Thursday, March 6, 2014

ஞானமூர்த்தி ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்





“ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் 
ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே“

கல்வி செல்வத்தை அள்ளி அள்ளி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்
ஸ்தோத்திரம் : தூய மெய்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு ஆகியவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்ரீவரை வணங்குகிறேன் எனும் பொருளுடையது..

ஹயக்ரீவர் காயத்திரி :

‘ஓம் தத் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி 
தந்நோ ஹஸௌ ப்ரஸோதயாத்‘

குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவமான ஹயக்ரீவரை, விஷ்ணுவின் வடிவமாக - கல்வி கடவுளாகவும் வணங்குகின்றோம்..

 மது, கைடபன் எனும் அசுரர்கள், படைக்கும் கடவுளான பிரம்மா தூங்கி கொண்டிருந்தபோது வேதங்களை திருடிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் பாதாள உலகத்தில் மறைத்து வைத்தனர். 
தூங்கி எழுந்தபோது வேதங்கள் இல்லாததை கண்டு பிரம்மா, திகைத்து போனார்.  பாதாள உலகத்திற்குச் சென்று அதனை மீட்டுத் தரும்படி காக்கும் கடவுளான விஷ்ணுவிடம் வேண்டினார்.
  படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்ட மதுவும், கைடபனும் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் கடும் போர் புரிந்தார். 

இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. 

அசுரர்களுடன் போரிட்டு அதில் வெற்றியும் கண்டார். பின்னர் வேதங்களை மீட்டு, நான்முக கடவுளான பிரம்மனிடம் தந்தார். 
 இந்த அவதாரம் தசாவதாரத்திற்குள் வருவதில்லை.
லட்சுமி ஹயக்ரீவர் : மது, கைடபன் அசுரர்களை அழித்த பின்னும் ஹயக்ரீவருக்கு உக்கிரம் தணியாததால் லட்சுமி தேவியை அவர் மடியில் அமர வைத்தார்.  இத்திருவுருவத்திற்கு லட்சுமி ஹயக்ரீவர் என்று பெயர். 
லட்சுமிக்கு கல்வி கருவாக இருந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனிருப்பதனால் செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்ரீவர் வணங்கப்படுகிறார்.

கல்விக்கு கண்ணாக இருந்து அருள் பாலிக்கும் கோயில்களுள் முதன்மையானது கடலூர் திருவந்திபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள் கோயில். 

கடலூர் அருகே அமைந்துள்ள திருவகீந்திரபுரம் (தற்போது திருவந்திபுரம் என்று அழைக்கப்படுகிறது)  திவ்ய தேசங்கள் 108ல் ஒன்றாகும். 

தமிழகத்தில் நடுநாட்டில் அமைந்துள்ள திருப்பதிகள்  இரண்டாகும். 
அதில் ஒன்று திருவந்திபுரம்.
இத்திருக்கோயிலின் பக்கத்து மலை மீது அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயில். திருவந்திபுரம் சன்னதி வளாகத்தில் இருந்து 74 படிகளை ஏறி சென்றால் ஹயக்ரீவரின் திவ்ய தரிசனம் கிட்டுகிறது. 
இந்த படிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15ம் நாள் படிபூஜை நடத்தப்படுகிறது. 

இந்த பரிமுகன் (ஹயக்ரீவர்) கல்வியும், ஞானமும் அருளவல்லவர். தேர்வுக்கு ஆயத்தமாகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் ஐஏஎஸ் போன்ற தேர்வு எழுதுபவர்களும் இவரது ஆசி பெற்று சென்று வெற்றி வாகை சூடுகிறார்கள். 
பிறவியிலேயோ அல்லது இடைப்பட்ட ஏதேனும் காரணத்தாலோ பேச்சிழந்த குழந்தைகள் இவரது சன்னதியில் கால் பதித்தால் உடனடி நிவாரணம் கிட்டும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி உலகளவில் இருந்தும் ஹயக்ரீவர் சன்னதிக்கு கல்வி அருள் வேண்டி மாணவ செல்வங்கள் வருகின்றனர். 
தேன், ஏலக்காய் மாலையுடன் நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற எழுத்து உபகரணங்கள் வைத்து வழிபடுவது சிறப்பு. 
சரஸ்வதி தேவிக்கு குருவாக சிறப்பு பெற்றவர். 

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி விழாவின் போது சரஸ்வதி பூஜையன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஹயக்ரீவர் சன்னதியில் கல்வியின் துவக்கத்தை துவங்குவது வழக்கம்.
Sri Lakshmi Hayagreeva Homam 
ஞானம், ஆனந்தம் இவற்றின் வடிவானவரும், இக்குணங்கள் தன்னிடம் எல்லையில்லாமல் இருக்கப்பெற்றவரும், சிறிதும் மாசற்ற ஸ்படிக மணிபோல் தூய வெண்மை நிற திருமேனி உடையவரும், எல்லா கலைகளுக்கும் உறைவிடமாகவும், அவற்றை அனைவருக்கும் அருளும், தெய்வமாக நிற்பவருமான அருள்மிகு ஹயக்ரீவரை  வழிபடுவோம்.
பெருமானின் அற்புதங்கள்: ராமாயணத்தில் சஞ்சீவி மலையை அனுமன் இமயத்திலிருந்து இலங்கைக்கு எடுத்துச்செல்லும் போது அவரது வாயு வேக பயணத்தினால் சஞ்சீவி மலையின் ஒரு பகுதி சரிந்து திருவந்திபுரத்தில் விழுந்தது. 

இம்மலையே திருவந்திபுரம் திருக்கோயில் எதிரில் ஔஷதமலை என்னும்  பெயரோடு விளங்குகிறது. இப்புனிதமான ஔஷத மலையின் மீது ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீதேசிகருக்கு காட்சியளித்தார்.

வேதங்களை மீட்டு பிரமனுக்கு உபதேசித்ததால் ஞானமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். 
பிரம்ம மகரிஷி தவம் செய்து இறைவனை தரிசித்த தலை சிறந்த தவ பூமியாகும். 

தியானத்திற்கு உகந்த இடமாகும். 

அருள்மிகு தேவநாதனை திருப்பதி சீனுவாச மூர்த்தியாகவே வழிபடுவது வழக்கம். 

திருப்பதி செல்ல இயலாத பக்தர்கள் தம் வேண்டுகோள்களை இவரிடமே செலுத்திக்கொள்ளலாம்.
கடலூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவந்திபுரம். கடலூர் வரை ரயில் மற்றும் பேருந்து வசதியுள்ளது. பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பண்ருட்டி சாலை வழியாக பேருந்து வாகனங்களில் செல்லலாம்.

புதுவை ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்: 

புதுவை ஸ்ரீராமகிருஷ்ணா நகரில் எழுந்தருளிய ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்  பெருமானை வணங்கினால் மாணவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து அருள்பாலிக்கிறார். 
இவரை நினைத்தாலும், பூஜித்தாலும் கைங்கர்யம் செய்தாலும் அதன் பலன் நம் குழந்தைகளை சேரும். 

பரிமுகன் என பக்தியுடன் பக்தர்களால் ஆராதிக்கப்படும் ஹயக்ரீவர், சதுர்முக பிரம்மாவுக்கு வேதங்களை உபதேசித்து அனைத்து உலகங்களையும் படைக்கும் சக்தியையும் தந்தருளிய பிரபு. 
அரங்கனிடம் ஈடிணையற்ற பக்தி கொண்டவர் திருமங்கையாழ்வார், 

சக்தியும் கருணையும் பெருமையும் பொருந்திய லட்சுமி ஹயக்ரீவரை குழந்தைகளுடன் வந்து வணங்கினால் கல்வி செல்வத்தை அள்ளி அள்ளி தர காத்திருக்கிறார்.
“முன் இவ்வுலகம் ஏழும் இருள் மண்டியுண்ண
முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளையெல்லாம்
அருளிய என் பரமன் காண்மின்”

பெருமானை என போற்றி பாடியுள்ளார்.

18 comments:

  1. ஹயக்ரீவர் அருமை அறிந்தேன்

    ReplyDelete
  2. கடலூர் திருவந்திபுரம் கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி அம்மா... படங்கள் அனைத்தும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. குரு வாரமாகிய வியாழன்று - ஸ்ரீ ஹயக்ரீவர் தரிசனம் -
    மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது.

    ReplyDelete
  4. பாம்பனை மேல் துயில் கொண்டு,

    அரக்கர்களை அழிக்க,

    விழித்தெழுந்த

    செங்கண் மாலவா!

    மது கைடபர்களை வதம் செய்த

    மதுசூதனா !

    அழியாக் கல்வியும்,

    நிலை பெற்ற செல்வமும் அருளும்

    ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவா !

    இன்று நின் பொற்பாதம்

    கண்டேன் !

    வீடுற்றேன்!

    மடலிட்ட மாதரசி

    இராஜராஜேஸ்வரி

    வாழ்க வாழ்கவே !

    ReplyDelete
  5. மிக சரியான நேரத்தில்
    மிக மிக அற்புதமானப் பதிவு
    திரூ உருவப்படங்களுடன் பதிவு அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வியாழனுக்கேற்ற பதிவு. அழகிய படங்கள்.

    ReplyDelete
  7. ஞானமூர்த்திஸ்ரீ லக்ஷ்மி ஹயக்கிரீவர் என்ற தலைப்பில் இன்று தாங்கள் எழுதியுள்ள பதிவு, படித்துப் பொதுத்தேர்வில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

    அந்தக்குழந்தைகள் இதைப்படிக்க நேரம் இல்லாவிட்டாலும், பெற்றோர்களாகவது படிக்கவும், பார்க்கவும், குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்லவும் வாய்ப்பாக இது அமையக்கூடும்.

    >>>>>

    ReplyDelete
  8. முதல் காணொளியும் அதில் வரும் ஹயக்கீரீவ மந்திரமும் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும் என்பதில் எள்ளளவும் எனக்குச் சந்தேகமே இல்லை.

    An error occurred, please try again later. Learn more

    என்று எனக்கு வந்தாலும், என்னைப்போல பொறுமையற்றவர்களுக்கு, அதே காயத்ரி மந்திரங்களை எழுத்திலும் கொண்டுவந்து விளக்கியுள்ள தங்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

    >>>>>

    ReplyDelete
  9. குதிரை முகக்கடவுளின் படங்களும், வரலாறும், கதைகளும் தங்கள் பாணியில் வழக்கம்போல மிகச்சிறப்பாகவே கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    ஸ்பெஷல் லக்ஷ்மி ஹயக்கிரீவ சாலிக்கிராமம்வேறு போனஸாகக் கொடுத்து மகிழ்வித்துள்ளீர்கள்.

    அச்சா ... பஹூத் அச்சா.

    >>>>>

    ReplyDelete
  10. நடுவில் காட்டியுள்ள வழவழப்பான பீங்கான் பொம்மை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    அதில் ஸ்வாமி மடியில் அழகாக அமர்ந்திருக்கும் என் அன்புக்குரிய அம்பாள் நழுவி [வழவழப்பான பொம்மையாகையால் வழுக்கி] வழுக்கி விழுந்துடாமல் இருக்கணுமே என என் மனம் படபடக்கிறது. ;)))))

    >>>>>

    ReplyDelete
  11. அழகான அற்புதமான அவசியமான காலத்திற்கேற்ற கச்சிதமான பதிவு.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். வாழ்க !

    oo oo oo

    ReplyDelete
  12. அருமையான ..படங்கள்.அற்புதமான தகவல்...நன்றி.

    ReplyDelete
  13. சிறப்பான பகிர்வு. திருவரங்க கோயிலிலும் வடக்கு கோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கம் ஹயக்ரீவர் சன்னிதி உள்ளது.

    ”ஞானந்த மயம்” ரோஷ்ணியின் பள்ளி ப்ரேயரில் குழந்தைகள் சொல்வதுண்டு.

    படங்களுடன் தகவல்களும் அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  14. ஹயக்ரீவர் கதை இன்று அறிந்து கொண்டேன். படங்களுடன் விவரங்களும் அருமை. நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  15. குதிரை முகக் கடவுள் பற்றி முதல்முறையாக அறிகிறேன். அசத்தலான படங்களுடன் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  16. ஹயக்ரீவர் கதையை தெரிந்து கொள்ள முடிந்ததற்கு நன்றி அம்மா. அப்படியென்றால் விஷ்ணுவின் அவதாரங்கள் பதினொன்றா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..

      கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..
      மஹா விஷ்ணுவின் 22 அவதாரங்களைப்பற்றி அறிய உதவும் பதிவு.. அபூர்வ அவதாரங்கள்..
      http://jaghamani.blogspot.com/2012/12/blog-post_4.html

      Delete
    2. என்னுடைய கேள்விக்கும் நீங்கள் ஓராண்டுக்கும் முன்பே பதிலை பதிவாக எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆச்சிரியமாக இருக்கிறது.

      உண்மையில் அந்த பதிவு - அபூர்வ பதிவு தான். நன்றி அம்மா.

      Delete