Monday, May 26, 2014

கருணை பொழியும் கஜேந்திரபுரம்..





வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே யானென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
யாறங்கத்தால் வேதமானாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்- 
மதுரையில் அருள் சுரக்கும் சுந்தரேஸ்வரரின் பெயரிலேயே 
தமிழகத்தில் 108 சிவாலயங்களில் சிவலிங்கங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டிருக்கின்றன.
அவற்றுள் கஜேந்திரபுரம் எனப்படும் ஆனைக்குப்பமும் ஒன்றாகும்.
இத்தல இறைவனை யானை பூஜித்ததால் இப்பெயர் ஏற்பட்டதாம்..

Hungry Elephant Coloring Pages

திருவாரூர் தியாகராஜசுவாமி கோவிலுக்கு குபேர திக்கில் அமைந்துள்ள ஆனைக்குப்பம் அருட்தலம் சரித்திரப் புகழும் கொண்டு திகழ்கிறது....
திருவாரூர் கோயில் கோபுரம்
படிமம்:Tiruvarur temple gopuram.JPG
ஆலமரங்கள் அடர்ந்த காடாக இருந்த முற்காலத்தில்  குளக்கரையில் சப்தரிஷிகளில் கன்வரிஷியின் வழிவந்த  தவம் செய்து கொண்டிருந்த சௌரிய மகரிஷியின் தவத்தைக் கலைக்க அரக்கர்கள் பெண் மான், மயில் வடிவமெடுத்து வந்து ஆடிப் பாடினர்.
Mother and fawn
ஆனால் அவர்களது முயற்சி வெற்றி பெறாத நிலையில் ஒரு வித்தியாசமான ஈனக் குரலோடு அழகிய மான் ஒன்று குறுக்கே செல்ல அவரது தவம் கலைந்தது.

சுற்றிலும் பார்த்தபோது காட்டுச் செடிகளுக்கு இடையே
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி ஓடி வந்து கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்து, ""ஒரு அரசகுமாரனைப்போல இருக்கிறாய். வில்லும் அம்பும் ஏந்தி ஏன் இவ்வாறு மானைத் துரத்தி வருகிறாய்?'' என்று சௌரியர் கேட்க, ""என் அன்புத் துணைவி ஆசையுடன் விளையாடக் கேட்கும் மான் இவ்வழியே ஓடி வந்தது. அதைப் பிடிக்கவே வந்தேன்'' என்றார் இராமபிரான்.

""இதில் ஏதோ சங்கடம் வரும்போல் உள்ளது; கவனமாகச் செல்'' என்றார் மகரிஷி. அப்போது இராமபிரான், ""என்னை ஆசீர்வதியுங்கள் மகரிஷியே! மானைப் பிடித்துச் செல்ல வேண்டும்'' என்று காலில் விழுந்தார்.

அப்போதுதான் அவரது தோள்பட்டையிலுள்ள நட்சத்திரக் குறிகளையும் சூரிய ரேகைகளையும் கவனித்த மகரிஷி, ""நீ தசரதனின் மகன் இராமனா?'' என்று வினவ, ""ஆம்'' என்றதும், ""எதிலும் வெற்றி உனக்கே!'' என்ற வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அதன்பின் மானைத் தொடர்ந்து சென்ற இராமன் சுமார் நான்கு மைல் வடக்கே சென்று, மான் தென்பட தன்னுடைய பாணத்தை விட்டார். மான் கீழே விழுந்து, ""லட்சுமணா அபயம்! ஜானகி அபயம்'' என்று துடித்தது. 

இந்த இராமாயண நிகழ்ச்சி நடந்த இடம் ஆனைக்குப்பத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ளது.

இராமன் மானை நோக்கி, "உன்னை அதம் செய்கிறேன் பார்' என்ற கூறி பாணம் விட்ட இடம் "அதம்பார்' என்று பெயர் பெற்று, அதம்பாவூர் என்றும் விளங்குகிறது.

பஞ்சலிங்க க்ஷேத்திரம்

கஜேந்திரபுரத்து சிவலிங்க மூர்த்தியைச் சுற்றி நான்கு திசைகளிலும் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பஞ்சபிரம்ம ஸ்தலங்கள் என்று அழைக்கப்படும் இவ்வகைத் தலங்கள் மிகுந்த அருளாற்றல் உடையவை. 

சுந்தரேஸ்வரமூர்த்தியின் எல்லை லிங்கங்களாக கிழக்கே கரைதிருப்புப் பகுதியில் ஒரு சிவலிங்கமும்; 
மேற்கே லிங்கத்தடி என்ற பகுதியில் ஒரு சிவலிங்கமும்; 
வடக்கே கல்லடிமேடு என்ற பகுதியில் ஒரு சிவலிங்கமும்;
தெற்கே கனகம்படுகை என்ற பெயரில் வனப்பாற்றின் தென்கரையில் ஒரு சிவலிங்கமூர்த்தியும் உள்ளார்கள்.

ஒருகாலத்தில் சித்திரை மாத உற்சவங்கள் நடைபெறும்போது ஆரம்ப கட்டத்தில் இந்த லிங்கங்களுக்கு சிவபூஜை நடத்திய பின்னரே மற்ற ஆலய சம்பிரதாயங்களைச் செய்வார்களாம்

காவல் தெய்வம் பெரம்பனார் ஐயன்

ஒரு கிராமத்தில் அந்நிய மனிதர்களோ, சக்திகளோ நுழைந்துவிட்டால் காவலாட்களை அங்கே நிறுத்துவது வழக்கம்.

மாயமான் ஒன்று தீயசக்தி போல அவ்வூர் எல்லையைக் கடந்து சென்றதால், ஊர்க்குடிகள் சேர்ந்து ஒரு ஸ்தம்பத்தில்- உருவமில்லாமல் காவல் தெய்வமாக உலவி வர பிரம்பைக் கையில் கொடுத்து வைத்தனர். அவரே ஒரே கல்லில் ஸ்தாபிக்கப்பட்ட "பெரம்பனார் ஐயன்' என்று போற்றப்படுகிறார். 

இவரைச் சுற்றி ஆயிரம் பூதகணங்கள் சேனைகளாக இருப்பதாகவும்; அவையே வவ்வால்களாக உலவுகின்றன என்றும் கூறுகின்றனர்.
தண்ணீர் இல்லாத காலத்திலும் ஆயிரம் பழந்திண்ணி வவ்வால்கள் பெரம்பனார் அய்யன் கோவிலைச் சுற்றி வாழ்ந்து வருவதை இன்றும் காணலாம்.

களவுபோன பொருட்கள் திரும்பக் கிடைக்க, இந்த ஐய்யனாரிடத்தில்

சீட்டுக்கட்டி வேண்டினால் பலன் கிடைக்கும் என்கிறார்கள் .

சௌரிய மகரிஷி தவம் செய்த இடத்தை சௌரிய மேடு என்றும்; அருகிலுள்ள குளத்தை சௌரிய திருக்குளம் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.

ஏகதள விமானக் கருவறையின் கீழ் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனியராக வீற்றுள்ளார்..



தென்முகம் நோக்கிய சந்நிதியில் அபிராமி அம்மன் அபய வரத முத்திரையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகைக்கு சப்ததள விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

உற்சவர்களாக ஸ்ரீ சிவகாமி நடராசர், பிரதோஷ நாயனார் உள்ளனர். திருச்சுற்றை வலம் வரும்போது ஜோதி விநாயகர்;  
ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தி, இரு தேவியருடன் சுப்ரமணியர்: ஆக்னேய பாகத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மி, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், ஸ்ரீ சனி பகவான், காலபைரவர், நவகிரகம் சிவசூரியன், நந்திதேவர் ஆகிய மூர்த்தங்கள் காட்சி தருகின்றனர்.

சௌரிய மகரிஷி தன் தவத்தைக் கலைக்க முற்பட்ட நாகசேனன் என்ற அசுரனைத் தன் பார்வையால் எரித்தபோது, அவன் தனது தவறை உணர்ந்து, ""மோட்சம் கிடைக்க அருளுக'' என்று மன்றாடினான். ""உடனே எதிரிலுள்ள சிவாலய சுந்தர தீர்த்தத்தில் போய் விழுந்து விட்டால் மோட்சம் கிடைக்கும்'' என்றார் மகரிஷி.
அவன் எரியும் உடலோடு, ""ஈஸ்வரா அபயம்!'' என்று ஓடி வந்து திருக்குளநீரில் விழுந்தபோது, சுந்தரேஸ்வரர் அவனுக்கு நற்கதி அடைய அருள் தந்து, ""நாகன் என்ற பெயர் கொண்ட நீ எனது ஈசான பாகத்தில் நாகலிங்க (தல) விருட்சமாக வளர்வாய்'' என்று அருள் தந்தார்.

பல தலைமுறைகளாக இங்கு இருக்கும் மிகப் பெரிய நாகலிங்க மரத்தைத் தரிசித்துவிட்டுதான்  கோவிலுக்குள் செல்கின்றனர்.

சுந்தர தீர்த்தம் இன்று வெங்காயப் பூண்டு செடிகளால் 
மறைக்கப்பட்டு காணப்படுகிறது.

திருக்கோவிலின் விசேடங்களான கார்த்திகை சஷ்டி, சதுர்த்தி ஆகியவற்றை "கார்த்திகை வழிபாட்டு மன்றம்' என்னும் ஆன்மிக அன்பர்களின் கூட்டமைப்பு நெறிப்படுத்தி வருகிறது.

வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம் (நடராஜர் அபிஷேகம்), ஆடிப்பூரம், ஆவணியில் கணேச சதுர்த்தி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகையில் நான்கு திங்கட்கிழமை சோமவார, அபிஷேக ஆராதனைகள், மார்கழியில் தனுர்பூஜை, தை வெள்ளியில் அபிராமி அம்மனுக்கு விசேஷ அலங்காரங்கள், மாசியில் காரடையான் நோன்பு, பங்குனியில் வசந்தகால அபிஷேக ஆராதனை ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. 

ஆலயத்தில்  விசேஷங்களை கிராமத்தின் பெருநிலக்கிழார்கள் தாங்களே இறை பக்தியில் அதிக ஈடுபாடு கொண்டு செய்து வருவது குறிப்பிடத்தக்க செய்தி.

 ஆனைக்குப்பம் சிவலாயத்திற்கு கிழக்கே பெரம்பனார் அய்யன் கோவிலும்; மேற்கே ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சௌரிராஜப் பெருமாள் சந்நிதியும்; வடக்கே மகாமாரியம்மன் எல்லைக்காளி சந்நிதியும்; 
தெற்கே மூலங்குடி என்ற வயல்வெளியில் சேப்பெருமான் அய்யனார் சந்நிதியும் எல்லைத் தெய்வ மூர்த்தங்களாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

""தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருத்தலங்களில் யானைகள் பூஜித்த சிவலிங்கம் என்று பெயர் பெற்றாலும், பலருக்கும் தெரியாமல் இந்தக் கோவில் உள்ளது''

""சிவபெருமானுக்கு இத்தல விருட்சமான நாகலிங்க மரத்து ஐந்து மலர்களை எடுத்து திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், செவ்வாய், ஞாயிறு ராகு காலத்திலும் அர்ச்சனை செய்திட பெண்களுக்கு உள்ள நாக தோஷங்கள் விலகும்'' 

சௌரிய மகரிஷி வழிபட்ட மகாலட்சுமிதேவியை அஷ்டமி, வெள்ளிக்கிழமைகளில் வழிபட வியாபாரப் பெருமக்கள் தொழிலில் அபரிமித லாபமடையலாம். வாழ்வில் சுகங்களைப் பெருக்கும் சுந்தரேஸ்வரரைத் தரிசித்து வளம் பெறலாம்.

திருவாரூர்- நன்னிலம் பேருந்து வழியில் (செல்வபுரம் வழியாக) ஆனைக்குப்பம் உள்ளது..

13 comments:

  1. ஊர் பெயர் விளக்கங்கள் உட்பட அனைத்தும் அருமை அம்மா... நன்றி...

    ReplyDelete
  2. ஸ்ரீ சுந்தரேசப்பெருமான் வீற்றிருக்கும் ஆனைக்குப்பம் தலத்தினைப் பற்றி அறியாத தகவல்கள். இனிய பதிவு..

    ReplyDelete
  3. யானை பூஜை செய்த
    யானையுரி போர்த்தியவனின் திருத்தலம்,
    ஆனைக்குப்பம்.
    ஸ்ரீராமனின் திருவடி பட்ட இடம் .
    அருமையான விளக்கங்களுடன் ,
    சிறந்த பதிவு.
    நன்றியும், வாழ்த்துக்களும் !
    .

    ReplyDelete
  4. இராமாயணத்தில் வரும் மான் கதையும், அந்த சம்பவம் நிகழ்ந்த இடம் ஆனைக்குப்பத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் தான் உள்ளது என்பதும், அதம்பார் [அதம்பாவூர்] பெயர் காரணமும் படிக்கச் சுவையாக இருந்தன.

    ஆங்காங்கே கதைக்குப் பொருத்தமான படங்களும் சிறப்புச்சேர்ப்பதாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  5. ஆயிரம் பூதகணங்களும் வெளவ்வால்களாக ... ஆஹா !
    அதுவும் பழம் தின்னி வெளவ்வால்களாக - சூப்பர்.

    >>>>>

    ReplyDelete
  6. கஜேந்திரபுரம் என்னும் ஆனைக்குப்பம் பற்றி பல்வேறு செய்திகள் அறிய தந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    >>>>>

    ReplyDelete
  7. நாகருடன் கூடிய சிவலிங்கம் போல அமைந்துள்ள நாகலிங்கப்பூ தான் எவ்வளவு அழகு ! இறைவன் படைப்புக்களில் இதெல்லாம் எப்பேர்ப்பட்ட அதிசயங்கள் !!

    நாகலிங்கப் புஷ்பங்களை படத்தில் கொடுத்துள்ளது மேலும் சிறப்பாக உள்ளது.

    அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    -oo- 1286 -oo-

    ReplyDelete
  8. வணக்கம்
    அம்மா

    பக்தி கதையுடன் இதிகாசக் கதைகளும் எடுத்துச்சொல்லியுள்ளீர்கள் நன்றாக உள்ளது படங்களும் அழகு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. ஆனைக்குப்பம் தலம் பற்றி அறியாத செய்திகள் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  10. நாகலிங்கம் பூபற்றிய செய்திகள் அறிந்து கொண்டேன். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  11. ஓடும் மான், பறக்கும் வௌவால், அருள்புரியும் சிவன், பறக்கும் பட்டுப் பூச்சிகள் என்று பல படங்களை இணைத்து அசத்திவிட்டீர்கள். ஆனைக்குப்பம் பற்றிய தகவல்கள் அறிந்தேன். நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஆனைக்குப்பம் சிவாலயதகவல்கள் சிறப்பு! படங்கள் மிக அழகு! நன்றி!

    ReplyDelete
  13. ஆனைக்குப்பம் சிவாலயம் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete