Tuesday, June 10, 2014

வசீகரிக்கும் வைகாசி விசாகத்திருநாள்..



அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய”

சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றதனை, 
“ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், 
ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே” என்று 
அருணகிரியார் பாடுவார்.
“சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டழிந்ததது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே”
சூரனின் சேனைகளை அழித்த குமரன், திருச்செந்தூர் படைவீட்டில் தேவ சைன்யங்கள் சூழ அமர்ந்திருக்கிறான். சகல தேவ சக்திகளும் முருகனை வாழ்த்த அங்கு கூடியிருக்கின்றனர். 
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில்  தனிச் சிறப்பு கொடிமரத்திலிருந்து வலமாக எல்லாச் சன்னதிகளுக்கும்  சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். 

திருச்செந்தூர் திருக்கோயிலில் மட்டுமே விபூதியை 
பன்னீர் இலையில் மடித்துத் தருவார்கள்
இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் பன்னிரண்டு நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் பன்னிரண்டு திருக்கரங்களாகும்.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. 

தங்கத்  தேங்காய்களும் இங்கு உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை. பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப்படுகின்றது.

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் வைகாசி விசாகத்தன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு 
விஸ்வரூப தீபாராதனை நடக்கும்..

திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது
வள்ளி, தெய்வானை சமேதராக சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை அடைவார்..

 பல பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி சுவாமி  தரிசனம் செய்வார்கள்... 

பழநியில் திருக்கல்யாணம்  , தேரோட்டம்  நடக்கும்..

 அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு  வழிபாடுகள் நடைபெறும்..
வைகாசி விசாகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். 
அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய  திருப்பெயர்களில் ஒன்று. 
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்று வைணவ ஆசாரியர்களில் முதலாவதாக வணங்கப் படும் நம்மாழ்வார் உதித்த நாளும் இது தான். நெல்லை  மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகிலேயே ஆழ்வார் திருநகரி என்ற திருத்தலத்தில் அவதரித்தவர். எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் திருவடியில்  சடாரியாக வீற்றிருந்து என்றென்றும் அடியார்களை ஆசிர்வதிக்கிறார் ஆழ்வார். நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று  ஆழ்வார்திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது..

வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும். 

இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். 

திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார். 

வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். 
துன்பம் நீங்கும். 
இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம்  செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். 
குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.
 மாதவ மாதம் என்று வைகாசி மாதம் மட்டுமே  சிறப்பு பெற்றது... 

காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதாரம் செய்தது வைகாசி மாத  அனுஷ நட்சத்திர நாளில்தான். 

நாயன்மார்களுள் கழற்சிங்கர், சோமாசி மாறர், திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர், முருகநாயனார், நமிநந்தியடிகள் ஆகியோர் அவதரித்ததும் வைகாசி மாதத்தில்தான். 

பெரிய புராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகளும் அவதரித்தது இந்த மாதத்தில் தான்

முருகப் பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஷண்முகர், வள்ளி, தெய்வானை கொடி மரத்தை 3 முறை வலம் வந்து, விசாகக் குரடில் எழுந்தருளுவார்கள்... 

இங்கு வைகாசி  விசாகத்தன்று மட்டுமே மூன்று பேரும் எழுந்தருள்வார்கள் என்பது சிறப்பு..! 

ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து வந்து சண்முகருக்கு அபிஷேகங்கள் செய்து வழிபடுவார்கள்..

திருத்தணியில்  உள்ள. குமார தீர்த்தத்தில் வைகாசி விசாகத்தன்று நீராடி முருகப் பெருமானை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் 

வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச  ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். 

வைகாசி மாத  அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே  குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும்.
 முருகனின் பன்னிரு கரங்கள் செய்யும் பணிகள் 
இரு கைகள் தேவரையும் முனிவரையும் காக்கிறது.  
மூன்றாவது கை அங்குசத்தைச் செலுத்துகிறது. 
மற்றொரு கை ஆபத்தில் இருக்கும் அன்பர்களைக் காக்கிறது. 
ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச்  சுழற்றுகின்றன. 
ஏழாவது கை முனிவர்களுக்கு அருள்பொருளை உணர்த்துகிறது. 
எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. 
ஒன்பதாவது கை  வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கின்றது. 
பத்தாவது கை மணியை ஒலிக்கின்றது (அருளோசை). 
பதினோராவது கை மழையை அருள்கிறது.  
பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.

16 comments:

  1. படங்கள் அத்தனையும் வசீகரிக்கின்றன .... தலைப்பைப்போலவே !

    >>>>>

    ReplyDelete
  2. முருகனைப்போலவே மிக அழகான பதிவு

    >>>>>

    ReplyDelete
  3. முருகனைப்போலவே மிக அழகான பதிவு

    >>>>>

    ReplyDelete
  4. திருச்செந்தூர் போய் சமுத்திர ஸ்நானம் செய்தது நினைவுக்கு வந்தது. இன்று மீண்டும் அங்கு அழைத்துப்போய் அசத்தியுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  5. முருகா ! முருகா !! முருகா !!!

    உனக்கு இன்று இதுபோதுமே முருகா !

    இதுவே ஜாஸ்தி அல்லவோ !

    ;) 1301 ;)

    ReplyDelete
  6. வைகாசி விசாகத் திருநாள் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  7. பன்னீர் இலையில் விபூதி - அதுவே தனி மணம் தருமோ..

    முருகனைக் கும்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே...

    ReplyDelete
  8. வணக்கம்
    அம்மா.

    இந்துக்களின் விசேட தினம் பற்றி மிக அருமையா கூறியுள்ளீர்கள் படங்கள் எல்லாம் மிக அழகாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அம்மா
    என்பக்கம் கவிதையாக

    சிறகடிக்கும் நினைவலைகள்-3.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. சிறப்புகள் அனைத்தும் அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. விசாக வைபவத்தில் திருச்செந்தூர் - அருமையான தரிசனம்.மகிழ்ச்சி.

    ReplyDelete
  11. வைகாசி விசாக திருநாள் ,திருச்செந்தூர் முருகனின் விபூதியை பன்னீர் இலையில் கொடுப்பது பற்றிய சிறப்பான தகவல்கள்,அழகான படங்களுடன் அருமை. நன்றி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. பன்னீர் இலை பற்றிய விளக்கம் அறிந்தேன்
    பக்தி பூர்வப் பதிவிலிருந்து .
    மிக நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. திருச்செந்தூர் தரிசனம் மனதிற்கு நிறைவு. நன்றி.

    ReplyDelete
  14. Lord Muruga is great,as well as you too.

    ReplyDelete
  15. விவரமும் தரிசனமும் கிடைக்கப் பெற்றோம். நன்றி.

    ReplyDelete
  16. முருகனின் ஒவ்வொரு திருவுருவப் படங்களும் கொள்ளை அழகு.

    திருச்செந்தூர் கோயிலுக்கு சிறு வயதில் சென்றது, மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும்.

    பகிர்வுக்கு நன்றி அம்மா.

    ReplyDelete