Monday, March 17, 2014

நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்









அப்பனை நந்தியை ஆரா அமுதினை 
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை 
எப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால் 
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே 

- திருமூலவர் திருமந்திரம்
புத்திரபாக்கியம் வேண்டி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்த சிலாதமுனிவரது தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அருளால் பிறந்தவர்  நந்தி பகவான்..
மகன் பிறந்த மகிழ்ச்சியை  முழுமையாக அனுபவிக்க முடியாமல்.  பிள்ளைக்கு ஆயுள் எட்டு வருடங்கள்தான் என்று நிபந்தனை விதித்திருந்தார் சிவபெருமான்.

பெற்றோரின் கவலை  உணர்ந்த சிறுவனான நந்தி காரணம் அறிந்து. "கவலை வேண்டாம்' என்று அவர்களை ஆறுதல்படுத்திய நந்தி, தனியே சென்று சிவனைக் குறித்து தவம் மேற்கொண்டான். 

சிவனருளால் பூரண ஆயுள் பலமும், கயிலைக்கே காவலனாகும் பேறும் பெற்றான். அதனால் அதிகார நந்தி என பெயரும் பெற்றான்.
நந்தியை சிவபெருமான் தன் மகனாகவே ஏற்றுக்கொண் டார். 

உரிய வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய சிவன், வசிஷ்ட முனிவரின் பேத்தியை மண மகளாகத் தேர்ந்தெடுத்து, பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் திருமழபாடியில்  கோலாகலமாக சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.
 பார்வதியும் பரமேஸ்வரனும் திருவையாறிலிருந்து பல்லக்கில் வருவர். நந்தி மாப்பிள்ளை கோலத்தில், வெள்ளியாலான தலைப்பாகை அணிந்து, கையில் செங்கோல் ஏந்தி, குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க வைத்தியநாதன்பேட்டை வழியாகத் திருமழபாடி வருவார். 

திருமண விழா முடிந்ததும் புனல்வாசல் வழியாக திருவையாறு திரும்பிச் செல்வர். இதைத்தான் "வருவது வைத்தியநாதன்பேட்டை; போவது புனல்வாசல்' என்பர்.

நந்தி திருமணத்தின்போது பல தலங்களிலிருந்து பல பொருட்கள் வந்தன

திருவேதிக்குடியிலிருந்து வேதியர்கள் வந்தனர். 

திருப்பழனத்திலிருந்து பழ வகைகள் வந்தன. 

திருப்பூந்துருத்தியிலிருந்து மலர் மாலைகள் வந்தன. 
திருநெய்த் தானத்திலிருந்து யாகத் திற்கும் சமையலுக் குமான நெய் வந்தது. 

திருச்சோற்றுத் துறை யிலிருந்து அறுசுவை அன்ன வகைகள் வந்தன. 

இந்தத் தலங்க ளெல்லாம் திருமழ பாடியைச் சுற்றி அமைந்துள்ளன.

நந்தி திருமண விழா காணும் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவில் திருமணம் கூடி வரும் என்பர். 
"நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்' என்பது சொல் வழக்கு. விழாவைக் காண்போர் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்;சுபகாரியங்களும் நடை பெறும் .
நந்தி ஸ்லோகம் திருமூலவர் அருளியது

சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுகிறார்..!

அழிவே இல்லாத தருமம். விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். 

தருமம் இறைவனைத் தாங்குகிறது. 

நந்தி விடும் மூச்சுக்காற்றுதான் சிவபெருமானுக்கு உயிர்நிலை தருகிறது. 

இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. 

இந்த மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது. ..!
பிரதோஷ காலங்களில் நந்தியின் கொம்புகளுக்கிடையில் சிவ தரிசனம் பெறுவதும் ,நந்தி வாகன சேவையும் மிகவும் விஷேசமான பலன்களைத் தரும்.








17 comments:

  1. நந்தி அறியாதன அறிந்தேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  2. அருமையான தகவல்களுடன் சிறப்பான படங்கள்... நன்றி அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உலகத்தின் முதல் சித்தனாம்

    சிவனின், முதற் சீடன் நந்தியைப்

    பற்றி பல விவரங்கள் பகிர்ந்தமைக்கு

    நன்றி !

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்,

    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

    தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே !

    சந்திப்பது நந்தி தன் திருத்தாளினை

    சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி

    வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையாற்

    புந்திக்குள் நிற்பது நந்தி பொற்பாதமே !

    - திருமூலர்.

    ReplyDelete
  4. நந்தியின் பெருமைகளை விவரித்த அழகிய பதிவு!..

    ReplyDelete
  5. அன்புடையீர்..
    திருமழபாடி - திருவையாற்றுக்கு வடக்கே - கொள்ளிடம் ஆற்றின் அக்கரையில் உள்ளது.

    பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள -
    திருவேதிகுடி, திருப்பழனம், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருச்சோற்றுத்துறை ஆகிய தலங்கள் எல்லாம்,
    திருவையாற்றைச் சுற்றிலும் -
    காவிரியின் வடகரையிலும் தென் கரையிலுமாக அமைந்துள்ளன.

    தங்களுடைய பதிவின் சிறப்பினுக்காக குறித்துள்ளேன்..

    ReplyDelete
  6. நந்தியம்பெருமானைப்பற்றி விரிவான தகவல் அருமை.
    அருமையான படங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நந்தியம் பெருமான் விபரம் நான் அறிந்திருக்கவில்லை. (மார்கண்டேயருக்கு 16 வயது இவருக்கு எட்டு வயது.) அவர் பெருமைகளை அறிய தந்தமைக்குமிக்க நன்றி ! அருமையான படங்களும் கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  8. இதுவரை அறிந்திராத பல தகவல்கள்.....

    அருமையான படங்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. நந்திதேவர் பற்றிய அருமையான தகவல்கள். அழகான படங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ”நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்”

    ஆஹா, முந்தியே கல்யாணம் ஆகிவிட்டாலும், இதைப்படித்ததும் நந்திக்கல்யாணத்தைக் காண வேண்டும் போல ஒருவித பேரெழுச்சி ஏற்படுகிறதே ! ;)

    >>>>>

    ReplyDelete
  11. நந்திபோல பல்வேறு குறுக்கீடுகளால் இன்று என்னால் இங்கு வர மிகவும் தாமதமாகிவிட்டது.

    நம் அன்றாட வாழ்க்கைப்பாதையில் தான் எத்தனை எத்தனை நந்திகள் ;(

    சோதனைமேல் சோதனை ..... போதுமடா சாமி ...... வேதனை தான் வாழ்க்கையென்றால் ...... தாங்காது பூமி .... எனப்பாடத்தோன்றுகிறது.

    >>>>>

    ReplyDelete
  12. மிகவும் அருமையான பதிவு. அற்புதமான படங்கள் + விளக்கங்கள்.

    இங்கு திருச்சியில் “மழபாடி ராஜாராம்” என்ற பெயரில் மூத்த எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார்கள். எங்கள் தெருவிலேயே தான் வசித்து வருகிறார்கள். திருமழபாடியைச் சேர்ந்தவர்.

    திருமழபாடி நந்திக்கல்யாணம் பற்றி என்னிடம் நிறையவே சொல்லியிருக்கிறார்.

    என்னைப்பலமுறை நேரில் வந்து பார்க்குமாறும் அழைத்துள்ளார்கள்.

    நான் தான், ஏனோ இதுவரை செல்லமுடியாமல் குறையாக இருந்தது.

    தங்களின் பதிவினில் கண்டதில், நேரில் சென்று வந்தது போல மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  13. திருச்சியில் உள்ள பதிவரான என் அன்பு நண்பர் திரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்களும் திருமழபாடியைச் சேர்ந்தவர் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

    >>>>>

    ReplyDelete
  14. அற்புதமான இன்றைய தங்களின் பதிவுக்கும், தங்கமான தலைப்புக்கும், விளக்கங்களுக்கும், படங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள், நன்றிகள், அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ooooo

    ReplyDelete
  15. நந்தியெம்பெருமானைப் பற்றிய அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
  16. ”பொன்னார் மேனியனே “ என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடல் புகழ் பெற்ற, எங்களது சொந்த ஊரான திருமழபாடியில் நடைபெறும் நந்தீஸ்வரர் கல்யாணம் கோயில் திருவிழா மற்றும் திருமழபாடி கோயில் பற்றிய செய்திகளை தங்களது வலைத் தளத்தில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். சகோதரிக்கு நன்றி!

    கருத்துரைப் பகுதியில் எனது ஊர் திருமழபாடி என்பதனை நினைவில் வைத்து தெரிவித்த மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களுக்கும் நன்றி! (தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்)




    ReplyDelete
  17. நந்தி பற்றி முந்தி அறியாதது அறிந்தேன். நன்றி

    ReplyDelete