Tuesday, April 29, 2014

தங்கத் திருநாள் அட்சயதிருதியை..







சித்திரை மாதம் வரும் அமாவாசையை அடுத்த வளர்பிறையான மூன்றாம் நாளான திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்து விழாவாக கொண்டாடுகிறோம்.

அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள்.

அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. 

ஸ்ரீலட்சுமி வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும்,
இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும்,
மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும்,
வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும்,
குடும்பத்தில் கிரக லட்சுமியாக வும் விளங்குகிறாள்.

பசுக்களில் கோமாதா, யாகங்களில் தட்சிணை, தாமரையில் கமலை, அவிர்பாகத்தில் ஸ்வாகா தேவி என சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நாராயணனின் இணைபிரியாத தேவியான லட்சுமியை நாம் அட்சய திரிதியை நாளில் சாஸ்திரப்படி பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிட்டும்

மகாலட்சுமி திருமால்  மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள்

பெண்கள் அட்சய திரிதியை அன்று ஸ்வர்ண கௌரி விரதம்
கடைப்பிடிப்பது விஷேசம்... 

அன்று பார்வதி பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறுநாள்
அன்னைக்குப் பாதுகாப்பாக விநாயகரும் வருவதாகவும் நம்பிக்கை..

 கோதுமையில் இனிப்புகள் செய்து படைத்து பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்து ஆடை தானமும் செய்வார்கள்.

குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும்
 பெற்ற நாள்  அட்சய திரிதியை

மஹா விஷ்ணுவின் அவதாரமான வியாசபகவான் மஹாபாரதத்தை சொல்லச்சொல்ல மஹாகணபதி தன் மேன்மைமிகு தந்தத்தை ஒடித்து மஹாபாரதம் எழுத ஆரம்பித்த திருநாள் அட்சய திருதியை...

குசேலர் கண்ணனுக்கு அவல் கொடுத்து அளவற்ற செல்வம் பெற்ற திருநாள்..

கௌரவர் சபையில் பாஞ்சாலி துச்சாதனனால் துன்புறும்போது, “அட்சய’ என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் .

பரசுராமர் அவதரித்த நாள்..
 ..
பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான்.

மணிமேகலையும் அட்சய பாத்திரம் பெற்றுள்ளாள்.

பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிட மிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான்
அன்னபூரணி  தன் கையில் உள்ள அட்சய பாத்திரத்தில் இருந்த உணவை சர்வேஸ்வரனுக்கு தானமிட்டு, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட வைத்த நாள் அட்சய திரிதியை நாள்தான். எனவே காசியும் அட்சய திரிதியை தலமாகிறது

கேரள சொர்ணத்து மனை யில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம்  பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாள்...

.
 குருகுல வழக்கப்படி சங்கரர் யாசகத்திற்குப் புறப்பட்டார். அவர் முதல் முதல் யாசித்த வீடு படு ஏழை வீடு. 

பவதி பிட்சாந்தேஹி’ என குரல் கொடுத்த பாலகனுக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண், தன்னிடமிருந்த காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். 

 அவள் ஏழ்மையை உணர்ந்த பாலகன் அவளுக்கு உதவ விரும்பி, மகாலட்சு மியை நோக்கி மனம் உருகப் பாடினார். 

என்ன அதிசயம்! அவள் வீட்டு நெல்லிமரம் தங்கமழையைப் பெய்வித்தது. வீடு முழுவதும் தங்கக் கனி கள் குவிந்தன. அப்பாடல் தான் 
கனகதாரா ஸ்தோத் திரம்.
இது 8-ஆம் நூற்றாண்டில் நடந்த அதிசயமாகும். இச்சம்பவத்தையொட்டி ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோவிலில் கனக தாரா யாகம் செய்கின்றனர். சங்கரர் முக்தியடைந்தது 32-ஆம் வயதில். எனவே அன் றைய தினம் 32 நம்பூதிரிகள் கனகதாரா சுலோகத்தை 1,008 முறை ஜெபித்து அர்ச்சனை செய்வார்கள். தங்க நெல்லிக்கனிகள், வெள்ளி நெல்லிக்கனிகள், ரட்சைகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.
முன்னதாகப் பணம் கட்டி பதிவு செய்த பக்தர்களுக்கு இவை தரப்படும். இதனை வீட்டு பூஜையறையில் வைத்துப் பூஜித்தால் நலமும் வளமும் பெற்று இன்பமாய் வாழலாம்.
திருக்காலடியப்பன் ஆலய மூலஸ்தானத்தில் கண்ணன் ஒரு கையில் வெண்ணெயுடனும், ஒரு கையை இடுப்பிலும் வைத்தபடி காட்சி தரும்  கிருஷ்ண அம்பலம் வலப்புறம் சங்கரர் சந்நிதியும், இடப்புறம் சாரதாம்பாள் சந்நிதியும், சக்தி விநாயகர், கிருஷ்ணர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் சமாதியும் சிறப்புடன் அமைத்துள்ளனர்.. ஆன்மிகத்தின் முதல் குருவான ஆதிசங்கரரின் தாய்க்கு  தரப்பட்டுள்ள சிறந்த புகழாக கல் விளக்கு ஒன்று நிரந்தரமாக அணையாதீபமாக ஒளிவீசித்திழ்கிறது..! .
ஆதிசங்கரர் அவதரித்த காலடியில்  அமைத்துள்ள கோவிலில் சங்கரரின் உருவத்தை தட்சிணாமூர்த்தியாக வடிவமைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆலயத்தில் உள்ள பெரிய மண்டபத்தின் சுவர்களில் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வண்ண ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.

