Sunday, July 28, 2013

பிதுர்பூஜை




ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே
அடங்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாதாரே

ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே

பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய்க் காட்டாக்காலே. 
அப்பர் திருமேனி
 
அப்பரடிகள் திருப்பூந்துத்தியில் பலநாள்கள் தங்கி உழவாரத் தொண்டு புரிந்தபோது படியருளிய திருப்பதிகங்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று. 

இறைவனை எல்லாமாக கருதி அவன் தன்னை ஆண்டுகொண்ட தன்மைக்கு இரங்கி அப்பெருமானின் கருணையை வியந்து அருளிய திருப்பதிகம்.
 பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்றுகூடி இருக்கும்போது, அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத்துவதால் அவர்களது நல்வாழ்த்துகள் கிட்டும். 

அதனால் ஆடி அமாவாசை யன்று முன்னோர் களுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

 கௌசிக முனிவரிடம்  "இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்' என்று ரிஷிகள் கூறினார்கள்.

 கௌசிக முனிவர், "என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்' என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார்.

பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் "திருப்பூந்துருத்தி' என்னும் புண்ணியத் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார்.

கௌசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன், ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்து அருளினார். 
“பொய்யிலியைப் பூந்துருத்தி கண்டேன்” என்றும், 
“அழகாலமைந்த உருவுடை மங்கை” என்றும் அப்பர் பெருமான் அப்பனையும், அம்மையையும் பாடிய தலம் திருப்பூந்துருத்தி. அதனால் இறைவன் பொய்யிலியப்பர், இறைவி அழகாலமர்ந்த நாயகி எனப்படுகின்றனர்.
முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. 

உடனே கௌசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.

ஆடி அமாவாசையில் இறைவன்  தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம். 
.திருப்பூந்துருத்தி, தஞ்சையிலிருந்து திருக்காட்டுப் பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருக்கண்டியூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ளது.

திருக்கண்டியூரிலிருந்து ஆறு பல்லக்குகள் புறப்பட்டு திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் ஆலயத்தை அடையும். 

திருப்பூந்துருத்தி உபசாரம் என்றே ஒரு  பழமொழி உள்ளது. 

 திருஞானசம்பந்தருக்காக நாவுக்கரசர் முத்துச் சிவிகை சுமந்த தலம் ..

நந்தியம் பெருமானின் திருமணத்தின்போது அனைத்து விதமான புஷ்பங்களும் திருப்பூந்துருத்தியிலிருந்து தான் திருமழபாடிக்கு வந்து சேர்ந்தன. 

ஆற்று மண்ணும் வண்டலும் பூ போல மென்மையாக படிந்ததாக காணப்பட்ட இடமாதலால் ‘பூந்துருத்தி’ என அழைக்கப்பட்டது. 

அப்பரடிகள், ‘‘பொருத நீர்வரு பூந்துருத்தி’’ எனக் கூறுவார். 
வண்டல் நிலமாதலால்  பூஞ்செடிகள் நிறைந்து, மலர் வனமாயிற்று.

ஈசன் சோழமன்னன் ஒருவனுக்கு உலைக்களத் துருத்தியையே சிவலிங்கமாகக் காட்டி பூஜிக்கச் செய்தார். 

பின்னர் அத்துருத்தியே சிவலிங்கமாக மாறியதால் திருப்பூந்துருத்தி என ஆயிற்று என்று கூறுவர். 

அதனாலேயே இத்தல நாயகருக்கு புஷ்பவனேஸ்வரர்  என்று பெயர். தேவர்கள் மலர் கொண்டு ஈசனை அர்ச்சித்ததை அப்பர், ‘‘வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை’’ என்கிறார்.

சோழர் காலத்தில் ரத்தினமாக ஜொலித்த ஊர்களில்  திருப்பூந்துருத்தியும். ஒன்று. அவர்கள் ஏழூரையும்  பொக்கிஷமாக பாதுகாத்து வந்துள்ளனர். அவற்றில் மலர்வனத்தால் சிருங்காரமாக விளங்குகிறது, திருப்பூந்துருத்தி. 

துருத்தி என்றால் காற்றுப்பை எனும் பொருள் உண்டு. 

அதாவது, உயிர்ச் சக்தியான பிராணனை சகல உயிர்களுக்கும் பரவச் செய்யும் ஆதாரமாக இவர் விளங்குகிறார். 

இன்னொரு காற்றுப்பை எடுக்கவொட்டாது அதில் சிவனருள் எனும் மலர்கொண்டு பிறவிப்பிணியை நீக்குகிறார். 

அதனாலேயே பூந்துருத்தி உடையார் எனும் நாமத்தை ஏற்றுள்ளார். 

பூவைப்போல் மென்மையும் கருணையும் கொண்ட அவர், வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கு தம் அருள் மலர்களால் இதமாக நீவி இடர் களைகிறார். 


அமுதூறும் தெள்ளுத் தமிழில் இறைவி அழகாலமர்ந்தநாயகி எனும் இனிய நாமம்  சொல்ல மங்களத்தைக் கூட்டித்தரும் கொடைநாயகி. சௌந்தர்யத்தை கூட்டுவிக்கும் புன்னகை தவழும் தேவி. 

அப்பர் சுவாமிகள், 
‘‘அழகாலமைந்த உருவுடை மங்கையுந் தன்னொருபா லுல காயு நின்றான்’’ என்று இவள் பெருமை பேசுகிறார். 

திருப்பூந்துருத்தியிலிருந்து ஏழு பல்லக்குகள் புறப்பட்டு திருநெய்த்தானம் என்கிற தில்லை ஸ்தானத்தை அடையும். 

இத்தலத்தைக் கடக்கும் காவிரியின்  பணிவைப் பாடாத அடியார்களே இல்லை எனலாம். 

சப்தஸ்தானம் என்னும் மாபெரும் அரிய விழாவினை கண்டோர் சிவமாவர் என்பது ஆன்றோர் வாக்கு. 

ஏழு தலத்து பல்லக்குகளினூடே பயணிப்போரின் பிறவி அறுபடும். 
கலந்து கொண்டு  சிவனருள் பெறலாம் ..!

ஆடி அமாவாசையன்று நீர்க்கடனைச் செலுத்துவதற்கு   தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கடற்கரை அக்னி தீர்த்தம் மிகவும் சிறப்பானதாகும். 

இங்கு சங்கல்பம் செய்துகொண்டு கடலில் நீராடி, வேதவிற்பன்னர் உதவியுடன் திலதர்ப்பணம் செய்தால் பெரும் புண்ணியம் கிட்டும் என்பர். 

முக்கடல் கூடும் கன்னியாகுமரி, திருப்புல்லானி, வேதாரண்யம், கோடியக்கரை தனுஷ்கோடி, கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள கடற்கரையான சில்வர் பீச் போன்றவையும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.

 ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருவையாறு புஷ்ப மண்டபம் படித்துறை, விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாற்றங்கரை, நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதிக்கரை ஆகியவை புகழ்பெற்றவையாகும்.

குளக்கரையில் பிதுர் பூஜை செய்வதும் போற்றப்படுகிறது. கும்பகோணம் மகாமகத் தீர்த்தக் குளக்கரையில் பிதுர்பூஜை செய்வதைக் காணலாம். 

கும்பகோணம் சக்கரப் படித்துறையும் சிறப்பானது. 

திருவெண்காடு சிவன் கோவிலில் சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்களில் நீராடி அருகிலுள்ள அரசமரத்தடியில் அமைந்துள்ள ருத்ரபாதம் பகுதியில் திதி தர்ப்பணங்கள் செய்வது நல்ல பலன்களைத் தரும்.

மயிலாடுதுறை செல்லும் வழியில் பூந்தோட்டம் அருகேயுள்ள செதலபதி திருத்தலமும், 
திருக்கடையூர் திருத்தலமும், 
திருச்சி சமயபுரம் கோவிலும், 
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலும் பிதுர்பூஜைக்கு ஏற்ற தலங்களாகத் திகழ்கின்றன.

தங்கள் ஊருக்கு அருகிலுள்ள திருத்தலத்திற்குச் சென்று பிதுர்பூஜையை முறைப்படி செய்து, ஏழை, எளியவர்களுக்கு முடிந்த அளவு அன்னதானம் செய்தால், முன்னோர்களின் ஆசியால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


தர்ப்பை புல்லை  வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். 


காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக்கட்டம், பவானி முக்கூடல், பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள்.

 இன்று ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறையில் புதுமண தம்பதிகள் குவிந்தனர்
நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை. 

சூரியனும் சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு நேரே நேர்படும் அமாவாசை பிதிர்கருமத்திற்கு விசேஷமானது. 
பிதுர் லோகம் எனப்படும். வடக்கு நோக்கிச் சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாசமாகும். ஆகவே ஆடி அமாவாசை பிதிர் தர்ப்பணத்திற்கு மிகவும் சிறந்த காலமாகும்.
ஆடி அமாவாசை தினம் நம்மை விட்டு நீங்கியவர்களை நினைவு கூறும் நன்னாள். அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் இழைத்திருக்கக்கூடிய பிழைகளுக்கு பேசியிருக்கக்கூடிய தீச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு வழியாகவும் நாம் இந்த நல்நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்லும் வழியாகவும் அமாவாசையன்றும் நாம் முன்னோருக்கு வழிபாடு செய்கிறோம்.

