Thursday, June 2, 2011

மலைகளின் ராணி - அழகிய காட்சிகள்



என் மகன் சிறுவயதில் தன் தந்தையுடன் அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு ரேஸ்கோர்ஸ் சென்ற போது மேட்டுப்பாளையம் சாலையைப் பார்த்து இந்த சாலை எங்கே போகும் அப்பா? என்று கேட்க, அவர் இப்படியே போனால் ஊட்டி வரும் போகலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். வீட்டிலிருந்த எனக்கு போனில் அம்மா நாங்கள் இப்போது ஊட்டி தாசப்பிரகாஷ் ஹோட்டலின் முன் நிற்கிறோம். இன்னும் கடைகள் எதுவும் இங்கே திறக்கவில்லை. சாப்பிட்டுவிட்டு, சுற்றிப்பார்த்துவிட்டு வருகிறோம் எனக் கூற வியப்பு.


ஒரு வட இந்தியரின் ஆடம்பரத்திருமணம் ஊட்டியில் ந்டைபெற்றது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பிரபல ரிசாட் முழுமையும் பதிவு செய்து தாண்டியா நடனம், தம்போலா விளையாட்டு, பிரல கலைஞர்களின் வாத்தியங்கள் மற்றும் பாட்டுகச்சேரி, பலவகை நடனங்கள் என்று மிகவும் அமர்க்களப் படுத்தியிருந்தார்கள். அறுசுவை விருந்துக் கொண்டாட்டத்தில் கவனத்தை ஈர்த்தது கம்பு தானியத்தால் செய்யப்பட்ட சாதம். தண்ணீர் ஊற்றி தயிர் கலந்து சாப்பிட்டால் உடலுக்குக் குளிர்ச்சியாம். அதே சாதத்தை சூடாக நெய் உருக்கி ஊற்றி சிறிது வெல்லம் கலந்து சாப்பிட்டால் அந்த குளிருக்கு ஏற்ற உண்வாகும் என்று கூறினார்கள். அந்த நவம்பர் மாத குளிரில் நடுங்கியபடியே ஐஸ்கிரீம் சாப்பிட்டது மற்க்கமுடியாத அனுபவமானது.

உலக பாரம்பரிய சின்னமாக ஊட்டி மலை ரயில் அறிவிக்கப்பட்டதைஇதையடுத்து உலக சுற்றுலா வரைபடத்தில் ஊட்டி மலை ரயிலும் இடம் பெற்றது.
Train
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியின் அழகுக்கு அழகூட்டும் ஒரு அம்சம் மலை ரயில். நீண்டு நெளிந்து கிடக்கும் மலைகளின் ஊடாக, ஜிகுஜிகுவென மெல்ல மெல்ல அசைந்து போகும் மலை ரயிலில் பயணம் செய்யாவிட்டால் ஊட்டி பயணம் நிச்சயமாக நிறைவு பெறாது.

100 வருடங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலை ரயில் பாதை அமைக்கப்பட்டது.

பின்னர் இந்த ரயில் பாதை ஊட்டி வரை நீடிக்கப்பட்டது. நீலகிரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் இந்த மலை ரயிலில் பயணம் செய்கிறார்கள். 
அரவங்காடு தொழிற்சாலை, மற்றும் குகைகள், திருப்பங்கள், என்று காரில் போகும் போது பார்க்கமுடியாத இயற்கைக்காட்சிகள் எழில்மிகுந்த மலர்கள், பச்சை சுடரும் வனங்கள் வன விலங்குகள் எல்லாம் காட்சிப்படுகின்றன.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இரண்டு ருத்ராட்ச மரங்கள் 
அருமையாய் காட்சிப்பட்டன.
கோடை விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஊட்டியில் ரோஜாப்பூங்கா அருமையாய் பராமரிக்கப்படுகிறது. பழக்காட்சி, பூக்கண்காட்சி சிந்தைகவரும் வகையில் சிறப்பாக நடைபெறும்.
கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் ஊட்டி என்ற உதகமண்டலம் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பையோஸ்பியர்(biosphere) நீலகிரி. நீலகிரி மலைப்பகுதி உலகத்தில் இருக்கும் 14 hotspots களில் மிக முக்கியமான ஒன்று.
 உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது.
பச்சை பசலேன தோற்றமளிக்கும் பூங்காவில் அரிய வகையான பேப்பர் மரம், குரங்குகள் ஏற முடியாத மரம், 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் போன்றவைகளை காணலாம். 
இத்தாலிய வகைப் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள், ஆர்சிட் பூக்கள், பெர்ன் ஹவுஸ் போன்றவைகளை காணலாம். வருடந்தோறும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் இங்கு மே மாதம் மலர்க் கண்காட்சி நடைபெறும்.

