Tuesday, March 5, 2013

ஞானமலை ஞானபண்டிதன்







முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை .....
அருணகிரிநாதருக்கு, தனது பாத தரிசனத்தை முருகன் காட்டி அருளிய   ஞானமலை திருத்தலம் எழுந்தருளியுள்ள முருகனைப் போற்றி இரண்டு திருப்புகழ் பாடியுள்ளார் அருணகிரிநாதர். 
நாதரிட மேவு மாதுசிவ காமி நாரிஅபி ராமி அருள்பாலா 
நாரண சுவாமி ஈனுமக ளோடு ஞானமலை மேவு பெருமாளே - என்கிறார்.
மலையின்  படியேறிச் செல்லும்போது ஞானஸித்தி விநாயகர் அருள்கிறார்...
ஞானமே உருவாக, ஓம் எனும் பிரணவப் பொருளாய் 
அமர்ந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். 
மலைமேல் மிகச் சிறிய முருகன் கோயில். முன்புறம் கொடிமரம், பலிபீடம், மயில் வாகனம் கருத்தைக் கவரும் ...


முருகன் சந்நிதிக்குப் பின்னே, மலை மீது சற்று ஏறிச் சென்றால், அங்கே சிவபெருமான் ஞானகிரீஸ்வரர்ராக அருளும் சந்நிதிக்குப் பின்னே, மலையில் முருகன் பாதம் பதிந்த தடங்கள் என இரு பாதச்சுவடுகள் அமைப்பை சிறு மண்டபம் கட்டி, அதனுள் பாதுகாத்து வைத்துள்ளனர்.

 ஞானமலை ஸ்ரீமுருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பேரழகுடன்  திகழும் திருமுகம் ஞானக்களையுடன்  அழகே அழகு.

ஜபமாலை ஒரு கையிலும் கமண்டலம் ஒரு கையிலுமாகக் கொண்டு, முன் கைகள் இரண்டில் ஒன்று அபய ஹஸ்தமாகவும் ஒன்றை இடுப்பிலும் வைத்தபடி காட்சி தருகிறார்.
அருணகிரிநாதருக்கு காட்சியளித்து யோகானுபூதி அளித்த “கோலக் குறமகள் தழுவிய குமரன்” வடிவம் மிகவும் அற்புதமானது...

உற்சவ மூர்த்தி பஞ்சலோக வடிவில் அமைக்கப் பெற்று ஆண்டுதோறும் “அருணகிரிநாதர்க்கு காட்சிவிழா” சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Jñāna Malai Śrī Subrahmanya Swami
கருவறையில் ஞான பண்டித சுவாமி ஞானவள்ளி, ஞானகுஞ்சரி சமேதராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
முருகன் ஒருமுகம் நான்குகரங்கள் கொண்டு பின் இருகரங்களில் கமண்டலமும், ஜபமாலையும் ஏந்தி முன்வலக்கரம் அபயமுத்திரையும் முன் இடக்கரம் இடுப்பிலும் உள்ள கோல வடிவை “பிரம்மசாஸ்தா” என்றழைப்பர். 


பிரணவத்திற்குப் பொருள் தெரியாத பிரமனைச் சிறையிலடைத்து தாமே சிருஷ்டித்தொழிலை மேற்கொண்ட வடிவமாகும். (சாத்தன் - தண்டிப்பவன்).

ஞானபண்டித சுவாமி கோயிலுக்கு மேற்புறம் உள்ள ஞானமலை சித்தர் கோவிலில் ஞானகிரீச்வரர், ஞானப்பூங்கோதை, ஞானவிநாயகர், ஞான சக்தி சுப்ரமண்யர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.
ஞான மலை சுப்பிரமணியர் ஆலயம்
மலையில் படி ஏறி வரும்போது வடபுறமும் தென்புறமும் உள்ள இரண்டு
குகைகளில் ஞானகிரி சித்தர் தவம் இருந்து வரும் அடியார்களுக்கு பச்சிலை அளித்து நோய் நீக்குவாராம்.

அவர்  அடங்கிய இடமே தற்போது ஞானகிரீச்வரர் சந்நிதியாக உள்ளது.

ஞானகிரீச்வரர் திருக்கோயில் பின்புறம் முருகப்பெருமானின் திருவடி பதிந்த புனிதமான இடம்  பக்திப் பரவசம் ஏற்படுகிறது.

