Thursday, July 24, 2014

அஷ்டலட்சுமி கடாட்சம் அருளும் ஆடிமாதவிரதங்கள்


ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான 
கடல் நீராடல் நடக்கிறது. 

அக்னி தேவனே நீராடிய தினம் என்பது நம்பிக்கை. 

ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டபோது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்தநொடியே அக்னிதேவன் அலறினான். 

சீதாதேவியின் கற்புக்கனல் அவனை சுட்டெரித்தது. 
சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் 
சூட்டைத் தணித்துக்கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. 
எனவே அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது. "அக்னி நீராடிய கடலில் நீராடுவோரின் பாவங்கள் தீரும்' என ஆசியளித்தாள் சீதாதேவி.

இன்றும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன்னுள்ள 
கடல் நீரில் அலையே இருக்காது

சீதாதேவிபோல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. 

அதிலும் ஆடி அமாவாசையன்று இங்கு நீராடுவதும் 
நீத்தார் கடன்களைச் செய்வதும் விசேஷமானது.
இராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெரு மானை வழிபட்ட திருத் தலம் ராமேஸ்வரம். 

சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் ராமேஸ்வரம் மட்டுமே. 

மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோவிலுக்குள் உள்ளன.

 "ராமேஸ்வரம் சென்றும் குளிக்காததுபோல' என்றொரு சொல்வழக்கு 
வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்காவிட்டாலும், இங்கு புனித நீராடுவது அவசியமென்பதை இது சுட்டிக்காட்டுகிறது. 

ராமேஸ்வரத்தில் ஆடி மாதத்தில் அம்பிகை  பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. 

ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். 

பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தலமாகவும்  ராமேஸ்வரம் விளங்குகிறது. 

தட்சிணாயன காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னோருக்கு சிறப்பான  நாள். 

முன்னோர் வழிபாட்டை ஆடி அமாவாசையன்று காலையே துவங்கிவிட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தக்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்துவரவேண்டும். 

மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு திருவிளக்கேற்ற வேண்டும். 

 இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பிச் சாப்பிட்ட உணவு வகைகளைப் படைத்து, தீபாராதனை செய்தபிறகு, காகத்திற்கு உணவிடவேண்டும். 

இவ்வாறு செய்தால் முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்.

குருக்ஷேத்ர யுத்தத்திற்குமுன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக சகாதேவனிடம் ஜோதிடம் கேட்கச் சென்றான் துரியோதனன். 

"போரில் வெற்றிபெறவேண்டுமானால், எந்த நேரத்தில் களப்பலி கொடுக்கவேண்டும்?' எனக் கேட்டான். 

துரியோதனன் தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், "பூரண அமாவாசையன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி' என்றான். 

துரியோதனனும், அதேநாளில் களப்பலி கொடுக்கத் தயாரானான். 

அப்போது மாயக்கண்ணன் ஒரு தந்திரம் செய்தார். 

திடீரென அமாவாசைக்கு முதல் நாளே ஒரு குளக்கரையில் 
அமர்ந்து தர்ப்பணம் செய்தார். 

இதைப் பார்த்து ஆச்சரியம் கொண்ட சூரியனும் சந்திரனும் பூலோகத்திற்கு வந்தனர்

"நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேரும் நாள்தானே அமாவாசை! ஆனால் நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களே... இது முறையானதா?' என்றனர்.

அதற்கு கண்ணன், "இப்போது நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே இன்றுதான் அமாவாசை...' என சமயோசிதமாக பதில் சொல்லிவிட்டார். 
சகாதேவன் சொன்னபடி களப்பலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் பிரதமையாகப் போய்விட்டது. இதனால் நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது. 

ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல; தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள செதலபதி எனப்படும் திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். 

எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். 

சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. 

இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை நித்ய அமாவாசை தலம் என்பர். 

செதலபதி கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்துகொள்ளலாம்.

ராமபிரான் செதலபதி தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்துள்ளார். 

இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. 

திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கிலோமீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம். 

கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும், அங்கிருந்து சற்று தூரத்தில் சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. 

ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்களுக்கும் சென்றுவரலாம்.

அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. 

நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். 
நாவுக்கரசர் இக்கோவிலைப்பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார். 
கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார்

மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் 
சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. 

அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். 
இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். 

நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய "மாதர்பிறைக் கண்ணியானை' என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். 
இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம்.

 ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும்விதத்தில், இங்கு கோவில் பிராகாரத்தில் "ஐயாறப்பா' என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

திருவையாற்றில் அப்பர் கயிலாயக்காட்சி விழா





சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. 

அதில் முல்லைப்பூ நிறத்திலான பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத்தும்போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால் சந்திரன் படிப்படியாகத் தேய்ந்து ஒரு கலையோடு காட்சிதரும் நிலையில் இருப்பான். 

அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். 

பௌர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக்கொள்கின்றனர். 

அதனால் தேய்ந்து ஒளியிழந்த சந்திரன் "அமை' என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.

அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்தபிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று.

அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்தயாத்திரை மேற்கொண்டான். அதன்பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். 

மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, "உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்' என்று கூறியது. அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். 

மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளிகோவில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, "உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்பெறுவான்' என்ற குரல் கேட்டது.

இளமைப்பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். 

மன்னன் அவனுக்கு மணம்முடிக்க பெண் தேடியபோது யாரும் அதற்கு முன்வரவில்லை. அரசன் நிறைய பொன் தருவதாக அறிவித்தான். அப்போது,  பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம்பெண்ணை, அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். 

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டுபோய் விட்டனர். அப்பாவியான அந்தப்பெண் தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். 

உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். ஈசனின் அனுமதியோடு இறந்துகிடந்த இளவரசனை உயிர்பெற்றெழச் செய்தாள்.











இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள். 

தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண், "இருண்டுபோன என் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே, இந்த நாளில் தங்களை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினாள். 
மகிழ்ந்த அம்பிகை, "ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் உனது கதையைப் படித்துவிட்டு, மறுநாள் விரதமிருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து என்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். அவர்கள் இல்லத்தில் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலவும்' என சொல்லி மறைந்தாள்.

அற்புதங்கள் நடந்த ஆடி  அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய 
பிதுர் பூஜை மட்டுமின்றி, இறைவழிபாட்டிலும் ஈடுபட்டு தங்களால் இயன்ற தான- தர்மங்கள் செய்தால் என்றும் வாழ்வில் வசந்தம் காணலாம்.

17 comments:

  1. ஆடிமாத விரதத்தின் நன்மைகள்அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. முக்கியமான சம்பவத்தின் சிறப்பு உட்பட அனைத்தும் அருமை அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. ஆடி மாதவிரதம், ஆடி அமாவாசை பற்றிய விளக்கங்கள் கதை, பாடல்கள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சிறப்பான செய்திகள்...........

    ReplyDelete
  5. ஆடிமாதச் சிறப்புகளை அள்ளித் தந்தீர்கள்.
    படங்களும் பதிவும் அருமை!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  6. ஆடி மாதத்தின் அருமை பெருமைகளை விளக்கும் இனிய பதிவு..
    மிக்க மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    ReplyDelete
  7. ராமேஸ்வரம் கடல் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுவதேன் என்ற பெயர்க் காரணம் தெரிந்து கொண்டேன். (சிறு வயதில் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் சென்றது. எனவே தலபுராணம் நினைவில் இல்லை) ” மாதர் பிறைக் கண்ணியானை “ நாவுக்கரசரின் தமிழை மீண்டும் பாடும் வாய்ப்பு தந்தது. பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  8. ’அஷ்டலக்ஷ்மி கடாக்ஷம் அருளும் ஆடிமாத விரதங்கள்’ என்ற தலைப்பே அஷ்டலக்ஷ்மிகளின் கடாக்ஷமும் ஒருசேர என் ஒரே அம்பாள் மூலம் கிடைத்தது போன்ற திருப்தியை அளிக்கின்றது.

    >>>>>

    ReplyDelete
  9. முதல் படத்தில் பசுந்தளிர் மீனாக்ஷியும், சிவந்த காமாக்ஷியும், நீலமேக ஷ்யாமளமாக விசாலாக்ஷியும், மூன்றாவது படமான ரிஷப வாஹன மூர்த்திகளும் வெகு அருமையாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  10. ஸீதாதேவி போல அமைதியான கடல் ;)))))

    வரும் சனிக்கிழமை ஆடி அமாவாசை. அதற்குள் இந்த அருமையான பதிவு. அதில் அழகோ அழகாக பல செய்திகள்.

    கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல அழகாகச் சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  11. மஹாபாரதத்தில் அந்த மாயக் கண்ணன் சொல்லியுள்ள அமாவாசைக்கான விளக்கத்தைத் தாங்களும் அருமையாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள்.

    கேட்ட/அறிந்த விஷயங்களாக இருப்பினும், எதுவுமே தாங்கள் சொன்னால் அதில் எனக்கோர் தனி ருசியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  12. ஜோதிர்லிங்க ஸ்தலமான இராமேஸ்வரம், திருவையாறு, தினதர்ப்பணம் செய்ய ஏற்ற செதலபதி பற்றிய செய்திகள் யாவும் மிகவும் பயனுள்ளவை.

    >>>>>

    ReplyDelete
  13. உலகத்தின் தாயான (இராஜராஜ) ஈஸ்வரி இறந்து கிடந்த இளவரசனை உயிர்பெற்று எழச்செய்த கதை சுவாரஸ்யமாக உள்ளது.

    ஏற்கனவே தாங்கள் சொல்லி நான் கேட்ட கதையாக இருப்பினும், மீண்டும் படித்ததில் மகிழ்ச்சியே.

    >>>>>

    ReplyDelete
  14. இன்று என் வருகையில் ஏனோ இவ்வளவு தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதுபோல ஒரு இக்கட்டான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மாட்டிக்கொள்ள நேர்ந்து விட்டது.

    முழுமையாக மனதில் வாங்கிக்கொண்டு படித்து ரஸிக்காமல் ஏனோதானோ என பின்னூட்டமிடமும் எனக்கு விருப்பம் இல்லை. கோச்சுக்காதீங்கோ.

    >>>>>

    ReplyDelete
  15. பல்வேறு படங்கள் + தகவல்களுடன் இன்றைய பதிவும் மிகவும் அழகாக அமைந்து விட்டதில் மகிழ்ச்சி.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    நீடூழி வாழ்க !

    ;) 1347 ;)

    oo oo oo oo

    ReplyDelete
  16. sethalapathi temple information is a much needed one. thanks

    ReplyDelete
  17. ஆடிமாத விரதங்கள் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete