



நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே.
சுந்தரர் தேவாரம் – ஊர்த்தொகை
கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமும் கூந்தலின் குலைவாரி
ஓடுநீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடிலா மணியைத் தொழல் அல்லது கெழு முதல் அறியோமே
என்று நெக்குருகிப் பாடுகிறார் ஞானசம்பந்தப் பெருமான்.மாந்துறை பெருமானைத் துதிக்க,எமபயம்இல்லையென்றும் சொல்கிறார்-
திருஞானசம்பந்தர் போற்றி பதிகம் பாடித் துதிக்கும் மாந்துறை, 'காவிரியின் வட கரையில் இருப்பதால் வடகரை மாந்துறை' எனப்படுகிறது.
இலவம், குங்குமப்பூ, ஈச்சம், சுரபுன்னை, இளமருது, இலவங்கம், கோங்கு, செண்பகம், குருந்தை, பாதிரி, குரவம், நறவ மல்லிகை (தேன் சிந்தும் மல்லிகை), முல்லை ஆகியவற்றுடன், மௌவல் (ஒரு வகை காட்டு மல்லிகை) மலர்கள் போன்ற . வித வித மலர்களைக் கொண்டு வரும் காவிரியின் பெருமைகளைப் புகழ்ந்துள்ளார்.
தேவர்கள் தொழும் மாந்துறை ஈசனை சிவாகம முறைப்படி தூப, தீபங்கள் மற்றும் தோத்திரப் பாடல்களால் மலர் தூவி, வணங்கி வழிபடுவோர், தவப்பயனதனைப் பெறுவார்கள் என்றும், எக்காலமும் தொழும் அடியவர்களின் உள்ளத்துள் எழுந்து, ஆனந்தம் தருவார் என்றும் போற்றுகின்றார்.
மாமரங்கள் நிறைந்திருந்ததால் ஆம்ரவன க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட தலம், திருமாந்துறை. தற்போது, மாந்துறை என்று வழங்கப்படுகிறது..!
ஆம்ரவனம், பிரம்மானந்தபுரம், அஹாபஹாரி, மிருகண்டீஸ்வரபுரம் என்றெல்லாம் போற்றப்பட்ட தலம்.
அருள்மிகு ஆம்ரவனேஸ்வரரான மாமரநாதர். அழகான சுயம்புநாதர். ஆதிரத்னேஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர், மிருகண்டீசர் என்றெல்லாம் வணங்கப்படுகிறார்
மிருகண்டு முனிவர் புத்திரன் வேண்டி இத்தலத்தில் தவமியற்றியுள்ளார்.
மிருகண்டு முனிவர் வழிபடும் ஓவியக் காட்சிகள் காணலாம்..!
மிருகண்டு வழிபட்டதால், மிருகண்டீஸ்வரம்; துன்பம் போக்கும் தலம் என்பதால் அகாபஹாரி என்றும் வழங்குவர்.
பொய் சொன்னதால் தண்டனைக்குள்ளான பிரம்மா, தனது பாவம் தீர வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. எனவே, பிரம்மதீர்த்தபுரம், பிரம்மானந்தபுரம் என்றும் பெயர்கள் உள்ளன.
இந்திரனுக்கு கௌதமரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்
அவன் செய்த பூஜையால் நிவர்த்தியானது.
வேதமித்திரன் என்பவரது தந்தையின் அஸ்தி, தூய ரத்தினமானது இங்கே
தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பாவத்துக்காகச் சூரியன் ஒளி மங்கியது தனது ஒளியைத் திரும்பப் பெறுவதற்காகக் கதிரவன் மாந்துறையிலும் பூஜை செய்ததான
கணவனான சூரியனின் வெப்பத்தைத் தாங்குவதற்காக
சஞ்சனாதேவி பூசித்த தலம்;
ஈசனைத் துதித்த சந்திரன் இரவுக்கு அதிபதியாக பதவி பெற்றான்.
இரவியும் மதியமும்- சூரியனும் சந்திரனும். இந்திரனும் பார் மன்னர் பணிந்தேத்த- உலக மன்னர்கள் பலரும் பணிந்தார்கள்
பலவகை அழுக்குகளும் சேருவதால் மாசுபட்டுப் போகும் தனது மேனியைத் தூய்மைப்படுத்திக் கொள்ள சமுத்திரராஜன் வணங்கிய தலம்...
தாயை இழந்த மான் குட்டிகளுக்காக ஈஸ்வரனும், அம்பிகையும் தந்தை மான், தாய்மானாக உருவெடுத்து, அந்த மான் குட்டிகளைக் காப்பாற்றியுள்ளனர்.
கஹோல ரிஷியின் மகன் மருதாந்தன் அடைந்த தோஷம்
மாந்துறை திருத்தலத்தில் நீங்கியதாக தலபுராணம் கூறுகிறது.
அந்த தோஷத்தால் அவனது கழுத்தில் ஏற்பட்டு இருந்த இரும்பு குண்டுகள் ரத்தினக் கற்களாக மாறின. இதை முனிவர்கள் அவனிடம் கூறி அவன் பாபவிமோசனம் அடைந்து விட்டதை உணர்த்தினர்.
மருதாந்தனும் ஆம்ரவனேஸ்வரரைத் துதித்து போற்றினான்.
பின்னர் மாந்துறைக்கு அடுத்துள்ள அகம்ஹர எனப்படும் ஆங்கரை எனும் ஊரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.
அந்த லிங்கமூர்த்தி மருதாந்த நாதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
வயல்களும் தென்னந்தோப்புகளும் சூழ்ந்த இயற்கை எழில்
நிறைந்த ஊரே மாந்துறை.
இந்த ஊருக்கு அருகே ஆங்கரை, திருத்தவத்துறை, அன்பிலாந்துறை
ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.
சாலையை ஒட்டி பூஞ்சோலைகளுக்கும், மாஞ்சோலைகளுக்கும்
இடையே ஆலயம் அழகுற அமைந்துள்ளது.
அற்புதமான இயற்கை எழிலின் ரம்யமான சூழலில் இறைவனை
தரிசிப்பதால், அருளோடு மன அமைதியும் கிடைக்கிறது.
வர்ணங்களின் ஜொலிப்பில் நம் கண்கள் மலர, அழகிய மூன்று நிலை
கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் ஆலயம் அற்புதமாக அமையப் பெற்றுள்ளது.
மகாமண்டபம் மிகவும் கலைநயம் மிக்க தூண்களைக் கொண்டு விளங்குகிறது. அர்த்த மண்டபம் மற்றும் ஈசனது கருவறை.
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற கோல நாயகியான அம்பாளுக்கு, அழகம்மை என்றும் பாலாம்பிகை என்றும் திருநாமங்கள். பாலாம்பாள் என்பதே வாலாம்பிகை என்றும் வழங்கப்படுகிறது.
மேலிரு கரங்களில் தாமரை புஷ்பங்களோடும், கீழிரு கரங்கள் அபய-வரதமாகக் கொண்டு பாலாம்பிகை என்கிற திருநாமத்தோடு நின்ற வண்ணம் எழில் சிந்தும் திருக்கோலத்தில் இறைவி தரிசனம் அளிக்கிறாள்.
அம்பிகையின் வாகனமாக நந்திதேவர் வீற்றிருப்பதால்
இந்த ஆலயத்தின் பழைமை புரிகிறது.
கருவறையில் ஆம்ரவனேஸ்வரர் கிழக்கு முகமாக
சுமார் ஐந்தடி உயரத்தில் வீற்றருள்கிறார்.
மூலவர் சந்நிதி சுற்றில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா மற்றும் துர்கை. தெற்குப் பகுதியில் ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
மகாமண்டப கிழக்கு வாயிலில் மான்குட்டிக்கு தாயாக
அம்மையப்பர் விளங்கிய நிகழ்வுகள் சுதைச்
சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.
உயரிய மதில்கள். ஆலயத்தினுள் நீண்ட மண்டப வரிசை. வலப்பக்கம் விநாயகர் சந்நதியும் தல விருட்சமான மாமரமும் அமைந்துள்ளன. வில்வமரமும் உடன் உள்ளது.
வள்ளி- தெய்வானையுடன் மயிலேறும் முருகன்.
அடுத்து தண்டபாணி. தொடர்ந்து கஜலட்சுமி சந்நிதி.
பைரவர் சந்நிதியும் உண்டு.
நவகிரக சந்நதியுள் சூரியன் மேற்கு நோக்கி இருக்க, அவரைப் பார்த்தபடி மற்றைய கிரகங்கள் உள்ளது, வித்தியாசமான அமைப்பாகும்.
ஹர ஹர என்று சொல்லும் பணியை செய்யும் சம்பந்தன் எனத் தன்னை சுட்டிக் காட்டிக் கொள்ளும் ஆளுடையப்பிள்ளையார் இடைவிடாது அரன் நாமத்தைச் சொல்லி அவனருளை பரிபூரணமாய் அடைந்திட வழி காட்டுகின்றார்.
வள்ளல் ராமலிங்கரும் தனது அருட்பாவில் இப்பதியை ஆராதித்துள்ளார். அருணகிரிநாதர் இத்தல முருகனைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.
