'
வ்யாஸம் வஸிஷ்டநப்தாரம் ஸக்தே பௌத்ர மகல்மஷம் |
வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே’
என்ற விஷ்ணு சகஸ்ர நாமத்தில் வியாசர்
விஷ்ணுவின் அம்சம் என அறிகிறோம்..
வேதங்களைப் பிரித்து தொகுத்தளித்த புண்ணிய புருஷர்வியாசர்
வியாசர் என்றால் வேதங்களைப் பகுத்து விளக்கமளிப்பவர் என்று பொருள்படும்
வியாசர் சுக மகரிஷியின் தந்தை
வேதங்களின் உட்பொருளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக எடுத்துச் சொல்பவரை வியாசர் என்றார்கள்.
வேத சாரங்களை எளிதாக புரியவைக்க 18 புராணங்களைப் படைத்தார்;
மகாபாரதம் எனும் காலத்தால் அழியாத காவியத்தை அளித்தார்.
வேதங்களைத் தொகுத்துத் தந்ததால்- வேத வேதாந்த சூத்திரம் எழுதியதால்- தான் உருவாக்கிய மகாபாரதத்தை விநாயகப் பெருமானைக் கொண்டு மேரு மலையில் எழுதச் செய்ததால்- பதினெட்டுப் புராணங்களைத் தொகுத்துத் தந்ததால் வேதவியாசருக்கென்று சிறப்பான ஒரு இடம் உண்டு.
மகத்துவம் மிக்க ஸ்ரீவியாச பகவானுக்கு, மூன்று மத ஆச்சார்யர்கள் செய்யும் பூஜையே ஸ்ரீவியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதமாகும்.
துறவிகள் வியாச பூஜை செய்வார்கள்.
சாதுர்மாஸ்ய விரதம் என்பது மகான்கள், துறவிகள் ஓரிடத்தில் நான்கு மாதங்கள் தங்கி வேதங்களை ஆய்வு செய்வதாகும்.
இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள்.
மழைக்காலத்தில் பாத யாத்திரையாகப் போகும்போது, பல சிறு சிறு பூச்சி வகைகள் மிதிபட நேரிடும் என்று அஞ்சி, இதைத் தவிர்க்க சாதுக்கள் ஒரே இடத்தில் இருந்து சாதுர்மாஸ்யம் மேற்கொள்வார்கள்.
ஸ்ரீவேத வியாசருக்கு மிக விசேஷமான ஆனி மாதம் பௌர்ணமி அன்று ஆரம்பமாகும் ஆனி பௌர்ணமியை வியாச பௌர்ணமி எனப் போற்றுவர்.
சந்நியாசி ஒருவரின் வயது அவர் செய்த வியாச பூஜையின் எண்ணிக்கையைக் கொண்டே கணக்கிடப்படும்.
இவர் மகாவிஷ்ணுவின் அருள் பெற்றவர். இவரின் இயற்பெயர் கிருஷ்ண துவைபாயனர் என்பதாகும். இவர் கறுமை நிறத்தவர்; பராசரரின் மகன்.
பதினெட்டாவது புராணமாக ஸ்ரீமத் பாகவதத்தைஇயற்றி பக்தி யென்ற தத்துவத்திற்கே வேதமாக்கியவர் வியாசர் ..
பராசர மகரிஷியின் பெருமைமிகு புதல்வர் வியாசர் ..
வியாசரின் பெருமையைப் பற்றி விஷ்ணுபுராணத்தில் என் பிள்ளை வியாசரைப் பற்றி நீங்கள் சாமானியமாக நினைக்காதீர்கள். விஷ்ணுவினுடைய அவதாரம் அவர் இல்லையென்றால், மகாபாரதம் என்ற அவ்வளவு பெரிய கிரந்தத்தை அவர் இயற்றியிருக்க முடியுமா? ஆகையால், அவரை நாராயணன் என்றே நீங்கள் உணருங்கள்,'' என்கிறார். தந்தையான பராசர மக ரிஷி !
திருமாலின் அம்சங்கள் வியாசரிடத்தில் நிறைந்திருந்தபடியால், அவரை அனுப்பிரவேச அவதாரம் என்று அழைக்கிறோம்..ஒருவருடைய உயர்ந்த குணங்கள் இன்னொருவரிடம் அப்படியே தொற்றிக்கொள்ளுமானால் அதற்கு அனுப்பிரவேச அவதாரம்' என்று பொருள் ..
நாராயணனிட மிருந்து பிரம்ம தேவன் தோன்றி னார்; பிரம்ம தேவனி டமிருந்து வசிஷ்டர் பிறந்தார்; வசிஷ்டரின் மகன் சக்தி; சக்தியின் மகன் பரா சரர்; பராசரருக்கும் மீனவப் பெண் சத்தியவதிக்கும் பிறந்தவர் வியாசர்.
வியாசரின் தாய் சத்தியவதி...
தீர்த்தயாத்திரை வந்த பராசர முனிவர்,பிதுர் சாபத்தினால் (முன்னோர் சாபம்) மீன்வாடை நோயாக தொற்றிக் கொண்ட -மீனின் வயிர்றில் பிறந்த " "மச்சகந்தி'' என்றொரு பெயருடன் திகழ்ந்த தாய்க்கு உத்தமமான நேரத்தில் பராசரரின் யோகசக்தியால், பிறந்தவர் வேதங்களை நமக்களித்த வியாசர்.
அன்றுமுதல் மச்சகந்தியின் உடலில் நறுமணம் வீசத் தொடங்கியது. ஒரு யோஜனை தூரம் அந்த நறுமணம் பரவியதால் அவள் ""யோஜனகந்தி'' என்று அழைக்கப் பட்டாள்.
பராசரருக்கும், மச்சகந்திக்கும் பிறந்த மகன், பிறக்கும் போதே ஏழு வயது குழந்தையாக இருந்தார். தந்தை ஆசியளித்து ஒரு கமண்டலத்தைப் பரிசாக வழங்கினார். பாசம் மேலீட்ட் தாயை "மீனவப்பெண்ணான நீ என்னைத் தொடக்கூடாது!'' என்று தடுத்த வியாசருக்கு "தாயும் தந்தையும் சமம்' என்று முனிவர் பிள்ளைக்குப் போதித்தார்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்தார் வியாசர் ...
தன்னால் மனம் வருத்தம் அடைந்த தாய்க்கு எப்போது நினைத்தாலும் அப்போதெல்லாம் தாய் முன் உடனே தோன்றி விடுவேன்!'' என்கிற வரம் அளித்தார் வியாசர் ...
தனது நுண்ணறிவால் மனித குலத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கினார். இந்து மதத்தின் ஆதிகுருவாக வேதவியாசர் போற்றப்படுகிறார்.
ஆஞ்சநேயரைப் போல சிரஞ்சீவி பட்டம் பெற்றவர். சிரஞ்சீவி என்றால் என்றும் வாழ்பவர் என பொருள்.
கலியுகம் தோன்றி எவ்வளவோ ஆண்டுகளாகி விட்ட போதிலும் வியாசரின் மகாபாரதம் இன்றும் மக்களுக்கு வேதம் போல் விளங்குகிறது.
வடமாநிலங்களில் ஆனி பவுர்ணமியை குரு பூர்ணிமா என சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
ஞானத்தை உணர்ந்துவதால் குரு பரம்பொருளாக சொல்லப்படுகிறார்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தந்தைக்கு அடுத்தபடியாக குருவே வருகிறார். அன்னை மீது கொள்ளும் பக்தியால் இப்பிறவியில் இன்பம் பெறலாம். தந்தை மீது கொள்ளும் பக்தியால் மறுபிறவியில் இன்பம் பெறலாம். குரு பக்தியால் பிறப்பற்ற நிலையை எய்தலாம்.
வியாச காசியில்வியாசருக்கு நினைவுச் சின்னமும் சமாதிபோல் அமைத்திருக்கிறார்கள். அந்தச் சமாதியில் அறுபத்து நான்கு கலைகள் கொண்ட சக்கரம் உள்ளது. வேத வியாசர் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றவர் என்பதை இந்த அபூர்வச் சக்கரம் எடுத்துக் காட்டுகிறது.
வியாச காசி வாரணாசியில் கங்கை நதியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஊர். மிகச் சிறந்த தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்திற்கு படகில் செல்லலாம். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ளது.
காசிக்கு வரும் பக்தர்கள் படகிலேயே வந்து வியாச காசியைத் தரிசித்துச் செல்கிறார்கள்.
ரிஷிகேசத்திலிருந்து புனித கங்கை ஏழு கிளைகளாகப் பாய்ந்து ஓடுகிறது. பிரவாகம் எடுத்தோடுகிற இந்தப் புனித கங்கையின் கரையில், ஹரித்வார் எனும் புண்ணிய க்ஷேத்திரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள ‘ஸப்த ஸரோவர்’ எனுமிடத்தில், சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில், ஸ்ரீவேதவியாச பகவானுக்கு ஓர் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது..
கர்ப்பக்கிரகத்தில் ஸ்ரீவேத வியாசர் எழுந்தருளியிருக்க, நான்கு பக்கங்களிலும் நான்கு வேதங்களைப் பிரித்துக் கொடுத்த ஸ்ரீவேத வியாசரின் நான்கு சீடர்களுக்குத் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன.
ஸப்த ரிஷிகளான ஸ்ரீகாஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், கௌதமர், ஜமதக்னி ஆகியோருக்கு நான்கு பக்கச் சுவர்களிலும் கண்ணைக் கவரும்படியான திருவுருவங்களை வரைந்து வைத்துள்ளனர்.
பிராகாரச் சுவர்களில் ஸ்ரீலலிதா தேவியுடன் கூடிய தசரத ராமன், ஸ்ரீநரஸிம்மன், ஸ்ரீவெங்கடாஜலபதி, கீதாச்சார்யன் ஸ்ரீகண்ணன், கீதோபதேசம் மற்றும் ஸ்ரீவியாச பகவானின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியச் சம்பவங்களையும் சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர்.
