Friday, July 4, 2014

ஆனந்தம் அருளும் ஆனித்திருமஞ்சனம்




அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்!
முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்!
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்!
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜே!”

 கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை “ஜல் ஜல்” என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடினார் நடராஜன்.

[k1.JPG]
பதஞ்சலியின் பதமான  பாடலைச் சாதாரணமாய்ச் சொல்லிப் பார்த்தாலே நடனம் ஆடுவது காட்சியாய் கண் முன்னே விரியும்..
 சிவபெருமானின் கழுத்தில் தங்கிய விஷம், கையில் அக்னி, உடலில் சுடுகாட்டுச் சாம்பல் என உஷ்ணமான திருமேனியனாக இருக்கிறார். 
சிவனைக் குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள்
மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. 
ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வருடத்திற்கு ஆறுமுறைதான்
அபிஷேகம் நடைபெறும்.

மார்கழி திருவாதிரையில் அருணோதயகாலப் பூஜை; 
மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திபூஜை; 
சித்திரை திருவோணத்தில் நண்பகல் பூஜை; 
ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை; 
ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் 
புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை 
என ஆறுகால பூஜையை நடராஜப் பெருமானுக்கு தேவர்கள் செய்கிறார்கள் என்பது ஐதீகம். இதன் அடிப்படையிலேயே பூவுலகிலும் செய்யப்படுகிறது.
சிதம்பரத்தில் இந்த ஆறு அபிஷேகச் சிறப்பு நாட்களில் மட்டும்  இறைவனை சிற்றம்பலத்தைவிட்டு வெளியே தரிசிக்க முடியும். 

மற்ற நாட்களில் காலையிலும் மாலையிலும் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கத்திற்கும்; காலை நேரத்தில் 
ரத்ன சபாபதிக்கும்தான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகியவை 
பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றன.

தில்லையில் ஆனி உத்திரத்தன்று சூரிய உதய வேளையில், யானைகள் இழுக்கும் தேர்போல அமைக்கப்பட்டுள்ள ராஜசபையின் முன்மண்டபத்தில், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும் அன்னை சிவகாமசுந்தரிக்கும் வெகுசிறப்பாக ஆனித் திருமஞ்சனம் நடைபெறும். 
பின்னர், சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீநடராஜப் பெருமான் 
ராஜசபையில் அருள்பாலிக்கிறார். 

இதேபோல் திருவாரூரில் அருள்புரியும் ஸ்ரீதியாகராஜருக்கும் 
அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

ஆனி மாதத்தில் ஒரே நாளில் சிதம்பரமும் திருவாரூரும் திருவிழாக் கோலம் காணும். 

அந்நாளில் நடராஜப் பெருமானுக்கும் தியாகராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதனை ஆனித் திருமஞ்சனம் என்று போற்றுவர். 
இருவரும் அன்று தேரில் பவனி வருவார்கள். 
திருவீதி உலா முடிந்ததும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள்.

சிதம்பரத்தில் நடராஜர் நின்றாடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் என்றும்; திருவாரூரில் தியாகராஜர் அமர்ந்தாடும் நடனம் அஜபா நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. 
சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உண்டு; 

திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம். இதனை சோமகுல ரகசியம் என்பர். 

இருவர் சந்நிதி யிலும் ஜன்னல் உண்டு. 

சிதம்பரத்தில் தொண்ணூற்றாறு கண்களுடைய ஜன்னல் வழியாக காற்று வீசிக்கொண்டிருக்கும். தியாகேசருக்கு ஒற்றைச் சாளரம் மூலமாகக் காற்று வீசிக்கொண்டிருக்கும்.

சிதம்பரம் பொற்கோவில்; திருவாருர் பூங்கோவில். 
சிதம்பரம் ஆகாயத்தலம்; திருவாரூர் ப்ருதிவி (நிலம்) தலம். 

இந்த இரு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் தரிசித்திருக்கிறார்கள்.

சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

எட்டாம் நாள் வரை உற்சவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். 

ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். 

 அப்போது மூலவர் ஸ்ரீநடராஜரே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளி லும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது. 

அடுத்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரிவார்கள். 

ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.

ஆடலரசனான ஸ்ரீநடராஜப் பெருமானைப் போற்றும் ஆனித் திருமஞ்சனத் திருவிழாவில் சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். தம்பதிகள் சுகமான வாழ்வு வாழ்வர். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்கள் மனதில் தைரியமும் உடல் பலமும் வளமும் கூடும் என்பது ஐதீகம்.

தில்லையிலும் திருவாரூரிலும் மற்றும் சிவத் திருத்தலங்களிலும் ஆனி உத்திர வைபவம் சிறப்பிக்கப்படுவது போல், பழனி ஆண்டவர் கோவிலிலும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறும். பழனி ஆண்டவர் எழுந்தருளியுள்ள மலைக் கோவிலில் ஆனித் திருமஞ்சனமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.

சிவபெருமானுக்கு ஐப்பசி  பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்வது போல், அவரது மகனான பழனி முருகனையும் சிவாம்சமாகக் கருதி, 
ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று மதியம் உற்சவமூர்த்திக்கு அன்னாபிஷேக வைபவம் நடைபெறுகிறது. 

ஆனிமூல நட்சத்திரத்தன்று திருஆவினன்குடி (பழனி மலையடிவாரம்) குழந்தை வேலாயுதருக்கு மாலை பூஜையில் அன்னாபிஷேகம் உண்டு. ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் ஆனித்திருமஞ்சனம் விசாகத்தன்று நடைபெறும். 

கோவைக்கு அருகிலுள்ள மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வரர்- பச்சை நாயகித் திருக் கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவனும் இறைவியும் நாற்று நடும் திருக்கோலத்தில் தரிசனம் தந்த அடிப்படையில், நாற்றுநடவு உற்சவம் ஆனி திருமஞ்சனத்தன்றுதான் நடை பெறுகிறது.



தொடர்புடைய பதிவுகள்..


பால்வண்ணநாதர் கோயிலில் சிவப்பு சார்த்தியில் நடராஜர் அலங்காரம்
[ani1.jpg]

சந்தான பாக்கியம் அருளும் வலம்புரி சங்கு வழிபாடு

27 comments:

  1. ஆனி திருமஞ்சனம் அறிந்தேன்
    உணர்ந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. ஆனித்திருமஞ்சனம் சிறப்பை அறிந்தேன் அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. ஆனி மஞ்சனத்தின் தாத்பரியத்தினை
    தங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்பை மிக அழகான படங்களுடன் அற்புதமாக விளக்கியிருக்கிறீர்கள் அம்மா....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஆனி திருமஞ்சன விழா கண்டு களித்தேன்.உங்கள் பதிவில்.
    அழகான படங்கள் அதிலும் நெல்லிக்காய் மாலை அணிந்த படம் வெகு அழகு.

    ReplyDelete
  6. ஆனித்திருமஞ்சன சிறப்புகளையும்,தில்லை,திருவாரூர் கோவிலின் ஆனி திருமஞ்சன திருவிழாவின் நிகழ்வுகளையும் அழகான படங்களுடன்
    சிறப்பான பகிர்வாக தந்திருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  7. ஆனித்திருமஞ்சனம் ஆனந்தம் அருளியது.

    >>>>>

    ReplyDelete
  8. கொம்பெழுத்தோ காலுள்ள எழுத்தோ இல்லாமல் சுமார் 32 வார்த்தைகளுடன் பதஞ்சலி பாடின பதத்தினைத் தந்துள்ளது, சலங்கை ஒலிபோல மிகவும் ’ஜல் .... ஜல்’ என மனதில் ஒலித்து யோசிக்க வைத்தது. ;)

    >>>>>

    ReplyDelete
  9. அப்பிரதக்ஷணமாகச் சுற்றிடும் ‘ஓம்’ எழுத்துக்கள் ! அவைகளை எண்ணவும் [Counting] எண்ணிப்பார்க்கவும் [Thinking] முடியாதபடி ஒரே வேகம் .... தங்களின் பதிவுகள் போலவே. ஒரே Speed Kings & Queens !

    >>>>>

    ReplyDelete
  10. அஜபா நடனம் என்ற எழுத்துக்குக் கீழ் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ....... ;)

    2011ல் ஆரம்பித்த இதே ஆட்டம் இன்னும் இன்றுவரை நிற்காமல் ... ஆட்டமோ ஆட்டமாக குலுங்கிக்குலுங்கி ஆடிக் குதூகலித்துக் கொண்டிருப்பது ... ஆச்சர்யம் தான். !

    எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத ஆட்டமல்லவா !

    [தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில், இரயிலில் பாலைய்யா + வடிவு ஆட்டம் ஏனோ இங்கு என் நினைவுக்கு வந்தது ..... ;) ]

    >>>>>

    ReplyDelete
  11. படங்கள் அத்தனையும் வழக்கம்போல அழகாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  12. ஆனித்திருமஞ்சனம் பற்றியும், சிதம்பர ரகசியமான நடராஜர் கோயில், அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகள், அபிஷேக ஆராதனைகளை என அனைத்தையும் பற்றி பல அரிய தகவல்களை அறிய முடிந்தது.

    >>>>>

    ReplyDelete
  13. ஆனி போய் ஆடி வரும். தங்கள் [பதிவுக்] காட்டில் நல்ல காற்றுடன் பலத்த மழையும் பொழியும்.

    ஆனியிலேயே இப்படி என்றால் ஆடியில் இன்னும் கேட்கவே வேண்டாம்.

    ஆடிக்காற்றில் அம்மியே நகருமே; நாங்களெல்லாம் எந்த மூலைக்கு.

    >>>>>

    ReplyDelete
  14. தொடரட்டும் தங்களின் இதுபோன்ற இறைத்தொண்டுகள்.

    மனத்திலாவது மலரட்டும் மகத்தான நம் இனிய நினைவலைகள்.

    எல்லாவற்றிற்கும் பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துகள். வாழ்க !

    ;) 1325 ;)

    oo oo oo oo

    ReplyDelete
  15. சிவனின் ஆனித் திருமஞ்சனம் சிறப்பை உணர்த்தும் படங்கள் அனைத்தும் ஒருங்கே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! பதிவுக்கான கோனார் நோட்ஸ் போல திரு V.G.K அவர்களின் கருத்துரைகள் அமைந்ததில் இன்னும் மகிழ்ச்சி!

    ReplyDelete
  16. //தி.தமிழ் இளங்கோ has left a new comment on the post "ஆனந்தம் அருளும் ஆனித்திருமஞ்சனம்": //

    சிவனின் ஆனித் திருமஞ்சனம் சிறப்பை உணர்த்தும் படங்கள் அனைத்தும் ஒருங்கே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! பதிவுக்கான கோனார் நோட்ஸ் போல திரு V.G.K அவர்களின் கருத்துரைகள் அமைந்ததில் இன்னும் மகிழ்ச்சி!//

    வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. ’கோனார் நோட்ஸ்’ என்று தாங்கள் சொன்னதும் நம் பள்ளிக்கால [NCHS] நினைவலைகள் பசுமையாகத் தோன்றின.

    என் வீட்டில் பாடப்புத்தகங்களே புதிதாக வாங்கித்தர மிகவும் யோசிப்பார்கள். அவர்கள் ஒருவழியாக பழைய புத்தகங்களைப் பேரம் பேசி வாங்கித் தருவதற்குள் நம் காலாண்டுத் தேர்வே முடிந்து போகும். அந்தப்பழைய புத்தகங்கள் ஏற்கனவே பாதி விலையில் அந்தப்பையன் வாங்கினதாக இருக்கும். முதல் 10 பக்கங்களும், கடைசி 10 பக்கங்களும் அதில் இருக்கவே இருக்காது. இவ்வாறான என் அந்தக் காலக் கஷ்டங்களை [இளமையில் வறுமையை] என் பதிவினில் கூட எழுதியிருந்தது தங்களுக்கும் நினைவில் இருக்கலாம்.

    http://gopu1949.blogspot.in/2012/03/4.html

    என்னுடன் படித்த வசதியான குடும்பங்களைச் சேர்ந்த பல பையன்கள் தங்களிடம் ‘கோனார் நோட்ஸ்’ வைத்திருப்பார்கள். ஓரிரு முறை அவற்றை வாங்கிப் புரட்டிப்பார்த்து விட்டு அவர்களிடம் நான் திருப்பித்தந்ததோடு சரி.

    இவ்விடம் தங்களின் வருகைக்கும் என்னைப்பற்றி எழுதியுள்ள ஒருசில பாராட்டு வார்த்தைகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    முன்பு நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் செய்துவந்த அரும்பணியை தாங்கள் இப்போது தொடர்ந்து வருகிறீர்கள். ;) மகிழ்ச்சி.

    யாரோ யாருக்கோ எழுதியதை மூன்றாவது நபராக யாரோ ஒருவர் இவ்வாறு பாராட்டிச்சொல்வதே என் மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றால் ________ ________ ;) வேண்டாம் வேறு எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை.

    அன்புடன் VGK

    ReplyDelete
  17. ஆனி திருமஞ்சனம் பற்றிய படங்களும், தகவல்களும் சிறப்பாக இருந்தது.

    ReplyDelete
  18. அழகான படங்களுடன் ஆனந்த தரிசனம். கண்கொள்ளாக் காட்சியாகின்றது. மகிழ்ச்சி..

    ReplyDelete
  19. ஆனித்திருமஞ்சன தகவல்கள் சிறப்பு! அழகான படங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  20. நெல்லிக்காய் மாலையுடன் உள்ள அம்மன் அழகாக உள்ளது. எப்படித்தான் கஷ்டப்பட்டு கோர்த்திருக்கிறார்களோ ! ஆச்சர்யமாக உள்ளது !! உள்ளே கடினமான விதை வேறு இருக்கும் அல்லவா !!

    நெல்லிக்காய் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும். ;)

    ReplyDelete
  21. அந்த நெல்லிக்காய் மாலைகளை அம்பாள் கழுத்திலிருந்து கழட்டிய பிறகு, நிர்மால்யப் பிரஸாதமாக வாங்கி வந்து, கண்களில் ஒத்திக்கொண்டு, ஒரு அலம்பு அலம்பி விட்டு, இணைப்புக்கயிறுகளை சுத்தமாக நீக்கிவிட்டு, குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து, சற்றே ஆறியபின், ஒரு பெரிய எவர்சில்வர் தாம்பாளத்தில் போட்டு லேஸாக நெசுக்கி, விதைகளை அப்புறப்படுத்தினால் அழகாக ’அலக் அலக்’ ஆக [தனித்தனியாக] காய்கள் வெந்து பக்குவமாக இருக்கும்.

    பிறகு அதை அப்படியே ஒரு வாணலியில் போட்டு மீண்டும் அடுப்பில் ஏற்றி, உப்பு, காரப்பொடி தூவி, கடுகு தாளித்து இறக்கி வைத்துக்கொண்டால் போதுமே. சுடச்சுட சாதத்தில் இதைப் போட்டு, எண்ணெயை ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம். புளிப்பாக ஜோராக இருக்கும்.

    மோர்/தயிர் சாதத்துக்கும் இந்த நெல்லிக்காய் ஊறுகாயைத் தொட்டுக்கொள்ளலாம்.

    எவ்ளோ சுவையாக இருக்கும் தெரியுமா ? ;))))) அதுவும் அம்பாள் மேனியில் பட்டுவந்த நெல்லிக்காய்கள் என்பதால் தனி ருசியாகவே இருக்குமாக்கும்.

    நினைத்தாலே நாக்கினில் ஜலம் ஊறுகிறது. ;)))))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்..வாழ்க வளமுடன்.. ரசனையுடன் அளித்த கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      நெல்லிக்கனிகளை சுத்தமாக அலம்பி ஈரம் போக துடைத்துவிட்டு விதை நீக்கி- பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்திரத்தில்போட்டு தேவையான சர்க்கரை போட்டு குலுக்கி வைத்தால் இரண்டு நாட்களில் இனிப்பான நெல்லிக்காய் ஜூஸ் கிடைக்கும் .. வடிகட்டி ஃப்ரிஜ்ஜில் பத்திரப்படுத்திக் கொண்டால் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அல்லது ருசிக்குத்தகுந்த அளவு கலக்கி சாப்பிட்டால் தேவம்ருதமாக இனிக்கும்.. கண்களுக்குக் குளிர்ச்சி ..

      ஜூஸ் எடுத்தபிறகு கீழே தங்கியிருக்கும் காய்களை ஊறுகாய் அல்லது துவையல் செய்யலாம்..

      மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும்
      முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்..

      Delete
    2. ;))))) நீங்க ஜூஸ் ஆக்கிக்கொடுத்தாலும் சரி, துவையலாக்கிக் கொடுத்தாலும் சரி, ஊறுகாய் போட்டுக்கொடுத்தாலும் சரி எனக்கு சம்மதமே.

