Wednesday, December 3, 2014

உத்தான துவாதசி துளசிபூஜை




102a.jpg (300×375)


Photo: துளசி
--------
துளசி செடி வளரும் இடத்தில் மும்மூர்த்திகளும் சகல தேவதைகளும்  வாசம் செய்வதாக ஐதீகம்.இதன் காற்று பட்டாலே பாவங்கள் விலகும் . துர்தேவதைகள்அண்டாது .சீதாதேவி துளசி பூஜை செய்ததன் பலனாக தான் ஸ்ரீராமரை கணவனாகப் பெற்றாள் என்று துளசி இராமாயணம் கூறுகிறது .துளசி செடியை திருமாலின்  அம்சம் என்றும் ஸ்ரீ புராணம் கூறும் உண்மையாகும்.பத்ம புராணம் துளசியின் பெருமையை மேலும் விளக்குகிறது.

பௌர்ணமி ,ஞாயிற்றுக் கிழமை ,சங்கராந்தி தினம்,நடுப்பகல் இரவு,சூரியோதயதிற்கும் பிறகு,தீட்டு எச்சல் உள்ள நிலையிலும் எண்ணெய் தேய்த்து உடம்புடனும் ,குளிக்காமலும் துளசி இலை பறிக்கக் கூடாது.பறித்த துளசி வாடினாலும் மூன்று நாள்கள் வரை பரிசுத்தமாக இருக்கும்.துளசியை நிர்மால்யமாக ஒதுக்கி வைத்திருந்தாலும் அது புனிதமானது ஆகும்.பெருமாள் கோயில்கள் பூஜைக்குப் பிறகு சந்தன தீர்த்தத்துடன் துளசி தளத்தை பிரசாதமாகப் பெறுவது மிகவும் விஷேசமாகும்.

இயற்கை தந்த படைப்புகளில் துளசிஅற்புதமான ஒரு சிறந்த  மருந்தாகும்.முன்னைய காலங்கில் சித்தர்களாலும் முனிவர்களாலும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இத் துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும்   தொடர்ந்து மனிதனை பீடித்துக்கொன்டுதான் இருக்கின்றது.சாகரம் பல விடயங்களைப் பகிர்ந்தாலும் இந்த துளசி நீரின் மகிமையையும் செய்முறையையும் இங்கே தரப்படுவதால் நோயற்ட வாழ்க்கையின் ரகசியத்தை தெரிந்துகொள்ளலாம்.   துளசி நீர் செய்யப்படும் முறை  1.சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொள்ளவும்.  2.அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விடவும் .  3.ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும் .  4. இதை எட்டு மணிநேரம் மூடி வைத்து பருகவும்.   5. இவ்வாறு 48 நாட்கள் பருகினால்.   இதனால்     நோய்கள் குணமாகும் அத்துடன் தோல் சுருக்கம் மறையும் நரம்புகள் பலப்படும் பார்வை குணமடையும்  இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.

எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் அந்த தொந்தரவுகள் நீங்கும். நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு.துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.
துளசிச் செடியின் இலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் நம்மை அணுகாது. கல்லீரலில் வரும் அத்தனை நோய்களையும் இந்தத் துளசிச் செடியினால் விரட்டியடித்துவிடலாம். துளசிச் செடியைப் பிடுங்கிக்கொண்டு வந்து மண்பானைத் தண்ணீரில் அப்படியே ஊறப் போடுங்கள். அந்தத் தண்ணீரை அடிக்கடி குடித்து வாருங்கள். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்.

துளசி செடியை செழிப்பாக வளர்ப்பதற்கு.......
------------------------------------------------------------
துளசி செடியை வீட்டில் பலர்  வளர்த்து வருகின்றனர்.  ஆனால் இந்த செடி சில வீடுகளில் வாடி வெறும் குச்சி மட்டும் இருக்கும். இதற்கு சரியான பராமரிப்பானது கொடுக்கவில்லை என்று அர்த்தம். என்ன தான் செடியை கடவுளாக நினைத்து மதித்து வளர்த்தாலும், முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே நன்கு செழிப்புடன் வளரும். அதிலும் துளசி செடிகளில் பல வகைகள் உள்ளன. இவை புனிதமானது மட்டுமின்றி, அதற்கேற்றாற் போல் பல நோய்களை குணமாக்கவும் வல்லது. எனவே இத்தகைய புனிதமான செடியை செழிப்பாக வளர்ப்பதற்கு, என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!

* துளசி செடிக்கு நேரடியான சூரிய வெளிச்சம் ஆகாது. எனவே துளசிச் செடியை சூரிய வெப்பம் நேரடியாக படும் இடத்தில் வைத்து வளர்க்காமல், அளவாக வெயில் படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.

* துளசி செடிக்கு அதிகப்படியான ஈரப்பசையானது மிகவும் பிடிக்கும். எனவே கோடைகாலமாக இருந்தால், ஒரு நாளைக்கு 3 முறையும், குளிர்காலமாக இருந்தால், ஒருநாளைக்கும் இரண்டு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு வேளை துளசிச் செடியானது சூரிய வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தில் வைத்தால், அதற்கு இன்னும் அதிகப்படியான நீரானது தேவைப்படும்.

* துளசி செடிக்கு, ஈரப்பசையை தக்க வைக்கும் மண் மிகவும் அவசியம். எனவே தான் துளசி செடியானது பெரும்பாலும் களிமண்ணில் வளர்கிறது. ஏனெனில் மண்ணிலேயே களிமண் தான் அதிகப்படியான ஈரப்பசையை தக்கக் வைக்கக்கூடியது.

* துளசி செடியை செழிப்புடன் வளர்ப்பதற்கு எந்த ஒரு கெமிக்கல் உரம் தேவையில்லை. ஆனால் செடியை வைப்பதற்கு முன், அதற்கு ஈரத்தை தக்கவைக்கும் ஈர வைக்கோலை வைத்து, பின் மண்ணை போட்டு, செடியை வைக்க வேண்டும். இதனால் செடியானது வறட்சியடையாமல் இருக்கும். சொல்லப்போனால், துளசி செடிக்கு, அந்த வைக்கோல் கூட தேவையில்லை. அது இல்லாமலேயே நன்றாக துளசிச் செடி வளரும்.

* துளசி செடியில் பூக்கள் வளர ஆரம்பித்துவிட்டால், துளசிச் செடியின் இலையிலிருந்து வரும் வாசனை மட்டும் போவதில்லை, அதன் வளர்ச்சியும் தான் தடைப்படும். எனவே செடியில் பூக்கள் வளரை ஆரம்பித்துவிட்டால், அந்த பூக்களை அகற்றிவிட வேண்டும். முக்கியமாக, பூக்கள் மலரும் வரை காத்திருக்காமல், அது மொட்டாக இருக்கும் போதே அகற்றிவிட வேண்டும்.

* துளசி செடிக்கு எந்த ஒரு பூச்சிக்கொல்லி மருந்தும் தேவையில்லை. ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையானது, செடியை பூச்சிகள் தாக்காமல் தடுக்கும். இவையே துளசி செடியை வளர்ப்பதற்கான சில டிப்ஸ்.

TulasiTulasi
 துளசி பயிரான இடத்தில் உள்ள சூழ்நிலை – 
காற்றும் தண்ணீரும் மண்ணுமே சுத்தமாகிவிடும்.

கார்த்திகை மாத சுக்ல பட்ச(வளர்பிறை) துவாதசி, ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசி தேவிக்கும் திருமணம் நடந்த தினமாக பிருந்தாவன துவாதசி என சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது. 

கர்நாடகாவில், 'சிக்க தீபாவளி(சின்ன தீபாவளி) என்று வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கைகளுடன் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.

துளசி பூஜை செய்ய, துளசிச் செடியை பூஜை செய்யும் போது, பூஜை செய்யும் படம், விக்ரகம் முதலியவற்றில், தெய்வத்தை எழுந்தருளப் பிரார்த்திக்கும் 'ஆவாஹனம்' துளசிக்கு அவசியமில்லை. 
அதில் எப்போதும் தேவி எழுந்தருளியிருக்கிறாள். இது சகல நன்மைகளையும் தர வல்லது. 

பிருந்தாவன துளசி விரத பூஜையில், துளசி மாடத்தில், ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம் ஆன நெல்லி மரத்தின் கிளையை சேர்த்து நட்டு, பூஜை செய்வது வழக்கம். 
 துளசிச் செடியின் அடியில், ஸ்ரீ கிருஷ்ணரது பிரதிமை அல்லது சாளக்கிராமத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும். 

துளசி மாடத்தின் இரு புறமும் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது.
துளசி மாடத்துக்கு கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். மாலையாகவும் சாற்றலாம். இரு பக்கமும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பஞ்சினால் ஆன கஜவஸ்திரம் சாற்ற வேண்டும். ரவிக்கைத் துணி போன்றவற்றையும் சாற்றுகிறார்கள். புடவை கட்டி அலங்கரிப்பதும் உண்டு.

காலையிலிருந்து உபவாசம் இருந்து, பின்,மாலை, விளக்கேற்றும் நேரத்தில் பூஜை செய்வது சிறப்பானது. சிலர் காலையிலும் செய்கிறார்கள்.  
பூஜை செய்யும் போது, முதலில், முறையாக விநாயகருக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். 'இன்னின்ன பலன்களுக்காக பூஜை செய்கிறேன்' என்று வேண்டுவதைக் கோரி சங்கல்பம் செய்ய வேண்டும். அதன் பின் 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். .
அவல் பாயசம் இனிப்புப் பண்டங்கள் நிவேதனம் செய்வது சிறந்தது.  . மாலை வீடு முழுதும் விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்து, பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.
அன்றைய தினம், யாராவது ஒருவருக்கு வடை பாயசத்துடன் உணவு வழங்கி, பாயசத்துடன் கூடிய பாத்திரத்தை தானம் செய்வது சிறப்பானது.
கார்த்திகை மாதம், பிருந்தாவன துவாதசி துவங்கி, ஒவ்வொரு  மாதமும் வளர்பிறை துவாதசியன்று விரதமிருந்து, துளசி பூஜை செய்து, பாயச தானம் செய்வது வழக்கம். மறுவருடம் பிருந்தாவன துவாதசியன்று விரதம் நிறைவு செய்யலாம்.  இவ்வாறு செய்வது மிகச் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

பூஜையின் நிறைவில், ஆரத்தியில் தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. மாவிளக்கு ஆரத்தியும் செய்கிறார்கள்.
மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கணவன் விரும்பிய மனைவியாக வாழவும், வேண்டுவன எல்லாம் பெறவும் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்களது பாவங்கள் எல்லாம் நீங்கும்.
 

12 comments:

  1. தூவாதசி துளசி பூசை அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அட்டகாசமான படங்களுடன் துளசியின் மகிமையை அறிந்தேன் அம்மா...

    ReplyDelete
  3. துளசி பூஜா விபரம் தெரிந்து கொண்டேன் அம்மா..படங்கள் அருமை.

    ReplyDelete
  4. என்றும் பசுமையான ஸ்ரீதுளசிக்கும் ஸ்ரீபரந்தாமனுக்கும் திருமணம் என்பதால் - பதிவு முழுதும் பச்சைப் பசேல் என்று - கண்ணுக்குக் குளுமையாக இருக்கின்றது. மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
  5. துளசிச்செடியைப்பற்றி இத்தனை சிறப்புகளை இப்போது தான் அறிந்தேன். படங்களும் அழகு!

    ReplyDelete
  6. துவாதசி துளசிபூஜை, துளசிச்செடியின் சிறப்புகளை அறிந்தேன்.அழகான படங்களுடன் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. இதுவரை அறியாதது
    படங்களுடன் பகிர்வு அருமை
    பதிவுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. துளசி பூஜை தகவல்களும் படங்களும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  9. அருமையான தகவல்கள்...

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  10. Hi Mam,
    You have inspired me with your blogs. I have written my first blog and if you have time please read my blog and give me your feedback. Thanks!

    http://arulamudhu.blogspot.com.au/

    ReplyDelete
  11. துவாதசி பற்றியும் துளசியின் பல்வகையான பெருமை பற்றியும் படங்களுடன் நிறைவொன செய்திகளை அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  12. துளசி பற்றிய தகவல் மிக அருமை. ஊரில் சிலர் சொல்வார்கள், துளசிமாடம் வீட்டில் வைத்தால்.. துன்பம் துயரம் சூழும் என.. அப்பயத்தில் வைக்கவில்லை, ஆனா வீட்டில் துளசி வளர்த்தோம்.

    ReplyDelete