Tuesday, September 23, 2014

நவராத்திரி ஆராதனை




நவ இரவில் கண்டுகளித்திடவே நவரத்ன பொன்னூஞ்சல் ஆடிடும் அன்னை 

நாமகளாய் முதல் மூன்று நாளிரவில் வந்து  
நற்கல்வி கலை யெல்லாம் நல்கிடுவாய் அம்மா

இடைமூன்று நாளிரவில் இலக்குமியாய் வந்து
இகபோக செல்வங்களை எமக்களிப்பாய் அம்மா

வெற்றி தரும் செல்வியாய் வீரசுகுமாரியாய்
கடைமூன்று இரவினிலே காட்சி தரும் அம்மா

ஒருபாதி சிவனாக மறுபாதி உமையாக 
சிவகாமி தேவி பொன்னூஞ்சல் ஆடு

விண்ணோரும் மண்ணோரும் விரும்பி உனைத்துதிக்க
வண்ணமலர் பொன்னூஞ்சல் வந்தாடு அம்மா

பாரிஜாதம் மணக்க பவளக்கொடி ஊஞ்சலிலே
பார்வதியே பாலாம்பா பாங்குடனே ஆடு 

நம்புமடியார்கள் வினை நாளும் தீர்ப்பவளே
செம்பவளக்கொடி ஊஞ்சல் தனிலாடு அம்மா 

அருட்பெருஞ்ஜோதியே அராளகேசி உமையே
ரத்னகிரீசருடன் பொன்னூஞ்சல் ஆடு (லாலி)


புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல், நவமி வரை
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி.

அடுத்த நாளான தசமியில் விஜயதசமி கொண்டாடுகிறோம்.

நவராத்திரியின்போது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக விளங்கும் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரைப் பூஜிக்கிறோம்.
நவராத்திரியின்போது எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்தும்விதமாக, தெய்வ உருவங்கள் முதல் சிறிய உயிரினங்கள் வரை உள்ள அனைத்து உயிர்களையும் இறைவடிவாக பாவித்து, அவற்றை அழகாக- பொம்மைகளின் காட்சியாகக் கொலு வைத்து தினமும் ஆராதனை செய்கிறோம்.
மன்மதனை எரித்த சாம்பலிலிருந்து தோன்றிய பண்டாசுரன் என்ற
அரக்கன், தேவர்களை மிகுந்த துன்பத்துக்கு உள்ளாக்கினான். 

அவனை அழிக்க தேவி ஒன்பது இரவுகளில் வெவ்வேறு உருவங்களைக் கொண்டு போரிட்டு, பத்தாம் நாள் அவனை சம்ஹாரம் செய்தாள்.

தேவி போராடிய ஒன்பது ராத்திரிகளை நவராத்திரி என்றும்;
அசுரனை வெற்றி கொண்ட நாளை விஜயதசமி என்றும் குறிப்பிடுகிறோம். 

சக்திகள் ஒன்பது பேர். இவர்கள் நவராத்திரி நாட்களில்
அருளாட்சி செய்து நற்பலன் கிடைக்க அருள்புரிகிறார்கள்.

பிரதமை, துவிதியை, திருதியை ஆகிய முதல் மூன்று நாட்களில்
துர்க்கையை சிவப்பு நிற மலர்களாலும்; 

சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி ஆகிய அடுத்த மூன்று தினங்களில்
திருமகளை செந்தாமரை, ரோஜா போன்ற மலர்களாலும்; 
சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய கடைசி மூன்று நாட்களில்
கலைமகளை வெண்தாமரை, முல்லை, மல்லிகை ஆகிய
வெண்ணிற மலர்களாலும் பூஜிக்க வேண்டும்.
நவராத்திரி விழாவில் ஒன்பது நாட்களும் அம்பிகையை
ஒன்பதுவித வடிவங்களில் அலங்கரிப்பார்கள்.

முதல் நாள் மதுகைடபர் என்ற அரக்கர்களின் அழிவிற்குக் காரணமாக விளங்கிய தேவியை அபயம், வரதம், புத்தகம், அக்கமாலை ஆகிய வற்றைக் கொண்ட கரங்களோடு குமரி வடிவமாக அலங்கரிப்பார்கள். 
இரண்டாவது நாள் மகிஷாசுரனை வதம் செய்யப் புறப்பட்ட தேவியை ராஜராஜேஸ்வரியாக கரும்பு வில், மலரம்பு, பாசாங்குசம் ஏந்தியவளாய் அலங்கரிப்பார்கள்.
மூன்றாம் நாள் மகிஷாசுர வதம் செய்த தேவி சூலத்தைக் கையிலேந்தி மகிஷத்தின் தலைமீது வீற்றிருக்கும் கோலத்தில், கல்யாணி வடிவமாக அலங்கரிப்பார்கள்.

நான்காம் நாள் வெற்றித் திருக்கோலத்தில் காட்சி அளிக்கும் துர்க்கையை "ஜெய துர்க்கை' என்றும்; "ரோகிணி துர்க்கை' என்றும் அழைப்பர். சிம்மாசனத்தில் அமர்ந்து, இன்னல்களிலிருந்து விடுபட்ட தேவர்களும் முனிவர்களும் செய்யும் தோத்திரங்களை ஏற்று அவர்களுக்கு அருள் பாலிக்கும் கோலத்தில் வீற்றிருக்கிறாள்.
ஐந்தாம் நாள் துர்க்கை சுகாசனத்தில் வீற்றிருந்து, சும்பன் என்ற அசுரனால் அனுப்பப்பட்ட தூதுவனாகிய சுக்ரீவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பாவனையில் அலங்கரிக்கப் படுகிறாள்.

ஆறாம் நாள் சர்ப்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் சண்டிகா தேவியாக தூம்ரலோசன வதத்திற்குரிய தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்டு, கைகளில் அக்கமாலை, கபாலம், தாமரைப்பூ, பொற்கலசம் ஆகியவற்றைக் கொண்டவளாய், பிறையணிந்த தோற்றத்தில் அருட்காட்சி தருகிறாள்.

ஏழாம் நாள் சண்ட, முண்டர்கள் என்ற அசுரர்களை வதம் செய்தபின், பொற்பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் கோலத்தில் தேவி பூஜிக்கப்படுகிறாள். இவளை "சாம்பவி' என்றும் அழைப்பார்கள்.

எட்டாம் நாள் ரக்தபீஜன் வதைக்குப்பின், கருணை நிறைந்தவளாய், அமர்ந்த கோலத்தில் அலங்கரிக்கப்படுகிறாள். இந்தக் கோலத்தில் அஷ்ட சித்திகளும் புடைசூழ வீற்றிருக்கிறாள்.
ஒன்பதாம் நாள் கரங்களில் வில், பாசம், அங்குசம், சூலம் ஏந்தியவளாய், சிவசக்தி வடிவமாகிய காமேச்வரியாய் காட்சி அளிக்கிறாள். இது அரக்கர்களை அழித்த தோற்றமாகும்.
நவராத்திரி பூஜையில் கன்னிகைகளையும் சுமங்கலிகளையும் சக்தியாக வழிபடுவது சிறப்பம்சமாகும். இரண்டு வயது முதல் பத்து வயது வரையுள்ள பெண்களை குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, சுபத்திரை, துர்க்கை என்ற பெயர்களில் பூஜிக்கிறோம். 
சுமங்கலிகளை அழைத்து பூஜை நிறைவு பெற்றதும், வெற்றிலைப் பாக்கு, மங்கலப் பொருட்களுடன், நைவேத்தியம் செய்த பிரசாதத்தையும் கொடுத்து உபசரித்து அனுப்ப வேண்டும்.

சரஸ்வதி பூஜையன்று ஆயுத பூஜையும் செய்யப்படுகிறது. 

ஆயுதம் உபயோகிப்போர், படிப்பு, எழுத்து தொடர்புடையவர்கள் தாங்கள் உபயோகிக்கும் கருவிகளையும், புத்தகங்கள், எழுதுகோல் போன்றவற்றையும் பூஜையில் வைக்கிறார்கள். ஞானம் தரும் ஹயக்கிரீவரை முதலில் பூஜித்து, பின்னர் சரஸ்வதி பூஜை செய்கிறார்கள்.

வெண்தாமரையில் அமர்ந்து வெள்ளாடை அணிந்து திருக்கரங்களில் அங்குசம், வில், வஜ்ரம், கமண்டலம், சுவடி, வீணை, ஸ்படிக மாலை ஆகியவற்றுடன் பளிங்கு மேனியளாய்த் திகழ்கிறாள் சரஸ்வதி.

சரஸ்வதி கிருஷ்ணனின் முகத்திலிருந்து தோன்றியவள் என பிரம்ம வைவர்த்தம் நூலும், சிவசக்தி என்று கூர்ம புராணமும் கூறுகின்றன.

சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி அஷ்டோத் திரம், சகலகலாவல்லி மாலை போன்ற சரஸ்வதி வழிபாட்டு நூல்களைப் பாராயணம் செய்வர். அன்று புத்தகத்தைப் படிப்பதோ, ஆயுதங்க ளைப் பயன்படுத்துவதோ இல்லை. பூஜையில் வைக்கப்பட்ட கருவிகளை மறுநாள் விஜயதசமியன்று புனர்பூஜை செய்தபின்பே எடுத்துப் பயன்படுத்துவர்.

ஒன்பது இரவுகள் சக்தியாக விளங்கிய தேவி பத்தாம் நாள் சிவனுடன் அர்த்தநாரியாகி விடுகிறாள் என்பது ஐதீகம்.

மகிஷாசுரனை அழிக்க பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரும் ஓருருவமாக துர்க்கா தேவியாக உருவெடுத்து, ஒன்பது நாட்கள் விரதமிருந்து, பத்தாம் நாள் மகிஷாசுரனை வென்று மகிஷாசுரமர்த்தினியாக- வெற்றியின் திருவுருவமாக அருள்பாலிக்கிறாள்.

விஜயதசமியன்று அரச குடும்பத்தினர் வன்னி மரத்தடிக்குச் சென்று, அம்மரத்தை வழிபட்டு, கோவில்களில் அம்பு போடும் உற்சவம் நடத்துவார்கள்.

பொதுவாக வன்னிமரம் துர்க்கா தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறது. ஆகவேதான் வன்னிமர வழிபாடு துர்க்காதேவி வழிபாடாக நடத்தப்படுகிறது. வன்னி மரத்தைப் பூஜிப்பவர் களின் பாவங்கள் விலகும்; சத்ருக்கள் அழிவர் என்பது நம்பிக்கை. விஜயதசமியன்று புனர்பூஜை செய்து, வன்னி மரத்தை வணங்கி மகிஷாசுர மர்த்தினியை வழிபட்டு அவளருள் பெறலாம்.

துர்க்கையானவள் புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் மகாலட்சுமியாய் அவதரித்து, சுக்லபட்ச அஷ்டமி திதியில் மகிஷனை வதம் செய்து, நவமியில் தேவர்கள் தன்னை வழிபட, விஜயதசமியன்று தேவர் களிடமிருந்து விடை பெற்று மணித்வீபம் செல்கிறாள்.

சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கும் துர்க்கை, தேவர்கள் தேஜஸ்ஸிலிருந்து தோன்றியவள் என்பதால் "ஸர்வ தேவதா' என்றும்; முக்குணங் கள் கொண்டவள் என்பதால் "திரிகுணா' என்றும் அழைக்கப்படுகிறாள்.

லட்சுமிதேவி பூலோகத்தில் அலர்மேலு மங்கையாகப் பிறந்து விஷ்ணு பெருமானாகிய திருப்பதி ஏழுமலையானை மணாளனாக அடையும் பொருட்டு, நவராத்திரி ஒன்பது நாட்களும் தவமிருந்து தன் விருப்பம் நிறைவேறப் பெற்றாள் என்பது புராண வரலாறு.

சரஸ்வதியும் இந்த நவராத்திரி ஒன்பது நாட்களும் பிரம்மாவைக் குறித்து தவமியற்றி வழிபட்டிருக்கிறாள்.

விஜயதசமியன்று அனைவரும் தங்கள் குருவிற்கு வணக்கம் தெரிவித்து, குரு தட்சிணை அளிப்பது மரபு. வருடம் முழுவதும் வெற்றி பெற குருவின் அருளே பிரதானமானது என்பதை உணர்ந்து குருவை வணங்குவோம்.
ஜனமேஜய மன்னன் வியாச முனிவரிடம் நவராத்திரியின் மகிமையையும், அதைக் கொண்டாடும் வழிமுறைகளையும் கேட்ட போது, அவற்றை முனிவர் எடுத்துக் கூறினார்.
கன்னிகா பூஜை போது, குமாரியைப் பூஜிப்பதால் வறுமை நீக்கமும், பகைவர் வெற்றியும், ஆயுள் விருத்தியும், செல்வ வளர்ச்சியும் கிட்டும் என்றும்; திரிமூர்த்தி வழிபாடு தனதான்ய விருத்தி, புத்திரப்பேறையும்; கல்யாணி வழிபாடு கலைகளில் அபிவிருத்தியும் ராஜசுகமும்; ரோகிணியை பூஜிப்பதால் ரோக நிவர்த்தியும்; சண்டிகையைப் பூஜிப்பதால் செல்வ வளமும்; காளியைப் பூஜிப்பதால் பகைவர் நாசமும்; சாம்பவியைப் பூஜிப்பதால் போரில் வெற்றியும் வறுமை நீக்கமும்; துர்க்கையைப் பூஜிப்பதால் கொடிய பகைவர் கள் அழிவதோடு பேராற்றலும் பரலோக சுகமும்; சுபத்திரையைப் பூஜிப்பதால் மங்களங்களோடு, எண்ணங்கள் பலிதமாகும் பேறும் கிட்டும் 
இந்த ஒன்பது கன்னியரைப் பூஜிக்கும்போது, அந்தந்தப் பெயர்களுக்கு மூலகாரணமாக உள்ள பகவதியைத் துதித்து, அவரவர்க்குரிய சுலோகங் களைக் கூறி வழிபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எங்கும் எல்லாவற்றிலும் பூமியாகவும் நதியாகவும் பிற ஜீவன்களாகவும் நிறைந்திருக்கும் அம்பிகையை வழிபட்டு வளம் பெறுவோமாக.

11 comments:

  1. நவராத்திரி ஆராதனை கண்டு மகிழ்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. Shuba Navarathri
    greetings.

    subbu thatha.

    ReplyDelete
  3. நவராத்திரி பற்றிய எத்தனை எத்தனை விளக்கம்...
    பிரமிப்பாக இருக்கிறது உங்கள் ஆக்கம்...
    தெளிவு படுத்தும் அழகிய பதிவு...

    ReplyDelete
  4. நவராத்திரி பற்றிய மிக விரிவான விளக்கங்கள்,சிறப்பான படங்கள் பகிர்வு மிக அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பிரதி ஆண்டும் நவராத்திரியின்போது கொலு வைப்பது வ்ழக்க. கடந்த இரு ஆண்டுகளாக வீட்டில்கொலு இல்லை. பொன்னூஞ்சல் பாட்டு நீங்கள் எழுதியதா. இதுவரை கேட்ட நினைவில்லை.

    ReplyDelete
  6. நவராத்திரி பாடலும் தகவல்களும் மிகவும் அருமை! படங்கள் அழகு சேர்த்தன! நன்றி!

    ReplyDelete
  7. நவராத்திரி பற்றி சிறப்பான விபரங்கள்.முப்பெரும் தேவியர்கள் படம் அழகு.

    ReplyDelete
  8. கொலுவின் தாத்பர்யமே மனித பிறப்பிற்கு முன் எடுக்கப்பட்ட பிறப்புகளை ஒவ்வொரு நாளும் உணர்ந்து, எதையெல்லாம் விலக்கி, தெய்வ நிலைக்கு உயரவேண்டும் என்றால், வெறும் பிரார்த்தனையால் மட்டுமே அடைந்து விட இயலாது. அதற்கான அறிவும் செயலாற்றும் மன உறுதியும் இருந்து தியானித்து, அதனை செயல்படுத்துகையில் மாயை எனும் அரக்கனிடம் போராடி இறுதியில் வெற்றி என்னும் மாலையை பெற வேண்டும் ....இறைவனிடம் இருந்து....என்பதனை உணர்த்தும் தத்துவமே கொலு வைப்பது. இந்த மாயையில் இருந்து விடுபட அம்பிகையின் அருள் மிகவும் அவசியம். மனிதன் இக வாழ்க்கையில் அனைத்து சுகங்களும் பெற்று நிம்மதியாக வாழவும், தனது வாழ்வின் நோக்கமாக கருதும் முக்தி பெற நவராத்திரி திருவிழா சிறப்புடன் வழிபடவும் கொண்டாடிட உதவும் பதிவு! விளக்கங்கள் அருமை!
    வாழ்த்துக்கள் சகோதரி! தங்களின் இறைபணி மெய்சிலிர்க்க வைக்கின்றது! அன்னை அபிராமி அருள்வாளாக! கண்ணன் துணையிருப்பானாக!

    ReplyDelete
  9. நவராத்திரியை பற்றிய பதிவு அருமை சகோதரி.

    ReplyDelete
  10. நவராத்திரி குறித்து படங்களுடன் அருமையான விளக்கம்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நவராத்திரி குறித்த பல தகவல்கள்.... வழமை போல அசத்தலான படங்கள்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete