Tuesday, August 20, 2013

திருவோணம் திருவிழா








நரசிம்மரால் வதைக்கப்பட்ட இரண்யன் அசுர குணம் கொண்டவனாக இருந்தாலும், அவன் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவின் பக்தனாகத் திகழ்ந்தான். அந்த பிரகலாதனின் வம்சத்தில் வந்த  மகாபலிச் சக்கரவர்த்தி.
 மலைநாட்டினை நீதி வழுவாது நேர்மையுடன் ஆட்சிபுரிந்து வந்தான்.

மக்கள் "மாவேலி' என சிறப்புப் பெயரிட்டு அழைத்துப் போற்றினர். மிக நல்லவனாகத் திகழ்ந்தாலும் பெயரும் புகழும் பெற்றதால் ஆணவம்  தலை தூக்கி தேவலோகத்தையே வெற்றிகொண்டான்.
மகாபலி மன்னன் முற்பிறவியில் எலியாகப் பிறந்து வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் கருவறைக்குள் உணவு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தது. சுவாமி முன் சரவிளக்கு விளக்கில்  இடப்பட்டிருந்த நெய் மணம் எலியைக் கவர்ந்தது.

விளக்கு நோக்கி மேலே பாய்ந்து ஏறிய வேளையில் விளக்கின் திரி அணையும் தறுவாயில் இருந்தது. எலி, விளக்கில் உறைந்திருந்த நெய்யினை உண்டபோது, தற்செயலாக திரி தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. அணையவிருந்த ஆலய விளக்கைத் தூண்டி எரியச் செய்ததால் அந்த எலி மகாபுண்ணியம் பெற்றது.

அதன் விளைவாக மறுபிறவியில் மலை நாட்டின் சக்கரவர்த்தி யாக- மகாபலியாக அசுர குலத்தில் பிறந்தது.

பிரகலாதன் வம்சத்தில் பிறந்ததால் தெய்வீகப்பற்று இருந்தாலும்,
பிரகலாதனின் தந்தை இரணியனின் அசுர குணமும்
சிறிதளவு இருந்ததால் மகாபலிக்கு கர்வமும் உண்டானது.

மகாபலியின் அசுரகுணம் மேலோங்கியிருந்ததால், தேவலோகவாசிகள் பயத்துடன் மறைந்தே வசிக்கும் நிலையை மாற்ற எண்ணிய அதிதி தேவி, தன் கணவர் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டாள்.

விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வணங்கி அதிதி தவம் மேற்கொள்ள, அவள் தவத்திற்கு மகிழ்ந்து காட்சி தந்த மகா விஷ்ணு,விடம்  மகனாகப் பிறந்து, மூவுலகத்தில் வாழும் தேவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்'' என்று வேண்டினாள்; 

மகாவிஷ்ணு அருளியபடி  ஆவணி மாத சுக்லபட்ச துவாதசி திதியில், திருவோணம் கூடிய சுபயோக சுபதினத்தில் அதிதி- காசிபமுனி தம்பதிக்கு வாமனராக அவதரித்தார் மகாவிஷ்ணு.




மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை அறிந்த தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் மகிழ்ந்தனர். ஒவ்வொருவரும் ஒரு பரிசை அளித்து கௌரவித்தனர்.
 மகாபலிச் சக்கரவர்த்தி நர்மதைக் கரையில் அசுவமேத யாகம் செய்து கொண்டிருந்தான். யாகம் முடிந்ததும் அனைவருக்கும் தானம் கொடுத்து வாழ்த்துகள் பெற்றுக் கொண்டிருந்தான்.

மகாபலியின் யாகத்தாலும், தான தர்மத் தாலும் அவனது பலம் வலுப்படும் என்பதை அறிந்த வாமனர், மகாபலி தானம் கொடுக்கும் இடம் நோக்கி வந்தார்.
வாமனரை வர வேற்ற மகாபலி தன் மனைவி விந்தியாவலி, மகள் ரத்னமாலாவுடன் வாமனருக்கு பாத பூஜை செய்தார். 

 மகாபலியின் மகள் ரத்னமாலா, "இந்தச் சிறுவன் எத்தனை அழகு! இவனுக்குத் தாயாகி பாலூட்டும் பாக்கியம், எனக்கு அடுத்த பிறவியிலாவது கிட்ட வேண்டும்' என்று மனதிற்குள் நினைத்தாள்.

மகாபலியோ, "இந்தச் சிறுவன் வரவால் நம் நாடு மேன்மேலும் சிறப்பு பெறவேண்டும்' என்று நினைத்தான். 

அவர்களின் மனப்போக்கை அறிந்த வாமனர், "நினைத்தது நிறைவேறும்!' என்று அருளினார்.

 "நான் நினைத்ததைத்தான் வாமனர் கூறுகிறார்' என்று இருவரும் எண்ணி மகிழ்ந்தார்கள்.

பாதபூஜை முடிந்ததும் மகாபலி,  மூன்றடி நிலம்- அதுவும் என் காலடியில் அளந்து கொடுத்தால் போதும்'' என்றார் வாமனர்.

""அவ்வாறே தருகிறேன்'' என்று மகாபலி கூற, அருகிலிருந்த அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் மகா பலியிடம் ரகசியமாக, ""மகாபலி, வந்திருப்பவன் சாதாரண சிறுவன் அல்ல. அவனுக்குத் தானம் தராதே. அவன் மூன்றடி மண் கேட்பது உன்னை அழிக்கத்தான்'' என்று கூறினார்.

""வாக்குக் கொடுத்து விட்டேன். கொடுத்த வாக்கை மீற மாட்டான் மகாபலி'' என்று நீர் வார்க்க கமண்டலத்தை எடுத்தான். அப்போது சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி கமண்டலத்தின் வாயை நீர் வராமல் அடைத்தார்.
வாமனர், தர்ப்பையை எடுத்துக் குத்தவே, அது வண்டின் ஒரு கண்ணைப் பழுதாக்கிவிட்டது.

வலி பொறுக்கமுடியாமல் கமண்டலத்திலிருந்து வெளியேறிப் பறந்தார் சுக்கிராச்சாரியார். 

அதன்பின் தாரை வார்த்துக் கொடுத்தான் மகாபலி. 

மறுகணம் திரிவிக்கிரமனாக விண்ணுக்கும் மண்ணுக்கும் வளர்ந்து நின்றார் வாமனர். வானையும் பூமியையும் இரண்டடியால் அளந்து, ""மூன்றாவது அடிக்கு எங்கே இடம் மகாபலி?'' என்று கேட்க, அவரை வணங்கிய மகாபலி, ""இதோ என் தலை. மூன்றாவது அடியாக அளந்து ஆட்கொள்ளுங்கள்'' என்று திரிவிக்கிரமன் காலில் பணிந்தான்.

உடனே பகவான், மகாபலியின் தலையில் வலது காலை வைத்து, ""ஏழு சிரஞ்சீவிகளுள் நீயும் ஒருவனாக இடம் பெறுவாய். நான் உன்னை என்றும் பாதுகாப்பேன்'' என்றார். 
மகாவிஷ்ணுவின் பாதம் பட்டதும் மகாபலியின் ஆணவம் முழுவதுமாக அழிந்தது. அந்தச் சமயத்தில், நான் பாதாளத்தில் அழுத் தப்படும் இந்த நாள் போற்றப்பட வேண்டும். இதே நாளில் நான் மீண்டும் என் நாட்டு மக்களைக் காண வரவேண்டும்'' என்று பகவானிடம் மகாபலி வாங்கிய வரத்தின்படி ஆவணி மாத திருவோண நாளில் மக்களைக் காண மலை நாட்டிற்கு மகாபலி வருவதாக நம்பிக்கை..!

ஆகவே, மலை நாடான கேரளாவில் ஓணம் பண்டிகையாகக்
கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாத அஸ்த நட்சத்திரம் துவங்கி பத்து நாட்கள் விழா கொண்டாடப் பட்டாலும், "ஆவணி திருவோணம், அதற்கு முதல் நாளான தலை ஓணம், மறுநாள் வரும் ஒன்றாம்  ஓணம் ஆகிய மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக- தெருவெங்கும் மலர் மணம் மணக்க விழா கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகையின்போது இடப்படும் "அத்தப்பூ' கோலம் மிகவும் பிரசித்தம். சாதாரண மலர்களுடன், ஆவணியில் மட்டும் மலரும் விசேஷ பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இந்தக் கோலம் அமையும்.

மகாவிஷ்ணு குள்ள உருவில் வாமனராக அவதாரம் எடுத்து, அதேசமயம் நெடிதுயர்ந்த திரிவிக்கிரம திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததால்- அவதாரத்திற்குள் அவதாரமாகத் திகழ்வதால், ஆவணி மாதத் திருவோணம் மிகவும் போற்றப்படுகிறது.
இந்தப் பண்டிகையின்போது பல்வகைப் பாயாசத்துடன் விருந்து படைப்பார்கள். இதை மலையாளத்தில் "ஓணசத்ய' என்பர். புத்தாடை அணிவது பண்டிகையின் சிறப்பு. ஓணம் பண்டிகைக்கென்றே சிறப்பாக புத்தாடை அணிவர். இப்பண்டிகையையொட்டி கேரளாவில் படகுப் போட்டிகள் நடைபெறும்.
கோவில்களில் பகவானுக்கு மஞ்சள் துண்டு அணிவித்து வழிபடுவது வழக்கம்.

பத்மநாபபுரம் பத்மநாப சுவாமிக்கு ஓணவில் சாற்றி வழிபடுவர். சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவில் ஓணத்துக்காக ஐந்து நாட்கள் திறந்திருக்கும்.

குருவாயூரில் குழந்தை கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பால் பாயாசம் சமர்ப்பித்து வழிபாடு நடைபெறும்.

அன்று குருவாயூர் உன்னிகிருஷ் ணரை தரிசிப்பது மிகவும் சிறப்பு. 

மகாவிஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம் என்பதால், ஆவணி திருவோணம் மிகவும் போற்றப்படுகிறது. அன்று திருமால் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபடும்போது, அவர் பாதங்களை தரிசித்தால் பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும்;




9 comments:

  1. திருவோணத் திருவிழா அறிந்தேன். நன்றி

    ReplyDelete
  2. வாமன அவதார விளக்கமும்...
    திருவோணம் பற்றிய விளக்கமும் அருமை.
    பகிர்வுக்கு நன்றிகள் பல சகோதரி...

    ReplyDelete
  3. சிறப்பான படங்கள் + தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்... மீண்டும் வருவேன்...

    ReplyDelete
  4. திரு ஓணம் குறித்த தகவல்களும் படங்களும் அருமை!..

    ReplyDelete
  5. திருவோண நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு இப்பதிவு ஓர் புதிய சக்தியை அளித்துள்ளது.

    ReplyDelete
  6. பார்த்தேன், படித்தேன், ரஸித்தேன்.

    வாமனாவதாரப்படங்களும், விளக்கங்களும் அருமை.

    எங்கிருந்தாலும் வாழ்க !

    ReplyDelete

  7. இந்த வருடம் செப்டம்பர் மாதம் 16-ம் நாள் திருவோணம் கொண்டாடப் படும். பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. ஓணம் பண்டிகையின் சிறப்பை பற்றி அறிந்துக் கொண்டேன்,மிக்க நன்றிம்மா!!

    ReplyDelete
  9. ஆவணி மாத திருவிழாவை கண்டு களித்த உணர்வு.
    படங்களும், செய்திகளும் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete