவருக்குப் புரிந்தது!

இதனால் பெரிதும் மகிழ்ந்த சோமாசிமாற நாயனார், புலையனை வணங்கி வரவேற்றதுடன், அவிர்பாகத்தையும் அவனுக்கு அளித்தார்.

மறு கணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. புலையன் பிடித்திருந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்களாக மாற... சிவனாரும் பார்வதிதேவியும் இடப வாகனத்தில் அமர்ந்தபடி சோமாசிமாற நாயனாருக்குக் காட்சி தந்தனர். 

இந்தச் சம்பவம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருமாகாளம் 
என்ற தலத்தில் நிகழ்ந்தது என்பர்.

சோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து அருள்புரிந்த மூர்த்தமே "காட்சிகொடுத்த நாயகர்" எனப் போற்றப்படுகின்றார்.

அடுத்த கணம் ஓடிச் சென்று அவர்கள் திருமுன் விழுந்து, அவர்களை வணங்கி வலம் வந்தார் நாயனார். பேரொளிப் பிரவாகமாக ரிஷபத்தின் மீது தேவியுடன் அத்தருணத்தில் எழுந்தருளி, அற்புத தரிசனம் தந்து, அவிர்பாகத்தினைப் பெற்று, அருள்புரிந்து மறைந்தார் ஆரூர் அண்ணல்!!

இன்றும் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில், இவ்வைபவம் பெருவிழாவாக இங்கு விமரிசையுடன் நடத்தப்படுகின்றது! 

இவ்விழாவினைக் காண வருவோர் பருகிட நீர் மோரும், 
பானகமும் பொது மக்கள் அளிக்கின்றனர். 

தெருவெங்கும் மாக்கோலம் போடப்பட்டு, விழாக் கோலம்
 காண்கிறது அம்பர் மாகாளம்.

வருடா வருடம் வைகாசி ஆயில்யத்தன்று தியாகராஜப் பெருமான் 
அம்பர் மாகாளத்திற்கு எழுந்தருளுவதால், அன்று திருவாரூர் தியாகேசர் சந்நிதியில் உச்சிகால பூஜை கிடையாது என்பது இன்று வரையிலும் கடைபிடிக்கப்படும் மரபு.

இறைவன் யாகத்திற்கு நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் "பொங்கு சாராயநல்லூர்" (இன்று வழக்கில் "கொங்கராய ' நல்லூர்") என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் "அடியுக்க மங்கலம்" (இன்று வழக்கில் "அடியக்கமங்கலம்") என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் "கடா மங்கலம்" என்றும் இன்றும் வழங்குகின்றது.

திருமாகாளம், அம்பர் ஆகிய தலங்களுக்கு நடுவே... சோமாசிமாற நாயனார் யாகம் நடத்திய யாகசாலையும், அவருக்கு, 'வந்திருப்பது இறைவனே' என்பதை உணர்த்தி அருளிய விநாயகர் குடிகொண்டிருக்கும் கோயிலும் உள்ளன.
திருமாகாளம் தலத்தில், சோமாசிமாற நாயனாரது திருநட்சத்திரமான வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திர திருநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

அன்று... தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, புலையன் கோலத்தில் வேள்விச் சாலைக்கு வரும் தியாகேச பெருமான் அவிர் பாகம் பெறுதல் ஆகிய வைபவங்கள் நடைபெறும். அன்று இரவு, சோமாசி மாற நாயனார் தன் மனைவியுடன் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருள வீதியுலா நடைபெறும்.

மறு நாள் மக நட்சத்திரத்தன்று வேள்விச் சாலையில் இருந்து சிதறி ஓடிய வேத விற்பன்னர்களுக்கு இறைவன் காட்சி தரும் வைபவமும், அம்பன் அம்பாசுரன் ஆகியோரை வதைத்த பாவம் தீர... காளிதேவி, சிவனாரை வழிபடும் வைபவமும் நடைபெறும். இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

இந்த விழாவின்போது திருவாரூர் தியாகேசர் இங்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

அம்பரான் சோமாசி  மாறனுக்கும் அடியேன்.
ஐயனே நேரில் வந்து பெற்ற அவிர்பாகம்!
அம்பர் மாகாளத்தின் இறைவனை மஹாகாள முனிவர், காளிதேவி, வாசுகி மாநாகம், மதங்க முனிவர், உதங்க முனிவர், மன்மதன், மகுடவர்தன மஹாராஜா, மருத மன்னன், சோமாசி மாற நாயனார், விமலன் என்கிற அந்தணன் ஆகியோர் வழிபட்டுப் பெரும் பேறுகளைப் பெற்றுள்ளனர்.
புராண காலத்தில் இத்தலத்தில் அம்பன், அம்பராசுரன் என்ற இரண்டு அசுர குமாரர்கள் இருந்தனர். அவர்கள் நல்லோரைத் துன்புறுத்துவதில் அளவற்ற இன்பம் கண்டு வந்தனர். 

