Tuesday, January 8, 2013

குருவாயூரப்பா ..ஹரி நாராயணா ..!







குருவாயூருக்கு வாருங்கள்  ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்  உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதைக்  காட்டும் குருவாயூர்க் கோலம்

சந்தியா காலத்தில் நீராடி அவன் சந்நிதி வருவார் ஒரு கோடி
நாராயண நாராயண ஹரி ஹரி  நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி  நாராயண நாராயண

தமிழ்நாட்டின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநி திருக்கோயிலைப் பார்த்தவாறு அமைந்துள்ளது ஸ்ரீகுருவாயூரப்பன் கோயில்.

குருவாயூர் கோயில் சதுர வடிவில், மலையாள கட்டட பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  கூரைகள் செப்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளன.

கிழக்கு கோபுர வாசலில் இருந்தே குருவாயூரப்பனை தரிசிக்கும்படியும் சித்திரை விஷு தினத்தன்று-காலைக் கதிரவனின் ஒளிக் கற்றைகள் குருவாயூரப்பன் திருவடிகளில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்குக் கோபுரம் வழியே நுழைந்தால் வெளிப் பிராகாரம். இங்கு, பொன் முலாம் பூசப்பட்ட சுமார் நூறு அடி (33.5 மீட்டர்) உயரக் கொடி மரமும் இதன் இருபுறமும் 13 அடுக்குகளுடன் 7 மீட்டர் உயரமுள்ள தீபஸ்தம்பங்களும் உள்ள இங்குதான் செண்டை மேளங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட யானைகள் காலையில் நாராயணனை வழிபட வரிசையாக நிற்கும் கண்கொள்ளாக்காட்சி பிரமிப்பூட்டும் ...

கருவறைக்கு எதிரில் உள்ள மேடை அருகே நின்றவாறு நாராயண பட்டத்திரி, கண்ணனிடம் பேசியவாறே நாராயணீயம் எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. இது மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

கோபுரத்துக்கு வெளியே இருக்கும்  ‘கல்யாண மேடை’ - திருமணங்கள் நடைபெறுகின்றன .....


ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டபோது, அங்குள்ள மரச் சுவர்கள், தூண்கள் ஆகியன சேதமடைந்தன.
பிரஸ்னம் மூலம் கிடைத்த உத்தரவுப்படி, மறுபடியும் தூண்கள் மற்றும் சுவர்களை கருங்கற்களால் நிர்மாணிக்க தீர்மானித்து தமிழ்நாட்டில் இருந்து  வரவழைக்கப்பட்ட சிற்பிகள் ஸ்ரீவிஷ்ணுவின் தசாவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்களுடன் கூடிய பத்து தூண்கள் தயாரித்தார்களாம் .

ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தை குறிக்க, ஒரு தூணில் ‘கம்ச வத’ காட்சியை வடித்திருந்த. தலைமைச் சிற்பியிடம் சிறுவன் ஒருவன் வந்து ‘‘இங்கு கிருஷ்ணனை, வேணு கோபாலனாக செதுக்கியிருக்கும் தூணை வையுங்கள்!’’ என்றான். 

‘‘அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இதுவரை வடிக்க வில்லையே!’’ என்றார். உடனே சிறுவன் சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று ஸ்ரீகிருஷ்ணர், வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான்.

வியப்படைந்த சிற்பி, திரும்பிப் பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை. வந்தது ஸ்ரீகுருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி, அந்தத் தூணையே அங்கு நிறுவினார். 

இந்தத் தூண் ஸ்ரீகுருவாயூரப்பனாலேயே படைக்கப்பட்டதாக ஐதீகம்.

அதன் பிறகு ‘கம்ச வத’ தூணை உட்பிராகாரத்தில் வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீகுருவாயூரப்பன் கிழக்கு நோக்கி அருள்புரிவதால், இங்கு கிழக்கு வாசலே பிரதானம்.

கிழக்கு வாசல் வழியே மூன்றாம் கோபுரத்தைத் தாண்டிச் சென்றால், யானைப் பந்தல் என்ற பகுதியின் மேல் பகுதியில் புராண சம்பவங்களை விளக்கும் ஓவியங்களுடன் மகாத்மா காந்தியின் திரு உருவப்படமும் உள்ளது தனிச்சிறப்பு!

கணபதி கோயிலையட்டிய வட பகுதியில் பகவானுக்கான சந்தனம் அரைக்கப்படுகிறது. இதன் வட பகுதியில் மாலை கட்டுகிறார்கள்.

கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புற மரச் சுவரில் உள்ள சட்டங்களில் சுமார் 3,000 பித்தளை அகல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

கருவறையில், அணையாமல் எரியும் நெய் விளக்கு ஒளியில் ஜோதியாக மின்னுகிறான் ஸ்ரீகுருவாயூரப்பன். குருவாயூரப்பனை, உண்ணி (குழந்தை) கிருஷ்ணன் என்று வண்குகிறோம் ....
மேலிரு கரங்களில் சங்கு& சக்கரமும், கீழிரு கைகளில் கதாயுதம்& தாமரையும் கழுத்தில் துளசி, முத்து மாலைகள் தவழ, கிரீடம், மகர குண்டலம், கேயூரம், கங்கணம், உதர பந்தனத்துடன் வலப்புற மார்பில் ஸ்ரீவத்ஸம் என்ற சந்தனமும், வைஜயந்தி மாலையும், கௌஸ்துபமும் அணிந்து ‘ஸ்தானகம்’ எனும் நின்ற நிலையில் அருள் புரிகிறான் குருவாயூரப்பன்.
இந்த விக்கிரகம் வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவால் உருவாக்கி வணங்கப்பட்ட பின் பிரம்மன், கண்ணன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டது.

 விக்கிரகம் ‘பாதாள அஞ்சனம்’ என்ற உயர் தர கல்லில் வடிவமைக்கப்பட்டது. குருவாயூரப்பனது உற்சவர் விக்கிரகம் பொன்னால் ஆனது.

குருவாயூர் கோயிலில் சாயங்காலம் மட்டுமே தீபாராதனை.

ஏழு அடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரி விளக்கு என்று பல விளக்குகளை ஏற்றி ஆராதிக்கிறார்கள்.

இறுதியில் கற்பூர ஆரத்தி. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபடுவதாக ஐதீகம்.

தங்கக் கலசங்களில் நிரப்பிய புனித நீரால் ‘பிரம்ம கலச மந்திரம்’ சொல்லிக் கொண்டு தினசரி கும்பாபிஷேகம் செய்யப்படுவது இந்த ஆலயத்தின் சிறப்பு.

எல்லா நாட்களிலும் இங்கு அன்னப் பிராசனம் எனப்படும் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறந் தால், இங்கு வந்து சோறு ஊட்டுவதாக வேண்டிக் கொள்கிறார்கள்.

வேண்டுதல் நிறைவேறியதும் இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.

 குருவாயூரப்பனின் சந்நிதியில் சோறு ஊட்டினால், குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வளர குருவாயூரப்பன் அருள் புரிவான் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.



18 comments:

  1. nice information about guruvayurappan

    ReplyDelete

  2. பல முறை குருவாயூருக்குச் சென்றிருந்தாலும் சில தகவல்கள் அறியாதவை. As usual the pictures are superb.! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. குருவாயூர் பற்றிய அபூர்வமான தகவல்கள் தெரிந்து கொண்டேன் மேடம். அழகிய படங்கள் அருமையான பதிவு.

    ReplyDelete
  4. குருவாயூருக்கே சென்று வந்த உணர்வு. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  5. வணக்கம்

    அருமையான பதிவு பாராட்டுக்கள் உங்கள் வலைப்பக்கம் வந்தாள் ஒருவித பக்தி உணர்வை ஏற்ப்படுத்தும் அப்படிப்பட்ட சுவாமி படங்கள் குருவாயூர் பற்றிய விளக்கம் அருமை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. குருவாயூர் பற்றிய புதியதகவல்கள்.படங்கள் அருமை.

    ReplyDelete
  7. இராஜராஜேஸ்வரி,

    எப்பொழுது உங்க ப்ளாக்கிற்கு வந்தாலும் நேரம் போவதே தெரியாது.ஒரே சமயத்தில் பல‌ கோயில்களுக்குப் போய்வந்த திருப்தி ஏற்படும்.ஒரு 15 வருடங்களுக்குமுன் குருவாயூர் போக விரும்பினேன். இன்னமும் முடியவில்லை.உங்க பதிவைப் பார்த்ததும் நேரில் போய் தரிசனம் செய்த மாதிரியான ஒரு உணர்வு.நன்றி.

    ReplyDelete
  8. மீண்டும் மீண்டும் தொடரும் உங்களின் படைப்புகள் எல்லாமே கடவுள் பக்தி கொண்ட அனைவருக்கு நல்ல விருந்து

    ReplyDelete
  9. குருவாயூர் பற்றிய பதிவு எழுத எண்ணியிருந்தேன். எண்ணத்தினை என் சகோதரி எப்படி உணர்ந்தார்கள். தங்களுக்கே உரித்தான பாணியில், அழகு சொட்டும் எம் கிருஷ்ணனைப் பற்றிய பதிவு கண்கள் பனிக்க, மெய் மற்ந்து, .... பாராட்டுக்கள்!

    ReplyDelete
  10. தினம் தினம் இங்கு வந்து பக்தி மழையில் நனைந்தால்தான் அன்றைய நாள் நலமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  11. //தமிழ்நாட்டின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநி திருக்கோயிலைப் பார்த்தவாறு அமைந்துள்ளது ஸ்ரீகுருவாயூரப்பன் கோயில்.//

    இரண்டு கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்திருக்கின்றேன். ஆனால் இது தெரியாத விசயம்.. பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. இராஜராஜேஸ்வரி,

    உங்கள் பதிவு என்னை குருவாயுரூக்கே
    என்னை அழைத்து சென்று விட்டது.
    எத்தனை அருமையான படங்கள். எத்தனை அருமையான தகவல்கள்.

    பாகிர்வுக்கு நன்றி.
    ராஜி

    ReplyDelete
  13. அருமையான தரிசனம்.
    நன்றி.

    ReplyDelete
  14. 6 மாதங்களுக்கு முன் குருவாயூருக்குப் போய் வந்தோம். அந்த நினைவுகள் மீண்டும் உங்கள் பதிவு மூலம் மீண்டெழுந்து வந்தன.

    மறுபடி குருவாயூரப்பனை சேவித்துவிட்டு வந்த நிறைவு!

    ReplyDelete
  15. ஒருவாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்து இருப்பதை காணுங்கள். என்ற பாடல்வரியை உண்மை ஆக்கியது பதிவு.
    அருமையான பதிவு. குழந்தை கண்ணன் கண்களில் நிற்கிறான்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நல்ல தகவல் . அழகிய படங்கள் . நன்றி

    ReplyDelete
  17. ஸ்ரீ குருவாயூரப்பன் பற்றிய பதிவும், படங்களும் விளக்கங்களும், ஸ்ரீ குருவாயூரப்பன் போன்றே அழகோ அழகு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. 1965ஆம் ஆண்டு குருவாயூர் சென்று தரிசனம் செய்தேன்.கொட்டும் மழையில். குளிரே இல்லை. இப்போது போல் கூட்டமே இல்லை. விடியற்காலை மூன்று மணிக்கு. நாராயணா நாராயணா என்ற கோஷத்துடன்,குருவாயுரப்பனை வணங்கியது மறக்க மாறாக முடியாத அனுபவம்.
    நின்று நிதானமாக ஆனந்த தரிசனம்.

    மீண்டும் 2001 ஆம் ஆண்டு சென்றேன்.
    ஒரே கூட்டம். நீண்ட நகராத வரிசை. குறுக்கே குறுக்கே மக்கள் புகுந்துகொண்டு.போய் கொண்டிருந்தனர்.
    கட்டுபடுத்துபவரும் இல்லை
    கட்டுப்பட்டு நடப்பவர்களும் இல்லை.

    கோயிலின் உள்ளே ஒரே இருட்டு. நெய் தீபம் மட்டும்

    வெளியில் வெளிச்சத்தில் நெடு நேரம் நின்று உள்ளே சென்றதும் ஒன்றும் தெரியவில்லை. நின்று பார்ப்பதற்கும் வழியில்லை துரத்திவிடுகிரார்கள்

    ஏழுமலையானை தரிசிப்பதுபோல் தெளிவாக இல்லை. அந்த நாள் போல் இன்று இல்லை.

    படங்களும் தகவல்களும் நன்றாக உள்ளது பாராட்டுக்கள்.

    ReplyDelete