கேரளா மாநிலம் அடுவாஞ்சேரி கிராமத்தில்- வாசுதேவபுரத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த மகா விஷ்ணு கோவில் உள்ளது. பரசுராமர் பிரதிஷ்டை செய்யும்போது, லட்சுமி தேவியை திருமால் தன் கையால் ஆலிங்கனம் செய்துகொண்டிருப்பது போல சங்கல்பம்  செய்து கொண்டே பிரதிஷ்டை செய்தார்.

ஆலயப் பொறுப்புகளை பரசுராமரிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்தணர்கள் பணிகளைச் சிறப்புடன் செய்ததால் லட்சுமி கடாட்சம் பெற்று செல்வந்தர்களாக மிக உயர்ந்த நிலையில் இருந்தனர். 

காலப்போக்கில் விஷ்ணுவிற்கு பூஜைகள் நடைபெறாத நிலையில், அவருக்கு பணிவிடை செய்ய லட்சு மியே வந்தாள். சாலக்குடி ஆற்றில் பூஜைக்கு நீர் எடுக்க வந்தபோது, அங்கு வந்த வில்வமங்கள சுவாமிகள் லட்சுமி தேவியைக் கண்டு ஆச்சரிய மடைந்து விவரம் கேட்டார். லட்சுமியும் நடந்த வற்றைக் கூறினாள்.
அதற்கு வில்வமங்கள சுவாமிகள், “”தாயே, உங்கள் கருணைப் பார்வையை அந்த பாவிகள்மீது செலுத்தி, அவர்களைத் திருத்தி ஆன்மிக வழியில் ஈடுபடுத்துங்கள்” என மனமுருகி கேட்டுக்கொண்டார்.
லட்சுமி தேவி, “”அட்சய திரிதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு  நான் அருள்பாலிக் கிறேன்” என உறுதி கூறினாள்.  அதன்படி இந்த எட்டு நாட்களும் அஷ்ட லட்சுமிகளாக- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லட்சுமியாக அருள்பாலிப் பதை அடுவாஞ்சேரி கோவிலில் ஆண்டுதோறும் காணலாம்.

ஆலய மூலவரான விஷ்ணு பகவான் சதுர்புஜங் களுடன் காட்சி தருகிறார். இவருக்குப்பின் லட்சுமிதேவி விக்ரகம் உள்ளது. அதை தினசரி பார்க்க முடியாது. இந்த எட்டு நாட்களில்- அவ்விக்ரகத்தை விஷ்ணுவின் இடபாகத்தில் எழுந்தருளச் செய்யும்போது பார்க்கலாம்.

முழையூர் தலத்தில் வருடந்தோறும் அட்சய திரிதியை நாளன்று ஆயிரக்கணக்கானோர் கூடிக் கொண்டாடுகின்றனர். இத்தல இறைவன் பரசுநாதர்; இறைவி ஞானாம்பிகை. இத்தலம் பட்டீஸ்வரம் அருகே அமைந்துள்ளது.

திருக்கயிலாயத்தில் இசைக்கப்படும் முழை என்ற இசைக்கருவியின் ஒலி முதன்முதல் பூமியை அடைந்த தலம்  முழையூர்.. முழை  ஒலியைக் கேட்பதற்காகவே முப்பத்து முக்கோடி தேவர்கள் அட்சய திரிதியை நாளன்று இத்திருத்தலத்தில் கூடி  கேட்டு ஆனந்திக்கின்றனர்.

அட்சய திரிதியை அன்று 3, 12, 21 என்ற எண்ணிக்கை கொண்ட ஜலமதுரம் என்ற இளநீரால் அபிஷேகம் செய்து, புடலங்காய் கலந்த உணவை தானமளித்தால் அறிந்தோ, அறியாமலோ செய்த தீவினைகளில் இருந்து காக்கப்படுவார்கள். முழையூர் லிங்கம் பஞ்சாட்சர பீஜங்களாலான பரசுநாத லிங்கம்.  குபேர பூஜை செய்வது சிறப்பு.

சனிபகவானின் துயரைத் தீர்க்க இறைவன் தோன்றிய தலம் தஞ்சை மாவட்டம், பேராவூரணியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விளங்குளம் ஈஸ்வரன் சனியின் ஊனத்தை நீக்கிய நாள் பூச நட்சத்திர சனிக்கிழமையுடன் கூடிய அட்சய திரிதியை நாளில்தான்.
 அட்சய திரிதியை அன்று அட்சய புரீஸ்வரருக்கும், சனி பகவானுக்கும் சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும். இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பக் கஷ்டம், குழப்பம் விலகும். 


திருவானைக்கா கோவிலில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ளது குபேரலிங்கம். இந்த லிங்கத்தை அட்சய திரிதியை நாளன்று பால், தேன், சந்தன அபிஷேகம் செய்துவழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, வறுமை தொலைந்து வளமாக வாழலாம்.   ஆடை தானமும் அன்ன தானமும் செய்வது சிறப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் தல பெருமாள் மரக்காலால் குபேரனுக்கு செல்வம் கொடுத்தாராம். பின் அந்த மரக்காலை தலைக்கு அடியில் வைத்தபடி சயன கோலத்தில் காட்சி தரும் வைத்த மாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் பெயர். இவரை அட்சய திரிதியை நாளில் தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.

தானத் திருவிழா என்று சிறப்பிக்கப்படும் அட்சய திரிதியையில்  செய்யும் எல்லா வகை தான- தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும். கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும்.

குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம்; புத்தகம் வெளியிடலாம்; வீடு, மனை, கிணறு புதுப்பிக்கலாம்; எந்த ஒரு புதிய செயலையும், 
புண்ணிய செயலையும் செய்யலாம். 
ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.
தயிர்சாத தானம்- ஆயுள் கூடும். இனிப்புப் பண்ட தானம்- திருமணத் தடையை விலக்கும். உணவு தானிய தானம்- விபத்து, அகால மரணத்தை தடுக்கும். கால்நடை தீவன தானம்- வாழ்வை வள மாக்கும். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்தால் பாபவிமோசனம் கிட்டும். லட்சுமி பூஜை செய்வதால் அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும். 
அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும்
. நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்...
உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம்.

மாதா மாதம்  வாங்கியே ஆகவேண்டிய மளிகையை. சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாம்..

தொடர்புடைய பதிவுகள்


மணிராஜ்: பொன்மழை பொழிக ...





14 comments:

  1. அக்ஷயமாக ஜொலிக்கும் பதிவு ...... ஆனந்தம் அளிக்குது.

    ReplyDelete
  2. கண்ணடிக்கும் மஹாவிஷ்ணுவில் ஆரம்பித்து .....

    சொக்க வைக்கும் சொக்கத்தங்க மாளிகையில்
    முடித்துள்ள படங்கள் எல்லாமே அருமை.

    கொங்கு நாட்டுக் கோவைத்தங்கத்தின் தங்கமான பதிவு !

    ReplyDelete
  3. அட்சயத் திருதியை அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. தகவல்கள் அறிந்து மகிழ்ச்சி....

    குறையாத செல்வமும், மகிழ்ச்சியும் எங்கும் நிலைத்திருக்க எனது பிரார்த்தனைகளும்....

    ReplyDelete
  5. சிறப்பான பகிர்வு அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அட்சய திரிதியை நாளில் என்னென்ன செய்யலாம் என தந்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கு. அழகான படங்கள். அழகான பதிவு.நன்றிகள்.

    ReplyDelete
  7. அருமையான அரிய தகவல்களுடன் அழகிய பதிவு தந்து அசத்தி விட்டீர்கள்! அன்பு நன்றி உங்களுக்கு!!

    ReplyDelete
  8. எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டிய, தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் கண்டிப்பாக பின்பற்றவேண்டிய தகவல்களைப்
    பகிர்த்து கொண்டமைக்கு மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ஆதிசங்கரரின் கனகதார சுலோகம் பற்றியும், காலடி கோயில் பற்றியும் உங்கள் செய்திகள் அருமை.

    ReplyDelete
  10. அட்சய திருதியைப் பற்றி இவ்வளவு செய்திகளா. பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  11. அட்சயதிரிதியை குறித்த சிறப்பான தகவல்களை திரட்டிக்கொடுத்த பதிவு சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அட்சய திரிதியின் மகத்துவம் அறிந்தேன் எவ்வளவு விடயங்கள் தந்துள்ளீர்கள். மிகவும் பயனுள்ள தகவல்கள்.அருமை அருமை மிக நன்றி! வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  13. அட்சய திரிதியில் கடைபிடிக்க வேண்டியவைகள் மிக அருமை, உப்பு, மாதமளிகை சாமன்கள் வாங்கலாம், என்பது நல்லவிஷ்யம் வேறு எதுவும் கேட்டு கணவரை தொந்திரவு செய்ய வேண்டாம்.
    நல்லதை செய்து நல்லதை பேசி நல்லபடியாக வாழலாம்.
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete