Thursday, March 13, 2014

சௌபாக்யம் அருளும் காரடையான் நோன்பு




 ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய 
சம்பத்தோ ப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு

மாசிக்கயிறு பாசி படியும்' என்று, பங்குனி முதல் நாளில் 
புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷம்..
மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிக்கும் வகையில். மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு
 காமாட்சி நோன்பு, சம்பத் கௌரி விரதம், சாவித்திரி விரதம் 
என்றும் அழைக்கப்படுகிறது..!
சத்தியவானின் மனைவி சாவித்திரி தன் கணவனை 
எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில்தான்
சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கல நாண் நிலைக்கவும்; தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருக்கிறார்கள்.

சாவித்திரி விரத பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும் 
(கலச பூஜை) வழி படுவார்கள். 
அம்மனுக்கு கார் அரிசியும் காராமணி யும் கலந்து செய்த 
அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். 
நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து 
கழுத்தில் கட்டிக் கொள்வார் கள். 
நெடுநாட்கள் பிள்ளைப் பேறு இல்லாமலிருந்த அசுபதி மன்னன், மகப்பேறு வேண்டி தான- தர்மங்கள் செய்ததன் பயனாக சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தும் கொண்ட பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சாவித்திரி என்று பெயரிட்டனர். 

அவளுக்கு எட்டு வயதாகும்போது அங்கு வந்த நாரதர், அவளது எதிர்காலத்தைப் பற்றி கூறிச் சென்றார்

தாய்- தந்தையரை தெய்வமாக மதிக்கும் சத்யவான் என்பவனை அவள் மணந்து கொள்வாள் என்றும்; சத்யவான் 21 ஆண்டுகள் வரைதான் வாழ்வான் என்றும் கூறியிருந்தார்.

சாவித்திரி சத்யவானையே மணந்து, அவனது வாழ்நாள் அதிகரிக்க பல விரதங்களையும் நோன்புகளையும் .கடைப்பிடித்தாள்..! 

சத்யவானும் சாவித்திரியும் வேற்று நாட்டு அரசனால் நாடு கடத்தப்பட்டு ஒரு கானகத்தில் வசித்து வந்தனர். 

நாரதர் கூறியிருந்தபடி சத்யவானின் இறுதிநாள் வந்தது. அன்று சாவித்திரி தடுத்தும் கேளாமல் அவன் விறகு சேகரிக்க காட்டுக்குப் புறப்பட்டான். சாவித்திரியும் உடன் சென்றாள். 
நண்பகல் வேளையில் சத்யவான் சாவித்திரியின் மடியில் தலைவைத்து படுத்திருந்தபோது, எமதர்ம ராஜன் அவன் உயிரைப் பறித்துச் சென்றான். சாவித்திரியின் கற்புத் திறத்தால் எமதர்மனின் உருவம் அவள் கண்களுக்குத் தெரிந்தது. அவள் தன் கணவனின் உடலைக் கீழே கிடத்தி விட்டு, எமனைப் பின்பற்றிச் சென்றாள்.
அவளது காலடி ஓசை கேட்டுத் திரும்பிய எமனின் பாதங்களில் விழுந்து சாவித்திரி வணங்கினாள். 

அவளை "தீர்க்க சுமங்கலி பவ' என்று எமன் வாழ்த்தினான். 
சாவித்திரி எமனை வேண்டி பல வரங்களைப் பெற்றாள். 

அதில் வம்சவிருத்தி அருளும்படி வேண்டிய வரம் எமனைத் 
திகைக்க வைத்தது. சாதுர்யமாக தன் கணவனின் உயிரை 
அவள் மீட்டதை அறிந்தான் எமன்.
சாவித்திரியின் பதிபக்தியை மெச்சிய எமன், ""இதுவரை என்னை யாரும் பார்த்தது இல்லை. உன் கற்பின் மகிமையால் நீ வெற்றி பெற்று விட்டாய். நீ என்னிடம் கேட்டுப் பெற்ற வரங் கள் அனைத்தும் நிறைவேறும். உலகம் உள்ளளவும், உன்னை நினைத்து மாசியும் பங்குனியும் சேரும் சமயத்தில் விரதமிருப்பவர் களுக்கு உன் ஆசி கிட்டும். அவர்கள் மனமொத்த தம்பதிகளாக வாழ்வார்கள்'' என ஆசி கூறி அனுப்பினான்.
சாவித்திரி காட்டில் கணவனை விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பி வந்து, அவன் உடலைத் தன் மடியில் கிடத்தினாள். 