தல தீர்த்தமாக காயத்ரி நதி என அழைக்கப்படும் கொள்ளிட நதி, ஆலயத்தின் வலப்புறம் ஓடுகிறது.
இந்நதியில் நீராடி அங்காரக சதுர்த்தியன்று (செவ்வாய்க் கிழமையன்று வரும் சதுர்த்தி) ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டால் அனைத்துவித ரோகங்களும் நீங்கும்.
மனதில் தோன்றும் நியாயமான ஆசைகள் நிறைவேறும். துன்பங்கள்
அகன்று இன்பங்கள் பெருகும்.
ஆலயத்தை சோழமன்னன் சுவேதகேது கட்டியுள்ளார்.
திருபுவனச் சக்ரவர்த்தி மற்றும் ராஜராஜதேவர் ஆகியோரது
கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
ஆலயத்தில் தினமும் மூன்று கால பூஜைகள் நடக்கின்றன. காலை 6 முதல் 11 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், சங்கரஜெயந்தி, மகாசிவராத்திரி போன்ற விழாக்கள் ஆலயத்தில் விசேஷமாக நடத்தப்படுகின்றன.
பங்குனி மாதம் 1, 2, 3 தேதிகளில் காலையில் சூரிய கதிர்கள் ஈசன் மீது படர்கிறது. அந்த சமயம் இங்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
திருச்சி-லால்குடி பேருந்து சாலையில் திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது மாந்துறை. சாலையை ஒட்டியே ஆலயம் அமைந்துள்ளது.
சுயம்பு மூர்த்தமாக மாமரத்தடியில் வெளிப்பட்ட மாந்துறையானை 'மருத்துகள்' எனப்படும் தவசீலர்களும் (இவர்களே மருதவானவர் என்றும் அழைக்கப்பட்டனர்.
வேதங்களின்படி, பூலோக வாழ்க்கையை முறையாக வாழ்ந்து, அதனால் வானுலக வாழ்க்கையைப் பெற்றவர்கள் மருத்துகள் ஆவர்),
கண்வ மகரிஷியும் வழிபட்ட தாக செய்திகள் உண்டு..! சுவாமி சந்நிதியிலேயே உற்சவ மூர்த்தங்களும் உள்ளன.
காவிரி நதியையே தீர்த்தமாகக் கொண்ட மாந்துறைக்குச் சோழ மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். ராஜராஜ சோழ மன்னர் காலத்துக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில், சிறப்பான- சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
மக்கள் வரி கட்ட முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். வரி தர முடியாத நிலையில் இருந்தவர்கள், நகரை விட்டு வெளியேறத் தலைப்பட்டுள்ளனர். இதையறிந்த மன்னர், உடனடியாக வரியைத் தள்ளுபடி செய்து, அவர்களை மீண்டும் நகருக்குள் வரும்படிக்கு வேண்டியுள்ளார்.
மக்களின் பெருமிதமும் மன்னரின் பெருமையும் ஒருசேர விளங்கும் இந்தத் தகவலுடன், நந்தவனப் பராமரிப்பு நிலம் விடப்பட்ட செய்திகளும், பல்வேறு திருப்பணி நிவந்தங்களும் காணப்படுகின்றன.
எளிமையாகவும் எழிலார்ந்தும் காட்சி தரும் மாந்துறை திருக்கோயிலை வணங்கி வளமான வாழ்வு பெறலாம்..!
கோயிலுக்கு வெளியில் நந்தி மண்டபம், பலி பீடம். நந்தி மண்டபத்துக்கு முன்பாக, தரையில் காணப்படும் இரண்டு நந்தி சிலைகள். மண்ணுக்குள் புதைந்ததுபோல் கிடந்தாலும், சோழர் சிற்பக் கலைக்கு அழகான எடுத்துக்காட்டுகள்; கண்களோடு கருத்தையும் கவரும் கம்பீரங்கள்.
நந்தி மண்டபத்துக்குச் சற்று வடக்காக, ஊரின் காவல் தெய்வங்கள். பிரதான காவல் தெய்வம் கருப்பசாமி. பக்கத்திலேயே பண்டிதர்சாமி மற்றும் மதுரை வீரன். கருப்பசாமிக்குச் சிறப்பு பூஜைகள் உண்டு.
இங்கிருக்கும் ஆல மரத்து மண்ணை, பிரசாதமாகத் தருவது வழக்கம்
சிவன் கோயில் திருநீறு- குங்குமத்துடன்,
இந்த மண்ணையும் சிறிய பொட்டலத்தில் தருகிறார்கள்.
தொடர்புடைய பதிவு
ஆதரவளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்


