Monday, November 4, 2013

கோவர்த்தன பூஜை






குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை, ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.
- நம்மாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம்

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,
பொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

- என ஸ்ரீ ஆண்டாள். தெய்வத் தமிழின் கம்பீரத்தை உணர்த்திப் போற்றுவாள்...
இந்திரனது ஆணையால் வருணன் கல் மழை பொழிவிக்க..
அத்துன்பத்தில் இருந்து ஆயர்களைக் காக்க ஆயர்தம் குலத் தலைவனான கண்ணன் கோவர்த்தன மலையைத் தன் கையால் தூக்கிக் குடையாய்த் தாங்கும் காட்சி கிரிதாரியாக வணங்கப்படுகிறது...!
இனிய நீர்ச்சுனைகளும் இன்னிசை ஓடைகளும் நிறைந்த குன்றம் யாராலும் ஏற முடியாத படி செங்குத்தாக இல்லாமல் ஆடு மாடுகளும் மற்ற விலங்குகளும் மனிதர்களும் எளிதாக ஏறிச் சென்று இயற்கை வளங்களை அனுபவிக்கும் படியாக அமைந்த குன்றம் கோவர்த்தன மலை
இறைவனே கோவர்த்தனக்குன்றின் வடிவில் நின்று ஆய்ப்பாடியினர் படைத்த படையல்களை எல்லாம் ஏற்றுக் கொண்ட பெருமை பெற்றது..!
கோவர்த்தன குன்றத்தின் மீது மரங்களின் காய்களையும் கனிகளையும் உண்டு வாழும் மந்திகளும் (பெண்குரங்குகள்) கடுவன்களும் (ஆண்குரங்குகள்) நிறைய உண்டு. 
மற்ற இடங்களில் வாழும் குரங்குகள் ஐந்தறிவினவாக இருக்க இந்த கோவர்த்தன குன்றத்தில் வாழும் குரங்குகளுக்கு மட்டும் ஆறாவது அறிவும் இருக்கின்றது ... 
எனவே இந்த மந்திகள் தங்கள் குட்டன்களைத் (குழந்தைகளை) தூங்க வைக்கும் போது தங்கள் முன்னோனாகிய அனுமனின் வீர தீர கதைகளைச் சொல்லி குழந்தைகளைத் தூங்கவைப்பதை  எங்கே கற்றன? 
ஆதி சேஷன் தன் ஆயிரம் தலைகளால் இவ்வுலகைத் தாங்குவதைப் போல் தன் விரல்களால் இக்குன்றம் ஏந்திக் குளிர்மழையிலிருந்து ஆய்ப்பாடி ஆயர்களையும் அவர் தம் செல்வங்களையும் காத்தானே கோகுலன். ..!

ஆயர்கள்  கோவர்த்தனத்தின் நிழலில் ஏழு நாட்கள் தங்கியிருந்த போது அவர்களிடம் இருந்து அனுமன் கதைகளையும் அவற்றைச் சொல்லி தம் குழந்தைகளை உறங்க வைக்கும் முறையையும் இந்த மந்திகள் கற்றுக் கொண்டன போலும்...!

கோவர்த்தன மலை நிழலில்  சிறு குழந்தையை ஏந்தியபடி செல்லும் ஆயன், தாடியுடன் கையில் கோல் கொண்டு செல்லும் முதியோன், இடைச்சி, ஓலைப் பாயைச் சுருட்டித் தலையில் வைத்துக் கொண்டு உரியில் வரிசையாய் அடுக்கிய தயிர்க் குடங்களுடன் செல்லும் பெண், கன்றை நாவால் தடவும் பசு, பாற்குடம் ஏந்திப் பால் கறக்கும் ஆயன், துள்ளி விளையாடும் கன்று, ஆநிரைகள் என ஓர் ஆயர் பாடியை அப்படியே கண் முன் நின்று காக்கிறார் ஐந்து வயதும் நிரம்பாத சிறுபாலகனாய் காட்சியளித்த கண்ணன்

கோவர்த்தன கிரி கண்ணன் மீது அதிக அன்பு கொண்டு,இந்த குழந்தை தன்னைத் தூக்கிச் சுமக்கிறதே இந்தக் குழந்தையை நாம் சுமக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டதாம்.

ஏழு நாட்கள் மலையைச் சுமப்பதற்கான வலிமையை இந்த மலையே கண்ணனுக்குக் கொடுக்கிறதோ என்று வியந்த கோகுலவாசிகளுக்கும், மாடுகன்றுகளுக்கும் ஏழுநாள் பசி இல்லை தாகம் எடுக்கவில்லை,.கண்ணன் அருள்.

கலியுகத்தில் திருவேங்கடமுடையானாக அவதரித்த கண்ணனை ஏழுமலைகளாக - ஷேசாசலமாகத் தாங்கி ஏழுமலை வாசனாக்கி மலை பெருமை சேர்த்துக் கொண்டது.

ஏழுநாள் குன்றம் ஏந்தியவனை ஏழுமலையாகி வாசம் செய்யவைத்த மலை மக்களால் பிரதட்சிணம் செய்து வணங்கப்படுகிறது.

ஆலிலையில் பள்ளிகொண்ட அற்புத பாலகனாய் கராரவிந்தத்தால் பதாரவிந்ததைப் பற்றி ,முகாரவிந்தத்தில் விகசிக்கும் புன்னகையோடு அற்புத மாயா தரிசனத்தை என்றும் பதினாறான மார்க்கண்டேய முனிவருக்கு அருளி குருவாயூர் ஷேத்திரத்தில் எழில் கோலம் கொண்டருளும் குருவாயூரப்பன்.....
மச்ச அவதாரம் முதலாகக் கொண்டு நூறு தசகங்களால் நாராயணீயம் பாடிய நாராயண பட்டத்திரி விசுவரூபியாக வராக அவதாரத்தில் பூமியையே எளிதாக தூசிபோல் மீட்டெடுத்த கிருஷணனுக்கு, ஒரு குன்றைச் சுமப்பது எம்மாத்திரம்? என்று வணங்குவார்

தீபாவளி முடிந்த மறு நாள் "கோவர்த்தன பூஜை" மிகவும் உற்சாகமாக பீஹார், உத்தர்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாகாணங்களில் நடக்கும். 

விழாவன்று எல்லோரும் இரவு முழுவதும் தூங்காமல் ஆட்டத்திலும் பஜன்களிலும் பங்கு ஏற்று தங்களையே மறப்பார்கள். 

கோ என்றால் பசு, வர்தனா என்றால் ஊட்டம் தருவது ... 

ஆடுமாடுகளுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கும் புற்கள் நிறைந்த நிலங்கள் சூழ்ந்த இடம் தான் கோவர்த்தன மலை....
கிருஷணர் பால பருவத்தில் ஓடி விளையாடிய இடம்  இந்த விரஜபூமி. 
இந்த இடத்தில் தான் கோவர்தன மலை வந்து அமர்ந்தது.
கண்ண்ன் பிறந்தான், வளர்ந்தான், விரஜபூமிக்கு வந்து இராஸலீலையில் ஈடுபட்டான். 

ஒவ்வொரு வருடமும் அங்கு இந்திரபூஜை நடக்கும், 
ஆனால் இந்த மாயக்கண்ணன் அதை மாற்றினான். 

கோமாதாவுக்கும் கால்நடைகளுக்கும் உணவைக் கொடுக்கும் 
கிரிராஜனை வணங்க வைத்தான். 

கண்ணன் சொல்லே மந்திரமாக ஏற்றுக்கொண்டு அவன் வார்த்தையில் கட்டுண்ட விரஜவாசிகள் இந்திரனை மறந்து அந்த மலையைப் பூஜிக்கத் தொடங்கினார்கள். அவ்வளவுதான் இந்திரனுக்கு வந்தது கோபம். 

திடீரென்று இடி இடித்து கனமழையை உண்டாக்கினான். 

பசுக்கள், விரஜவாசிகள், கோபியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
புன்னகையுடன் வந்தான் மாதவன். 
தன் சுண்டுவிரலால் கோவர்த்தனம் தாங்கி அதனடியில் 
மக்களுக்குப் புகலிடம் கொடுத்துக் காத்தார். 
இந்திரனும் பின்னால் கண்ணனிடம் மன்னிப்புக் கோரினான்.
ஒரு சின்ன மலையைச் சாணத்தினால் உண்டாக்கி அதற்கு மலர்மாலைச் சார்த்தி, அழகான ரங்கோலி என்ற வண்ணக்கோலம் இட்டு அதை கோவர்த்தனகிரியாக வழிபடுவார்கள் அந்த ஊர் மக்கள். 

கண்ணனுக்குப் பிடித்த பலவகை இனிப்புக்கள், முக்கியமாக பால், தயிர் சேர்த்த பலகாரங்கள், அன்னம், பருப்பு என்று 56 வகைகள் நைவேத்தியம் செய்ய எடுத்துவந்து அதையும் மலை போல் குவிப்பார்கள். இதை "அன்னகூட்" என்கிறார்கள்.

சில மக்கள் சாதம் வடித்து அதையே மலை போல் ஆக்கி நைவேத்தியம் செய்கிறார்கள். அண்ணாமலை கிரிவலம் வருவது போல் இந்த மலையையும் கிரிவலம் வருகிறார்கள். 

பகீரதன் பூமிக்குக் கொண்டு வந்த கங்கையைப்போல் இங்கும் ஒரு கங்கை இருக்கிறது. இதன் பெயர் "மானஸ கங்கை".
கண்ணன் தன் மனதினால் உற்பத்தி செய்த கங்கை இது. 
அதனால் "மானஸ கங்கை" என்று பெயர் வந்தது.
இந்த மலை ஆரம்பத்தில் 30 கிமீ உயரம் இருந்ததாம். 
இப்போது 80 அடி உயரம்தான் இருக்கிறது 
என்று சொல்லிக் கொள்கிறார்கள். 

இந்த மலையில் அங்கப்பிரதக்ஷிணமும் செய்கிறார்கள்.
இந்த கோவர்த்தனபூஜை செய்ய பாபங்கள் நீங்கி வாழ்க்கை வளமுறும்.

மழை வந்ததும், முதலில் பசுக்கள், தலைகளைத் தாழ்த்திக் கொண்டு, கன்றுகளைத் தன் கால்களின் இடையே வைத்துக் கொண்டு கண்ணனிடம் வந்து நின்றதாம்! 
அதன் பிறகே மனிதர்கள் வந்து நின்றனராம்!

கண்ணன் தன் ஒரு கைச் சுண்டு விரலால் கோவர்த்தன மலையைக் குடையாக்க, அனைவரும் அதன் கீழ் ஒரு வாரம் நிம்மதியாக இருந்தனர். இந்த அற்புதத்தைக் கண்டு இந்திரன் திகைத்தான். 
கண்ணன் யார் என்று புரிந்தது. மேகங்களை விலக்கி, கண்ணனைச் சரணடைந்து, 'கோவிந்தன்' என்று பெயர் சூட்டிப் பட்டாபிஷேகம் செய்வித்தான்..

கோவர்த்தன பூஜை செய்வதன் மூலம் மழை வளம், செல்வம், புகழ், அழகு போன்ற பல்வேறு பேறுகளை அடையலாம் என்பது ஐதீகம்.

பூதேவியின் நாயகனான திருமாலை வழிபட்டால், இயற்கை சீற்றங்களின் பிடியில் இருந்து விடுதலை பெற  கோவர்த்தன விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது..!
கோவர்த்தன மலை  தாங்கிய கிருஷ்ணர், கோவர்த்தனன் என்று பெயர் பெற்றார். கோவர்த்தனர் என்ற சொல்லுக்கு, இடையர்
(பசு மேய்ப்பவர்கள்) என்று பொருள்.

இந்த சொல்லுக்கு, சிங்கம் என்ற பொருளுண்டு.

மக்களை இயற்கை சீற்றம் வாட்டிய போது, சிங்கமென சீறியெழுந்து வந்து காத்தார் கண்னன். எனவே கோவர்த்தன விரதத்தை அனைவரும் கடைபிடித்து, இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பை தேட வேண்டும்.

“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே’ என்ற பதினாறு அட்சர மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்
உலகெங்கிலும் உள்ள இஸ்கான் ஆலயங்களிலும் உணவு பெருமளவில் தயாரிக்கப்பட்டு பிரசாதமாக மக்களுக்கு வினியோகிக்கப் படுகிறது.

விருந்தாவன வாசிகள் ஒன்றுகூடி, பசுக்களை அலங்கரித்து, அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள்.
கிருஷ்ணர் மிகப் பிரமாண்டமான உருவத்தை மேற்கொண்டு, கோவர்த்தன கிரிக்கும் தமக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை, இரண்டும் ஒன்றே, என்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்த, அங்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு முழுவதையும்; கிருஷ்ணர் உண்டார். கோவர்த்தன கிரியும் கிருஷ்ணரும் ஒன்றே என்ற கருத்து இன்றும் மதிக்கப் படுகிறது.
கோவர்த்தன மலையின் கற்களை எடுத்துச் சென்று வீடுகளில் வைத்து கிருஷ்ணராக அவற்றைப் பூஜிக்கிறார்கள். 

உணவு முழுவதையும் உண்ட கிருஷ்ண வடிவமும், கிருஷ்ணர் தாமும் வெவ்வேறாக விளங்கி நின்றதால் கிருஷ்ணர் தாமும் மற்ற விருந்தாவனவாசிகளும் அந்த மாபெரும் மூர்த்திக்கும் கோவர்த்தன மலைக்கும் ஒருங்கே வழிபாடு நடத்தினார்கள்.
.
யமுனா தீர விஹாரிப்ருந்தா வன சஞ்சாரி கோவர்த்தன கிரிதாரி


அன்னகூடோற்சவம் ..!

16 comments:

  1. அழகான படங்கள், அருமையான விளக்கங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஓ... அங்கு கோவர்த்தன பூஜை தீபாவளி முடிந்த மறுநாள் கோவர்த்தன பூஜை கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது என்ற விவரம் அறிந்தேன். கோவர்த்தன மலை பற்றியும் ஏராளமான விவரங்கள்.

    ReplyDelete
  3. கோவர்த்தன மலையைப் போலவே தங்களுடைய பதிவும் திகழ்கின்றது.
    அருமை.. அழகு..

    ReplyDelete
  4. ”கோவர்த்தன பூஜை” என்ற தங்களின் இன்றைய பதிவு அழகோ அழகு ...... அந்த ஸ்ரீகிருஷ்ணனைப்போலவே!

    >>>>>

    ReplyDelete
  5. படங்கள் அத்தனையும் வெகு ஜோர்.

    கோவர்த்தன கிரியை பகவான் தன் இடதுகை சுண்டுவிரலால் தாங்கிப்பிடிக்க அதன்கீழ் பொதுஜனங்களும், பிராணிகளும் அடைக்கலம் ஆகியிருக்கும் படத்தில் உள்ள பசுவும்,

    ’கன்னுக்குட்டி என் செல்லக் கன்னுக்குட்டி’யும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    >>>>

    ReplyDelete
  6. எத்தனை எத்தனை விளக்கங்கள் - அத்தனையும் அருமையோ அருமை தான்.

    பூஜை முறைகள் யாவும் மிகத்தெளிவாக பொருத்தமான படங்களுடன் கொடுத்துள்ளது சிறப்போ சிறப்பாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  7. பால், தயிர், வெண்ணெய், நெய் என அனைத்தும் நெய் மணம் கமழ்வதாகவே கொடுத்ததுடன், பழங்களும், பக்ஷணங்களுமாக இத்தனை வகையறாக்களைக் காட்டி கடும் உழைப்பல்லவா உழைத்துள்ளீர்கள் ! ;)

    மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  8. ஐந்து மயில்கள் ..... அற்புதம்.

    கடைசியில் மஹாவிஷ்ணு முன்பு சிவக்கொழுந்தைக் குட்டிக்குழந்தையாகக் காட்டி ‘ஹரியும் சிவனும்’ ஒன்றே என்பதுபோல முடித்துள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.

    அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    தினமும் கொஞ்ச நேரமாவது, கணனியிலிருந்து விலகியிருந்து, சற்றேனும் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என, தங்கள் மேல் எனக்குள்ள தனி அக்கறையால், மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    -oOo-

    ReplyDelete
  9. அற்புதமான ஓவியங்கள்! அபூர்வ தரிசனம்!

    ReplyDelete
  10. அழகான படங்கள், அருமையான விளக்கங்கள், நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  11. கோவர்தன பூஜை தகவல்கள் மற்றும் படங்கள் வெகு சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி.
    கோவர்த்தன பூஜை பற்றிய அனைத்தும் தகவல்களும் அருமை. படங்களோடு பகிர்ந்து சிறப்பு செய்த விதம் அழகு. பகிர்வுக்கு நன்றீங்க. தொடரட்டும் தங்கள் ஆன்மீகப் பணி.

    ReplyDelete
  13. கோவர்தன் பூஜை செய்திகள் எல்லாம் அருமை.
    கோவர்த்தன கிரியை சுற்றி வந்து அங்கு உள்ள கற்களை எடுத்துவந்து இருக்கிறோம். வீட்டில் வைத்து பூஜித்து வருகிறோம். கோவரத்தன கிரியை அங்குள்ள மக்கள் சுற்றிவருவதை பார்த்தால் நமக்கு வியப்பாய் இருக்கும். அடிக்கு அடி கீழே விழுந்து வணங்கி செல்வார்கள்.
    படங்கள் எல்லாம் மிக அழகு.
    நன்றி.

    ReplyDelete
  14. கோவர்த்தன பூசை தகவல்கள் நன்று.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. கோவர்த்தன பூஜை ,ஆலிலை கிருஷ்ணன், மனதை குளிர்விக்கின்றன.

    ReplyDelete