பிதிர்க்கடனுக்கு பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் - 
சேதுக்கடல் அக்னி தீர்த்தம்
 அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் செய்யப்படும் வழிபாடு சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று.

ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டங்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள்.  

பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.

தெற்கு நோக்கிச் செல்லும் புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்களைச் செய்து ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

தேவர்கடன் இறைவனை வழிபடுவதாலும், 
முனிவர்கடன் வேதம் ஓதுதலாலும், திருமுறை பாராயணம் (தேவாரம் திருவாசகம்) பாடுவதாலும், 
பிதிர்க்கடன் இறந்த ஆத்மாக்களை நினைந்து எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தல் மூலமாகவும்  தீர்க்கப்படுகின்றன. 

நீத்தார்கடன் எனப்படும் பிதிர்க்கடனை தீர்க்கவும், இக்கடமையை செய்ய ஏற்ற நாளாககவும் வருவது ஆடி அமாவாசை தினமாகும்.

எள்ளு நீருடன் தர்ப்பைப்புல் நுனியால் இறைத்து விடுவதால் பிதிர்கள் திருப்தி அடைவார்கள். தர்ப்பணம் என்பது திருப்திப்படுத்துதல் என்று பொருள் படும்.

பகவான் விஷ்ணுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்டதும் சகல பாபங்களையும் தீர்க்க வல்லதும் ஆகிய எள்ளும், தாகத்தை தீர்க்கும் நீரும், கொண்டு தர்ப்பணம் செய்து பிதுர் ஆசியையும் குருவின் ஆசியையும் பெற வேண்டும்.  
குருவிற்கு தானம் வேட்டி சால்வை அரிசி காய்கறி குரு தட்சனை வழங்கி ஆசிர்வாதம் பெறவேண்டும்.

வீட்டில் அமரர்கள் படத்தின் முன்பு  வாழை இலை உணவு படைத்து கற்பூர ஆராதனை செய்து வணங்கி  உறவினருடன் கூடி மதியம் உண்ணவேண்டும்.

ஆகவே இறைபதம் எய்திய ஆத்மாக்களுக்கு ஆத்ம தர்ப்பணம் செய்ய ஆடி அமாவாசை நாளை பயன்படுத்தி இறையருளை பெற்று ஆனந்த வாழ்வு வாழலாம்..!

Saturday, July 27, 2013

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்






ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்பு வில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.


 மாதுளம் பூவையொத்த சிவந்த நிறத்தினளை, 
எங்கள் தாயை, அபிராமவல்லியை, 
அனைத்துலகங்களையும் ஈன்றருளியவளை,
உலகங்களையெல்லாம் காத்து ரட்சிப்பவளை, 
அழகிய நான்கு திருக்கரங்களில் அங்குசம், பாசம், மலர்ப்பாணம், கரும்பு வில் ஆகியனவற்றை ஏந்தியிருப்பவளைத் தொழுபவர்களுக்கு எப்போதும் எந்த ஒரு துன்பமும் நேராது.

பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை என 
10 வாரம் தொடர்ந்து விழா நடைபெறும்.
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
 வெள்ளிக்கிழமை கோ பூஜையும், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கணபதி ஹோமமும், 108 பால்குடம் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும் ..
அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் நவகலச பூஜை சிறப்பம்சம் ..!

பெரியபாளையத்தில் ஆரணியாற்றங்கரையில் வீற்றிருந்து கேட்ட 
வரம் தரும் பவானி அம்மன் புற்றுக்குள் சுயம்புவாக தோன்றிய அற்புதம் ..! 

பெரியபளையம் அன்னை பவானி அம்மன் பரமசிவனின் அட்டமூர்த்திகளில் ஜலமூர்த்தியான `பவர்' என்ற அம்சத்தின் தேவி என்று கருதப்படுகிறார்.

வாழ்வின் வடிவமாய், வாழ்விற்கு மூலமாய், வாழ்வினை அளிப்பதாய் உள்ள தண்ணீருக்கு அத்தன்மையை அளித்து, திகழும் அன்னை பவானி, தன்னை வழிபடும் அன்பர்கட்கு வாழ்வினை அளிப்பவளாகத்திகழ்கிறாள்..!

இவ்வுலகில் எது பொய்த்தாலும்,  பவானியின் அருள் பொய்ப்பதில்லை. வைசூரி, காலரா போன்ற கொள்ளை நோய்களிலிருந்து மக்களைக் காத்தருளும் அன்னை இவள்.
 “மகமாயி! தாயே!” பெரியபாளையத்தாளே! ‘பாடைக்கட்டி’ எடுத்து வந்து போடுகிறேன். பொங்கலிடுகிறேன். இளநீர் கண்திறக்கிறேன்” என்று பலவிதமாக பிரார்த்தனைகள் செய்யும் தலம் இது.

எது பொய்த்தாலும் பெரியபாளையத்தாள் அருள் பொய்க்காது.
 
அம்மனுக்கு பிரியமான வேப்பிலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வேப்பிலை சரத்தை உடம்பில் கட்டிக்கொண்டு ஆலயத்தை சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள் ...

பெரியபாளையத்து அம்மன் ஒரு கையில் சக்ராயுதமும் மற்றொரு கையில் கபாலக்கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள்.

இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், கல்வி,  உடல் சக்தி (வீரம்) மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை.

சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது.

அருள்மிகு ரேணுகாதேவி பவானி பெரியபாளையத்து அம்மனாக கொலு வீற்றிருக்கிறாள்.

பாளையம் என்றால் படை வீடு என்று பொருள்..

பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும்.

முதலில் விநாயகரை வணங்கி விநாயகர் சன்னதி பின்புறம் உள்ள மாதங்கி அம்மனை வழிபட வேண்டும்.

சுற்றுப் பிரகாரத்தில் பவானி அம்மன் உற்சவர் சன்னதி உள்ளது. 

 பிரகாரப் பாதையில் வள்ளி-தெய்வானை சமேத முருகர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், பரசுராமர் சன்னதி உள்ளன.

ஆந்திரா வளையல் வியாபாரிகள் சென்னைக்கு வளையல் மூட்டைகளை தலையில் சுமந்தபடி கால்நடையாகவே வந்து பெண்களின் கையில் வளையல் போட்டு விட்டவுடன் மங்களகரமாக  வாழ்த்துவதற்கு அறிகுறியாக, வளையல் அணிந்த பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பதற்காகவே  பொட்டலங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு வருவார்கள்.

ஆந்திராவுக்குத் திரும்பி கொண்டிருந்த வளையல் வியாபாரி,  ஒருவர் பெரியபாளையத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து சற்று நேரம் தூங்கினார். சிறிது நேரம் கழித்து கண் விழித்தார்.

அருகில் வைத்திருந்த வளையல் மூட்டை காணாததை அறிந்து  தேடினார். அவரது கண்ணில் பெரிய பாம்பு புற்று தென்பட்டது. சந்தேகத்துடன் அந்த புற்றுக்குள் எட்டிப் பார்த்தார். வளையல் மூட்டை அங்கு கிடந்தது.

ஒரு கம்பை எடுத்து வந்து வளையல் மூட்டையை எடுக்க முஅவரால் முடியவில்லை. நீண்டநேரம் போராடியும் அவரால் வளையல் மூட்டையை எடுக்க இயலவில்லை. ஆந்திராவில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பி சென்றுவிட்டார்.

அன்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த போது,  கனவில் பவானி அம்மன் தோன்றினாள். ``நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி ஆக அவதாரம் எடுத்துள்ளேன். உன் வளையல் மூட்டை விழுந்துள்ள புற்றில் சுயம்புவாக கோவில் கொண்டுள்ளேன். இதை நினைத்து நீ பயப்படாதே. நீ மீண்டும் உடனே அங்கு வா.  தினமும் வணங்கி வழிபட ஒரு கோவில் எழுப்பு'' என்று உத்தரவிட்டாள்.


கடப்பாரை எடுத்து வந்து புற்றை இடித்து அகற்ற பாதி புற்று இடிக்கப்பட்ட நிலையில் ``ணங்'' என்று ஒரு சத்தம் கேட்டது. கடப்பாரையில் ரத்தம் காணப்பட்டது.  புற்றில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்த பகுதி முழுவதும் ரத்தம் கசிந்தது. பூமியே ரத்தத்தால் நனைந்து போனது.

புற்றுக்குள்  இருந்த  சுயம்பின் மேல் பகுதியில் இருந்து தான் ரத்தம் குபுகுபு என்று வந்து கொண்டிருந்தது. உடனே வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் பீறிட்டு வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது.அந்த இடத்தில் சுயம்புவை மூலமாகக் கொண்டு அம்பிகைக்கு கோவில் கட்டப்பட்டது.

கோவில் கருவறையில் சுயம்பு மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.

தற்போதும் அந்த கவசத்தை அகற்றிவிட்டு பார்த்தால் சுயம்பு உச்சியில் கடப்பாரை பட்ட காயத்தின் வடுவைக் காணலாம்.

Periyapalayam Temple inside
periyapalayam Shops - Children's attraction