Tuesday, June 24, 2014

மங்களங்கள் அருளும் ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர்





நீரிடைத் துயின்றவன் தம்பி நீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன் அனுமான் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்த எம்
சீருடைச் சோடர் வாழ் திருவு சாத்தானமே!'

இராமன், இலக்குமணன், சாம்புவான், சுக்ரீவன், அனுமன் 
முதலியோர் வழிபட்ட திருவூர் திருஉசாத்தானம் என்று போற்றுகிறார் 
திருஞான சம்பந்தர்.

 வருணன், இந்திரன், விஸ்வாமித்திரர் ஆகியோரும் பூஜித்த தலம் .

ஸ்ரீ இராமபிரான் இறைவனை வழிபட்டு (உசாவி) 
உபாயம் அறிந்தமையால் உசாத்தானம் என்று பெயர் வழங்கும் தலம், இந்நாளில் "கோவிலூர்' என்றே சிறப்பாக வழங்கி வருகிறது.

இராமபிரான் சேது அணை கட்டுவதற்கு முன் வேதாரண்யம், மணமேல்குடி முதலிய இடங்களில் அணை கட்டுவதற்கு முயற்சித்து முடியாமல்போகவே, இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டு- இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றுச் சென்று பின் சேது அணை கட்டி முடித்ததால்,இறைவனுக்கு ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் என்னும் 
பெயர் உண்டாயிற்று

ஸ்ரீராமர் வானரச் சேனைகளோடு கடலில்  முதலில் கட்டிய பாலம் வெள்ளத்தால் அமிழ்ந்தது.

இரண்டாவது பாலத்தை மேற்குத் திசையில் கட்ட, அதுவும் மீன்களால் அழிந்தது. இப்பகுதியைச் சார்ந்த ஊர் இன்றும் 'மீன் பூசல்' (மீமிசல்) என்று அழைக்கப்படுகிறது. 

இவ்வாறாக, கட்டப்படும் பாலங்கள் அடுத்தடுத்து பாதிப்புறு வதைக் கண்டு கலங்கிய ராமபிரானைத் தேற்றிய அசரீவாக்கின் படி, சூதவனம்   வந்து
இங்கேயே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து அகத்திய மாமுனிவர் உபதேசித்த மந்திரங்களை  பிரயோகித்தார். அதனால் இத்தலம் மந்திரபுரி என்றழைக்கப்படுகிறது. 

இப்படி ராமபிரான் சொன்ன மந்திரங்களைச் செவி கொடுத்து கேட்ட லிங்கமாக இது  அமைந்திருப்பதை திருஞானசம்பந்தர்  பாடல் மூலமாக விளக்குகிறார். 

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, ராமருக்கு வெற்றி கிடைத்த தலமாதலால் இத்தலத்தை நினைத்தாலே வெற்றி

ராமபிரானுக்கு மந்திர உபதேசம் வழங்கியதால் இறைவன் 
சற்று இடதுபுறம் சாய்ந்தும், குனிந்தும் காணப்படுகிறார்.

உடல் நலம் பெறவும், உள்ளம் அமைதி பெறவும் வேண்டுவோர்
உசாவி அடையும் தானம்- "உசாத்தானம்'.

மிருகண்டு முனிவரின் புதல்வரான மார்க்கண்டேயன் 
பக்தியினால் காலனையும் கலங்கச் செய்த பக்தன் .

பதினாறு வயது வரையே இப்பூவுலகில் தனது வாழ்க்கை என்பதை 
தாய்- தந்தையர் கூறக் கேட்டு, சிவத்தலங்கள் தோறும் சென்று 
பூஜை செய்து வந்து, கடைசியாக "திருக்கடவூரை' அடைந்து, 
அங்கு கோவில் கொண்டுள்ள கடவூர்ப் பெருமானைப் 
பூஜித்துக் .கொண்டிருக்கையில், ஆயுள் எல்லை வந்துவிடவே, 
காலன் கணங்களுடன் வந்து மார்க்கண்டேயனை அவன் 
பூஜிக்கும் பெருமானுடன் சேர்த்துப் பாசத்தைக் கட்டி இழுத்தான்.

பெருமான் லிங்கத்திலிருந்து காலசம்கார மூர்த்தியாய் எழுந்து, காலனைக் காலால் உதைத்துத் தள்ளி, பக்தன் மார்க்கண்டேயனுக்கு சிரஞ்சீவியாய்- என்றும் பதினாறு வயதுடையவனாக இருக்க அருளினார்.

மார்க்கண்டேயனுக்கு ஆயுள் நிலைத்தாலும் ஆரோக்கியம் கெட்டுவிட்டது.

 காலனால் வீசப்பட்ட பாசக் கயிற்றினால், மேனி கருகி ஏற்பட்ட வடுக்கள் நீங்க "திருவுசாத்தானம்' என்னும் தலத்துக்குச் சென்று, அங்கு புனித தீர்த்தம் உண்டாக்கி நீராடி இறைவனை வழிபட்டு, வடுக்கள் நீங்கி மேனி எழில் பெற்று மீண்டான்.

இங்ஙனம் மார்க்கண்டேயன் அருள் பெற்ற தலமான- திருவுசாத்தானம், நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற ஒப்பற்ற தலமும்கூட!

இயற்கை எழில் கோலோச்சும் இனிய சூழலில் கோவிலூர் 
இறைவன் இனிது கோவில் கொண்டிருக்கிறான்.

ஐந்து நிலையுடைய கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் முதன் முதலில் தரிசிக்கும்  அம்மை பெரியநாயகி  கோவில் மிக அழகானது.
அவள் அருள்பாலிக்கும் கோலம் அதனிலும் மேலானது..

இறைவனின் திருநாமம் ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர்
இறைவியின் திருநாமம் பெரியநாயகி.

அம்மையாம் ஸ்ரீ பெரியநாயகி அருளே வடிவானவள். 
அன்புடன் வணங்கி இன்புறலாம். ஸ்ரீ பெரியநாயகி அம்மையின் பெருங்கருணையைப் பெற்று விட்டால், பெறற்கரிய பேற்றை பெறலாம்...
ஈசன் மந்திரபுரீஸ்வரர் லிங்க வடிவில் வெண்மை நிறமாகக் காட்சி 
அளிக்கிறார். 

ஸ்ரீ கருட பகவான் ஆகாய மார்க்கத்தில் அமுத கலசத்தை ஏந்திச் சென்றபோது  இறைவன்மேல் சிந்தியதால் இறைவன் வெண்மை நிறமாகக் காட்சி தருகிறார்.

அமுதனைய வீற்றிருக்கும் ஸ்ரீ மந்திரபுரீஸ்வரரை மனங்குழைந்து 
வேண்டினால் எண்ணிய, எண்ணியாங்கு எய்துவதற்குரிய 
மந்திரத்தை  பெறலாம்!

திருவுசாத்தானத்தை திருஞானசம்பந்தர் தில்லை கோயிலுக்கு நிகராக குறிப்பிடுவதால் இத்தலம் கோயிலூர் என்றழைக்கப்பட்டது. 
தேவாரப் பாடல் பெற்ற 107வது திருத்தலமாகும்

விஸ்வாமித்திரருக்கு இத்தலத்தின் அர்த்தஜாம பூஜையின்போது திருத்தாண்டவத்தினை ஆடிக் காட்டியதால் அர்த்தஜாம பூஜையின் சிறப்புக்குரிய தலம் சிதம்பரமே  எனவே ஆதிசிதம்பரம் என்ற சிறப்புப் பெயருடன் அழகு வாய்ந்தவராக- சிதம்பரத்தில் உள்ளது போலவே இங்கும் தனிச் சந்நிதியில்ஸ்ரீ நடராஜப் பெருமான் சிவகாமி அம்மையுடன் எழுந்தருளியிருக்கிறார்.

 இந்த நடனத் திருக்கோலத்தையே ஆனந்த நடனம் என்பார்கள்.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற 
ஐம்பெரும் தொழில்களைப் புரியவே அண்ணல் ஆடுகிறான்.

அவன்தன் தத்துவ தரிசனம் கண்ட களிப்பில் அன்று அப்பர் பெருமான்
பாடி உருகி உள்ளார்.

 தலவிருட்சம் மாமரம். எனவே சூதவனம் என்றும் பெயர் பெற்றுள்ளது.

ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு சூதவனப் பிள்ளையார் என்று பெயர் வழங்குகிறது. இரு கரங்களிலும் மாவிலைக் கொத்துகளும், துதிக்கையில் மாங்கனியும்  ஏந்திய திருவுருவின் விசேஷமான அமைப்பைக் கண்டு களிக்கலாம்...
 கருவறைச் சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும் 
மூன்று திருவடிகளுடனும் காட்சித் தருகிறார்- 
அழகான உருவம் தரிசிக்கத் தக்கது
மிகவும் பழமையான கோயில் என்பதால் இங்கு நவகிரகம் கிடையாது. நவகன்னிகைகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். 

காசிப முனிவரின் மனைவி வினதை. இவர்களது மகன் கருடன். 
ஒரு முறை இவன் தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அமிர்த கலசத்தை எடுத்து வருகிறான். இதைப்பார்த்த இந்திரன் 
பின் தொடருகிறான்.

கருடன் வேகமாக வந்ததால் கலசத்திலிருந்து அமிர்தம் சிந்தியது. அவ்வாறு சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றி சூதவனமாக காட்சி தருகிறது. இந்த வனத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால், சிவன் வெண்மை நிறமாக காட்சி தருகிறார்.

பதஞ்சலி முனிவரின் அருளால் இந்த காடுகள் அழிக்கப்பட்டு 
கோயில் உருவானது.  பதஞ்சலி முனிவர் இங்கே வழிபட்டிருக்கிறார். பதஞ்சலி முனிவரின் செப்புத் திருமேனியும்  இங்குள்ளது

வேத மந்திரங்கள் படிப்பவர்கள் இத்தல இறைவனை 
வழிபாடு செய்வது சிறப்பு.

அஷ்டாவக்ர முனிவரால் வருணபகவானுக்கு ஏற்பட்ட தொழு நோய், இத்தல இறைவனை வணங்கியதால் நீங்கியது. 

வழக்கமாக எருமை தலையின் மீது அருள்பாலிக்கும் துர்கை, இத்தலத்தில் எருமை இல்லாமல் அருள்பாலிக்கிறாள்

தெற்கு நோக்கிய சனீஸ்வரரை அனுகூல சனீஸ்வரர் 
என்று அழைக்கின்றனர்.

மகாமண்டபத்தின் நுழைவாயிலில் தென்புறத்தில் சங்கநிதியும், வடபுறத்தில் பதுமநிதியும் கிழக்கு நோக்கி திருக்காட்சி 
நல்கி வருகின்றனர்.

முன் மண்டபத்தில் தீட்டப்பட்டுள்ள தலவரலாறு

மகாமண்டபத்தில் நந்தியும், வெண்கல பலி பீடத்தையும் காணலாம். 

அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கிய ஐம்பொன்னாலான 
யோக சக்தி அம்மனை தரிசிக்கலாம். 

சித்திரையில் பிரம்மோற்சவமும், ஆனி மற்றும் மார்கழியில் 
நடராஜர் திருவிழாவும், புரட்டாசியில் நவராத்திரி விழாவும், 
ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

ஆதியில் ஆதிசேஷன் இத்திருக்கோவிலைத் திருப்பணி 
செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜேந்திரன் ஆகிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் "பறங்கரம்பை நாட்டுக் கோவிலூர்' என இவ்வூர் குறிக்கப் பெற்றுள்ளது.

 நிருத்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தியான வலஞ்சுழி விநாயகர், 
வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், சந்திரசேகரர், பிரதோஷ விநாயகர், சமயக்குரவர், நால்வர், சண்டேஸ்வரர், அஸ்திரதேவர், நடராஜர், சிவகாமி அம்பாள், மாரியம்மன், பிடாரியம்மன், சூலப் பிடாரி அம்மன், அத்திர பலி, ஆதிசேஷன் ஆகியோரை தரிசிக்கலாம்

தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய ஊர்களிலிருந்து முத்துப்பேட்டைக்குப் பேருந்துகள் உள்ளன. முத்துப்பேட்டையிலிருந்து மன்னார்குடி சாலையில் 2-கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம்.
[Gal1][Gal1]



[Image1]


Koviloor temple of Sri Kotravaleeswarar



20 comments:

  1. வணக்கம்
    அம்மா
    அறியமுடியாத பல தகவல்களை அறிந்தேன் அம்மா மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் இறைவனை வழிபட்ட ஒரு உணர்வுதான் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மந்திரபுரீஸ்வரர் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே
    படங்கள் அருமை

    ReplyDelete
  3. அருமையான படங்களுடன் விளக்கங்கள் வெகு சிறப்பு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மனதுக்கு மிகவும் நெருக்கமான மந்த்ரபுரீஸ்வரர் திருக்கோயிலைப் பற்றி - பதிவில் படித்ததும் மிகுந்த மகிழ்ச்சி..

    ReplyDelete
  5. மங்களங்கள் அருளும் ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர்
    என்ற தலைப்பே மங்களகரமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  6. தலைப்புக்கும், தற்சமயம் காட்சியளிக்கும் முதல் படமான சிவலிங்கத்தை வணங்கிடும் ஸ்ரீராமருக்கும் இடைவெளி அதிகமாக உள்ளது.

    நடுவே ஒரு படம் ஒருவேளை காட்சியளிக்காமல் இருக்குமோ அல்லது காட்சியளித்த படம் பிறகு நீக்கப்பட்டிருக்குமோ என பல்வேறு விஜாரங்களை என்னுள் தோற்றுவிப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. ஆஹா, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த ’கோவிலூர்’ என்ற பெயரில் இடங்கள் இருக்கும் போலிருக்கிறது, ஊருக்கு ஊர் காந்தி நகர், இந்திரா நகர் என இருப்பது போல.

    கோவிலூர் என்றதும் உடனே எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது. ;)

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

    இராஜராஜேஸ்வரிMarch 10, 2011 at 4:31 PM
    *****நான் பார்க்காத கோடிகளா என்ன !*****

    கோவிலூரில் பிறந்து

    கோபாலகிருஷ்ணன் பெயரை ஏற்று

    கோடிகளில் புழங்கி

    கோடிகோடியாய் என்றும் வாழ்க!!

    வை.கோபாலகிருஷ்ணன்March 11, 2011 at 9:37 AM
    இராஜராஜேஸ்வரி said...

    *****நான் பார்க்காத கோடிகளா என்ன !*****
    கோவிலூரில் பிறந்து
    கோபாலகிருஷ்ணன் பெயரை ஏற்று
    கோடிகளில் புழங்கி
    கோடிகோடியாய் என்றும் வாழ்க!!//

    ஒரே

    ’கோ’ மயமாக எழுதித்தள்ளி விட்டீர்கள். தங்கள்
    ‘கோ’பம் தணிந்து விட்டது என்பது புரிகிறது. இனி
    ‘கோ’லாட்டம் தான். கொண்டாட்டம் தான்.

    >>>>>

    ReplyDelete
  8. அடியேன் பிறந்த ஊரும் ஒரு கோவிலூர் தான். அது காரைக்குடியிலிருந்து குன்னக்குடி போகும் பாதையில், காரைக்குடியிலிருந்து ஓரிரு கிலோமீட்டர் தூரத்தில் தான் உள்ளது.

    அங்குள்ள அம்பாள் பெயர்:
    ஸ்ரீ சாடிவாலீஸ்வரி.

    சாடிவாலீஸ்வரி என்றால் உணவு தான்யங்களுகெல்லாம் அதிபதியான
    ஈஸ்வரி - ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி என்று அர்த்தமாகும்.

    அங்குள்ள சிவபெருமான் பெயர்:
    ஸ்ரீ ராஜகட்க பரமேஸ்வரர்.

    கி.பி. 7ம் நூற்றாண்டில், தன் போர்வாளைத்தொலைத்து விட்ட ஒரு
    அரசனுக்கு, சிவனே அதைத் தேடிக்கொடுத்து மறைந்ததாகவும், அதனால் அந்த ராஜாவே இந்த மிக மிக பிரும்மாண்ட கோயிலை, தன் வாள் தனக்கு சிவனால் அளிக்கப்பட்ட இடத்திலேயே [கோவிலூர்] கட்டியதாகவும் வரலாறுகள் சொல்கின்றன.

    தங்களுக்குத் தெரியாததா, நான் புதிதாகச் சொல்லப்போகிறேன் !

    >>>>>

    ReplyDelete
  9. மந்திரபுரீஸ்வரர், மந்திரபுரி பெயர் காரணங்களும், மார்க்கண்டேய புராணமும் மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    நவ கன்னிகைகள் படம் சிறப்பாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  10. நாகை>> திருத்துறைப்பூண்டி>> முத்துப்பேட்டை ரயில் நிலையம் வரை
    இரயிலில் கூட்டிச்சென்று அங்கிருந்து மன்னார்குடிப் பாதையில் 2 கிலோமீட்டர் காரில் கூட்டிச்சென்று, ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற ஸ்தலத்தில் ஸ்ரீ பெரியநாயகி ஸமேத ஸ்ரீ மந்திரபுரீஸ்வரரை தரிஸிக்க வைத்து, ஆனந்த நடனத்தையும் காட்டி, பக்திப்பரவஸத்தில் அப்படியே
    என்னைக் கட்டிப்போட்டு அசத்தி விட்டீர்கள்.

    முழுவதுமே என்னை நீங்கள் BMW A/C CAR இல் அழைத்துச் சென்றிருக்கலாம். அதில் கொஞ்சம் எனக்கு வருத்தமே ;(

    >>>>>

    ReplyDelete
  11. சூதவனப் பிள்ளையாரப்பாவுக்கு என் வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
  12. அனைத்துப்படங்களும் தகவல்களும் அருமையோ அருமை. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ;) 1315 ;)

    oooo oooo

    ReplyDelete
  13. அழகிய படங்களும் அருமையான பல தகவல்களும்!..

    மிகச் சிறப்பு சகோதரி!

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  14. மிக அருமையான பதிவு ராஜேஸ்வரி. படங்கள் பேசுகின்றன. மந்திரபுரீஸ்வர மகிமையில் உலகம் உய்யட்டும்.

    ReplyDelete
  15. தங்களின் பதிவும் வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்களது பின்னூட்டங்களும் பல திருத்தலங்களுக்கு ஒரே நாளில் சென்ற உணர்வைத் தந்தன.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ ஐயா, அவர்களுக்கு VGK யின் அன்பான வணக்கங்கள்.

      இதுபோலவே தான், முன்பெல்லாம் நம், அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் அடிக்கடி எங்கள் இருவரையும் சேர்ந்து பாராட்டி மகிழ்வார்கள். இப்போது அவர் இடத்தினை தாங்கள் கைப்பற்றிக் கொண்டுள்ளது நினைக்க மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, ஐயா. மிக்க நன்றி. - அன்புடன் VGK

      Delete
  16. இதுவரை நான் அறிந்திராத கோயில். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன். பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  17. மிக மிக அருமையான பகிர்வு.நன்றி இராஜேஸ்வரி.

    ReplyDelete
  18. அழகான படங்கள்,கோவில் பற்றிய சிறப்பான தகவல்கள் விரிவாக.நன்றி.

    ReplyDelete
  19. தகவல்கள் மனதைக் கவர்ந்தன....
    படங்கள் கண்களைக் கவர்ந்தன.....

    ReplyDelete