

























அபிராமி பட்டர்
http://www.youtube.com/watch?v=W3fQ1wlw3-E
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T1_639.jpg)
.விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபடநெஞ்சுண்டு எமக்கவ் வழி கிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க லேசெய்து பாழநரக
குழிக்கே அழுத்தும் கயவர்தம் மொடேன்ன கூட்டினியே !
ஆச்சரியம்! அபிராமியின் ஒளிவெள்ளம் வானில் நிறையுமாறு
தன் வலது காதிலிருந்த தோடகத்தைக் கழற்றி வானில்
வீசுகிறாள் அன்னை!
'விர்'ரெனப் பறக்கின்ற அந்த குண்டலம் வானில் ஒரு முழு நிலவாய்ச் சுடர்விட்டு தண்ணொளியை எங்கும் ஆச்சரியமாக அமாவாசை நாளின் காரிருளை நீக்கியவாறு ஒளி வீசிப் பிரகாசித்து அறியாமை இருளையும் அகற்றியது..!
பரவசம் நிரம்பிய கிடைத்தற்கரிய அற்புதக் காட்சியினை அமாவாசையன்று முழுநிலவா என ஆனந்தத்துடன் வணங்கித் தொழுகிறோம் ..
நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமை மிகு தலமான திருக்கடையூரில் அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் மார்க்கண்டேயருக்காக காலனை சம்ஹாரம் செய்த
அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது..!

அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார்.
எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி
என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார்.
அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார்.
அவர் 79ம் பாடல் - விழிக்கே அருளுண்டு - பாடியபோது, அன்னை அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தாடங்கத்தை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று ஓதுவா மூர்த்திகள் அபிராமி அந்தாதியை ஒவ்வொரு பாடலாக பாட சிவாச்சாரியார் ஒவ்வொரு பாடலுக்கும் நிவேதனத்துடன் தீபாராதனை சிறப்பாக நடைபெறும்..!
தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம்
பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம்.
தை அமாவாசையன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர்.
79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின் விளக்கால்
அமைக்கப்பட்ட முழு நிலவு காட்டப்படும்..!
இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள்..!
தை அமாவாசையையொட்டி அபிராமி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த பணம் ரூ.5 கோடியில் செய்யப்பட்ட
நவரத்ன அங்கி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.
அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்ற நியதிப்படி மகாவிஷ்ணு கழற்றி வைத்த ஆபரணங்களிலிருந்து அபிராமி அம்பிகை தோன்ற அம்பிகையைப் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.
மகாவிஷ்ணுவின் மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில்,
லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானதாகப்போற்றப்படுகிறது..!
அமாவாசை நாளில், முன்னோர்களை வழிபடுவது மிக மிக அவசியம்!
நம் முன்னோர்களே நம் சந்ததியைக் காத்தருள்வார்கள்.
தை அமாவாசை நாட்களில் மறக்காமல் நம் கடமையைச்
செய்தால், நாமும் நம் குடும்பமும் நிறைவுடன் வாழ்வோம்
என்பது உறுதியான நம்பிக்கை..!
மிகவும் புனிதமான தினமாக. தை மாதத்தில் வருகின்ற தை அமாவாசை விரதம் சிறப்புப் பெறுகின்றது. ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம்..!
தை அமாவாசையை முன்னிட்டு. ராமேசுவரம் கடற்கரையில் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதும் சிறப்பு..!
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும்
தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்பட்டு
ஸ்ரீநெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவிலில் காணும்
இடமெல்லாம் தீபங்களாக பிரகாச ஜோதியாகவே காணப்படும்.
பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு.காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.
காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் கதிரவன் அருளைப் பூரணமாக பெறமுடியும்.
சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு
சிரார்த்தம் என்று பெயர்.
மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும்.
அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக தை அமாவாசையை எடுத்துக் கொள்ளலாம்.
சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட மிகவும் புனிதமான வேதாரண்யம் கோவிலுக்குள் உள்ள மணிகாணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.
மணிகாணிகை தீர்த்தத்தில்நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து, நிவர்த்தி பெற்று வரலாம்.
பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையலாம்.
வேதாரண்யம் கோவில் எதிரே உள்ள கடல், ஆதி சேது - ராமேஸ்வரத்துக்கு சமமானது இந்த கடல் தீர்த்தம். இதில் ஒரு முறை நீராடுவது ராமேசுவரத்தில் நூறு தடவை நீராடுவதற்கு சமம் என்று தை அமாவாசை, மாசி மாத, மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடி புண்ணியம் பெறுகின்றனர்..!
அருகில் உள்ள கோடியக்கரை கடல் தீர்த்தமும் மிகவும் புனிதமானது.
புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது.
அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன.
வட நாட்டில் காசி, பத்ரிநாத், கயா போன்ற இடங்களில் எப்பொழுதும் எந்நாளிலும் பிதுர் பூஜை செய்யலாம்.
காசியில் மணிகர்ணிகா கட்டம் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது.
கேரளாவில் "ஐவர் மடம்' என்னும் ஐந்து நதிகள் பாயும் தலம் புகழ் பெற்ற மயானத்தில் தினமும் அறுபதிலிருந்து எழுபத்தைந்து சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன. காசி கங்கைக்கரையோரம் உள்ள மணிகர்ணிகா காட் என்ற இடத்தை நினைவூட்டுகிறது.