ஞானம் என்பதற்கு திருவடி என்றும் பொருள் உண்டு.
எனவே ஞானமலை என்பது திருவடி பதிந்துள்ள மலை 
என்றும் கூறலாம்.
Murugar footprint
Footprint of Lord Murugan atop Jnanamalai
ஞானமலை முருகன் “திருவடிப் பூங்கோயில்” ....
முருகன் பாதம் பதிந்த புண்யபூமியில் அடியார்கள் அங்கப் பிரதட்சணம் (உடலால் வலம் வருதல்) செய்ய வசதியாக தரை வழுவழுப்பாக அமைக்கப் பெற்றுள்ளது.

 அங்கப் பிரதட்சணம் செய்வதால் உடல் நோய்கள், உள்ள (மன) நோய்கள் முதலியன நீங்கி ஆரோக்யமான வாழ்வு பெறலாம்.

திருவடி பூங்கோயிலில் சடாரி (சுவாமி திருவடி) வைக்கும் வழக்கமும் உள்ளது.

ஞானமலையைச் சுற்றி ஒருபுறம் ஏரியும், மறுபுறம் வயலும், ஊருமாகச் சூழ்ந்து பச்சைப்பசேல் என்று மிகவும் ரம்யமாகவும் அமைதியாகவும் காட்சியளிக்கிறது.

மலையில் வெப்பாலை என்னும் குடசப்பாலை மரம் மிகுதியாக உள்ளன.

தோல் மற்றும் மூட்டு சம்பந்தமான வாத நோய்களுக்கு வெப்பாலைமரத்தின் மூலிகைச் சாறு அற்புதமான மருந்தாகும்.

இங்குள்ள வெப்பாலை மரக்காற்றை சுவாசிப்பதாலும் மலையை வலம் வருவதாலும்  வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கிறது என்பது சித்த மருத்துவர்கள் கூறும் ரகசியமாகும்.

மலையில் எலுமிச்சை மணம் கமழும் புல்வகை முகத்திற்கு வசீகரம் அளிக்கும் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

ஞானமலையின் வடமேற்குப் பகுதியில் வள்ளிமலையும் வடகிழக்கில் தணிகை மலையும் வடக்கில் சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கன் மலையும் அமைந்துள்ளன.

வள்ளிமலை, தணிகைமலை, ஞானமலை, மூன்றும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் மூன்று மலைகளையும் தரிசிப்பது மிகவும் விசேஷம்
Śrī Jñāna Panditan
ஞானமலைக்குரிய இரண்டு திருப்புகழ்ப் பாடல்கள், ஞானமலை முருகன் பதிகம், சண்முக கவசம், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருநெல்வேலி பதிகம், குமாரஸ்தவம் முதலான பாடல்கள் கொண்ட கல்வெட்டுகள் பதிக்கப் பெற்றுள்ளன.

மலை அடிவாரத்திலும், மலைமேலும் பூச்செடிகள் கொண்ட
நந்தவனம் பராமரிக்கப்படுகிறது.

மலைமேல் ஞானவேலினால் முருகன் உண்டாக்கிய ‘வேற்சுனை’ உள்ளது.

மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஞானாச்ரமம் திருமாளிகையில் அடியார்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப் பெற்றுள்ளன.

ஞானாச்ரமம் திருமாளிகையில் “குறமகள் தழுவிய குமரன்” பஞ்சலோகத் திருமேனி அற்புதமாக உள்ளது.

மலையைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்கப் பெற்று பௌர்ணமி தோறும் கிரிவல வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கிராமம் முழுச் சுகாதாரத்திட்டத்தை நன்கு நிறைவேற்றி ஜனாதிபதி நிர்மல் புரஸ்கரர் விருது மற்றும் “நமது கிராமத் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் பரிசையும், சிறு சேமிப்பு சுய உதவிக்குழு திட்டத்தில் மாவட்டமுதல் பரிசையும் வென்றுள்ளது.

ஞானாச்ரமம் சார்பாக பள்ளி மாணவ மாணவியர்க்கு கணினி (கம்ப்யூட்டர்) வழங்கப் பெற்றுள்ளது.

இலவசப் பொது மருத்துவ முகாம் மற்றும் கண்மருத்துவ முகாமும் நடைபெற்றுள்ளது.

ஞானமலைக்கு வந்து ஞானபண்டிதனை வழிபடுவோர் கல்வி, அறிவு, ஞானம், முதலியன பெற்று அங்கப்பிரதட்சணம் செய்து தேக ஆரோக்யத்துடன் வாழ வரம் அருள்கிறது  ஞானமலை ..!

 அரக்கோணம் - காட்பாடி ரயில் பாதையில் சோளிங்கர் (பாணாவரம்) ரயில் நிலையத்திலிருந்து பஸ், ஆட்டோ மூலம் ஐந்து கிலோமீட்டரில் சென்று அடையலாம்.

மங்கலம் ஊரில் ஞானமலை அலங்கார வளைவு வழிகாட்டும்.

18 comments:

  1. ஞானமலை பற்றிய தகவல்களும் விளக்கங்களும் அருமை. இதுவரை பார்த்ததில்லை.பார்க்கத்தூண்டுகிறது உங்கள் பதிவு.

    ReplyDelete
  2. ஞானமலை ஞானபண்டிதன் - தகவல்கள், படங்கள் அனைத்தும் சிறப்பு...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள், மற்றும் படங்கள்.

    ReplyDelete
  4. ஞானத்தின் விளைச்சல் கண்டு
    அவ்விளைச்ச்சலை நமக்காக
    அருளாய் அருளும்
    ஞானபண்டிதனின்
    தளவரலாறும் படங்களும்
    கண்கொள்ளாக் காட்சி சகோதரி...

    ReplyDelete
  5. நல்ல தகவல் . அருள்தரும் படங்கள்

    ReplyDelete
  6. ”ஞானமலை ஞான பண்டிதன்”

    அனைத்துப்படங்களும் அழகோ அழகு.

    படங்கள் 1, 4 மற்றும் 11 மிகவும் பிடித்துள்ளது.

    ஞான பண்டித சுவாமி ஞான வள்ளி + ஞான குஞ்சரி சமேதராய் என எழுதியுள்ளதன் அடியில் உள்ள படம் மயில் மேல் அமர்ந்த நிலையில் மிகவும் அற்புதமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. மாசிச்செவ்வாய்க்கிழமைக்கு ஏற்ற பதிவு.

    விளக்கங்கள் யாவும் வழக்கம் போல அருமை.


    >>>>

    ReplyDelete
  8. ”பிரம்மசாஸ்தா” பற்றிய கோலமும் விளக்கமும் அழகோ அழகு.

    ஞானகிரி சித்தர் பற்றி கொடுத்துள்ளது போனஸ் செய்திகள்.

    திருவடிப்பூக்கோயில், அங்கப்பிரதக்ஷணம் சடாரி வைப்பது போன்ற செய்திகளும் அருமை.

    வெப்பாலை மரக்காற்று + எலுமிச்சை மணம் கமழும் புல்வகைத்தைலம் என
    பதிவே மிகவும் மணம் கமழ்வதாக உள்ளது.

    >>>>>>

    ReplyDelete
  9. ஸ்ரீ முருகனைப்போன்ற அழகான பதிவு.

    அற்புதமான படங்கள்.

    அபூர்வமான விளக்கங்கள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    oooooo

    ReplyDelete
  10. அருள் சுரக்கும் அழகன் உறையும் ஞானமலை வரலாறும் கண்ணுக்கும் மனதிற்கும் குளிர்மையான படங்களும் பதிவும் சிறப்பாக இருக்கிறது.

    முருகனருள் அனைவருக்கும் கிட்ட வேண்டுகிறேன்...

    ReplyDelete
  11. மிக்க நன்றி மிக்க நன்றி இந்த தலத்திற்கு எப்படி செல்லலாம் என்று வழியோடு என் இறை ஞானபண்டிதன் பற்றிய படம், விவரதிற்கு நன்றி

    ReplyDelete
  12. ஞானமலை முருகனை தரிசிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள் உங்கள் பதிவால்.

    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  13. ஞான மலை பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்.

    திருத்தணிகை அருகில் இது இருப்பது செய்தி எனக்கு.

    நல்ல உபயோகமான பதிவு.
    நன்றி பகிர்ந்ததற்கு.

    ReplyDelete
  14. தகவல்களும், படங்களும் அருமை.

    ReplyDelete
  15. ஞானமலை முருகனைப்பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை.
    அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு.

    ReplyDelete
  16. அழகிய படங்கள்;சிறப்பான தகவல்கள்

    ReplyDelete
  17. வண்டுரும் மலரையும் வடிவேலனையும் சிறப்பாக காட்டியமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ஞான மலைக்கு எம்மை அழைத்து சென்றதற்கு என் நன்றியும்
    வாழ்த்துக்களும்.

    ReplyDelete