Thursday, January 16, 2014

தித்திக்கும் திருமாலிருஞ்சோலை அழகர்..




அழகு பொருந்திய திருவென்னும் சொல்லோடும் 
சோலையென்னும் சொல்லோடும் தொடர்ந்த மொழியாகிய ‘திருமாலிருஞ்சோலை’ என்னும் நாமம் என பரிமேலழகர்,போற்றும் செழிப்பான திருமாலிருஞ்சோலை அழகரை .தன் சீடர்களுடன் ராமானுஜர் திருவரங்கம் செல்லும் வழியில், மதுரைக்கு அருகில் உள்ள அழகர்மலை தலத்தில் எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாளை தொழுது அவர் திருவடி பணிந்து நின்றார்.

நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து  பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த  அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்  இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!

- நாச்சியார் திருமொழி:

நூறுதடாவில்  வெண்ணையும்  , நூறு தடா நிறைந்த அக்காராடிசிலும் அழகருக்கு சமர்ப்பிக்க  ஆசைப்பட்ட ஆண்டாள் மானசீகமாக இந்த வேண்டுதலை வாய்மொழியாக வெளியிட்ட  பாசுரம்

இந்தப் படையலை   அழகர் ஏற்றுக்கொள்வரோ   என்று பிரார்த்தனை செய்கிறாள்

திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் வேண்டிக் கொண்ட மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூட்டி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்..

ஆண்டாள், தான் வேண்டியபடி பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...! என்று கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தேகம் வந்தது, யதிராஜரான ராமானுஜருக்கு. 

உடனே அந்த மகான் நூறு தடா அதாவது நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதித்து, ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார். 


ராமானுஜர் திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயில்) ஆண்டாளின் பாடலில் உள்ள வேண்டுதலுக்கேற்ப,
"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான் 
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்; 
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் 
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ"
நூறு தடா (தடா என்றால் பெரிய அடுக்கு அல்லது பெரிய குவளை அல்லது பெரிய அண்டா) முழுக்க அக்காரவடிசலும், வெண்ணையும் சேர்த்து நிவேதனம் செய்தார். ஆண்டாள் எண்ணிய செயலை ராமானுஜர் செய்து காட்டினார்.
ஆண்டாளும் தாம் வாய்நேர்ந்த படியே அழகருக்கு 
100 தடா அக்காரஅடிசிலைத் தம்பொருட்டு ஸமர்பித்த இராமானுசரை

‘எம் கோயில் அண்ணரே’ வாரும் என்று அழைத்தருளினாள்.

ஆண்டாளுக்குப் பின் பிறந்தவர்; ஆனால் ஆண்டாளின் அண்ணன் ஆனார் 


இதன் அடிப்படையில், ஆண்டாளின் வாழித் திருநாமத்தில், 
'பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னாளாள் வாழியே’ எனப் போற்றப்படுகிறாள் கோதை நாச்சியார்.

இன்றும் ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் திருக்கோயிலில் மார்கழி உற்ஸவத்தில் ஒருநாள், 'மாலே மணிவண்ணா...’ பாடலின்
போது, ஆண்டாளுக்கு விருந்துபசாரம் நிகழ்த்துகிறார் ஸ்ரீராமானுஜர். 
மிக அற்புதமான வைபவம் இது!

ஆண்டாளைப் போற்றும் அருளாளர்கள்,
 'அவள் திருவேங்கடமுடை யானின் பெருமையை கேட்டபோது 
முக மலர்ச்சியும், திருமாலிருஞ்சோலை இறைவனின் வடிவழகை அறிந்தபோது அக மகிழ்ச்சியும், திருவரங்கனின் பெருமையைக் கேட்டு அளவற்ற இன்பமும் அடைந்தாள்; அரங்கனையே மணாளனாக வரித்துக் கொண்டாள்’ என்று சிலாகிப்பார்கள்.

சித்திரைத் திருவிழாவையட்டி, திருமாலிருஞ்சோலை அழகருக்கும் ஆண்டாள் மாலை கொண்டுசெல்லப்படுகிறது.

இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்ஸவமாக கொண்டாடுகிறார்கள். அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு.\
வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவராகப் போற்றப்படக்கூடியவர் ஸ்ரீ ராமானுஜர். 

வைணவத்தை மேலும் தமிழகத்தில் ஆழமாக பரப்பியவர். 

ஆண்டாளின் மீதும், அவளின் பாசுரங்களின் மீதும் பெரும் பக்தி கொண்டவர். "திருப்பாவை ஜீயர்" என்றே போற்றப்பட்டார்.

ஒவ்வொரு க்ஷேத்ரமாக சேவித்துக்கொண்டு, பிறகு ஸ்ரீ வில்லிப்புத்தூர் வந்து பெருமானை சேவிக்கவந்தார். 

கோயிலினுள் நுழைந்ததுமே, "வாரும் என் அண்ணலே" என்ற அழகிய பெண் குரல் ஒன்று இவரை நோக்கி அழைத்தது. சுற்று முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. 

மீண்டும் மீண்டும் அந்த அழகிய குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. 

யாராக இருக்கும் என்று ஆவலுடன் பார்க்க, அங்கே கருவறையிலிருந்து ஆண்டாள் அழகாக அசைந்து வந்து, "வாருங்கள் என் அண்ணா" என்று அழைத்தாள். 

பக்தியுடன் பரவினார் ராமானுஜர். ஆண்டாளுக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்தவர் ராமானுஜர். 

தம்பி என்றல்லவோ ஆண்டாள் அழைக்க வேண்டும். 
ஏன் அண்ணன் என்று அழைத்தார்? 

அதற்கு பதிலும் அவளே சொல்கின்றாள். என் எண்ணத்தை (நூறு பெரிய அடுக்குகள் முழுக்க அக்காரவடிசல் நிவேதனம் செய்த) நிறைவேற்றுபவர் யாராக இருக்க முடியும்? எனக்கு அண்ணன் என்று ஒருவர் இருந்திருந்தால் அவரை நிறைவேற்றச் சொல்லியிருப்பேன். 

அண்ணனோடு பிறக்கவில்லை. ஆனாலும், என் விருப்பத்தை அண்ணன் ஸ்தானத்தில் நின்று நிறைவேற்றியவர் தாங்கள் தான். 

ஆகையாலேயே அண்ணா என்று அழைக்கின்றேன் என்றாள். 
ராமானுஜர் பூரித்து நின்றார்.

ஆண்டாள் திருப்பாவையின் பாடல்களின் தன்னை ஆண்டாள் என்றோ, பெரியாழ்வாரின் மகள் என்றோ நினைந்து பாடாமல், பிருந்தாவனத்தில் உள்ள கோபியரில் ஒருவராகவே கற்பனை செய்து கொண்டு பாடி மகிழ்ந்தாள். நிகழ்காலத்திலும் தன்னை ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தாள்.
அதே போல் ராமானுஜர் ஆண்டாளின் திருப்பாவையை பாடும்போதெல்லாம் தான் ஒரு ஆச்சார்யர் என்றோ, பாஷ்யங்கள் பல எழுதிய குரு ஸ்தானத்தில் இருப்பவர் என்றோ நினையாமல், ஆண்டாள் எண்ணியது போலவே, தானும் ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனையுலகில் சஞ்சரித்து, நிகழ்வுலகில் நடந்துகொள்வார்.




8 comments:

  1. ’தித்திக்கும் திருமாலிருஞ்சோலை அழகர்’ என்ற தலைப்பில் இன்று மிக அழகான பதிவு கொடுத்துள்ளது மிகவும் தித்திக்கிறது.

    >>>>>

    ReplyDelete
  2. படங்களெல்லாம் ஆசை தீரப்பார்த்து மகிழ்ந்தேன்.
    கண்களில் ஒற்றிக்கொண்டேன்.

    >>>>>

    ReplyDelete
  3. நூறு அண்டா வெண்ணெய் + நூறு அண்டா அக்காரவடிசலா? ;))))) !!!!!

    பிரமித்துப்போனேன்.

    அவை மட்டும் கரெக்டாக என் கண்களில் படிக்கத் தென்பட்டுள்ளன ... பாருங்கோ. ;)

    அதுதான் ஆச்சர்யம் !

    >>>>>

    ReplyDelete
  4. மிக அழகான இன்றைய தங்களின் பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    எங்கிருந்தாலும் வாழ்க !

    o o o o

    ReplyDelete
  5. அற்புதமான படங்களுடன் அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு. ஸ்ரீரங்கம் உள் ஆண்டாள் சன்னிதியின் கண்ணாடி அறை சேவை புகைப்படம் பார்த்து மகிழ்ச்சி !

    ReplyDelete
  6. ராமானுஜர் திருப்பாவை மீது அவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தாராம். எப்போதும் திருப்பாவையை அனுசந்திப்பதால் (சொல்லிக் கொண்டிருப்பதால்) அவருக்கு திருப்பாவை ஜீயர் என்றே பட்டம் உண்டு. ஒரு முறை வீதியில் உஞ்ச விருத்திக்கு போனபோது, ஒரு வீட்டு வாசலில் நின்றாராம். கதவைத் திறந்து அந்த வீட்டுப் பெண் வெளியே வர, ராமானுஜர் அப்படியே மயங்கி சாய்ந்தாராம். என்னவென்று புரியாமல் மற்றவர்கள் திகைக்க, ராமானுஜரின் குரு பெரிய நம்பி சொன்னாராம். 'உந்து மதகளிற்றன்.. பாசுரமா' ஆணடாளின் திருப்பாவையில் அது ஒரு பாட்டு. செந்தாமரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்.. என்று இவர் பாடும்போது அந்தப் பெண் கதவைத் திறந்து வர.. இவர் அப்படியே அந்த காலத்திற்கே போய்விட்டார்.. என்று புரிய வந்ததாம். அந்த அளவு பாசுரம் சொல்லும் போதே தம்மை உணர்வுபூர்வமாய் மாற்றிக் கொள்வாராம். உலகில் சஞ்சரித்து நிகழ்வுலகில் நடந்து கொள்வார் என்று தாங்கள் எழுதியது படித்து இதை சொல்லத் தோன்றியது.

    ReplyDelete
  7. அழகான படங்களுடன், அருமையான பகிர்வு..

    இன்று எனது பக்கத்தில்

    http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_16.html


    ReplyDelete
  8. ஆண்டாள் பாட்டில் வர்ணித்ததை உண்மையில் செய்து ஆண்டாள் வாயாலேயே அண்ணா என அழைக்கப்பட்ட ஸ்ரீ ராமானுஜரின் வரலாறு அருமையான நடையிலிருக்கு.படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றது நன்றி .

    ReplyDelete