சிறிது நேரத்தில் தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல் சத்யவான் விழித்தெழுந்து, ""உன்னைப் போன்ற பெண் ஒருத்தி என்னை மீட்டு வந்ததாகக் கனவு கண்டேன்'' என்று கூறினான். 

அவன் உயிரை எமன் எடுத்துச் சென்றதையும்; எமனுடன் போராடி அவன் உயிரையும், மேலும் பல வரங் களையும் பெற்று வந்த விவரத்தையும் சாவித்திரி கூறினாள்.

சாவித்திரியும் சத்யவானும் தங்கள் குடிலுக்குத் திரும்பி வந்தனர். 

சாவித்திரி எமனிடம் பெற்ற வரத்தின்படி சத்யவான் மீண்டும் தன் நாட்டைப் பெற்றான். அவனது பெற்றோர்கள் கண்பார்வை பெற்றனர்.

சாவித்திரி நோற்ற நோன்பு அவளது காலம் வரை
 கௌரி நோன்பு எனக் கூறப்பட்டது. 

அதன்பின்னர் சாவித்திரி நோன்பு என்ற பெயர் பெற்றது. 

சாவித்திரி காட்டில் இருந்து இந்த நோன்பை மேற்கொண்டபோது அங்கு அவளுக்குக் கிடைத்த காராமணி, கார் அரிசி ஆகியவற்றைக் கொண்டு காரடை செய்து நிவேதனம் செய்தாள். 
அதனால் இந்த நோன்பு நோற்கும் பெண்கள் நிவேதனத்தில் காரடை வைத்து,"உருகாத  வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்; ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்' என வேண்டி நோன்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.
திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, கணவரை நோய் நொடி யின்றி காக்க இந்த நோன்பு கவசமாக இருக்கிறது. 
இந்த நோன்பை நோற்பதன் பலனாக சாவித்திரி நூறு பிள்ளைகளுடன் சௌபாக்கிய வதியாய் பல்லாண்டு காலம் வாழ்ந்தாள் என்பது புராணம். அவளது சரித்திரத்தை நோன்பு தினத்தில் படிப்பதால் 
சகல சௌபாக்கி யங்களும் பெறலாம்.

12 comments:

  1. அருமையான படங்களுடன், சத்யவான் சாவித்திரி கதையுடன் காரடையான் நோன்பின் சிறப்பான விளக்கங்கள்... நன்றி அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. படிக்கும் போதே மனம் சந்தோஷமாகின்றது.
    மங்கலகரமான படங்களுடன் இனிய பதிவு.
    வாழ்க.. வளமுடன்!..

    ReplyDelete
  3. காரடையான் நோன்பு அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. காரடையான் நோன்பு பற்றிய இன்றைய பதிவு பிரமாதமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  5. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    மேலிருந்து இரண்டாம் படமும், கீழேயுள்ள கடைசி இரண்டு படங்களும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    >>>>>

    ReplyDelete
  6. கோலம் நன்னா இருக்கு.

    தங்களின் கொழுக்கட்டைகள் டேஸ்டோ டேஸ்டு.

    >>>>>

    ReplyDelete
  7. சத்யவான் சாவித்ரி கதையை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ஆங்காங்கே மிகப்பொருத்தமான படங்களைக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  8. எல்லாத்துக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooooo

    ReplyDelete
  9. நாளை இரவு நோன்பு இல்லையா? படங்களுடன் பகிர்வு அருமை.

    ReplyDelete
  10. காரடையான் நோன்பு கதையும் விளக்கமும் படங்களும் மிகச்சிறப்பு! மிக்க நன்றி!

    ReplyDelete
  11. காரடையான் நோன்பு கதைப் படித்து நானும் புண்ணியம் அடைந்தேன். நன்றி. அருமயான படங்கள். கண்ணைப் பறிக்கும் கோலம்.

    ReplyDelete
  12. அம்மனின் படங்கள் எல்லாம் அழகு...

    ReplyDelete