 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில், எல்க் மலையில்  பூங்கா தற்போது 2241 வகையான 20,000க்கும் மேற்பட்ட மலர்கள் உள்ளது. இங்கு உள்ள நில மாடம் என்னுமிடத்தில் இருந்து மொத்த பூங்காவையும் கண்டுகளிக்கலாம். 





[meadow.jpg]

Wednesday, June 1, 2011

வெள்ளெருக்கு நரசிம்மர் - பாவூர் பரந்தாமன்..



நாளை என்பதே நரசிம்மத்திற்குக் கிடையாது -உடனடி கைமேல் பலன் கொடுப்பவர் நரசிம்மர்.
கர்ப்பவாசம் இல்லாமல் ஸ்தம்பத்தில் உக்ர ரூபமாய் அவதரித்த அவதாரம். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற தன் பக்தன் வாக்கினைப் பரிபாலனம் செய்ய அண்டசரசரங்களிலும் ஊடுருவிக் கலந்தவன்.

ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.
 பிரகலாதனின் அசஞ்சல பக்தியை உணர்த்திய அவதாரம் நரசிம்ம அவதாரம்
அந்த நரசிம்மர் வெள்ளெருக்கில் அருளும் தலமாக தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் அம்மாப்பேட்டையில் - மன்னார்குடியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திகழ்கிறது.
வெள்ளெருக்கில் விநாயகர் தானே கேள்விப்பட்டிருகிறோம். 
விநாயகர் சதுர்த்தியின் போது வெள்ளெருக்கு மாலை அணிவிப்பது விஷேசமாயிற்றே.


சூரியனார் கோவிலிலும் வெள்ளெருக்கு தலவிருட்சமாயிற்றே.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆன்மீக தெருக்கூத்து நிகழ்ச்சிகள் பிரபலமாக நடைபெற்று வந்தன. அம்மாப்பேட்டையில் நரசிம்ம ஜெயந்தியின் போது பக்தபிரகலாதன் நாடகம் நடைபெறும்.

அந்தத் தெருகூத்து வம்சாவழியினர் ஒருவர் கனவில் நரசிம்மர் தோன்றி 
ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு இருக்கும் தன்னை எடுத்து பூஜைகள் செய்யுமாறு அறிவுறுத்தினபடி அங்கு போய் பார்த்தபோது ஒரு பாம்பு புற்று இருக்கவே அதைத் தோண்டிப்பார்த்தபோது ஒரு பெரிய வெள்ளெருக்கு வேர் காணப்படவே அதில் நரசிம்ம உருவத்தைச் செதுக்கி வழிபட ஆரம்பித்தார்கள்.

பிறகு நரசிம்மர் வாக்குப்படி, அந்த வெள்ளெருக்கு மூர்த்தியை மூலவராகவும், உற்சவமூர்த்தியாக லட்சுமி நரசிமரையும் பிரதிஷ்டை செய்து இன்றளவும் உற்சவம் நடத்தி , கோவிலையும் அழகுற நிர்வகித்து வருகிறார்கள்.

பக்தர்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கும் வரப்பிரசாதியகத் திகழ்கிறார் வெள்ளெருக்கு நரசிம்மர்.

பாவூர் பரந்தாமன் - பதினாறு கரங்களால் பரிவுடன் அருளும் நரசிம்மர்..























 
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பாவூர் சத்திரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்- சுரண்டை செல்லும் வழியில் கீழப்பாவூர் என்னுமிடத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கை உடனுறை ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி ஆலயத்தில் உள்ள நரசிம்ம மூர்த்தி பதினாறு கரங்களுடன் ஹிரண்ய கசிபுவை வதம் புரியும் கோலத்தில் தர்மம் காக்கும் தலைவனாகக் காட்சியளிக்கிறார். , 


பதினாறுகை நரசிம்மர்: மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார். 
இடது மடியில் இரணியனைக் கிடத்திக் கொண்டு தாங்கிப்பிடிக்கிறார். நான்கு கரங்கள் அவனுடைய வயிற்றைக் கிழித்தபடியும், இரண்டு கரங்கள் குடலை உருவிக் கொண்டும், மற்ற எட்டுக்கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியும் உள்ளன. நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகியோர் லட்சுமி நரசிம்மரை வணங்கியபடி நிற்கின்றனர். 
நரசிம்மரின் தலைக்குமேலே தர்மத்தை நிலைநாட்டும் வெண்கொற்றக்குடையும், இருபுறமும் வெண்சாமரமும் உள்ளன. 


நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகிய நால்வரும் வைகுண்ட நாதனான பெருமாளிடம் பிரகலாதனுக்கு அருள்செய்த நரசிம்ம ரூபத்தில் தரிசிக்க வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர். 

பொதிகைமலையில் சித்ரா நதிக்கரையில், தவம் செய்துவரும்படியும், தக்க சமயத்தில் நரசிம்மராக காட்சி தந்து அருள்வதாகவும் இறைவன் அருளினார் ... 

நால்வரும் பெருமாளைக் குறித்த தவக்கனல் வைகுண்டத்தை எட்டியது. 

பிரதோஷ வேளையில் நரசிம்மர், இரண்ய சம்ஹார கோலத்தில் அவர்களுக்கு காட்சியளித்தார். 

கர்ஜனை செய்த பெருமாளைக் கண்ட நால்வரும் மெய்மறந்து தரிசித்தனர். 

பெருமாள் தரிசனம் தந்த இடத்தில் மன்னர்களால் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் அமைக்கப்பட்ட மூர்த்தி மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீப்பற்றி எரிந்து விட்டது. 

இதனால், நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்கும் வகையில் அவருடைய மார்பில் திருமகளைப் பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினர். 



கலியுகத்தில் அர்ச்சாவதாரமாகக் கோவில் கொண்டிருக்கும் என்னை நீ அர்ச்சனை செய்து வழிபட்டால் உன் பாவங்கள் அனைத்தும் நீங்கும். மானிடனே, நீ இதைப் பயன்படுத்திக் கொள்' என்கிறார் மகாவிஷ்ணு.

ஆலயத்தில் தீப மேற்றி வழிபட்டால் மாபெரும் யாகம் செய்த பலன் கிட்டும் என்பதால், இங்கே நரசிம்மருக்கு தீபமேற்றி வழிபடும் முறை முதன்மையாக உள்ளது.



ஆக்ரோஷம் தணியாமல் வந்தமர்ந்த நரசிம்மரின் சினத்தைக் குளிர்வித்த  திருக்குளத்தின்மீது தன் பார்வை படியும்படி மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் நரசிம்மர்.

திருக்குளத்தில் மூழ்கி நரசிம்மரை வழி பட்டால் நம்மிடமுள்ள படபடப்பு, ஆத்திரம், கோபம், குரோதம் போன்ற சத்ரு குணங்கள் அகன்று விடும்.



திருக்கோவில் அமைந்திருக்கும் பகுதியில் மாலை வேளையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம்.

முதலில் பயந்து கொண்டிருந்த மக்கள், பின்னாளில் மாலை நேரப் பூஜையில் இளநீர் அபிஷேகம், பால் அபிஷேகம் செய்து பானகம் நைவேத்யம் செய்யத் தொடங்கினர். அப்போது முதல் பெருமாள் சாந்த மூர்த்தியாகி பலருக்கும் பலவிதங்களில் அருள்பாலித்து வருகிறார்.

கடன்களிலிருந்து நிவாரணம் பெற, நெய்தீபம் ஏற்றி நரசிம்மரை பதினாறு முறை வலம் வந்து வந்தும், பானகம் நிவேதனம் செய்தும் வழிபடுகின்றனர். 

நரசிம்மருக்குரிய நட்சத்திரமான சுவாதிநாளிலும், பிரதோஷத்திலும் இளநீர் மற்றும பால் அபிஷேகம் நடக்கிறது. இவரை சுவாதியன்று தரிசிப்பதால் தடைபட்ட திருமணம் விரைவில் நிறைவேறும். 


இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்திலுள்ள பாவூர்சத்திரம் சென்று, அங்கிருந்து சுரண்டை செல்லும் ரோட்டில் 5 கி.மீ., சென்றால் கீழப்பாவூரை அடையலாம். 


திறக்கும்நேரம்: காலை 7.30- 10.30மணி, மாலை5- இரவு7.30மணி
போன்: 94423 30643.

நரசிம்மப் பெருமாள் தன்னை நாடி வரும் அடியார்களுக்கு நாழிகைப் பொழுதில் நலம் செய்தருள்வார்.
பாவூர் சென்று பகவானின் அருளைப் பெறலாமே.