      அவையெல்லாமே எனக்கு தேவாம்ருதம் போலவே தான்.

      தங்களின் பதிலைப்பார்த்த உடனேயே என் கண்களுக்குக் குளிர்ச்சி ஏற்பட்டு விட்டதாக்கும்.

      உங்கள் சொல்லும், உங்கள் பதிவென்ற கனியும் முன்னேயும் பின்னேயும் எப்போதுமே இனிப்பவை தான் எனக்கு. ;)))))

      மிக்க நன்றி.

      Delete
  22. வணக்கம் இராஜராஜேஸ்வரி அம்மா !

    இறைதொண்டே இவ்வுலகின் ஈரத்தி னாதாரம்
    கற்றிடத் தந்தீர் கனி !

    எல்லாமே அருமை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete

  23. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

    ஆனந்தனமருளும் ஆனித் திரு மஞ்சனம் - பதிவு அருமை - எத்தனை எத்தனை தகவல்கள் - படங்கள் - படிக்கப் படிக்க புண்ணியம் தான்.
    ஒரே நாளில் தில்லையிலும் திருவாரூரிலும் ஒரே திருவிழா .

    தில்லையிலே ஆனந்தத் தாண்டவம் - திருவாரூரிலேயோ அஜபா நடனம். நின்று கொண்டே ஆடுவது தில்லையிலே - அமர்ந்திருந்து ஆடுவதோ திருவாரூரிலே.

    புகைப்படங்கள் அத்தனையும் அருமை.

    சிவபெருமானும் உமையவளும் விநாயகப் பெருமானும் முருகப் பெருமானும் ஒருங்கே அமர்ந்து தரிசனம் தருகிற காட்சி காணக் கிடைக்காத காட்சி. நால்வரும் புன்சிரிப்புடன் இருக்கும் படம். காணக் கண் கோடி வேண்டும்,

    அடுத்த படமோ அம்பாள் சமேத ஆண்டவன் - சீதா பிராட்டியுடன் இராமர் - இராதாவுடன் கிருஷ்னர் - சிவலிங்கம் - அருமையிலும் அருமை.

    சிவபெருமானின் கழுத்தில் விஷம் - கையில் அக்னி - உடலில் சுடுகாட்டுச் சாம்பல் - உஷ்ண்மான உடல்

    சிவபெருமானுக்கு ஆண்டுக்கு ஆறே ஆறு அபிஷேகங்கள் தான்

    மற்றவை அடுத்த மறுமொழியில்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete

  24. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

    ஆனந்தனமருளும் ஆனித் திரு மஞ்சனம் - பதிவு அருமை - எத்தனை எத்தனை தகவல்கள் - படங்கள் - படிக்கப் படிக்க புண்ணியம் தான்.

    ஒரே நாளில் தில்லையிலும் திருவாரூரிலும் ஒரே திருவிழா .
    தில்லையிலே ஆனந்தத் தாண்டவம் - திருவாரூரிலேயோ அஜபா நடனம். நின்று கொண்டே ஆடுவது தில்லையிலே - அமர்ந்திருந்து ஆடுவதோ திருவாரூரிலே.

    1புகைப்படங்கள் அத்தனையும் அருமை.

    சிவபெருமானும் உமையவளும் விநாயகப் பெருமானும் முருகப் பெருமானும் ஒருங்கே அமர்ந்து தரிசனம் தருகிற காட்சி காணக் கிடைக்காத காட்சி. நால்வரும் புன்சிரிப்புடன் இருக்கும் படம். காணக் கண் கோடி வேண்டும்,

    அடுத்த படமோ அம்பாள் சமேத ஆண்டவன் - சீதா பிராட்டியுடன் இராமர் - இராதாவுடன் கிருஷ்னர் - சிவலிங்கம் - அருமையிலும் அருமை.

    சிவபெருமானின் கழுத்தில் விஷம் - கையில் அக்னி - உடலில் சுடுகாட்டுச் சாம்பல் - உஷ்ண்மான உடல்

    சிவபெருமானுக்கு ஆண்டுக்கு ஆறே ஆறு அபிஷேகங்கள் தான்

    மற்றவை அடுத்த மறுமொழியில்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  25. ஆனித்திருமஞ்சனம் பற்றிய சிறப்பான தகவல்கள் அறிந்தேன். மிக்க நன்றி.

    ReplyDelete