Monday, November 7, 2011

ஜோதியாய் ஜொலிக்கும் அருட்கடல்

Maa_Parvati,_Lord_Shiva,_Son_Loard_Ganesh_and_kartike.jpg

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

பிறவாயாக்கைப் பெரியோன் என சிறப்பிக்கப்படுவர் சிவபெருமான்.
மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை
மிகவும் பழமையானது தேப்பெருமாநல்லூர் சிவன் கோவில். ஆகம விதிகளுக்கு முற்றிலும் மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது. 



 எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.""யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர் கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்'' 
 சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.
06:09, 4 ஏப்ரல் 2009 -ல் இருந்த பதிப்பின் சிறு தோற்றம்[bel.jpg]
மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் 
வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி. நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். 

இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வையால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்


.பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்?சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், ""நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்'' என்று சொன்னார்.
 

அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள்..எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். 


அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். 

அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,""என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?'' என்று கேட்டாள். சனி பகவான், ""நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்த தல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்'' என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். 

சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.


இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, ""ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார்.





 அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.


மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தாள் அம்பிகை. அம்பாளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபியானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். ""ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம் நீங்கும்'' என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.இதனைக் கண்ட நாரதர், ""இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!'' என்று போற்றிப் புகழ்ந்தார்.""பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர் சொன்னார்.


 அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். 


வழி மறித்த மகரந்த மலர் களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ""மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்'' என்றார்.மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், ""பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, ""மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது'' என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

[agathiyar.jpg]
சாந்தமடைந்த அகத்தியர், ""மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். 
இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கி றார்கள்.


இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணி களைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள்.

 மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. 


இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ""நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்'' என்று ஆறுதல் கூறினார்.அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார்கள். 

.இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதியர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத் திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.


அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.

கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் 

 "ஈசனுடன் அன்னையும் நானும் இத்தலத்தில் எழுந்தருள்வோம். 
அப்போது என் கண்கள், மனித கண்கள் போல நேராகக் காட்சி தரும்; என் நகங்கள், நரம்புகள் எல்லாம் மனித உறுப்புகள் போலவே இருக்கும். அந்த வேளையில் அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடு மாலைகளாக மாற்றி என் இடுப்பில் ஒட்டியாணமாக அணிவேன். என்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களை நிவர்த்தி செய்து சகல பாக்கியங்களையும் அளிப்பேன்’’ என்று நாரதருக்குத் திருவாய் மலர்ந்தருளி கபாலகணபதியாக அருள்பாலிக்கிறார்.கணபதியின் கண்கள் யானை முகத்திற்கு உள்ளது போல் முகத்தின் பக்கவாட்டில் இல்லாமல், மனிதர்களுக்கு இருப்பது போல் முகத்தின் நடுவில் உள்ளது. மேலும், இவரது கை, கால் விரல்கள் மனித விரல்களைப் போல் நீண்டுள்ளது. இடுப்பில் கபால மாலையை அணிந்திருக்கிறார் இவர்.



கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.


.சிறப்புச் செய்தி தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது படர் வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம்போல் அமைக்கப்பட்டுள்ளது.


சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.
ஒவ்வொரு கிரகணத்தின் போதும் தன் சாபத்தை போக்கிக்கொள்ள பாம்பு வந்து வில்வத்தால் விசுவநாதசுவாமியை அர்ச்சித்து வருகிறது. இதுவரை நம் கண்ணில் படவில்லை. இன்று தான் நேரில் கண்டுள்ளோம்,'' என்கின்றனர்..
நாதர்முடி மேலிருக்கும் நல்லபாம்பே!* 
Cobra doing Archana

[5.jpg]

[1.jpg]
[9.jpg]


39 comments:

  1. இந்நிகழ்ச்சியை சன் நியூஸ் நிஜம்
    நிகழ்ச்சியில் ஓயல்பரப்பினார்கள்.ஆனால் ஒவ்வொரு சூரிய கிரகனதிற்க்கும் செய்கிறதா தெரியவில்லை.

    ReplyDelete
  2. அம்மாடி நிறையக் கதைகள். அத்துடன் நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பையும் பாத்தாகி விட்டது. மிக்க நன்றி. நன்றி. வாழ்த்துகள்.

    வேதா. இலங்காதிலகம்.(இப்போது இங்க 21.58.இரவு.in Denmark)
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  3. ஆஹா அருமையான தொகுப்பு ஒன்றினை அதிகாலையில் வாசித்து இன்புற்றேன்.நன்றி சகோ.

    ReplyDelete
  4. பாம்புடன் விளையாடும் குழந்தை! இல்லை...இல்லை! குழந்தையுடன் விளையாடும் பாம்பு!!!! மிகவும் அற்புதம்.

    ReplyDelete
  5. முன்பெல்லாம் ஆன்மிக புத்தகத்தில் வரும் கோவில்கள் பற்றிய குறிப்பினை தொகுத்து வருவேன். அதற்கு அவசியம் இன்றி செய்து விட்டீர்கள்!

    ReplyDelete
  6. ஒவ்வொரு தினம் ஒரு படைப்பினை அருமையாக வெளியிடும் தங்களுக்கு பதிவுஉலகின் மேதை என்ற பட்டம் சாலப் பொருந்தும்!

    ReplyDelete
  7. ஜோதியாய் ஜொலிக்கும் அருட்கடல் என்ற இந்தப்பதிவும் நன்கு ஜொலிக்கிறது, அழகான படங்களுடனும் அருமையான விளக்கங்களுடனும்.

    கடைசிக்கு முந்திய படத்தில் குழந்தையை அந்தப் பாம்பு கொத்தி விடுமோ என ஒரே கவலையாக உள்ளதே! என் மனம் பதறுகிறதே!!

    ருத்ராட்சம் பற்றி, சிவனையே சனி பகவான் பிடித்த்து பற்றி, அந்தச் சனிபகவானை சிவன் இரண்டாகக் கிழித்தது பற்றி, பின்பு சேர்த்தது பற்றி, நந்திகளின் வலது காதில் கோயில்களில் இன்றும் கூட பலரும் தமது பிரார்த்தனைகளை விண்ணப்பித்துக் கொள்வதன் காரணம் பற்றி அனைத்து விபரங்களும் அருமையோ அருமை.

    அழகிய புடவைக்கட்டுடன் தோன்றும் அந்த வேதநாயகி அம்பாள் அழகோ அழகு.

    மிக நீண்ட பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள். vgk

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி! விவரங்கள் பல புதியவை.

    ஆனால், அந்தக் குழந்தையும் பாம்பும் - நீக்கி விடுங்களேன், மனதுக்கு மிக கஷ்டமாக இருக்கிறது!

    ReplyDelete
  9. ஜோதியாய் ஜொலிக்கும் அருட் கடல் நன்கு ஜொலிக்கிரது. வழக்கம்போல அழகான படங்கள், அருமையான விளக்கங்கள்.

    ReplyDelete
  10. என்னங்க இது கொழந்தைய இப்படிப்பண்ணி எங்களுக்கு திகிலூட்டறிங்க. வேண்டாங்க, பயமா இருக்குங்க.

    ReplyDelete
  11. DrPKandaswamyPhD said...
    என்னங்க இது கொழந்தைய இப்படிப்பண்ணி எங்களுக்கு திகிலூட்டறிங்க. வேண்டாங்க, பயமா இருக்குங்க.//


    நீக்கிவிட்டேன் ஐயா.
    தங்களைப்போல பலருடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து.

    கருத்துரைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  12. வை.கோபாலகிருஷ்ணன் said.../

    அருமையாய் அளித்த கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  13. கோகுல் said...
    இந்நிகழ்ச்சியை சன் நியூஸ் நிஜம்
    நிகழ்ச்சியில் ஓயல்பரப்பினார்கள்.ஆனால் ஒவ்வொரு சூரிய கிரகனதிற்க்கும் செய்கிறதா தெரியவில்லை.//

    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  14. kavithai (kovaikkavi) said...
    அம்மாடி நிறையக் கதைகள். அத்துடன் நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பையும் பாத்தாகி விட்டது. மிக்க நன்றி. நன்றி. வாழ்த்துகள்./

    வாழ்த்துகளுக்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  15. FOOD said...
    ஆஹா அருமையான தொகுப்பு ஒன்றினை அதிகாலையில் வாசித்து இன்புற்றேன்.நன்றி சகோ.//

    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  16. சந்திர வம்சம் said...
    முன்பெல்லாம் ஆன்மிக புத்தகத்தில் வரும் கோவில்கள் பற்றிய குறிப்பினை தொகுத்து வருவேன். அதற்கு அவசியம் இன்றி செய்து விட்டீர்கள்!//


    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  17. middleclassmadhavi said...
    பகிர்வுக்கு நன்றி! விவரங்கள் பல புதியவை.

    ஆனால், அந்தக் குழந்தையும் பாம்பும் - நீக்கி விடுங்களேன், மனதுக்கு மிக கஷ்டமாக இருக்கிறது!..

    கஷ்டப்பட நான் காரணமாவதா?? நீக்கிவிட்டேன்..

    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  18. Lakshmi said...
    ஜோதியாய் ஜொலிக்கும் அருட் கடல் நன்கு ஜொலிக்கிரது. வழக்கம்போல அழகான படங்கள், அருமையான விளக்கங்கள்.//

    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் அம்மா.

    ReplyDelete
  19. தகவலுக்கு நன்றி அருமை

    ReplyDelete
  20. நமச்சிவாய ...
    நமச்சிவாய...
    என்னாருடைய சிவபெருமானின்
    அருள் கிடைத்தது சகோதரி....

    ReplyDelete
  21. தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
    தன்னோ ருத்ரப் பிரசோதயாத்.

    ReplyDelete
  22. தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

    ReplyDelete
  23. தேப்பெருமாநல்லூர் சிவன் கோவில் செல்ல பாக்கியம் வேண்டும்... பிறவி இல்லாதவர்க்கு மட்டுமே கிடைக்கும் என்பதாக அருமையாக சொல்லியுள்ளீர்கள்... இறைவனை தினம் நினைத்து வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க செல்ல வேண்டுவோம்...

    ReplyDelete
  24. இக்கோவிலில் சனி பகவானைப்பற்றிய செய்தி சிறப்பு...

    ReplyDelete
  25. நந்தியின் வலக்காதில் சொல்ல வேண்டும் என்ற செய்தி இனி பின்பற்ற வேண்டும்... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  26. பிறவி சாபங்கள் நீங்க அன்னதான தட்சிணாமூர்த்தியை வணங்குவோம்.. நல்ல செய்தி.

    ReplyDelete
  27. தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார்... முருகபெருமான் என்ற பெயரை கேட்டாலே மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி மேலேங்குகிறது.. கோயிலுக்கு செல்ல அருள் இருக்கிறதா பார்ப்போம்...

    ReplyDelete
  28. நாகம் வில்வதலையுடன் வந்து சாமியை தரிசிக்கும் படத்தை பார்த்து பக்தி பரவசம் அதிகமாகிறது.. இந்த சக்தி வாய்ந்த கோயிலுக்கு செல்லும்பாக்கியம் அமைய இறைவன் அருள வேண்டும்... இறைவா.. பகிர்வுக்கு மனம் கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  29. அருமையான தகவலுடன் பதிவு ,நேரில் கண்ட தரிசனம் ,பகிர்வுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  30. ஸ்தல புராணம் மனசைக்கவர்ந்தது.படங்கள் அருமை.

    ReplyDelete
  31. shanmugavel said...
    ஸ்தல புராணம் மனசைக்கவர்ந்தது.படங்கள் அருமை./

    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  32. K.s.s.Rajh said...
    தகவலுக்கு நன்றி அருமை/

    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  33. சென்னை பித்தன் said...
    தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
    தன்னோ ருத்ரப் பிரசோதயாத்./

    சிவகாயத்ரி பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  34. மாய உலகம் said...
    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!/

    தங்களின் அத்தனை கருத்துரைகளும் பதிவிற்குப் பெருமை சேர்க்கின்றன.

    மனம் நிறைந்த இனிய நன்றிகள்..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  35. M.R said...
    அருமையான தகவலுடன் பதிவு ,நேரில் கண்ட தரிசனம் ,பகிர்வுக்கு நன்றி மேடம்/

    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  36. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. ;) ஓம் விகடாய நம:

    ;) ஓம் விக்ந ராஜாய நம:

    ;) ஓம் விநாயகாய நம:

    ;) ஓம் தூமகேதவே நம:

    ;) ஓம் கணாத்யக்ஷாய நம:

    ReplyDelete
  38. 1287+2+1=1290 ;)

    குட்டியூண்டு பதிலுக்கு நன்றி.

    ReplyDelete