Monday, June 16, 2014

ஐஸ்வர்யங்கள் அருளும் சிங்கப்பெருமாள்கோவில்


ஸ்ரீ பாடலாத்ரி நரஸிம்மப் பெருமாள் ஸ்துதி

ஜிதந்தேம ஹாஸ்தம்பஸம் பூத விஷ்ணோ !
ஜிதந்தே ஜகத்ரக்ஷணார்தாவார
ஜிதந்தே ஹரே! பாடலாத்ரௌ நிவாஸின்
ஜிதந்தே ந்ருஸிம்ஹ ப்ரஸீத ப்ரஸீத

நமஸ்தே ஜகந்நாத விஷ்ணோ முராரே
நமஸ்தே ந்ருஸிம்ம அச்யுதாநந்த தேவ
நமஸ்தே க்ருபாலோ சக்ரபாணே
 நமஸ்தம்பஸம் பூததிவ்யாவதார

பரப்ரஹ்மரூபம் ப்ரபுத் தாட்ட ஹாஸம்
கரப்ரெளல சக்ரம் ஹரப்ரஹ்மஸேவ்யம்
ப்ரஸந்நம் த்ரிநேத்ரம் ஹரிம்  பாடலாத்ரௌ
சான்மேக காத்ரம் ந்ருஸிம்ஹம் பஜாம்

கிரிஜந்ருஹரிமீசம் கர்விதாராதி வஜ்ரம்
பரமபுருஷமாத்யம் பாடலாத்ரௌ ப்ரஸன்னம்
அபய வரத ஹஸ்தம் சங்க சக்ரேததாநம்
சரண மிஹபஜாம் சாச்வதம் நாரஸிம்யும்

ஸ்ரீ ந்ருஸிம்ஹ! மஹாசிம்ஹ! திவ்யஸிம்ஹ!
கிரிஸம்பவ! தேவேச! ரக்ஷமாம் சரணாகதம்

மிக ஆபத்தான சூழ்நிலையிலும், ஸங்கடமான நிலையிலும்,  
அச்சத்தில் இருக்கும் தருவாயிலும்,  ஸ்ரீ பாடலாத்ரி நரஸிம்மப் பெருமாள் ஸ்துதியை இதய பூர்வமாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால் அருள்மிகு அஹோபிலவல்லி ஸமேத ஸ்ரீ பாடலாத்ரி நரஸிம்ம பெருமாள் ஓடோடி வந்து  காத்துரக்ஷிப்பார் என்பது அனுபவ பூர்வமாக கண்டறிந்த பேரின்பம்!! 
நரசிம்ம ஜெயந்தி சீரும், சிறப்புமாக கொண்டாடப்படும் புகழ் பெற்ற நரசிம்மர் தலங்களில் சென்னை அருகில் உள்ள சிங்கபெருமாள் கோவில் தலமும் ஒன்று. 
 சிங்க தலையும், மனித உடலும் கொண்ட நரசிம்மர் உருவத் தத்துவத்தை உணர்த்துவது போல இந்த தலத்தின் பெயர் சிங்கபெருமாள் கோவில் என்று பெயர் பெற்றுள்ளது. 
திருமாலின் தசாவதாரங்களில் மற்ற அவதாரங்கள் எல்லாம் ஆற, 
அமர தோன்றி தங்கள் அவதார நோக்கத்தை நிறைவேற்றினார்கள்.

ஆனால் நரசிம்மர் அவதாரம் அப்படிப்பட்டது அல்ல. 

தன் பக்தன் பிரகலாதனை காப்பாற்ற தூணில் இருந்து, தூணை உடைத்து கொண்டு நொடியில் காட்சி அளித்தவர். அவர் அவதார தோற்றமே உக்கிரம்தான். "நரசிம்மரை நம்பியவர்களுக்கு நாளை என்பது இல்லை'' என்பதை நிரூபித்துக் காட்டியவர்.
அந்த அவதார காட்சியை, பின்னாளில் நரசிம்மர் 
பல தலங்களில் நிகழ்த்தி காட்டி அற்புதம் செய்தார். 
அத்தகைய அற்புதம் நிகழ்ந்த தலங்களில் ஒன்றுதான் சிங்கபெருமாள் கோவில். சென்னை மற்றும் புறநகரில் உள்ள நரசிம்மர் கோவில்களில் பழமையும் தனித்துவமும் கொண்டது சிங்கபெருமாள் கோவில்.

