Saturday, February 5, 2011

ருக்மிணியாபகாரணம் !!

கல்யாணமாம் கல்யாணம் !!


கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை மாப்பிள்ளைதான் மணப்பெண்ணை சிறை எடுத்து திருமணம் செய்வது பரவலாக அறிந்திருப்போம்.

விதிவிலக்காக காதலன் படத்தில் தூக்குக்கயிற்றை கழுத்தில் மாட்டியிருக்கும் பிரபுதேவாவை கதாநாயகி நக்மா குதிரையில்வந்து குறிபார்த்து கயிற்றைச்சுட்டு
காப்பாற்றி . . .
முக்காலா.. முக்காபுலா..
லைலா.. ஓ.லைலா..
என்று பாடி கிராபிக்ஸில் ஆட்டம் போடுவார்கள்.

ஒரு ஊரில் பெண்ணுக்குப் பிடிக்காத திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்தபோது, அந்தப்பெண் காதலனுக்கு ரகசியத்தூதனுப்பி வரவழைத்தாள்.

மாறுவேடத்தில் வந்த காதலனை சந்தேகப்பட்ட காவலன் பெயர் என்ன என்று விசாரித்தான். காதலன் 'அவள் புருஷன்' என்று பதில் அளித்தானாம். காவலன் அவள் புருஷன் என்று ஒரு பெயரா? இது வரைக் கேள்விப்படாத பெயராக அல்லவா இருக்கிறது!!

அவள் புருஷன்.. அவள் புருஷன்.. அவபுருஷன்.. என்று பலமுறை சொல்லி மனப்பாடம் செய்து கொண்டான்.
  
அன்று இரவு நேரத்தில் ஊர் உறங்க, உறவும் உறங்க, கானுறங்க, காற்றும் உறங்க அவனும், அவளும் மட்டும் உறங்காமல் ஊரைவிட்டு வெளியேற முயன்றார்கள்.

பொறுப்புமிக்க காவலனை ஏமாற்ற முடியுமா?  அவ்வளவு தான் சப்தமிட்டு ஊரைக் கூட்ட முடிவு செய்தான், கத்தினான் பாருங்கள் ஒரு கத்து

அவள் புருஷன் பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போறான்...
அவள் புருஷன் பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போறான்...

என்று பலமாகக் கத்தி ஊரைக் கூட்டினான். நாயும், பேயும் கூட உறங்கும் அந்த நேரத்தில் கத்தி தங்கள் தூக்கத்தைக் கெடுத்த காவல்காரன் மேல் எல்லோருக்கும் செம கடுப்பு!

ஏண்டா! அவள் புருஷன் பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போகாமல் உன்னையா கூட்டிக்கொண்டு போவான்! பேசரான் பாரு பேச்சு! என்று வடிவேலுவை அடிக்கிற மாதிரி ரூம் போட்டு காவலனை மேலே பேசவிடாமல் அடித்துக் கொண்டிருக்க காதலர்கள் உடன்போக்கு என்ற இலக்கியவிதிப்படி ஊரைத்தாண்டிவிட்டார்கள்.

புராணத்திற்கு வருவோம்!  

கண்ணபரமாத்மாவைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டாள் ருக்மியின் தங்கையான ருக்மிணி! 

ருக்மியோ சிசுபாலனுக்குத் தன் தங்கையை திருமணம் செய்துவித்து ‘நண்பேண்டா’ என்று உறவு கொண்டாடிக் கொள்ள ஆசை!!

திருமண ஏற்பாடுசெய்தபோது ஒரு அந்தணரை தூது அனுப்பி தன் மனதைக் கண்ணனுக்குத் தெரியப்படுத்தினாள் ருக்மிணி!

வானவருக்கு என்று புனிதமாக தயாரிகப்பட்ட யாக அவியை நாய்க்குப் போடமுயலும் அந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து, தன்னை மனைவியாக்கிக் கொள்ளும்படி வேண்டி அனுப்பியிருந்தாள்.

கார்த்தியாயினி பூஜை செய்ய தானே தேரை ஓட்டிகொண்டு காவலர்களுடன் கோவிலுக்கு வந்தவள் பூஜை முடிந்ததும் அங்கு வந்த கண்ணனைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு வேகமாக தேரைச்செலுத்திக்கொண்டு சென்றுவிட்டாள்.

பின் தொடரமுடியாத காவலர்கள் அரண்மனை திரும்பி ருக்மியிடம் சென்று “மகாராஜா! மகாராஜா !! நம் இளவரசியார் வேகமாகத்தேரைச் செலுத்திக்கொண்டு சென்று விட்டார்கள்”

ருக்மி சொன்னான் “அது தான் அனைவருக்கும் தெரியுமே! என் தங்கை காற்றை
விட வேகமாகத் தேரைச் செலுத்துவதில் விற்பன்னள் ஆயிற்றே! அவளுக்குத் தேர் ஓட்டச் சொல்லிக்கொடுத்தது யார்? நான்! நான் ஆயிற்றே!!” என்று பெருமையாகச் சிரித்தான்! விதிதன்னைப் பார்த்துச் சிரிப்பதை அறியாமல்!!

காவலர்கள் “இல்லை மகாராஜா! கோவிலுக்கு வந்த கண்ணனைத்தேரில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள்!!” கூறினர்.

ருக்மி கண்ணன் மேல் ஆத்திரம் கொண்டு படைதிரட்டிச் சென்று, கண்ணனிடம்
தோற்று அவமானப்பட்டுத் திரும்பினான். 

ருக்மினியின் வேண்டுகோளிற்கிணங்க, ருக்மியைக் கொல்லாமல் தலையை மட்டும் விரூப்படுத்தி விடுவித்தார்.

7 comments:

  1. கம்ப்யூட்டர் காலத்தையும் கண்ணன் காலத்தையும்
    மிகச் சரியாக இணத்துள்ளீர்கள்
    நல்ல பதிவு.
    தொடர வாழ்துக்கள்

    ReplyDelete
  2. அட..அட...அட....

    அது எப்படிங்க கண்ணனையும் கம்ப்யூட்டரையும் இவ்ளோ அழகா இணைச்சீங்க!!

    நல்லா இருக்கே.....

    இன்னும் நிறைய பதிவுகள் பதியுங்கள்...

    **********

    எங்களின் முதல் குறும்படம் முயற்சியை கண்டுகளித்து கருத்து பகிருங்கள்...

    'சித்தம்' - குறும்படம் http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post_574.html

    ReplyDelete
  3. இரண்டையும் நன்றாக இணைத்து உள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. ப்ட்ங்களே பாதிகதையைச் சொல்லிவிடுகின்றன. அருமையான கதை.

    ReplyDelete
  5. அந்த கண்ணனும் ருக்மணியும் போல உலகக் காதலர்கள் எல்லோரும் தங்கள் காதலில் வெற்றியடையட்டும்.

    கண்ணன் காலத்தையும் கணினி காலத்தையும் ஒப்பிட்டு அழகாக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.

    ரூம் போட்டு (வடிவேலு காமெடி போல) அந்தக் காவலரை, தூக்கம் கலைந்தவர்கள் அடித்த கதை ஒரே சிரிப்பு தான்!

    ReplyDelete
  6. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அந்த கண்ணனும் ருக்மணியும் போல உலகக் காதலர்கள் எல்லோரும் தங்கள் காதலில் வெற்றியடையட்டும்.

    கண்ணன் காலத்தையும் கணினி காலத்தையும் ஒப்பிட்டு அழகாக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.

    ரூம் போட்டு (வடிவேலு காமெடி போல) அந்தக் காவலரை, தூக்கம் கலைந்தவர்கள் அடித்த கதை ஒரே சிரிப்பு தான்!/

    சிரிப்புடன் நிறைவான கருத்துரைக்கு நன்றிகள் ஐயா..

    ReplyDelete