Thursday, October 27, 2011

வெற்றி வேல்! வீர வேல்!!





முழு முதற் கடவுளாக கலியுகக் கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார்
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும்
என்பது ஆன்றோர் வாக்கு.
முருகனை நம்பினோர் கைவிடப்படார் எனச்சொல்வதுண்டு.

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை
சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில்.
கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள்.
ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன் ஆனதால் 
ஆறு முகமே சிவம், சிவமே ஆறுமுகம்’ எனப்படுகிறது.


ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்).
மகிமை மிக்கவை.
ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு
ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்.

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா! சுரபூபதியே!
என்பது கந்தரநுபூதி.
சிக்கல் சிங்கார வேலவர்
[muthu+kumaran.jpg]
சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்தவர் முருகப்பெருமான்.

சூர சம்ஹார நிகழ்வு நடைபெற்றது திருச்செந்தூரில் என்று புராணங்கள் கூறுகின்றன. இன்றும் இத்தலத்தில் சூரனுக்கு பெருவாழ்வளித்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கில் பக்தர்கள் ஆண்டு தோறும் கண்டு, செந்தில் வேலவனின் திருவருளுக்குப் பாத்திரமாகி வருகின்றனர்.

காஸ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்தவர்கள் சூரபன்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகியோர்.
சூரன்-பதுமன் என்ற இருவர் சேர்ந்த ஒரே உருவமே சூரபன்மன்.
"இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை'' என்று திருமுருகாற்றுப்படை கூறும் 

சூரபன்மன் ஆணவ மலம் கொண்டவன். தாரகாசுரன் மாயா மலம் உடையவன். சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம். இவர்களை ஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது.

""வினையோடு விடுங் கதிர்வேல் மறவேன்'' என்கிறது திருப்புகழ் உணத்தும் சூரசம்ஹார தத்துவம்.


தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
     சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீன..என்பார் திருப்புகழில் அருணகிரியார்..

கிரௌஞ்சம் என்கின்ற பறவை தாரகாசுரனின் நண்பன். அகத்தியரின் சாபத்தால் மலை வடிவாகிற்று. அதை முருகன் தன் வேலால் அழித்தான். கிரௌஞ்சம் மாயை, தாரகாசுரன் மாயா மலம். அவனுக்குத் துணை செய்த கிரௌஞ்ச மலை அவித்தை. இவ்விரண்டையும் அழித்த வேல் ஞானம். கிரௌஞ்சம் என்பது ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் ஆகிய வினைத் தொகுதிகள். அவற்றை வேல் அழித்தது

கந்தனின் ஆயுதம் - பராசக்தியின் மறு உருவமான வேல். சூரபத்மன் கடைசியில் மாமரமாக நின்றான். அதை வேலால் துளைக்க. ஒரு பாதி மயிலாகி வாகனம் ஆனான். மறு பாதி கொடியில் சேவலாக மாறினான்.

ராவண வதம், கம்ஸ வதம் என்பர், ஆனால் இங்கு மட்டும் சூரசம்ஹாரம் என்பர். வேறு எந்த தெய்வ அவதாரத்திலும் நிகழாத சம்பவம், அது தான் கந்தன் கருணை.

இது நடந்த தினம் கந்த சஷ்டி - தீபாவளி - அமாவாசைக்குப் பிறகு வரும் ஆறாவது நாள். இது நடந்த இடம் திருச்செந்தூர் ஜயந்திபுரம் (2 ஆம் படை வீடு) வெற்றி தினம் கந்த சஷ்டி தினம்.

ஜெயந்திபுரம்!  வெற்றிப் பட்டினம்!! ஊரின் பெயரிலேயே செல்வமும், வெற்றியும் விளங்குகின்றது.

சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் செய்த நாளே கந்த சஷ்டியாகும்.

சஷ்டி என்றால் 6. ஆறு நாட்கள் விரதம் இருந்து
கந்தப் பெருமானை வழிபடுவதே சஷ்டி விரதம்.

சிறப்பான சஷ்டி விரதம் . ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்ற வாக்கியமே மருவி ‘சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்’ என்பது
கந்த சஷ்டி விரத மகிமையை வெளிப்படுத்தும் வகையில் உருவானதுதான்.

அதாவது, சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் சிசு தோன்றும். சஷ்டியில் விரதம் இருந்து முருகப் பெருமானை மனதார வேண்டினால் சற்புத்திர யோகத்தை அருள்வார்.

அகப்பை என்பது கருப்பையை மட்டுமல்ல, நமது ‘அகம்’ என்கிற மனத்தையும் குறிக்கிறது. 

நம் மனதில் இருக்கிற பேராசை, வெறுப்பு, ஆணவம், கோபம், வஞ்சம் தீர்த்தல், கருமித்தனம் உள்பட பல்வேறு தீய குணங்களையும் அழித்து நமக்கு நல்வழி காட்டுகிறார் முருகப் பெருமான். 

முருகனுக்கு கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன. கிழமைகளில் செவ்வாய், நட்சத்திரத்தில் கிருத்திகை, திதியில் சஷ்டி ஆகியவை முருகனுக்கு உகந்தவை. இந்நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது சகல தடைகளையும் நீக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போருக்கு
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும்.

சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு
புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை!

செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார்.

இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்வோர்க்கு, நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்று வள்ளிமலை சச்சிதானந்தா சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

அருவமும் உருவமாகி
அநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற ஜோதிப்
பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து ஆங்கு
உதித்தனன் உலகம் உய்ய!

இந்தப் பாடலை உள்ளன்புடன் ஓதினால் குழந்தைப் பேறு பெறலாம்.

மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அஸ்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது.

ஜாதக அமைப்பின்படி செவ்வாய் திசை, குரு திசை நடப்பவர்கள், நிலப் பிரச்னை, சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து சூரசம்ஹார தரிசனம் செய்தால் சூரனை வேல்கொண்டு அழித்ததுபோல நமது பிரச்னைகளையும் கந்தப்பெருமான் வேலாய் வந்து நின்று அழித்து வளமிகுந்த வாழ்வை அருள்வார் என்பது நம்பிக்கை.

சஷ்டி விரத காலத்திலும் சூரசம்ஹார தினத்தன்றும் காலை, மாலை இரு வேளையும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை பாராயணம் செய்யலாம். மனதை ஒருமுகப்படுத்தி இவற்றை சொல்லி முருகனை துதிப்பது நற்பலன்களை தரும்.

சஷ்டிப் பிரியாய நம’ என்று . சஷ்டிப் பிரியனான முருகனை கந்தசஷ்டியன்று வழிபடுவோம். சகல நலன்களும் பெறுவோம்.

வளர்பிறைப் பிரதமையன்று அதிகாலை துயிலெழுந்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும்.

கிணறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுபவர்கள் வட திசை நோக்கி நின்று மேற்கூறியவாறு செய்ய வேண்டும்.

நீராடி, தூய ஆடைகள் அணிந்து, வெல்லத்துடன் நெய் சேர்த்துச் செய்த மோதகத்தை முருகனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

முருகப் பெருமான் அபயமோ வரமோ தரும் கோலத்தில் இல்லாமல், 
ஜபம் செய்யும் கோலத்தில் அருளும் அற்புத தரிசனம்! .

பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க,
தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால்
அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.

முருகனுக்கு இடப்பக்கத்தில் உள்ள சிவலிங்கத்திற்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடித்ததும் முருகன் சிவனை வணங்க உருவாக்கியதுதான் திருச்செந்தூர் கோயில்.

இங்கு முருகன் கையில் ருத்ததிராட்ச மாலை ஜப மாலைல, பூமாலையுடன் தவக்கோலத்தில் உள்ளார்.

கருவறை பின் உள்ள சுரங்க அறையில் முருகன் வணங்கிய
பஞ்சமுக லிங்கங்கள் உள்ளன. கருவறைச் சுவரில் ஒரு லிங்கம் உள்ளது.

குன்றுதோராடும் குமரன் இங்கே கடற்கரையிலா என்று பார்த்தால் -
ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகள் இருந்து, அவற்றைக் குடைந்தே கருவறை உள்ளது! அதான் செந்து+இல்=செந்தில்!

பின்னாளில் பிரகாரங்கள் என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்!

உற்சவர் சண்முகப் பெருமான்! டச்சுக்காரர்கள் கடலில் தூக்கி வீசி எறிந்த இந்தச் சிலையை, வடமலையப்ப பிள்ளை மீட்டுக் கொண்டு வந்து நிறுத்தினார்! கட்டபொம்மன் வழிபட்ட விக்ரகமும் கூட!

தினமும் இரவு சஷ்டி மண்டபத்தில் முருகன் வள்ளி தெய்வானை அபிஷேகம் அலங்காரம் ஆராதனை முடித்து தங்கத்தேரில் வீதியுல வருவர். 

கடைசி நாள் சஷ்டியன்று சூரசம்ஹாரம் நடைபெறும். 
அப்போது முருகன் வரும்போது கடல் உள்வாங்கி வழிவிடும்.

கந்த சஷ்டி தொடக்க விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி காவி, பச்சை நிற உடையணிந்து கிரி பிரகாரத்தில் அங்க பிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்குவார்கள்.

திருச்செந்தூரின் பன்னீர் இலைத் திருநீறு மிகவும் புகழ் வாய்ந்த ஒன்று .. விபூதியை மடித்து தரும்  பன்னீர் இலையை பிரித்து பார்த்தால் பனிரெண்டு நரம்புகள் தெரியும். 

அவை முருகனின் பன்னிரு கரங்கள் என்பது ஐதீகம். 

இவ்விபூதி வயிற்றுவலி உள்பட பல நோய்களை குணப்படுத்தும் 
என்று ஆதிசங்கரர் கூறியுள்ளார்.

இன்றளவும் ஒவ்வொரு மாதமும் பன்னீரிலை விபூதிப்பிரசாதம் அஞ்சலில் இல்லத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.


ஆண்டு தோறும் சித்திரை மாதப்பிறப்பன்று திருச்செந்தூர் சென்று வணங்குவது   தொன்றுதொட்ட வழக்கம் எங்கள் குடும்பத்தில் உண்டு.

சிலவருடங்களாக அதிகரித்த வெய்யிலின் தாக்கமும், கூட்ட நெரிசலும் இன்னலுறுத்த -வேறு நாட்களில் சென்று தரிசிக்கிறோம்.

ஒவ்வொரு முறையும் தங்கத்தேரில் தரிசனம் தந்து அருள 
முருகன் தவறுவதில்லை.
சூரபன்மன் முருகனுடன் போர் செய்ய வரும் முதல் சந்திப்பை அருளுக்கும் இருளுக்கும், கருணைக்கும் கொடுமைக்கும், அறிவுக்கும் மருளுக்கும் நடக்கும் சந்திப்பு என்று கந்தபுராணம் கூறுகின்றது. 



சூரனின் ஒரு பாதி "நான்' என்னும் அகங்காரம்; மறுபாதி "எனது' என்னும் மமகாரம். 

சூரபன்மன் போர் முடிவில் மாமரமாக மாறி கடலுக்கு அடியில் தலைகீழாக நின்றான். 

அம்மரத்தை வேல், இருகூறாகப் பிறந்தது. ஒரு பாதி மயிலும், மற்றொரு பாதி சேவலுமாக வடிவு கொண்டது. 

முருகப் பெருமான் மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்று அவனுக்குப் பெருவாழ்வு அளித்தார்.


கடற்ச லந்தனி லேயொளி சூரனை
உடற்ப குந்திரு கூறென வேயது
கதித்தெ ழுந்தொரு வேவலு மாமயில் விடும்வேலா


ஆறுமுகக் கடவுள் சூரபன்மன் மீது அருள் நோக்கம் செய்தார்.

ஞானிகள் பார்வையால் இரும்பு பொன்னாவது போல
அத்திருவருட் பார்வையால் சூரபன்மன் பகைமை நீங்கி
ஞானம் பொருந்திய மனத்தினாய் நின்றான்.

முருகனின் படை வீடுகள் ஆறு
தெய்வானையை மணம் புரியும் கோலம் திருப்பரங்குன்றத்திலும்,
வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகமாய் திருச்செந்தூரிலும் காட்சி அளிக்கிறார்.
பழனியில் ஆண்டியாகவும்,
சுவாமி மலையில் தகப்பன் சுவாமியாகவும் அருள் பாலிக்கிறார்.

பழமுதிர்ச் சோலையில் பாலமுருகனாகவும்,
திருத்தணியில் கல்யாணக் கோலத்திலும் அருளாட்சி செய்கிறார்.

சுப்பிரமண்ய காயத்ரி! “
ஓம் தத் புருஷாயவித் மஹே 
மஹா ஸேநாய தீமஹி 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்!
"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!

அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா
ருணை வள்ளல் கந்தன் இச்சா சக்தி வள்ளியையும் , கிரியா சக்தி தெய்வானையும் மணந்து கொள்ளும் நிகழ்ச்சி மஹா கந்த சஷ்டிப் பெருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக திருக்கலயாணக் கோலத்தில் அருளும் இனிய தரிசனம் ஆலயங்களில் நிகழும்..

சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன்யாக சாலைக்கு எழுந்தருளி மதியம் உச்சிகால தீபாராதனைக்கு பின்னர் தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

காக்க ..காக்க.. கனக வேல் காக்க..
கந்தன் கருணை வேல் காக்க...
[DSC02399.JPG]
முருகனைக்கூப்பிட்டு
முறையிட்டபேருக்கு
துன்பம் பறந்தோடுமே
[DSC02394.JPG]
http://www.vallamai.com/archives/9527/
 ‘இஷ்ட வரங்கள் அருளும் கந்த சஷ்டி’ என்ற ஆன்மீகக் கட்டுரை நம் வல்லமை இதழில் பிரசுரமாகியுள்ளது.  வணக்கம்.
[DSC00414.JPG]






ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மேஷில் என்ற இடத்தில் அமைந்துள்ள முருகன் கோவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது சூரசம்ஹாரம்






22 comments:

  1. காலையில் முருகன் தரிசனம்.... கிடைக்கக் கொடுத்த உங்களுக்கு வந்தனம்....

    மயில் தோகை விரித்து இருக்கும் இரண்டாம் படம் அழகு.....

    ReplyDelete
  2. அழகிய படங்களுடன் அருமையான முருகர் தரிசனம். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  3. முருகன் அழகன்! உங்கள் கைவண்ணத்தில் இன்னும் அழகு!!

    ReplyDelete
  4. வெற்றி வேல்! வீர வேல்!!

    தலைப்பும், அனைத்துப்படங்களும், அரிய விளக்கங்களும் வழக்கம் போல் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

    முதலில் காட்டப்பட்டுள்ள படமும், அடுத்து காட்டப்பட்டுள்ள மயிலும் மிகச் சிறந்த தேர்வு.

    பதிவு முழுவதும் அனைத்துமே அழகோ அழகு தான் அந்த முருகனையும் மயிலையும் போலவே.
    vgk

    ReplyDelete
  5. அழகிய முருகதரிசணம்

    ReplyDelete
  6. //ஆறு முகமே சிவம், சிவமே ஆறுமுகம்’ஷடாக்ஷர மஹாமந்திரம் ஆறெழுத்து மகிமை .//
    இப்படி நிறைய நிறைய செய்திகள் ஷஷ்டி ஆரம்ப நாளில்.மேலும் நிறைவான படங்கள். அனைத்தும் அருமை.
    //மாதா மாதம் பன்னீரிலை விபூதிப்பிரசாதம்.தமிழ் வருஷப் பிறப்பு தரிசன குடும்ப வழக்கம்.
    தள்ளிப் போனாலும் தங்கத்தேரில் தரிசனம் தரும்முருகன்//
    அனைத்தும் பூரண அருளைக் காட்டுகிறது.வணக்கமும். வாழ்த்துக்களும்.ஷஷ்டி விரதம் உண்டா ?

    ReplyDelete
  7. படங்களும் பதிவும் மிக மிக அருமை
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வேலனின் வடிவங்களை அழகுற படங்களுடன் தொகுத்தளித்ததற்கு நன்றிகள்!

    ReplyDelete
  9. அருமையான படங்கள்
    அருமையான பதிவு.
    உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை
    வாழ்த்துக்கள் அம்மா

    ReplyDelete
  10. கா வா வா கந்தா வா வா என்னைக் காவாய் வேலவா
    அருமையான படங்களுடன் முருகனின் அழகு தரிசனம் நன்றி.

    ReplyDelete
  11. முத்தான முதல்வன் முருகன்.

    ReplyDelete
  12. தெரியாத பல ஆன்மீகத் தகவல்கள்.,
    நன்றி சகோ..

    ReplyDelete
  13. வேலும் மயிலும் துணை!
    நன்று.

    ReplyDelete
  14. மிக அழகாக முருகனை பற்றி பதிவிட்டிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. திருச்செந்தூர் போகவேண்டும் என்பது எத்தனையோ வருடத்திய ஆசை. உங்கள் பதிவு ஆசையை அடக்கியதா இன்னமும் கூட்டியதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் :)
    அற்புதமான படங்கள், அழகான விளக்கம். சமீப சுனாமியில் எதுவும் ஆகவில்லையா கோவிலுக்கு?

    ReplyDelete
  16. ஆஹா! பெருமையாக இருக்கிறது.நன்றி.பல தகவல்கள் எனக்கு புதியவை.படங்கள் அற்புதம்.

    ReplyDelete
  17. திருச்செந்தூரை கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள். கந்த சஷ்டி சமயத்தில் சரியாக வெளியிட்டுள்ளீர்கள். படங்கள் அத்தனையும் அருமை..அதுவும் அந்த மயிலின் போட்டோ மிகவும் அருமை.

    ReplyDelete
  18. திருச்செந்தூரை கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள். கந்த சஷ்டி சமயத்தில் சரியாக வெளியிட்டுள்ளீர்கள். படங்கள் அத்தனையும் அருமை..அதுவும் அந்த மயிலின் போட்டோ மிகவும் அருமை.

    ReplyDelete
  19. அழகிய முருகபெருமானின் படங்களுடன் அருமையானதொரு ஆன்மீக பகிர்வு... மறுபடியும் வந்து படிக்க வேண்டும்.. நன்றி.

    ReplyDelete
  20. http://muruganirukkabayamen.blogspot.com/

    http://omsaravanabhavasecurities.blogspot.com/

    ReplyDelete