Tuesday, July 9, 2013

மங்களங்கள் அருளும் மாதங்கி.






கண் களிக்கும்படி கண்டு கொண்டேன், கடம்பாடவியில் 
பண்களிக்கும் வீணையும் கையும் பயோதரமும் 
மண்களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர் குலப்
பெண்களிற் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே! -

மாதங்கியைப் பற்றி அபிராமி பட்டர், தனது அபிராமி அந்தாதியின் எழுபதாவது பாடலில், போற்றுகிறார்.

  மாதங்கியைப் போற்றி  அதியற்புத துதியான  ‘ச்யாமளா தண்டகம்’ பாடிய மகாகவி காளிதாஸர், மாதங்கி உபாசனையால் பல அற்புத சக்திகளைப் பெற்றவர்

 மாதங்கியே சர்வ தீர்த்தம், 
சர்வ மந்த்ரம், சர்வ தந்த்ரம், 
சர்வ சக்தி, சர்வ பீடம், சர்வ தத்வம், 
சர்வ வித்யை, சர்வ யோகம், 
சர்வ நாதம், சர்வ சப்தம், 
சர்வ ஸ்லோகம். சர்வ தீக்ஷை, 
முதலான சர்வ ஸ்வரூபிணியாகவும் 
எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவளாகவும் போற்றிப் புகழ்ந்துள்ளார். 

மாதங்கி காயத்ரி
ஓம் மாதங்க்யை வித்மஹே
      ரத்னேஸ்வர்யை தீமஹி
தன்னோ மாதங்கி ப்ரசோதயாத்.
 

படைப்புக்கடவுள் பிரம்மாவின் நாவில் உறையும் 
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக வடிவமே 
லலிதாம்பிகையின் கரும்பு வில்லில் இருந்து தோன்றிய அன்னை மாதங்கி. 

98 எழுத்துக்கள் கொண்ட மாதங்கி மந்திரம் ஒருவருக்கு சித்தியாகிவிட்டால் உலகில் உள்ள மற்ற வேத மந்திரங்கள் உட்பட அனைத்துமே ஒரு முறை படிப்பதாலேயே சித்தியாகும் என மதங்கமனுகோசம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 லலிதா பரமேஸ்வரிக்கே ஆலோசனை கூறும் மந்த்ரிணீயாகத் திகழும் 
மாதங்கி அன்னையின் ரதம் கேயசக்ர ரதம் என அழைக்கப்படுகிறது. 


கேயம் என்றால் பாட்டு. கேயசக்ர ரதம் அசைந்து வரும்போது, அதன் ஒலி, சங்கீதமாய் கானம் இசைக்கும்.

எப்போதும் தவழும் புன்முறுவலுடனும் சுழன்று மயக்கும் விழியுடையவளாக விளங்குகிறாள். 


கதம்ப மலர்கள் தேவியின் கூந்தலை அலங்கரிக்கும் பேறு பெற்றன. 

மடியில் வீணையை வைத்துக் கொண்டு கீழ் இரு திருக்கரங்களால் அதை மீட்டிக் கொண்டும் மேலிரு கரங்களில் சம்பா நெற்கதிர்களையும் கரும்பு வில்லையும் ஏந்தியுள்ளாள். 
மற்ற நான்கு திருக்கரங்களில் கிளி, சாரிகை ஆகிய பறவைகளும் பாசமும் அங்குசமும் அலங்கரிக்கின்றன. 

திருமுகம் பொலிவாய்த் துலங்க, நெற்றியில் கஸ்தூரி திலகம் பளிச்சிடுகிறது. 

திருமுடியில் சந்திர கலையுடன் கூடிய கிரீடம் மின்னுகிறது. 

லலிதா திரிபுரசுந்தரியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றிய மாதங்கி. அமுதமயமான கடலின் நடுவில் ரத்தினத் தீவில், கற்பக மரங்கள் செறிந்த காட்டில், நவமணிகளால் இழைக்கப்பட்ட மண்டபத்தினுள், தங்க சிம்மாசனத்தில் அமர்ந்தருள்கிறாள்.

 மதங்க முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு மகளாக அவதரித்ததால் மாதங்கி எனப் பெயர் பெற்றாள். 

மகிஷாசுர வதத்தின்போது இவள் சும்ப-நிசும்பர்களை வதைத்தவள் என சப்தசதீ பெருமையுடன் போற்றுகிறது. 

மகாதிரிபுரசுந்தரி, பண்டாசுரனுடன் வதம் செய்ய முற்பட்டு நிகழ்த்திய பெரும் போரில், மாதங்கி, விஷங்கன் எனும் அசுரனை அழித்தாள் என லலிதோபாக்யானம்  புகழ் பாடுகிறது. 

வாக்விலாசத்திற்கும் அறிவின் விருத்திக்கும்  மாதங்கி அருள் கட்டாயமாகத் தேவை. 

புலவர்களை மன்னர்களுடன் சரியாசனத்தில் வைக்கக் கூடிய வல்லமை மாதங்கிக்கு உண்டு. 

ராஜசியாமளா என்றும் வணங்கப்படும் மாதங்கி உபாசகர்கள் உள்ளத்தில் பசுமையை, குளிர்ச்சியைப் பிரவாகமாக பொழிபவள்..

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் காயத்ரி மண்டபத்திற்கு வலப்புறத்தில் ராஜசியாமளாவின் அழகான திருவுருவை வணங்கி வளம் பெறலாம் .. 

புதுக்கோட்டை புவனேஸ்வரியின் கருவறையின் முன்னும், 
சென்னை ஆதம்பாக்கம் புவனேஸ்வரி ஆலய கருவறை முன்னும் மாதங்கியின் நின்ற கோல திருவுருவங்களை தரிசிக்கலாம். 

லலிதையின் மந்திரிணியாக, பூரண மகாசக்தியாக, மதுரையம்பதியில் பிரகாசிக்கும் மீனாட்சி, மாதங்கியின் வடிவம் என்பது உபாசனையின் ரகசியம். 

 மாதங்கி ஹயக்ரீவரையே குருவாய் அடைந்தவள். 

பிரம்மாவின் சிருஷ்டித் தொழிலுக்கு உதவுபவள். 
உயர்விலும் உயர்வானவள் என்பதை உணர்த்தும் உத்திஷ்ட புருஷி என்ற பெயரும் இவளுக்கு உண்டு. 

 மாதங்கி, சங்கீத மாத்ருகா எனப் புகழப்படுகிறாள். இனிமையான பேச்சு, கிளியை நினைவுறுத்தும். எனவே, அதை தேவி தன் கைகளில் ஏந்தியுள்ளாள்
Photo: ஸ்ரீசெண்பகவல்லி அம்மையே போற்றி!

19 comments:

  1. மங்களங்கள் அருளட்டும். நன்றி

    ReplyDelete
  2. மாதங்கி என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டு நான். விவரமாக தகவல்கள் இப்போது தெரியவந்தது உங்களால். சென்னை ஆதம்பாக்கத்துல தரிசிக்க முடியும்கறது கூடுதல் மகிழ்ச்சி. சீக்கிரம் பார்த்து வணங்கிடனும்னு மனசுக்குத் தோணிடுச்சு. மிக்க நன்றி!

    ReplyDelete
  3. பதிவுதோறும் படங்களும், பாடல்களும் மிகவும் அருமை! நன்றி!

    ReplyDelete
  4. சிறப்பான படங்கள்... நன்றி அம்மா...

    ReplyDelete
  5. மாதங்கியின் திருப்பாதமும்
    அவள் பெருமைகளும் கண்டு படித்து
    மனம் மகிழ்வு கொண்டோம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மாதாங்கியின் பெருமைகளை அறிந்து கொண்டேன்.
    மாதங்கி அனைவருக்கும் நலத்தை நல்கட்டும்!
    மாதங்கியின் படங்கள் எல்லாம் அழகு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. superb pictures information about mathangi is new thanks for sharing

    ReplyDelete
  8. மங்களகரமான பதிவு..

    ReplyDelete
  9. 'மங்களங்கள் அருளும் மாதங்கி'க்கு வந்தனங்கள்.

    “மாதங்கி” மிகச்சிறப்பானதோர் பெயர்.

    >>>>>

    ReplyDelete

  10. என் சொந்த சித்தப்பாவின் [பிள்ளைவழி]ப் பேத்திக்கு இதே ”மாதங்கி” என்பது தான் பெயர்.

    அவள் கர்நாடக இசையில் மிகச்சிறந்த பிரபலமான மேடைப்பாடகி.

    தற்சமயம் தன் கணவர் + குழந்தைகளுடன் சென்னையில் இருக்கிறாள்.

    அவளுக்கு 'சித்தப்பா'வாகிய என்னிடம் மிகவும் பிரியம் உண்டு.


    >>>>>>

    ReplyDelete
  11. அம்மனின் படங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன.

    மேலிருந்து இரண்டாவது படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    >>>>>>

    ReplyDelete
  12. //லலிதா திரிபுரசுந்தரியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றிய மாதங்கி. அமுதமயமான கடலின் நடுவில் ரத்தினத் தீவில், கற்பக மரங்கள் செறிந்த காட்டில், நவமணிகளால் இழைக்கப்பட்ட மண்டபத்தினுள், தங்க சிம்மாசனத்தில் அமர்ந்தருள்கிறாள்.//

    மாதங்கியின் உதயம், தோற்றம், சிறப்புகள், எங்கெங்கெல்லாம் கோயில் கொண்டிருக்கிறாள் போன்ற பல விஷயங்களை அழகாக உங்களுக்கே உரித்தான தனிச்சிறப்புடன் எடுத்துக்கூறியுள்ளீர்கள்.

    மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    >>>>>>

    ReplyDelete
  13. அருமையானதோர் ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்.

    மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 965 ooooo

    ReplyDelete
  14. Now this is the Ashda Navarathiri.
    Correct time to worship RajaMadhanhi ma.
    Thanks for the post dear.
    I enjoyed every bit.
    viji

    ReplyDelete
  15. தெரியாத பல தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. மாதங்கியிநியைப் பற்றிய அறிய தகவல்கள் அடங்கிய அருமையான பதிவு.
    மாதங்கியின் அருளை எல்லோரும் பெறுவோமாக!

    ReplyDelete
  17. சியாமளா, மாதங்கி போன்ற பெயர்கள் அரிதாகவே காணப்பட்டாலும் அதற்குள் இத்தனை நுட்பங்கள் இருப்பது வியப்பு.

    ReplyDelete
  18. அரிய தகவல்கள், படங்களுடன் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  19. மாதங்கியின் அருளால் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கட்டும்.

    ReplyDelete