பாடலாத்ரி (சிவப்பான குன்று) என்கிற கம்பீரமான தலம் இது. 

சிவந்தமலையின் குகைக்குள் இறைவன் உள்ளதால் 
பாடலாத்ரி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். 

ஜபாபாலி என்ற மகரிஷி இங்கு தவம் செய்து வந்தார். இரண்யனை அழிக்க பரந்தாமன் நரசிம்மராக வந்ததைக் கேள்விப்பட்டார்.

இங்கேயே நரசிம்மப் பெருமானை நேரில் காணத்தவம் செய்தார். ஜாபாலியின் தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் நேரில் தோன்றினார். 

மனம் மகிழ்ந்த ஜாபாலி சிங்கப்பெருமாளை இத்தலத்திலேயே 
தங்கி அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

அதனால் நரசிம்மர் இங்குள்ள குகைக்குள் மலையையே 
உடம்பாக்கி கொண்டுள்ளார்.

அதனால் சுவாமியை வலம் வந்தால் மலையையும் வலம் வந்த புண்ணியம் கிடைக்கும் பலனை கருதி இங்கு கிரிவலம் வருவது மிகவும் பிரசித்தமாக உள்ளது. 

பரந்தாமன், காக்கும் தெய்வம். சங்கர நாராயணரான அவர் சிவனின் மூன்றாவது கண்ணை எடுத்துக் கொண்டு முக்கண்ணனாக பாடலாத்ரியில் காணப்படுகிறார்.

த்ரிநேத்ர தாரியாக திருமார்பில் மகாலட்சுமியுடன், 
சஹஸ்ரநாம மாலை, சாளக்ராம மாலையுடன் காட்சியளிக்கிறார். 
திருமணமாக, நோயிலிருந்து விடுபட, தொழிலில் மேன்மை பெற, வேலை கிடைக்க, நிம்மதி கிடைக்க ஐந்து ஞாயிற்றுக்கிழமை சிங்கபெருமாள் கோவில் மலையை ஐந்து சுற்று வலம் வந்து நரசிம்மரின் மூன்றாவது கண்ணை வழிபட்டால் குறைகள் தீர்ந்து அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

குறைகள் நீங்கிய பின் பானக நைவேத்தியம் செய்து 
பிரார்த்தனையை நிறைவு செய்யலாம். 

திருமணமாகாதவர்களும், குழந்தை இல்லாதவர்களும் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து ஈர இழை நூலெடுத்து நரசிம்மரை நினைத்து இந்தத் தல மரத்தின் கிளையில் கட்டி, மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் நினைத்தது நடக்கும்.
பிரதோஷ காலத்தில் நரசிம்மர் அவதாரம் செய்ததால் இத்தலத்தில் பிரதோஷ நாட்களில் விசேஷ பூஜை நடைபெறுகிறது. 

 இறைவனுக்கும் பிரதோஷ நரசிம்மர் என்ற பெயர் உண்டு. 

சிங்கபெருமாள் கோவிலில் ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும், நரசிம்மருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அந்த அபிஷேகத்தை நேரில் கண்டு களிப்பது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது. 

இந்த தலத்தில் ஜாபாலி மகரிஷிக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த போது, மிக, மிக உக்கிரமான கோலத்தில்தான் காட்சி தந்தார்.

எனவே நரசிம்மரை, மனம் குளிர வைக்கும் வகையில் அவருக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். அதில் முதன்மையானதாக பானகம் உள்ளது. இங்கு வந்து பானகம் சமர்ப்பித்து, ஸ்ரீநரசிம்மரை வழிபட்டால்,  நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

சிவாலயங்களில் மட்டும் நடக்கும் பிரதோஷ பூஜை நடப்பது 
தல விசேஷமாகும். 
பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தின் சிறப்பம்சம். 

மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், 
ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளிபடுகிறது.  

நரசிம்மர் கோவில்களில், நரசிம்மர் இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்ட நிலையில் தரிசனம் தருவார். ஆனால், சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில் உள்ள நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மூலவர் பாடலாத்ரி நரசிம்மர் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். வலது கையை அபயகரமாகவும், இடது கை தொடை மீது வைத்த நிலையிலும் உள்ளது. மூன்று கண்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்தள்ளார். உற்சவர் பிரகலாதவரதன் என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் குகைக்கோவிலில் அருள்பாலிப்பதால் அவரை வலம் வர வேண்டுமென்றால் சிறிய குன்றினையும் சேர்த்து வலம் வர வேண்டும்.
நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. 

அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில், 
பிரணவகோடி விமானத்தின் கீழ் அருள்கின்றனர். 

"பாடலம்'' என்றால் "சிவப்பு'', "அத்ரி'' என்றால் "மலை'' என்று பொருள். நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் மலையில் தரிசனம் தந்தால் "பாடலாத்ரி'' என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது.
 பல்லவர் கால குடைவரைக் கோவிலாகும். 

தாயார், ஆண்டாள் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், விஷ்வக்ஸேனர், லட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. 
கருடன், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னதிகளும் உள்ளன. 
கோவில் முகப்பில் பெருமாளின் தசாவதாரக் காட்சிகள் 
சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

12 ஆழ்வார்களும் இத்தலத்தில் மூலவராகவும், 
உற்சவராகவும் உள்ளனர்.

SRI MUDALIANDAN THIRUMALIGAI, SINGAPERUMAL KOIL.
சித்திரை வருடப்பிறப்பு, சித்ராபவுர்ணமி, நரசிம்மர் ஜெயந்தி, 
ராமானுஜர் ஜெயந்தி, வைகாசியில் சுவாதிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் துவங்கி 10 நாள் பிரமோற்சவம்
ஆடிப்பூரம், ஆவணியில் பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திரக்கார்த்திகை, தை சங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மாசியில் 5 நாள் தெப்ப உற்சவம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிங்கபெருமாள் கோவிலில் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை  ஆலயம் திறந்திருக்கும்

சென்னை தாம்பரத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் சிங்கபெருமாள் கோவில் அமைந்துள்ளது. 

பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் நடப்பது போல இத்தலத்திலும் கிரிவலம் புகழ் பெற்றது. ஆனால் இத்தலத்தில் குறிப்பிட்ட தினம் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் மக்கள் கிரிவலம் வருகிறார்கள். இங்கு கிரிவலம் வந்தால் வாழ்வில் நிச்சயம் மாற்றம் வரும் என்று  நம்புகிறார்கள்.

தொடர்புடைய பதிவு..

குறை தீர்க்கும் சிங்கபெருமாள் கோவில்01

11 comments:

  1. இதுவரை சென்றதில்லை அம்மா... படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நலம் தரும் ஸ்ரீநரஸிம்ஹ ஸ்வாமியைப் பற்றிய இனிய பதிவு!..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. நரசிம்மர் கோவிலில் பிரதோஷ பூஜை அரிதான தகவல். பாடலாத்ரி நரசிம்மபெருமாள் தகவல்கள்,சிறப்புகள் அத்தனை விரிவான பகிர்வு.
    படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கு.நன்றி.

    ReplyDelete
  4. எல்லாப்படங்களிலும் பிரத்யக்ஷமாக ஈஸ்வர ஸ்வரூபம் அமைந்துள்ளன. உயிரோட்டமுள்ள அற்புதப்படங்களாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  5. ஸ்லோக ஸ்துதிகளும் விளக்கங்களும் வெகு அருமையாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  6. அருள்மிகு அஹோபிலவல்லி ஸமேத ஸ்ரீ பாடலாத்ரி நரஸிம்ஹப் பெருமாள் என்ற பெயரே மிகவும் கம்பீரமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. கரீதமாக [பானகமாக] இனிக்கும் இன்றைய தங்களின் பதிவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ;) 1307 ;)

    oooo

    ReplyDelete
  8. சிங்கப்பெருமாள் கோயில் பற்றி படித்துள்ளேன். இப்போதுதான் முழுமையாகப் பார்த்தேன், தங்கள் பதிவு மூலமாக. நன்றி.

    ReplyDelete
  9. சிங்கபெருமாள் கோவில் பற்றிய தகவல்களும் படங்களும் மிக அருமை. இது வரை சென்றதில்லை. உங்கள் பதிவு மூலம் சென்று வந்த உணர்வு. நன்றி.

    ReplyDelete
  10. சிங்கப்பெருமாள் அழகியபடங்களுடன்,

    ReplyDelete
  11. அற்புதமான படங்கள்

    ReplyDelete