பாதிக்கப்பட்ட அனைவரும் பரமனை வணங்கி, தங்கள் பரிதாப நிலையைக் கூறினர். 

அந்நிலையில், அம்பிகையின் திருவருட் திறத்தால், அம்பராசுரனையே அம்பன் கொன்றுவிட்டான். 

பின்னர் மாகாள நாதர் தனது தேவியை நோக்க, குறிப்பறிந்த பார்வதி, காளியாக மாறி "அசுர சம்ஹாரம்' செய்தாள்.

இறப்பதற்கு முன் காளி தேவியின் கோர ரூபம் கண்டு பயந்த அம்பன், எருமைக் கிடாவாக உரு மாறினானாம்! 

அவ்வாறு அவன் மாறிய இடம், "கிடா மங்கலம்' 
என்று இன்றழைக்கப்படுகிறது. 

எருமைக் கிடாவாக மாறிய அவனை விரட்டிச் சென்ற காளி, "அம்பகரத்தூரில்' அவனைக் கொன்று அழித்ததாகத் தல புராணம் கூறுகின்றது.

இன்றும் ஈசரது கட்டளைப்படி சிவராத்திரி நான்கு காலங்களிலும் முறையே அம்பர் மாகாளம், அம்பர், இளையாத்தங்குடி, திருச்சாத்தமங்கை ஆகிய தலங்களில் சிவனை காளியன்னை வழிபடுவதாக ஐதீகம். 

அம்பகரத்தூர் காளியை வழிபட்ட பின் கோவில் திருமாளத்திற்கு வந்து, காளி உருவாக்கிய லிங்கத்தை வழிபடுவதும், பின் மூலவரை தரிசிப்பதும் தொன்று தொட்டு வரும் மரபாகும்!
Ambagarathur Kali amman
Ambagarathur Kali amman
மதங்க முனிவர் இத்தலத்தில் தங்கி, இறைவனை வணங்கி, தனக்கு புத்திர பாக்கியம் வேண்டினார்!

அதன்படி ஈசனருளால் ஓர் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு
"ராஜ மாதங்கி' எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார். !

பார்வதி தேவியே தனக்கு மகளாகப் பிறந்ததை அந்நிலையில்
உணர்ந்த முனிவர், பரவசப்பட்டார்.

மதங்கரின் பிரார்த்தனையை ஏற்று, இத்தலத்தில் ஈசனை மணந்து,
திருமணக் கோலத்திலே அருள் பாலிக்கின்றாள்
 ராஜ மாதங்கி. மணக்கோலத்தில் இங்கே வீற்றிருந்த வேளையில் தேவி பரமேஸ்வரனிடம் கேட்ட வரத்தின்படி, திருமணத் தடையுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால், விரைவில் "கெட்டி மேளம்' ஒலிக்கும்!
:
அஷ்ட மாநாகங்களில் ஒன்றான வாசுகி நாகம், தனக்கு ஏற்பட்ட 
பிரம்ம ஹத்தி தோஷத்தை நீக்கிட, பல தலங்களுக்கும் சென்று வழிபட்டது! 

இருப்பினும் பலனில்லை! இறுதியில் பரமனின் திருவருளால் 
இந்த மாகாளம் வந்து, சர்வேஸ்வரனை வணங்கிட உரிய பலன் கிட்டியது! எனவே ராகு பரிகாரத்திற்கும், நாக தோஷ நிவர்த்திக்கும் உகந்த தலமாகிறது, அம்பர் மாகாளம்!
கிழக்கு நோக்கிய ஐந்து மாட ராஜகோபுரம் அற்புதமாய் நிமிர்ந்து நிற்கிறது! 

 நாற்புறமும் ஓங்கி நிற்கும் திருமதில்கள்! உள்ளே 
இரண்டு பிராகார அமைப்புகள்! 
இவற்றில் வெளிப்பிராகாரம் மிகவும் விசாலமானது! 
நேராக நந்தி, பலிபீடம் மற்றும் கணபதி காட்சி தருகிறார்

இரண்டாம் ராஜகோபுரம் மூன்று மாடங்கள் கொண்டு 
அகலவாட்டில் உள்ளது! 

இங்கேயும் "துவார கணபதி' வீற்றுள்ளார்!

கோபுரத்தினுள் இடப்புறம் சூரியனும், கிழக்குத் திருமாளிகைப் பத்தியில் தனி சனீஸ்வரர், காசி விஸ்வநாதர் மற்றும் தண்டபாணி சுவாமியும் சந்நிதி கொண்டுள்ளனர். அதையொட்டி தெற்கு முகமாக உள்ள மண்டபத்துள் சிவகாமியுடன் அருட்காட்சி தருகின்றார் ஸ்ரீ நடராஜ மூர்த்தி!
பின் சபா மண்டபம், மகா மண்டபம், இடை மண்டபம், அர்த்த மண்டபம், மூலஸ்தானம் ஆகிய அமைப்பிலான பெரும் சுவாமி சந்நிதி உள்ளது!
சபா மண்டபத்தின் இடப்புறம் நீலோற்பலாம்பாளுடன் கூடிய தியாகராஜர், யாக சாலைக்கு வந்த தோற்றத்திலேயே தனி சந்நிதி கொண்டு அருள்புரிகின்றார்! 

உடன் ஆதி நரமுக குழந்தை கணபதியும், குழந்தை முருகனும் உள்ளனர்!

 மகா மண்டபத்தில்  உற்சவ விக்ரஹங்களின் அணிவகுப்பு! 

சோமாசி மாறர், அவரது துணைவியார், சுந்தரர், பரவையார், சோமாஸ்கந்தர், தனி அம்பாள், காளிதேவி மற்றும் மதங்க முனிவர் ஆகியோரது சிலா வடிவங்கள் உள்ளன! 
பின் இடை மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை! கருவறையுள் கருணை நாயகனாய், சிறிய லிங்கத் திருவுருவில் பேரருள் புரிந்து, அருமையாக நமக்கு தரிசனமளிக்கின்றார் ஸ்ரீ மாகாளநாதர்! 
(ஐந்து மாகாளத் தலங்களில் இதுவும் ஒன்று).

 உட்பிராகாரத்தின் தொடக்கத்தில் சுதை வடிவிலான பத்ரகாளியினை தரிசிக்கின்றோம்! 

அடுத்ததாக சோமாசி மாறர், தன் மனைவி சுசீலையுடன் கற்சிற்பமாக நற்காட்சி தருகின்றார்! 

பின்னர், அறுபத்து மூவர் தரிசனம்! தொடர்ந்து நாகர்கள், பிரம்மா, நால்வர், அகத்திய லிங்கம் மற்றும் யோக சுப்ரமணியர் போன்ற சிலாரூபங்கள் அணி செய்கின்றன!

தென்மேற்கில் கிழக்கு பார்த்தபடி தல கணபதி சந்நிதி கொண்டுள்ளார்! இக்கோயிலில், வாசுகி நாக தேவதையின் தனி சந்நிதியுள்ளது. இங்கே இந்தச் சிலை மீது 9 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சட்டை உரித்ததை அடையாளமாகப் பாதுகாத்து வைத்துள்ளனர்.

வெளி பிராகாரத்தில் நந்தி மண்டபம் அருகே மருதமன்னன் பூஜித்த லிங்கம் தனி சந்நிதியில் உள்ளது! தென் திசையில் "மோக்ஷ லிங்க' சந்நிதி, மேற்கு முகமாக அமைந்துள்ளது. இங்கே காளிதேவியின் தனி சந்நிதி! இதில் கற்சிலையாக அம்பிகை அற்புத தரிசனமளிக்கின்றாள்.
மிக பிரம்மாண்டமான ஆலயத்தின் வலப்புறம், அம்பாளது தனிக் கோயில் அழகே அமையப் பெற்றுள்ளது.

வெளிப்புற மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைப்பிலான அம்பாள் சந்நிதி ஆகியன ஒரே பிராகாரத்துடன் விளங்குகின்றன.

"ராஜ மாதங்கி' என்று போற்றப்படும் இந்த அன்னைக்கு,
"அச்சம் தீர்த்த நாயகி' என்ற அழகிய தமிழ்ப் பெயரும் உண்டு.

முதலாம் குலோதுங்கச் சோழனால் கற்றளியாக்கப்பட்டது சோழர் காலக் கல்வெட்டுகள் பல ஆலயத்தில் உள்ளன! 
தல விருஷமாகத் திகழும் கருங்காலி, மிருசீர்ஷ நட்சத்திரம் மற்றும் விருச்சிக ராசிக்கு உகந்த மரமாகும்! 

சங்க காலத்தில் "மாரோடம்' என்றழைக்கப்பட்ட, தோல் நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்ட கருங்காலிமரம், செவ்வாய் தோஷத்தையும் போக்கவல்லது

தல தீர்த்தமாக ஆலயத்தின் எதிரே "மாகாள வாவி' விளங்குகிறது.
 தினமும் நான்கு கால பூஜைகள் நடக்கின்றன! தினசரி காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்!

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில், திருவாரூர்- மயிலாடுதுறை பேருந்து சாலையில் உள்ள பூந்தோட்டத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோவில் திருமாளம்!

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் உள்ள 63 நாயன்மார்களுக்கான பெருவிழா 

17 comments:

  1. nice post.great work.

    ReplyDelete
  2. தூதுவளை பெயர்க்காரணம் உட்பட மற்ற அனைத்து தகவல்களும் சிறப்பு அம்மா... படங்கள் அனைத்தும் பிரமாதம்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அறுபத்து மூவருள் ஒருவரான - சோமாசிமாறனார் பற்றிய தகவல்கள் மனதில் நிறைந்தன. வாழ்க நலம்..

    ReplyDelete
  4. தூதுவளை பெயர் வரக்காரணத்தை அறிந்துகொண்டேன். கதைகள்+தகவல்கள் அனைத்தும் அருமை. படங்கள் அழகு.நன்றி.

    ReplyDelete
  5. அருமையான தகவல்கள் நிறைந்த பதிவு!.. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. அம்பர் மாகாளம், கோவில் திருமாளம் போன்றவை கேள்விப்படாத பெயர்களாக இருப்பினும் ......

    ’அம்பர்’ என்பது கம்பர்கட் (கமர்க்கட்) சாப்பிடுவது போல இனிமையாகவே உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. சோமாசி மாற நாயனார் சரித்திரமும், தூது போய் நண்பரை வளைத்திட உதவியதால் ’தூதுவளை’ என்று பெயர் பெற்ற செய்தியும் அருமை.

    அடியேனும் ஒருவரை ஆத்மார்த்தமான நண்பராக்கிக் கொள்ளத்தான் விரும்புகிறேன். தூதுவளைக்கீரை பயிரிடலாமா என எனக்கும் நினைக்கத் தோன்றுகிறது.

    >>>>>

    ReplyDelete
  8. சிவபெருமானுக்கு அவிர்பாகம் அளித்த காட்சியை அருமையாக வர்ணித்துள்ளீர்கள்.

    நீர் மோரும் பானகமும் அருந்திய மகிழ்ச்சியை உணர முடிந்தது, இந்தத் தங்களின் வர்ணனையைப் படித்ததும்.

    >>>>>

    ReplyDelete
  9. ’பொங்கு சாராய நல்லூர்’ ......
    படித்ததும் மிகவும் ’கிக்’ ஆகிப்போனேன், வில்லுப்பாட்டு போலவே.

    >>>>>

    ReplyDelete
  10. ’அடியுக்க மங்கலம்’ .....

    ’அடி அக்கா [என்] மங்களம் !’
    என பிரியத்துடன் அழைக்கத்தோன்றுகிறது.

    >>>>>

    ReplyDelete
  11. ’கடா மங்கலம்’
    இது வேறு உண்டா?
    கஷ்டம் கஷ்டம் மனதுக்குக் கஷ்டம்.

    ஓஹோ ... எருமைக்கடாவா ... அதுவும் அசுரனா ...
    காளியாக மாறிய தேவியால் வதமா ! அப்படியானால்
    அச்சா !! பஹூத் அச்சா !!!

    >>>>>

    ReplyDelete
  12. ’ராஜ மாதங்கி’ ;)))))
    அச்சம் தீர்த்த நாயகி

    ’கெட்டி மேளம்’
    சீக்கரமாக ஒலிக்கட்டும். ;)))))

    >>>>>

    ReplyDelete
  13. எல்லாப்படங்களும் அழகு தான். இருப்பினும் ராசிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள அறுபத்து மூவருக்கும் மாலை அணிவித்துள்ளது பார்க்க பரவஸம் அளிப்பதாக உள்ளது.

    அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ;) 1295 ;)

    oooo oooo

    ReplyDelete
  14. அருமையான தகவல்களுடன் தங்கள் பதிவு எப்போதும் போல அற்புதம்!

    ReplyDelete
  15. மிகச்சிறப்பான தலம் குறித்த சிறப்பான பகிர்வு! படங்கள் அழகு சேர்த்தன! நன்றி!

    ReplyDelete
  16. அடியக்காமங்கலம் என்ற பெயர் மட்டும் கேள்விப்பட்டதுண்டு.....

    சிறப்பான தகவல்களுடன் அருமையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  17. மாற நாயனார் பற்றிய செய்திகளுக்கும், அடியக்காமங்கலம் பற்றிய தகவல்களுக்கும் நன்றி அம்மா.

    ReplyDelete