
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே
அடங்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாதாரே
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய்க் காட்டாக்காலே.
அப்பர் திருமேனி
அப்பரடிகள் திருப்பூந்துத்தியில் பலநாள்கள் தங்கி உழவாரத் தொண்டு புரிந்தபோது படியருளிய திருப்பதிகங்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று.
இறைவனை எல்லாமாக கருதி அவன் தன்னை ஆண்டுகொண்ட தன்மைக்கு இரங்கி அப்பெருமானின் கருணையை வியந்து அருளிய திருப்பதிகம்.
பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்றுகூடி இருக்கும்போது, அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத்துவதால் அவர்களது நல்வாழ்த்துகள் கிட்டும்.
அதனால் ஆடி அமாவாசை யன்று முன்னோர் களுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
கௌசிக முனிவரிடம் "இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்' என்று ரிஷிகள் கூறினார்கள்.
கௌசிக முனிவர், "என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்' என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார்.
பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் "திருப்பூந்துருத்தி' என்னும் புண்ணியத் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார்.
கௌசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன், ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்து அருளினார்.
“பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேன்” என்றும்,
“அழகாலமைந்த உருவுடை மங்கை” என்றும் அப்பர் பெருமான் அப்பனையும், அம்மையையும் பாடிய தலம் திருப்பூந்துருத்தி. அதனால் இறைவன் பொய்யிலியப்பர், இறைவி அழகாலமர்ந்த நாயகி எனப்படுகின்றனர்.
முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன.
உடனே கௌசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.
ஆடி அமாவாசையில் இறைவன் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம்.
.திருப்பூந்துருத்தி, தஞ்சையிலிருந்து திருக்காட்டுப் பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருக்கண்டியூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ளது.
திருக்கண்டியூரிலிருந்து ஆறு பல்லக்குகள் புறப்பட்டு திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் ஆலயத்தை அடையும்.
திருப்பூந்துருத்தி உபசாரம் என்றே ஒரு பழமொழி உள்ளது.
திருஞானசம்பந்தருக்காக நாவுக்கரசர் முத்துச் சிவிகை சுமந்த தலம் ..
நந்தியம் பெருமானின் திருமணத்தின்போது அனைத்து விதமான புஷ்பங்களும் திருப்பூந்துருத்தியிலிருந்து தான் திருமழபாடிக்கு வந்து சேர்ந்தன.
ஆற்று மண்ணும் வண்டலும் பூ போல மென்மையாக படிந்ததாக காணப்பட்ட இடமாதலால் ‘பூந்துருத்தி’ என அழைக்கப்பட்டது.
அப்பரடிகள், ‘‘பொருத நீர்வரு பூந்துருத்தி’’ எனக் கூறுவார்.
வண்டல் நிலமாதலால் பூஞ்செடிகள் நிறைந்து, மலர் வனமாயிற்று.
ஈசன் சோழமன்னன் ஒருவனுக்கு உலைக்களத் துருத்தியையே சிவலிங்கமாகக் காட்டி பூஜிக்கச் செய்தார்.
பின்னர் அத்துருத்தியே சிவலிங்கமாக மாறியதால் திருப்பூந்துருத்தி என ஆயிற்று என்று கூறுவர்.
அதனாலேயே இத்தல நாயகருக்கு புஷ்பவனேஸ்வரர் என்று பெயர். தேவர்கள் மலர் கொண்டு ஈசனை அர்ச்சித்ததை அப்பர், ‘‘வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை’’ என்கிறார்.
சோழர் காலத்தில் ரத்தினமாக ஜொலித்த ஊர்களில் திருப்பூந்துருத்தியும். ஒன்று. அவர்கள் ஏழூரையும் பொக்கிஷமாக பாதுகாத்து வந்துள்ளனர். அவற்றில் மலர்வனத்தால் சிருங்காரமாக விளங்குகிறது, திருப்பூந்துருத்தி.
துருத்தி என்றால் காற்றுப்பை எனும் பொருள் உண்டு.
அதாவது, உயிர்ச் சக்தியான பிராணனை சகல உயிர்களுக்கும் பரவச் செய்யும் ஆதாரமாக இவர் விளங்குகிறார்.
இன்னொரு காற்றுப்பை எடுக்கவொட்டாது அதில் சிவனருள் எனும் மலர்கொண்டு பிறவிப்பிணியை நீக்குகிறார்.
அதனாலேயே பூந்துருத்தி உடையார் எனும் நாமத்தை ஏற்றுள்ளார்.
பூவைப்போல் மென்மையும் கருணையும் கொண்ட அவர், வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கு தம் அருள் மலர்களால் இதமாக நீவி இடர் களைகிறார்.
அமுதூறும் தெள்ளுத் தமிழில் இறைவி அழகாலமர்ந்தநாயகி எனும் இனிய நாமம் சொல்ல மங்களத்தைக் கூட்டித்தரும் கொடைநாயகி. சௌந்தர்யத்தை கூட்டுவிக்கும் புன்னகை தவழும் தேவி.
அப்பர் சுவாமிகள்,
‘‘அழகாலமைந்த உருவுடை மங்கையுந் தன்னொருபா லுல காயு நின்றான்’’ என்று இவள் பெருமை பேசுகிறார்.
திருப்பூந்துருத்தியிலிருந்து ஏழு பல்லக்குகள் புறப்பட்டு திருநெய்த்தானம் என்கிற தில்லை ஸ்தானத்தை அடையும்.
இத்தலத்தைக் கடக்கும் காவிரியின் பணிவைப் பாடாத அடியார்களே இல்லை எனலாம்.
சப்தஸ்தானம் என்னும் மாபெரும் அரிய விழாவினை கண்டோர் சிவமாவர் என்பது ஆன்றோர் வாக்கு.
ஏழு தலத்து பல்லக்குகளினூடே பயணிப்போரின் பிறவி அறுபடும்.
கலந்து கொண்டு சிவனருள் பெறலாம் ..!
ஆடி அமாவாசையன்று நீர்க்கடனைச் செலுத்துவதற்கு தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கடற்கரை அக்னி தீர்த்தம் மிகவும் சிறப்பானதாகும்.
இங்கு சங்கல்பம் செய்துகொண்டு கடலில் நீராடி, வேதவிற்பன்னர் உதவியுடன் திலதர்ப்பணம் செய்தால் பெரும் புண்ணியம் கிட்டும் என்பர்.
முக்கடல் கூடும் கன்னியாகுமரி, திருப்புல்லானி, வேதாரண்யம், கோடியக்கரை தனுஷ்கோடி, கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள கடற்கரையான சில்வர் பீச் போன்றவையும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருவையாறு புஷ்ப மண்டபம் படித்துறை, விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாற்றங்கரை, நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதிக்கரை ஆகியவை புகழ்பெற்றவையாகும்.
குளக்கரையில் பிதுர் பூஜை செய்வதும் போற்றப்படுகிறது. கும்பகோணம் மகாமகத் தீர்த்தக் குளக்கரையில் பிதுர்பூஜை செய்வதைக் காணலாம்.
கும்பகோணம் சக்கரப் படித்துறையும் சிறப்பானது.
திருவெண்காடு சிவன் கோவிலில் சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்களில் நீராடி அருகிலுள்ள அரசமரத்தடியில் அமைந்துள்ள ருத்ரபாதம் பகுதியில் திதி தர்ப்பணங்கள் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
மயிலாடுதுறை செல்லும் வழியில் பூந்தோட்டம் அருகேயுள்ள செதலபதி திருத்தலமும்,
திருக்கடையூர் திருத்தலமும்,
திருச்சி சமயபுரம் கோவிலும்,
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலும் பிதுர்பூஜைக்கு ஏற்ற தலங்களாகத் திகழ்கின்றன.
தங்கள் ஊருக்கு அருகிலுள்ள திருத்தலத்திற்குச் சென்று பிதுர்பூஜையை முறைப்படி செய்து, ஏழை, எளியவர்களுக்கு முடிந்த அளவு அன்னதானம் செய்தால், முன்னோர்களின் ஆசியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள்.
காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக்கட்டம், பவானி முக்கூடல், பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள்.
நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.
சூரியனும் சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு நேரே நேர்படும் அமாவாசை பிதிர்கருமத்திற்கு விசேஷமானது.
பிதுர் லோகம் எனப்படும். வடக்கு நோக்கிச் சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாசமாகும். ஆகவே ஆடி அமாவாசை பிதிர் தர்ப்பணத்திற்கு மிகவும் சிறந்த காலமாகும்.

ஆடி அமாவாசை தினம் நம்மை விட்டு நீங்கியவர்களை நினைவு கூறும் நன்னாள். அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் இழைத்திருக்கக்கூடிய பிழைகளுக்கு பேசியிருக்கக்கூடிய தீச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு வழியாகவும் நாம் இந்த நல்நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்லும் வழியாகவும் அமாவாசையன்றும் நாம் முன்னோருக்கு வழிபாடு செய்கிறோம்.
பிதிர்க்கடனுக்கு பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் -
சேதுக்கடல் அக்னி தீர்த்தம்

அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் செய்யப்படும் வழிபாடு சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று.
ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டங்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள்.
பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.
தெற்கு நோக்கிச் செல்லும் புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்களைச் செய்து ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
தேவர்கடன் இறைவனை வழிபடுவதாலும்,
முனிவர்கடன் வேதம் ஓதுதலாலும், திருமுறை பாராயணம் (தேவாரம் திருவாசகம்) பாடுவதாலும்,
பிதிர்க்கடன் இறந்த ஆத்மாக்களை நினைந்து எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தல் மூலமாகவும் தீர்க்கப்படுகின்றன.
நீத்தார்கடன் எனப்படும் பிதிர்க்கடனை தீர்க்கவும், இக்கடமையை செய்ய ஏற்ற நாளாககவும் வருவது ஆடி அமாவாசை தினமாகும்.
எள்ளு நீருடன் தர்ப்பைப்புல் நுனியால் இறைத்து விடுவதால் பிதிர்கள் திருப்தி அடைவார்கள். தர்ப்பணம் என்பது திருப்திப்படுத்துதல் என்று பொருள் படும்.
பகவான் விஷ்ணுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்டதும் சகல பாபங்களையும் தீர்க்க வல்லதும் ஆகிய எள்ளும், தாகத்தை தீர்க்கும் நீரும், கொண்டு தர்ப்பணம் செய்து பிதுர் ஆசியையும் குருவின் ஆசியையும் பெற வேண்டும்.
குருவிற்கு தானம் வேட்டி சால்வை அரிசி காய்கறி குரு தட்சனை வழங்கி ஆசிர்வாதம் பெறவேண்டும்.
வீட்டில் அமரர்கள் படத்தின் முன்பு வாழை இலை உணவு படைத்து கற்பூர ஆராதனை செய்து வணங்கி உறவினருடன் கூடி மதியம் உண்ணவேண்டும்.
ஆகவே இறைபதம் எய்திய ஆத்மாக்களுக்கு ஆத்ம தர்ப்பணம் செய்ய ஆடி அமாவாசை நாளை பயன்படுத்தி இறையருளை பெற்று ஆனந்த வாழ்வு வாழலாம்..!


-2.jpg)