Tuesday, September 30, 2014

செல்வ வளம் செழிக்கும் நவராத்ரி



நவகோண நடுமையாய் நவரத்ன மணிபீடம்
நவக்கிரஹ நாயகியைச்சுற்றி நவசக்தி அவதாரம்

நவராத்திரி ஒளியேற்றி நலம்பாடி துதி செய்வோம்
நவ நிதி அருளும்  மீனாட்சி புகழ்சேர்க்க வருவாயே  

கருவாகும் உயிர்க்கெல்லாம் கருணைமாரி பொழிந்து
கசிந்துருகும் மனத்திலே இசைந்திருக்கும்  அன்னை..!

படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும்

சக்தி வழிபாடு   ஒன்பது நாள் விழாவாக    நவம் என்றால் புதியது என்றும், ஒன்பது என்றும் இரு பொருள் தரக்கூடிய சொல்லாக நவராத்திரி விழா பழமையோடும் புதுமை கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் வகையில்  கொண்டாடப்படுகிறது..!
நவராத்திரியின்போது ஒன்பது நாளும் ஒன்பது வகையில் மலர் வழிபாடு செய்து ,கொலுவிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து, ஒன்பது வகைப் பழங்கள், பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்கிறோம்..!

துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என மூவகையாக மும்மூன்று நாட்கள் விழாக் கொண்டாடுவதும், இறுதியில் பத்தாம் நாள் அம்மனை சிம்ம வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும். 

புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவில் கொலு வைத்து  . நல்லோரின் நட்பை ஏற்றுப் போற்றுதலும் பக்தியைப் பெருகச் செய்வதும் கொலுவின் முக்கிய நோக்கமாக அமைகிறது. 

பிரதமை முதல் திரிதியை வரையில் கிரியா சக்தியாகிய துர்க்கா தேவியையும்; சதுர்த்தி முதல் சஷ்டி வரையில் இச்சா சக்தியாகிய மகாலட்சுமியையும்; சப்தமி முதல் நவமி வரையில் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபாடு செய்து தசமியில் நவராத்திரியை நிறைவு செய்வது வழக்கம். 

மகேஸ்வரி, கவுமாரி, வராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டீஸ்வரி போன்ற தேவியரின் மந்திரங்களை ஒன்பது நாளும் சொல்லி, பூஜை செய்து நலம் பெறுகிறோம்.!

ஒன்பது நாளும் விரதமிருந்து அன்னையை வழிபடும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் ஓங்கும். இளம் பெண்கள் கல்வி, இசை போன்றவற்றில் சிறப்படைவார்கள். இல்லத்தில் செல்வம் சேரும்.

நவராத்திரி காலத்தில் மங்கல தீபம் ஏற்றி ,விடிய விடிய  விளக்கு எரிவது வீட்டிற்கு செல்வ வளத்தை தரும்.  

9 comments:

  1. கொலு மிகவும் அழகு.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  2. நோ சான்ஸ்! அந்த வயல்வெளி, மலை, கிராமம் தத்ரூபமாக இருக்கின்றதே! மலையும், குடிசை அமைப்பு வீடுகளும்....ஓ! அருமை அருமை பார்த்துக் கொண்டே இருக்கின்றோம். கண் எடுக்க மனதில்லை சகோதரி! அவ்வளவு அழகு!!!!! கொலுவும் அழகோ அழகு!!! உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தீராது சகோதரி!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. சிறப்பான செய்திகள் ...பகிற்விற்கு நன்றி அம்மா

    ReplyDelete
  4. சகோதரர் துளசிதரன் கூற்றுத்தான் எனதும்!..

    கண்களை வேறெதையும் பார்க்க விடாத அற்புதக் கொலுக் காட்சிகள்!
    சிந்தை நிறைத்தீர்கள் சகோதரி! மிக அருமை!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. கும்பகோணத்தில் பள்ளி நாள்களில் நவராத்திரி கொலு கொலு சுண்டல் என சத்தம்போட்டுக்கொண்டே நண்பர்களுடன் சென்ற நினைவு வந்துவிட்டது எனக்கு. நன்றி.

    ReplyDelete
  6. இந்தப் பதிவுக்கும் இந்தக் கருத்துக்கும் சம்பந்தம் இல்லை. செல்வ வளம் செழிக்கும் என்னும் தலைப்பு இதை எழுத வைத்தது. அதிக செல்வவளம் நவராத்திரியை ஜெயில் ராத்திரியாக்கிய கொடுமை , என்ன சொல்ல.?

    ReplyDelete
  7. மின்னொளி விளக்கு அம்மன் உட்பட இன்றைய அனைத்துப்படங்களும் மிக அழகாக இருக்கு. அதுவும் கொலு மிக தத்ரூபமாக அமைத்திருக் கிறார்கள். அழகு.நவராத்ரியின் சிறப்பினைத் தந்த பகிர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  9. கொலுவில் மலைக் கோவில் மனதைக் கொள்ளையடித்தது . கொழுவும் மிக அழகாய் நேர்த்தியாய் அமைந்திருக்கிறது.

    ReplyDelete