Thursday, December 5, 2013

குருவாயூர் ஸ்ரீ வேலி





குருவாயூருக்கு வாருங்கள்  ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்  உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்
கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதைக்  காட்டும் குருவாயூர்க் கோலம்

சந்தியா காலத்தில் நீராடி அவன் சந்நிதி வருவார் ஒரு கோடி
மந்திர குழந்தைக்கு வாகை சாட்டு மாலைகள் இடுவார் குறை ஓடி

உச்சிக்காலத்தில் சிருங்காரம்   ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே பாவையர் தாய்மை ரீங்காரம்

மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று நித்தம் தருவாள் ஸ்ரீதேவி

சாத்திரம் தந்த கண்ணனுக்கு ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல்  மக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி

நாராயண நாராயண ஹரி ஹரி  நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி  நாராயண நாராயண
உலகப்புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயில்  இந்தியாவின் நான்காவது பெரிய கோயிலாக  பூலோக வைகுண்டமாக போற்றப்படுகிறது. 

பூமியில் வைகுண்டத்தின் சாந்நித்தியம் நிறைந்த அருளும் தெய்வங்களாக பூரி ஜகன்நாதரும், குருவாயூரப்பனும் இடம்பெறுகிறார்கள். 

உண்ணிக்கண்ணன், உண்ணிகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், குருவாயூரப்பன் என்றெல்லாம் அழைத்து பரவசமடைகின்ற கிருஷ்ணன் நான்கு திருக்கரங்களுடன் பாஞ்சஜன்யம் எனும் சங்கையும் சுதர்சன சக்கரத்தையும் கௌமோதகி எனப்படும் கதையையும் தாமரை மலரையும் ஏந்தி குழந்தை வடிவில் திருவருள் புரிகிறான். 

கேரளாவில் உள்ள குருவாயூர் ஆலய விளக்கு பூஜை. உலகப்புகழ் பெற்றது வருடம் 365 நாட்களும் மாலையில் நடைபெறும் ..!
தீபத்தில் தெய்வங்களை ஆவாஹனம் செய்து பூஜை செய்வது நமது பாரத தேசத்தில் தொன்று தொட்டு வழங்கி வருகிறது. 

ஒளி என்பது ஞானத்திற்கும் இருள் என்பது அஞ்ஞானத்திற்கும் அறிகுறியாகும். ஆகவேதான் ‘தமஸோ மா ஜ்யோதிர் கமய’ என்று வேதம் கூறுகிறது. 

துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி போன்றோரை தீபத்தில் ஆவாஹனம் செய்து பூஜிக்கும் பகவதி சேவை கேரளத்தில் பிரசித்தி பெற்றது. 

திருச்சூர்-எர்ணாகுளம் செல்லும் பாதையில் உள்ள குடியிருப்புகளில் இன்றும் சாயங்கால வேளைகளில் வாசலில் தீபங்களை ஏற்றி வைத்து நமசிவாய, நாராயணாய, அச்சுதாய எனும் நாமங்களை மக்கள் பாராயணம் செய்வதைக் காணமுடியும். 
அஞ்ஞான இருள் அகன்றால்தான் ஞானம் 
என்ற சூரியன் நமக்குள் உதயமாகும். 

குருவாயூர் ஆலயத்தில் நடைபெறும் விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் சாயங்காலம் 6 மணிக்கு குருவாயூரப்பன் கருவறையைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான தீபங்களை ஆலய ஊழியர்கள் மிகவும் நீளமான தீப்பந்தங்கள் மூலம் ஏற்றுவர். 
[196373016FPkyrM_ph.jpg]
அலங்கரிக்கப்பட்ட யானை மீது குருவாயூரப்பன் ஆரோகணிப்பார். இருபுறம்  சிறுமிகள் தீபங்கள் ஏந்திய தாலத்தட்டு ஏந்தி அணிவகுக்க, பஞ்சவாத்தியங்கள் முழங்க, ஆலயத்தை குருவாயூரப்பன் ஐந்து முறை வலம் வருவார். இது சீவேலி பூஜை என போற்றப்படுகிறது. 
அப்போது ஆலயத்தில் நிறபணி எனப்படும் பெரிய படியில் அரிசியை நிரப்பி தென்னங்குருத்தால் அலங்கரித்து இருபுறங்களிலும் மலையாளக் குத்துவிளக்குகளை ஏற்றி வைப்பார்கள். 

படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் போன்ற ஐந்தொழில்கள் புரியும் தேவதைகளின் வடிவமாகக் குத்துவிளக்கு போற்றப்படுகிறது. 

ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்ம ஸ்வரூபம், 
நடுத்தண்டாகிய மத்ய பாகம் விஷ்ணு ஸ்வரூபம், 
நெய் ஏந்தும் அகல் பகுதி சிவ ஸ்வரூபம். 
அதற்கு மேலே சிகரமாக உள்ள உச்சிப்பகுதி மகேஸ்வரன். 
நெய் நாதமாகவும், திரி பிந்துவாகவும், சுடர் திருமகளாகவும், 
தீப்பிழம்பு கலைமகளாகவும், தீ சக்தி வடிவமாகவும் திகழ்கிறது. 

  அந்த விளக்கில் குருவாயூரப்பனை ஆவாஹனம் செய்து 16 விதமான உபசாரங்கள் செய்து பின் அவரை யதாஸ்தானம் செய்து, ‘மீண்டும் நாங்கள் அழைக்கும் போது வருவாய் குருவாயூரப்பா,’ என பட்டத்ரிகள் வேண்டிக்கொள்வர்.
 
குருவாயூரில் ஏகாதசி விளக்கு பூஜை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

மலையாள விருச்சிக மாத ஏகாதசி (தமிழில் கார்த்திகை மாதம்) குருவாயூரைப் பொறுத்தவரை புனிதமான நாளாகும். இந்த ஏகாதசிக்கு 18 நாட்கள் முன்னதாகவே விழா தொடங்கிவிடும்.

ஒன்பதாவது நாளான நவமியன்று, அனைவரும் சேர்ந்து விளக்குகளை ஏற்றி குருவாயூர் கண்ணனை வழிபடுகின்றனர். 

பத்தாவது நாளான தசமியன்று சமோரின் ராஜா வகையினர் விளக்கு ஏற்றும் வைபவம் குருவாயூரப்பன் சங்கீர்த்தன சமாஜம் எனும் அமைப்பின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. 

அந்நாளில் விடியற்காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்காக கதவுகள் திறந்தபிறகு, இரு நாட்கள் கழித்து பன்னிரண்டாம் நாள், துவாதசியன்று காலை 9,00 மணிக்கே கதவுகள் மூடப்படுகின்றன. 
இப்படியாக தசமி மற்றும் ஏகாதசி நாட்களில் பக்தர்கள் அனைவரும் குருவாயூரப்பனை கண்குளிர தரிசிக்கலாம். 

வேதகாலத்து பாரம்பரியங்களை இன்றும் தொடர்ந்து கச்சிதமாகவும் நேர்மையாகவும் பேணப்பட்டு வருவதே இக்கோயிலின் சிறப்பம்சமாகும். 

இத்தலத்தில் சுமார் 50 யானைகள் உள்ளன.
இங்கு யானைதான் சந்நதியை திறந்து வைக்கும். 

விழாகாலங்களில் சுவாமியை யானையே சுமந்து செல்லும். 
அதற்காக யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்படும். 
வெற்றி பெறும் யானைதான் சுவாமியை சுமக்கும் பாக்கியத்தைப் பெறும். 

தினமுமே குருவாயூர் ஆலயத்தில் கருவறையைச் சுற்றி ஆயிரக்கணக்கான தீபங்கள் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். 

தினமும் மாலை 6.15-6.45 மணிக்குள் ஆலய விளக்குகளை ஏற்றி கற்பூர தீபம் காண்பித்து குருவாயூரப்பனை ஆராதிப்பர். 

குருவாயூர் கோயிலில் சாயங்காலம் மட்டுமே தீபாராதனை. ஏழுஅடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகபட விளக்கு, ஒற்றைத்திரி விளக்கு என பல விளக்குகளை ஏற்றி கண்ணனை ஆராதிக்கின்றனர். 

இறுதியில் கற்பூர ஆரத்தி. அப்போது வலம்புரிச்சங்கை ஊதி, மத்தள மேள, பஞ்சவாத்தியங்கள் முழங்க குருவாயூரப்பனின் அழகே உருவான திருவடிவை ஆராதிப்பர். 

எவ்வளவு தொலைவிலிருந்தாலும் பிரகாசமான வடிவில் ஜொலிக்கும் குருவாயூரப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்.

சர்வாலங்காரங்களுடன் தலையில் கிரீடம், கழுத்தில் மரகதம், இடுப்பில் சிவப்புப் பட்டு கௌபீனம் தரித்து குருவாயூரப்பன் அருட்கோலம் காட்டுவார். 

தினமும் அர்த்தஜாம பூஜை முடிந்த பின் பிராகாரத்தில் நிர்த்தம் எனுமிடத்தில் வாரியார் ஒருவர், ஓலையில் எழுதிய அன்றாட வரவு செலவு கணக்குகளை படித்து பகவானிடம் ஒப்புவிக்கும் வழக்கம் உண்டு. 

அந்நிகழ்வு திருத்தோலை வாசித்தல் எனப்படுகிறது. சீவேலி முடிந்ததும் இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெறும். 

அப்போது நெய்யப்பம், இலைஅடை, பால் பிரதமன் போன்றவை குருவாயூரப்பனுக்கு நிவேதிக்கப்பட்டும் பின் சுற்று விளக்கு பிரார்த்தனை நடைபெறும். 

ஆலயமெங்கும் விளக்குகள் எரிய பஞ்சவாத்தியங்கள் முழங்க மூன்று அல்லது ஐந்து யானைகளுடன் குருவாயூரப்பன் பக்தர்களுடன் ஆலய வலம் வருவார். 

இவ்வளவு மகிமை வாய்ந்த தீபத்தை தினமும் போற்றி ஆராதிக்கும் குருவாயூர் தலத்தில் குரு வடிவாய் நம் அக இருளைப் போக்கி, வாழ்வில் வெளிச்சம்  தந்து நம்மைக் காக்கும் குருவாயூரப் பனின் பூஜையை தரிசித்து குருவருளுடன் திருவருளும் பெறுலாம். 

[a8_448x336.jpg]

23 comments:

  1. அருமையான தகவல்கள். பலமுறை இவைகளை கண்டு இன்புற்றிருக்கிறேன்.

    ReplyDelete
  2. குருவாயூர் தகவல்கள் அனைத்தும் சிறப்பு... படங்கள் அனைத்தும் கண்கொள்ளக் காட்சி... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஒரு முறை குருவாயூர் சென்று வந்திருக்கிறேன். நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. காலையில் குருவாயூரப்பன் தரிசனம்..... மிக்க நன்றி.

    ReplyDelete
  5. தங்களின் இன்றைய ஜொலிக்கும் பதிவினை விடியற்காலம் நீண்ட நேரம் பார்த்து ரஸித்துக்கொண்டே இருந்ததில் என் மனம் அதில் அப்படியே லயித்துப்போய் விட்டது.

    >>>>>

    ReplyDelete
  6. குருவாயூருக்கு எவ்வளவோ முறை சென்று வந்திருக்கிறோம். அன்னப்ராஸனம், குடும்ப நபர்கள் அனைவருக்கும் துலாபாரம், யானைகள் பராமரிப்புக்கு நன்கொடைகள் என பல்வேறு பிரார்த்தனைகளும் நிறைவேற்றியுள்ளோம்.

    கடந்த 4 வருடங்களாக என்னால் அங்கு செல்ல இயலவில்லை. பிள்ளைகள் மட்டும் நடுவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்று வந்தனர்.

    அந்த என் மனக்குறையை தங்கள் பதிவு இன்று நீக்கி விட்டது.

    >>>>>

    ReplyDelete
  7. ஒவ்வொரு படமும் அருமையாகத் தந்துள்ளீர்கள்.

    மேலிருந்து கீழ் நாலாவது படத்தில் ஜொலிக்கும் யானைமேல், ஜொலிக்கும் தங்கத்தகடுகளில் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீவேலி வலம் வரும் காட்சி .... நேரில் இதைப்பார்த்துள்ள எனக்கு இனிய நினைவலைகளை எழுப்பியது. ;)

    >>>>>

    ReplyDelete
  8. அதுபோல அந்த ஆறு, எட்டு, ஒன்பதாம் படத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி ஒளிவீசும் படங்களும் அற்புதமாக உள்ளன. இதையும் நேரில் பார்த்துள்ளதில் மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  9. எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய சம்பந்தமும் பிரியமும் தனி அக்கறையும் கொண்டிருந்த ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் இஷ்ட தெய்வம் இந்த ஸ்ரீ குருவாயூரப்பன் தான்.

    தனியாக விக்ரஹம் வைத்து தினமும் பூஜித்து வந்தார்கள். அது இப்போது பழூரில் அவரின் அதிஷ்டானத்தில் உள்ளது. நித்யப்படி பூஜை இன்றும் நடந்து வருகிறது.

    கலியுகத்தின் பிரத்யக்ஷ தெய்வம் ஸ்ரீ குருவாயூரப்பனே என்று அடிக்கடி ஸ்ரீ ஸ்வாமிகள் என்னிடம் சொல்லுவார்.

    >>>>>

    ReplyDelete
  10. ஆரம்பத்தில் ‘குருவாயூருக்கு வாருங்கள்’ என்ற அழகான பாடலுடன் ஆரம்பித்து இந்தப்பதிவினில் ஏராளமான விஷயங்களைத் தாராளமாகவே கொடுத்துள்ளீர்கள்.

    படித்துப் புல்லரித்துப் போனேன். மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

    >>>>>

    ReplyDelete
  11. அக இருள் நீங்கி வாழ்வில் வெளிச்சம் ஏற்படவும் திருவருளுடன் குருவருளும் பெறவும் நாம் செய்ய வேண்டிய தீப வழிபாட்டினையும், ஸ்ரீ குருவாயூரப்பன் தரிஸனத்தையும் மிகச்சிறப்பான விளக்க்ங்களுடன் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    அனைத்துமே அற்புதம். ஆனந்தம்.

    >>>>>

    ReplyDelete
  12. ஸ்ரீ அனந்தராம தீக்ஷதர் அடிக்கடிச் சொன்ன

    கல்யாண ரூபாய ........

    நாராயண நாராயண நாராயண நாராயண
    நாராயண நாராயண நாராயண நாராயண
    நாராயண நாராயண நாராயண நாராயண
    நாராயண நாராயண நாராயண நாராயண

    நினைவுக்கு வருகிறது. ;)

    oooo oooo

    ReplyDelete
  13. சபரி மலைக்குச் சென்று வரும் போதெல்லாம் - குருவாயூரில் திவ்ய தரிசனம் செய்யத் தவறுவதில்லை!...

    இன்று - தங்கள் பதிவில் மீண்டும் ஆனந்த தரிசனம்!..

    ReplyDelete
  14. அருமையான பதிவு. சில காட்சிகள் பார்த்தவை, சில காட்சிகள் சொல்லப்பட்டுக் கேட்டவை. மீண்டும் அவற்றை இங்கே படிக்கும்போது இந்த அழகான பாட்டு ninaivukku வந்தது.

    கோவில் முன்னே கூடிநின்று கோடி ஜன்ம பாவம் தீர
    குருவாயூரப்பா நமஸ்காரம் செய்கின்றோம்

    திருமேனி தரிசனம் நிர்மலமாகவே கண்டு
    கிரிதரன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

    (கோவில் முன்னே...)

    சந்தனக் காப்பு கழற்றி தைலம் பூசிக் கொண்டு நிற்கும்
    நந்தா கோபாலனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

    (கோவில் முன்னே...)

    எண்ணெய் ஸ்நானம் செய்து கையில் வாழைப்பழத்தோடு நிற்கும்
    கண்ணன் உன் பாதத்தில் நமஸ்காரம் செய்கின்றோம்

    (கோவில் முன்னே...)

    குடம் குடமாக பாலை அபிஷேகம் செய்யும் வேலை
    கோவிந்தன் உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

    (கோவில் முன்னே...)

    கொண்டையில் பீலி மின்ன மஞ்சள் பட்டுக் கட்டிக் கொண்டு
    குழலூதும் கிருஷ்ணா நமஸ்காரம் செய்கின்றோம்

    (கோவில் முன்னே...)

    தெச்சி மந்தாரம் துளசி thaamarap பூ maalai சார்த்தி
    அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

    (கோவில் முன்னே...)

    திவ்ய நாமம் சொல்லிக்கொண்டு சீவேலியில் சுற்றிவந்து
    ஸ்ரீதரா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

    (கோவில் முன்னே...)

    தீரா வினை தீர்த்து வைத்து கோரும் வரம் அளித்திடும்
    நாராயணா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்

    Om Namo Bhagavade Vaasudevaya!

    ReplyDelete
  15. குருவாயூ; திவ்வியம் அறிந்தேன் .
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. அழகென்ற சொல்லுக்கு முருகா என்பதுபோல்
    பேரருள் என்ற பதத்திற்குப்
    பதினெட்டுப்படி உயரத்தில் வீற்றிருக்கும் குருவாயூரப்பன்தான்!

    அருமையான பல விடயங்கள் உங்கள் பதிவில் கண்டேன்!

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  17. ரொம்ப வருடங்களுக்கு முன் நாங்கள் குருவாயூருக்கு சென்று வந்தோம். மீண்டும் சென்று வந்த திருப்தியை எனக்கு அளித்துவிட்டீர்கள் . நன்றி.

    ReplyDelete
  18. குருவாயூர் கோவில் பற்றிய தகவல்களும் படங்களும் அழகாகச் சொல்லப் பட்டு கச்சிதமாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. அருமையான தகவல்கள்! அழகான புகைப்படங்கள்! நன்றி!

    ReplyDelete
  20. குருவாயூர் விளக்கு வேலி மிக அருமை.
    இப்போது தான் அறிந்தேன்,.நன்றி.

    ReplyDelete
  21. குருவாயூர் படங்களும் பகிர்வும் அருமை அம்மா.

    ReplyDelete
  22. இரண்டு பதிவுகள் குருவாயூர் பற்றிப் படித்தது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. மீரா எழுதியிருக்கும் பாடலும் அருமை.

    ReplyDelete
  23. திரும்பும் திசையெங்கும் தீப ஒளி! குருவாயூர் ஒளிக்காட்சிகள்
    அருமை!

    ReplyDelete