Thursday, March 20, 2014

செழிப்பான வாழ்வருளும் செங்கம் ஞான பரிபூரணன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா









அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்...சுதா ரகுநாதன் பாடல் ..

தாய்  யசோதையின் கண்டிப்பு, தந்தை நந்தகோபரின் அன்பு, கோபியரின் காதல், அரக்கியின் வஞ்சகம், குசேலரின் நட்பு, பாண்டவர்களின் பாசம், பாரதப் போரில் கீதையான ஞான வெள்ளத்தை பாய்ச்சிய அவன் மீது பீஷ்மர் கொண்ட வியப்பு, உத்தவரின் ஞானத் தொடர்பு எல்லாமே அவரவர் கண்ணணை வழிபட்ட விதம் என்று உணரலாம்..

இத்தகைய ஞான பரிபூரணனான ஸ்ரீகிருஷ்ணன்   அருட்கோலோச்சும் செங்கம்  என்கிற செங்கண்மா தலத்தில் ருக்மிணி-சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதியாக கம்பீர அழகு காட்டியருள்கிறார். 

அது பாரதப் போர் முடிந்த சமயம். ஸ்ரீகிருஷ்ணர் தென் வங்கக் கடலோரத்தில் குடும்பத்தோடு ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தார். 

கலியுகம் முழுவதும் திருவல்லிக்கேணியில் அமர்ந்து அர்ச்சாவதார ரூபமாக அருள்பாலிக்கலாம் என்று உறுதியோடுதான் பயணத்தைத் தொடங்கினார். 

ஏகசக்ரபுரி என்றழைக்கப்பட்ட தற்போதைய செங்கத்திற்குள் தம் திருப்பாதத்தை பதித்தார். 

ஊரே திரண்டது. பேரரசன் முதல் சிறு மன்னன் வரை எல்லோரும் அங்கேக் கூடி தரிசித்துக் குளிர்ந்தனர். 

காடுகளுக்குள் தவமிருந்த முனிவர்களும் ரிஷிகளும் சித்தர்களும் கிருஷ்ணத் தென்றல் வீசுவது உணர்ந்து அதன் மூலத்தைக் காண ஊருக்குள் குவிந்தனர். அந்த திவ்ய தரிசனம் எல்லோருக்குள்ளும் கல்வெட்டாகப் பதிந்தது. 

செவி வழிச் செய்தியாகவே பல நூறு தலைமுறைகள் தொடர்ந்தன. நாயக்கர்களின் காலமும் நெருங்கியது. 

ஸ்ரீகிருஷ்ண அர்ச்சாவதாரம் அறிந்த தளவாய் திம்மப்ப நாயக்கர் வியந்தார். கிருஷ்ணரிடம் பெரும் பக்தி பூண்டிருந்தவர் அவர். தன் பக்தியை கோபுரமாக உயர்த்தி, கோயிலாக நிறைத்துக் காட்டினார்.  

ஊரின் நடுவே நூறடி உயரமுள்ள ராஜ கோபுரம் கம்பீரமாக நிமிர்ந்திருக்கிறது. உள்ளே நுழைந்தவுடனே மாபெரும் மைதானத்தின் மையத்திலுள்ள கற்கோயில் நம்மை ஈர்க்கிறது. 

கோயில் வளாகத்தின் விஸ்தீரணமும் நேர்த்தியான சந்நதிகளின் அழகும் வியப்படையச் செய்கின்றன. 

மண்டபப் படியேறும் முன்பே ‘சற்று நில்லுங்கள்’ என்பதுபோல அசரவைக்கும் அழகோடு திகழ்கிறது ஒரு சிற்ப யாளி. மண்டபப் படிகளின் பக்க வாட்டில் நாலுகால் பாய்ச்சலோடு ஓடும் பாவனை காட்டும் அந்த யாளி, தன் முகத்தை பின் பக்கம் திருப்பி கோபாவேசத்தோடு வாய் பிளந்து நாக்கை  நீட்டி அலறும் சீற்றத்தை கல்லில் கவினுறப் படைத்திருக்கிறார்கள். உள்ளே சிற்பக் காடாக மண்படமே விரிகிறது. 

விரலளவு சிற்பம் முதல் ஆளுயரம்வரை சிலைகள். களிமண்ணை பிசைவதுபோல கல்லில் அநாயாசமாக விளையாடியிருக்கிறார்கள். 

தசாவதாரம் வரிசையாக தூண்களில் அணிவகுக்கின்றன. 

இரண்ய கசிபுவின் வயிற்றை கிழிக்கும் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தையும் வாமனரின் தேஜஸையும் கிருஷ்ணரின் சிருங்காரத்தையும் கற்களில் உயிர்த் துடிப்புடன் செதுக்கியிருக்கிறார்கள். 

உதட்டில் பொருத்திய புல்லாங்குழலோடு சங்கு சக்ரத்தோடு, ஒரு காலை மடித்து திரிபங்க நிலையில் கண்ணன் நிற்கிறான். 

அவனது மடித்த காலின் பாதத்தை பசு தன் நாவால் வருடுகிறது. 

அத்ரி மகரிஷிக்காகவே கிருஷ்ணன் காட்டிய அபூர்வ கோலம் இது. 

இந்த மண்டபத்தை மட்டும் கல் கல்லாய் தடவிப் பார்த்து முழுவதும் அறிந்து ரசிக்க சில மாதங்களாகும் எனில் மிகையில்லை. 

இந்த மண்டபத்திலேயே தளவாய் திம்மப்ப நாயக்கரும் சிலை கொண்டுள்ளார்.

அடுத்து அர்த்த மண்டபம். அழகான அலங்காரங்களோடு உற்சவராக கனகவவல்லித் தாயாரை தரிசிக்கிறோம். 
அருகேயே ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக உற்சவர் வரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கிறார். 

கருவறையில் ருக்மிணி-பாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி. வேணுகோபாலன் பார்த்தசாரதியாக, தேரோட்டும் சாரதியாக கையில் சாட்டையோடு நிற்கிறார். 
இடது கரம் வரத ஹஸ்தம் காட்ட,  தலையை சற்றே திருப்பி குதிரைகளை செலுத்துபவர்போல சேவை சாதிக்கும் அழகு உள்ளத்தை நெகிழ்த்தும். 

இந்த சந்நதியில் கமழும் பச்சைக்கற்பூரமும் துளசியின் வாசமும் உள்ளத்தை குளிர்விக்கின்றன. 
பிரச்னைகளின் எண்ண ஓய்ச்சல்களால் குமுறும் மனம், இந்த 
கிருஷ்ண சாந்நித்தியத்தில் அடங்குகிறது. பேரமைதி நம்மைச் சூழ்கிறது. 

பிராகார வலத்தில் முதலில் தனிச் சந்நதியில் பேரருளோடு கனகவல்லித் தாயார் அருளைப் பொழிகிறாள். 

அடுத்ததாக ஆண்டாள், ஆழ்வார்கள்,  ராமானுஜர் என்று ஒவ்வொருவராக தனித்தனி சந்நதியில் தரிசிக்கலாம். 
1600ம் வருடத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள்  கூறுகின்றன. 

கோயில் கொடிமரத்திற்கு கீழ் விழுந்து நமஸ்கரிக்கையில் வேணுகானம் செவிக்குள் புகுந்து நெஞ்சத்தை நிறைக்கிறது.
செங்கம் தலம், திருவண்ணாமலை-பெங்களூரு பாதையில் திருவண்ணாமலையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

16 comments:

  1. வெண்ணை வாய் கண்ணனின் அழகே அழகு.

    ReplyDelete
  2. அருமையான தகவல்களுடன் சிறப்பான படங்கள் அற்புதம் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இன்று வியாழன் . சதுர்த்தி.
    மாலை யில் பாபா தரிசனம் அங்கே இருந்து விநாயகன் கோவில் சென்று சங்கட ஹர பிள்ளையார் தரிசிக்க வேண்டும் என்று காலையில் எழுந்தவுடன் நினைத்தேன்.

    கணினியில் கண்ணன் கண் முன்னே எனைக்
    காண கண் கோடி வேண்டும் என்று சொல்கிறான்.

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. செங்கம் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளும் ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிய அரிய தகவல்களுடன் அழகிய பதிவு!..

    ReplyDelete
  5. தெரிந்த இடம்.

    தெரியாதது அங்கு உள்ள கோவிலும்.

    அதன் விவரங்களும்.



    உடன் நினைவுக்கு வந்தது..

    " இருக்கும் இடத்தை விட்டு

    இல்லாத இடம் தேடி

    எங்கெங்கோ அலைகின்றாய் ... "

    என்ற பாடல்.

    மாயக் கண்ணன்....

    அவனுக்கு தெரியாதா என்ன ?

    யாருக்கு, எங்கே எப்போது

    தரிசனம் என்று ?

    விவரங்களுக்கு நன்றி, தாயே !!

    ReplyDelete
  6. தகவல்கள் மற்றும் படங்கள் அருமை சகோதரியாரே

    ReplyDelete
  7. அழகான கண்ணன் படங்கள்,சுதாரகுநாதனின் இனியகானம் ,ஸ்ரீகிருஷ்ணனின் தகவல்கள் அனைத்தும் அருமை.நன்றி.

    ReplyDelete
  8. ஆஹா ..... இன்றைக்கு ஸ்ரீகிருஷ்ணனைப்பற்றிய அழகான பதிவா !

    பேஷ் ! பேஷ் !!

    >>>>>

    ReplyDelete
  9. படங்கள் அத்தனையும் அழகோ அழகு !

    >>>>>

    ReplyDelete
  10. கண்களுக்கு இனிய காணொளி. சந்தோஷம்.

    >>>>>

    ReplyDelete
  11. இந்தப்பதிவினில் கமழும் பச்சைக்கற்பூரமும் துளஸியின் வாசமும்கூட என் உள்ளத்தைக் குளிர்விக்கின்றதே !

    _ _ _ ‘தீ’ யினில் விரலை வைத்தால் .................
    உன்னைத் தீண்டிய இன்பம் கிடைக்குமே கண்ணா !

    >>>>>

    ReplyDelete
  12. கடைசி படத்தில் ’அநிருத்’தும் ’ஆதர்ஷ்’ஷுமாக இரு பொடியர்களும் அருமையோ அருமை.

    >>>>>

    ReplyDelete
  13. திருவண்ணாமலையிலிருந்து பெங்களூர் செல்லும் பாதையில் 38 கிலோமீட்டர் வரை தரதரவென்று என்னையும் இழுத்துச்சென்று செங்கம் தலத்தினை கண்குளிரக் காணச்செய்த செங்கமலம் [செந்தாமரைக்கு] அவர்களுக்கு என் நன்றியோ நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ooooo

    ReplyDelete
  14. அழகான பகிர்வு. கடைசி படம் சூப்பர்!

    ReplyDelete
  15. செங்கம் கிருஷனின் பதிவை, சுதாரகுநாதன் பின்புலத்தில் பாடிக் கொண்டிருக்க அனுபவித்தப் படித்தேன். நன்றி.

    ReplyDelete
  16. அருமையான கோவில். படங்கள் மனதை கொள்ளைக் கொண்டன....

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete